Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1439

டூ இன் ஒன்னா ஒரு புதுச்சாமி வந்துருக்கு...... (பயணத்தொடர் 2020 பகுதி 55 )

$
0
0
நிலவறை சமாதி பார்த்த கையோடு அடுத்த அஞ்சாவது நிமிட்லே பொம்பெய்'ஸ் (Pompey's Pillar) தூணுக்கு வந்துருக்கோம்.  பொம்பெய்ன்னதும்  நான் Pompeii னு நினைச்சுக்கிட்டேன். இது எங்கடா, இடாலியில் இருந்து  இங்கே வந்துச்சுன்னு.... நம்ம இடாலிப் பயணத்தில்  Pompeii போயிருக்கோம்.  சின்ன குன்றில் இருக்கும் ஊர். பக்கத்துலே ஒரு அஞ்சு மைல் தூரத்துலே இருக்கும் எரிமலை ஒன்னு வெடிச்சுப் பொங்கிப் ப்ரவாஹித்ததில் அந்த எரிமலைக்குழம்பு அப்படியே வந்து ஊரையே மூடிருச்சு.  ஊர் இருந்த அடையாளமே இல்லை...... பல வருஷங்களுக்குப்பின்  அங்கே போய்தோண்டிப் பார்த்து,  இருபதடி  உயரத்துக்கு சாம்பல் பூத்துக்கிடக்கும் ஊரை ஒரு மாதிரி  சுத்தம் செஞ்சு இப்ப அது சுற்றுலாப்பயணிகள் வந்து பார்க்கும்  இடமா இருக்கு.  நாம் அங்கே போயே இருபத்தியொரு வருஷமாச்சு. நல்லவேளை... நீங்க தப்பிச்சீங்க..... அப்ப நான் வலையுலகில் இல்லையாக்கும்.... :-)
இந்த Pompey's Pillar -ம் இடாலி சமாச்சாரம்தான்.  ரோமானியர் கட்டடக்கலை.   ஈஜிப்ட்டில் இருக்கும் அஸ்வான் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவப்பு க்ரானைட் கல்லில் செதுக்கி இருக்காங்க.  ஒரு மேடையில் இப்போ நிக்குது. நல்ல உயரம்தான். இருபத்தியேழு மீட்டர் உயரமும், 2.8 மீட்டர் சுத்தளவுமா இருக்கு. உச்சாணிக்கொம்பில் இப்படி ஒரு வேலைப்பாடு. சுத்தளவு அதிகமா இருப்பதால் உச்சாணிப்பகுதியின்  மேல்பாகம் இன்னும் அகலமாகத்தான் இருக்கும், இல்லையா.....   இது 285 டன் கனம்னு  ஒரு கணக்கும் சொல்றாங்க !   (நான் தூக்கிப் பார்க்கலைப்பா....   )

இதுலே போய் பொருந்திக்கும் வகையில்   பட்டம்  பறக்கவிட்டு, அது போய் நல்லா மாட்டிக்கும் விதம் கயிறுகள் கட்டி மேலே இழுத்து நூலேணி தொங்கவிட்டு, அதன் மூலம் மேலேறிப்போய்  பிரிட்டிஷ் கொடியைப்(Union Jack) பறக்கவிட்டதெல்லாம் கூட நடந்துருக்கு 1803 ஆம் வருஷத்தில். அப்போ மூணாம் ஜார்ஜின் ஆட்சி காலம்.  ப்ரிட்டன் கடற்படைக்கு பொம்பெய் என்ற செல்லப்பெயர் இருந்ததாம். அதை மனசில் வச்சு இந்தத் தூணுக்கு பொம்பெய்தூண் என்று பெயர் வச்சதாகவும் சொல்றாங்க.
( அப்பப்பா.... ஒரு  சம்பவத்துக்குப் பின்னே எத்தனையெத்தனை கதைகள் !  ஆனால் அத்தனையையும் பார்த்துக்கிட்டுத் தேமேன்னு  இது நிக்குது,ரெண்டாயிரத்து முன்னூத்திச் சொச்ச வருஷங்களா !)

இன்னொரு கதை.....ரோமாபுரி அரசு, இந்தப்பகுதியைச்  சண்டை போட்டு ஜெயிச்சதுன்ற  வெற்றிக்கு அடையாளமான விஜய ஸ்தூபியாம் !  அப்ப இருந்த பேரரசர் Diocletian என்பவர்.  இவர் அரசகுடும்பத்து வாரிசு இல்லை.  ஏற்கெனவே இருந்த பேரரசரின் படையில் உயர்ந்த பதவியில் (தளபதி? ) இருந்த சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர், பேரரசர் இறந்து போனபின் பட்டத்துக்கு வந்த இளவலும் சாமிக்கிட்டே போனபின் (!!)  யானை கையில் மாலை கொடுத்து அரசரைத் தேர்ந்தெடுக்காமல், தமக்குத்தாமே திட்டத்தின்படி, தானாகவே  அரியணையில் ஏறி உக்கார்ந்தவர்.

எல்லாஞ்சரி. ஆனால் இந்த இடத்துலே தூண் வச்சது எப்படி ? அதுதான் புரியாத புதிர்.  இந்த இடத்தில்  பழையகால மதத்தின்  Serapis  என்ற  சாமிக்காகக் கட்டிய கோவில்  இருந்துருக்கு.  அப்போதையக் கட்டடக்கலையின்படி தூண்கள் எல்லாம் வச்சுக் கோவில் எழுப்பி இருக்காங்க.  அந்தக் கோவில் இப்படி இருந்துருக்கும் என்று கம்ப்யூட்டர் மூலம் வரைஞ்சு காமிச்ச படம் பாருங்க.
அட!  நல்லாவே இருக்கே..... இப்ப எங்கே? என்ன ஆச்சுன்னு  தெரிஞ்சுக்கணுமுன்னா.... இந்த வளாகத்துலேயே பார்க்கலாம்  உடைஞ்சு துண்டு துண்டுகளா  கிடக்கு. குழாய்ப்புட்டு போல யார் இப்படி செஞ்சாங்க?





கிறித்துவமதம்  ஆரம்பிச்ச காலக்கட்டத்தில், அதைத்தவிர வேற மதங்கள் ஒன்னுமே இருக்கப்டாதுன்னு  புதுமதக்காரர்கள்  இந்தக்கோவிலுக்குள் புகுந்து தங்கள் வெறுப்பைக் காட்டி இருக்காங்க. இத்தனையும் செஞ்சுட்டு, ஒரே ஒரு தூணை மட்டும் எப்படி விட்டு வச்சாங்கன்னு தெரியலை ! இப்படி இருந்ததை இப்படி ஆக்கிட்டோமுன்னு காமிக்க ஒரு அடையாளம்  வச்சுட்டுப் போயிருப்பாங்களோ ?



'அவரவர் மதம் அவரவருக்கு'ன்ற எண்ணம் இல்லை பாருங்களேன்.  ஒரு மதம் ரொம்ப நல்லதுன்னு உணர்ந்தால் சனம் தானாவே அதில் போய்ச் சேர்ந்துடாதா?  என்னவோ போங்க.......
ஒடைச்சு அழிச்சுப்போட்டுட்டுப் போன இடம் காலப்போக்கில் மண்மூடிபோச்சு.  பல நூற்றாண்டுகள் ஆனபிறகு, இது ஒரு முக்கியமான இடமுன்னு தெரியாமலேயே  சுத்திவர அடுக்குமாடிக் கட்டடங்கள், குடியிருப்புகள் எல்லாம்  கட்டிட்டாங்க. சனமும் குடியேறி வாழ்ந்துக்கிட்டு இருக்கு.


சரி, இப்பக் கோவிலைப்பத்தி இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.....  அந்தக் காலத்திலே Ptolemaic dynasty யின் ஆட்சி இங்கே.  பழையகால மதத்தின்படிதான் சாமிகள். அதுவும் ஏகப்பட்ட சாமிகள் இருக்கே.......     ஒரு அஃபிஸியல் சாமி இருக்கட்டுமேன்னு பேரரசர் Ptolemy I, தேர்ந்தெடுத்த  சாமி Serapis.  முந்தி ஒரு கதையில் சொன்னேன் பாருங்க.... செத்துப்போன கணவனை உயிர்ப்பிச்சாங்கன்னு....  அந்தக் கணவன்தான்  Osiris . இவரும் உயிர்பிழைச்சு சாமி ஆகிட்டார். ஏற்கெனவே  காளைக்கடவுள்   Apis வேற இருக்கார். எல்லாவித வளங்களுக்கும் அதிபதி. அதனால் இந்த ரெண்டுபேரையும் சேர்த்து  ஒரே சாமியா உருவாக்கிட்டார் Ptolemy I. நம்ம பக்க சங்கரநாராயணன், ஹரிஹரன் மாதிரியோ ?   டூ இன் ஒன் !!!

புது கல்ட் உருவாகிருச்சு. இவருக்கு நல்லதா பெருசா ஒரு கோவில் (Serapeum )கட்ட ணுமுன்னு  ஆரம்பிச்சு இங்கே இப்போ நாம் நிக்கற இடத்தில் கட்டி இருக்காங்க. அப்போ தூண்கள் எல்லாம் செதுக்கி வச்சு ப்ரமாண்டமாத்தான் கட்டி வச்சுருந்தாங்க.  அதைத்தான்.... ஒடைச்சுட்டுப் போயிருக்குதுகள்....  ப்ச்.....
Serapis சாமிக்கு ஒரிஜினல்  உருவத்தில் ஒரு சிலையும், மனுஷ உருவத்தில்  ஏழடி உயரத்துலே  ஒரு சிலையும் செஞ்ருக்காங்க., இந்த  மனுஷ உருவச்சிலையையும் ஒடைச்சுப் போட்டாச்சு.  மேற்பாகம் மட்டும் ஒரு ம்யூஸியத்துலே இருக்காம்.
காலப்போக்கில் புதையுண்டு போயிருந்த இந்த இடத்தை இப்பதான் ஒரு நூத்தியெழுபது (1850 ) வருஷங்களுக்கு முன்னேதான்  அகழ்வாராய்ச்சியினர்  கண்டு பிடிச்சாங்க.

எல்லாம் ரொம்பவே அபூர்வமான பழங்காலத்துச் சமாச்சாரம் என்பதால்  உலகப்பாரம்பரியச் சின்னமா  யுனெஸ்கோ இதையும்  சேர்த்துக்கிட்டாங்க.  ஈஜிப்ட் முழுசும்  எக்கச்சக்கமா  இந்த லிஸ்டில் சேர்ந்து போச்சு !

தூண் மேலே ஏறிக் கொடியேத்துனப்பெல்லாம்  பூமிக்குக்கீழே  கோவில் இருக்கும் சமாச்சாரம் எல்லாம் யாருக்கும் தெரியாது.  வெறும் தூணும் பக்கத்துலே ரெண்டு ஸ்பிங்ஸுமாத்தான்  இருந்துருக்கு !  இந்த மனுஷத்தலையும் சிங்க உடம்புமா இருக்கும் ஸ்பிங்ஸ் கூட  இதே சிகப்பு  க்ரானைட் கல்லில் செஞ்சவைதான்.



தூணையும், அதுக்கடியிலே உக்கார்ந்தும்  படங்கள் க்ளிக்கி நம்ம கடமையை ஆத்திட்டு, அடுத்த பக்கம் போறோம். கீழே படிகள் இறங்கிப்போனால்..... கொஞ்சம் உயரத்தில் இன்னொரு குகை வாசல்.



அதுக்குள்ளே போனால்.....  வாவ்!  குகை  கொஞ்சம் விஸ்தாரமா இருக்கு.....  கண் எதிரே கொஞ்ச தூரத்தில்.....  பளபளன்னு மின்னும் சாமி  Serapis !   நெஜக்காளை சைஸில் Black basalt கல்லில் செதுக்கி இருக்காங்க.  இந்தக் கல்.... எரிமலைக்குழம்பு ஆறிப்போய் கெட்டியானதும் கிடைக்கும் வலைதான். லாவா ஸ்டோன்.
ரிஷபம்.... தன் தலையில்  ஒரு வட்டத்தட்டைத் தாங்கி  நிக்குது !  அது சூரியனாக இருக்கணும். எல்லா உயிர்களையும் வளர்க்கும் சாமி இல்லையோ !  நினைச்சது ரொம்பச் சரி.  சூரியன் தானாம் !  இந்த ரிஷபத்தின் (Apis )தாய்   Hathor, தன் தலையில் இதே வட்டத்தைத் தாங்கி இருக்காங்க. காளையின் குடும்பப்பழக்கம் :-)
நாமும் கும்பிட்டுக்கிட்டு அந்தாண்டை போனால்....   கீழே  போகும் பாதை.....  எங்கே போய் முடியுமோன்னு தோணுச்சு.....   விளக்கு வெளிச்சம் இருக்குதான்.....

அப்புறம் தெரிஞ்சது.....  இது அந்த பொம்பெய் தூணுக்கு அடியில் போகும் பாதைன்னு.....   அதுலே போயிருந்தால்.....   ரொம்பவே  கீழே இறங்கும் விதமா இந்தப் பள்ளத்தில்  வந்து முடிஞ்சுருக்கும்.....   

நாம் உள்ளே போன வழியாவே திரும்பி வந்துட்டோம்.  மிய்யூஸ் ஒன்னு என்னைத் தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்தது.  உடம்பு சரி இல்லையோ என்னவோ..... இல்லை அப்படியேதான்  உருவமோ........ ரெண்டு வார்த்தை  பேசிட்டு வந்தேன்.  பாவமாத்தான் இருக்கு....

வளாகத்துலே இருந்து வெளியே வந்தால்  செல்லம் ஒன்னு  தலையைத் தூக்கிப் பார்த்தது !
வாங்க இன்னொரு இடத்தையும் பார்க்கலாம்.

தொடரும்........ :-)




Viewing all articles
Browse latest Browse all 1439

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>