அடுத்து வந்த வீக் எண்டிலும் பண்டிகை தொடர்ந்தது. இந்த முறை பஞ்சாப் மாநில மக்கள். லோ(ஹ்)ரி Lohri மேளா ! அழைப்பு வந்திருந்தது. பார்க்கலாம் என்று இருந்தேன். சனிக்கிழமை மாலைகளில் நம்மூர் ஹரே க்ருஷ்ணா கோவில் ஆரத்தி தரிசனத்துக்குப் போகும் வழக்கம் இருந்தபடியால் கோவிலுக்கு போனோம்.
அன்றைக்கு 'அவன்'நமக்கு டின்னர் கொடுத்துட்டான். ஏழரைக்கே (டே லைட் ஸேவிங் வேற ) சாப்பாடு என்பதால் பொதுவா நாங்க அங்கே டின்னர் எடுப்பது குறைவு. ஒரு இனிப்பு மட்டும் ப்ரஸாதமா எடுத்துப்போம். கோவிட் காரணம் கோவிலில் மற்ற பக்தர்கள் யாருமே இல்லை என்பதால் மஹா ப்ரஸாதம் வீணாகுமேன்னு அங்கேயே டின்னர் ஆச்சு.
சரி. சாப்பாடுதான் ஆச்சேன்னு பஞ்சாப் மேளாவுக்குப் போயிட்டே போகலாமுன்னார் 'நம்மவர்'. இவுங்களுக்கு எந்த விழான்னாலுமே வியாபாரத்தோடு சேர்ந்துதான். கூடவே ஆட்டமும் பாட்டும் உண்டு.
முன்புற ஹாலில் நல்ல அலங்காரம். இதையொட்டிய மற்ற ஹாலில் ஒருபக்கம் சாப்பாடு ! உள்ளுர் ரெஸ்ட்டாரண்ட் ஒன்னு கடை போட்டுருக்கு. இன்னொரு பக்கம் நகை நட்டு, ஹேண்ட் பேக், செருப்புன்னு பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் கடைகள். உள்ளூர் கடைகள்தான்.
மெயின் ஹாலில் நல்ல கூட்டம். அப்பதான் ஆரம்பிச்சுருக்காங்க. இன்னும் சூடு பிடிக்கலை. பாதி சனம் சாப்பாட்டு ஹாலில் இருக்கே ! ஒரு பத்து நிமிட் போல் இருந்துட்டுக் கிளம்பிட்டோம். வருகைப் பதிவாச்சு. அது போதும்.
ஃபோயர் என்பதற்குத் தமிழில் என்ன சொல்லணுமுன்னு அகராதியைப் பார்த்தால் மண்டபம்னு இருக்கு. ஹாஹா.... வீட்டுக்குள் மண்டபம் !!!!
மொட்டையா விடாமல் ஏற்கெனவே ஒரு பக்கம் யானைப்படையுடன் விருச்சிகப்புள்ளையார் இருக்கார். உள்கதவுக்கு ரெண்டுபுறமும் மாடங்கள் வச்சுருப்பதால் புள்ளையார்கள் அங்கே இடம்புடிச்சுட்டாங்க.
இன்னொருபக்கம் ஹால் டேபிள். அதுக்குமேல் ஒரு கண்ணாடி. வீட்டுக்குள் நுழையும் பேய்பிசாசுகள் அதுலே பார்த்துட்டு, ஏற்கெனவே இங்கே பேய்நடமாட்டம் இருக்குன்னு பயந்து ஓடிருவாங்கன்னு ஒரு 'நம்பிக்கை'. அதையும் மீறி உள்ளே வந்தால்.... இன்னொரு பெரிய பிசாசு இருக்குன்றது வேற விஷயம் :-)
அலங்காரப்பித்து பிடித்ததில் இப்பெல்லாம் வீட்டுக்குள் நுழைஞ்சவுடன் இருக்கும் இடத்தைப் பண்டிகை சீஸன்களுக்கு நேர்த்துவிட்டாச்சு. அங்கே இடது பக்கம் இருக்கும் கதவைத் திறக்க முடியாமல் எப்பவும் சாத்தியே வேற வச்சுருக்கோம். அடுத்த பக்கம் நம்ம நிரந்தரக் கொலுப்படி இடம் புடிச்சு உக்கார்ந்துருக்கே ! 'பொங்கல் டிஸ்ப்ளே 'வைப் பிரிச்செடுத்ததும்....அடுத்த பண்டிகைக்கான அலங்காரம் முடிவாச்சு. குடியரசு தின விழா ! ஒருநாள் பண்டிகைதான், இங்கேயும் !
பாரதமாதாவை 'வலை'வீசிப்பிடிச்சுக் கொஞ்சமா அலங்காரம் செஞ்சு , நாட்டின் முக்கிய விசேஷங்களால் அலங்கரிச்சு வச்சாச் !
பச்சைத்தாமரைக்குத்தான் கொஞ்சம் மெனெக்கெட வேண்டி இருந்தது. இதுலே பாருங்க.... நமக்குத் தேவையில்லாத சமயங்களில் எல்லாம் கடைகளில் கண்ணில் படும் பொருட்கள், தேவை வந்ததும் காட்சியில் இருந்து மறைஞ்சுபோகுதே!
குடியரசு தினமும் வந்தது. விழாவை தூர்தர்ஷன் ஒளிபரப்பில் பார்த்தோம். அலங்காரவண்டிகள் ஊர்வலம் அருமை ! இப்பெல்லாம் உலக நிகழ்ச்சிகள் எதையும் தவறவிடவேண்டியதே இல்லை. வழி கண்டுபிடிச்ச மகராசன் நல்லா இருக்கட்டும் !
இதுக்கிடையில் நமக்கொரு துளசிமாடம் செஞ்சுதரேன்னு 'நம்மவர்'ஆரம்பித்தார். எப்படி இருக்கப்போகுதுன்னுன்ற உண்மை இவனுக்குத் தெரிஞ்சதோ என்னமோ..... துளசியிடம் போய் கோள் மூட்டிட்டு, அப்பாவுக்குத் துணையா இருக்காம அலுப்பாப் படுத்துக்கிட்டான்.
நம்மூரில் ஒரு புதுக்கடையின் திறப்பு விழாவுக்குப் போனால்.... ரொம்ப காலமாத் தேடிக்கிட்டு இருக்கும் 'நிக்கிற மஹாலக்ஷ்மி'கிடைச்சாள். ஆனால் அளவு ரொம்பச் சின்னது. எனக்கு எப்படியும் ஒரு 35 செமீ உயரச் சிலை வேணும். நம்ம தாமரையின் அளவு பெருசு. ஆனால் கிடைச்சவளை விட்டுவர மனசாகலை. 15 செமீ உயரம்தான். சரி, பெரியவள் கிடைக்கும்வரை இவளே இருக்கட்டும் ! ஏற்கெனவே நம்ம வீட்டில் 'இருக்கும் மஹாலக்ஷ்மி'யை விடக் கொஞ்சூண்டு உயரம் அதிகம்.
பக்கத்துவீட்டு மக்கள், பள்ளிக்கூட விடுமுறைக்குப் போனவங்க.... திரும்பியதும் நம்மைப் பார்க்க வந்தாங்க. (அசல்)தாமரையைப் பார்க்கணுமாம்!
நடுக்கோடை மாசம் என்றபடியால் 24 டிகிரி வரை சூடு.... இதுவே ஒருத்தனுக்குத் தாங்கலை. அவனோட அறையில் ஏசி போட்டு வச்சதும் அடைக்கலமானான். பாவம்.....
செடிகொடிகளுக்குத்தான் சந்தோஷம். நமக்கும் பார்க்கப் பரவசம் ! கொஞ்சம் படங்களைக் கோர்த்துவிட்டுருக்கேன் பாருங்க !
வெயிலுக்காக தர்பூசிணி பழம் மார்கெட்டுக்கு வந்தாச். உள்ளுரில் காய்க்குதான்னு தெரியலை. ஆனால் ஆக்லாந்துப் பக்கம் விளையுதாம்! கொஞ்சம் கூடுதல் விலையோன்னு சம்ஸயம்.
இன்னொரு பண்ணையைச் சேர்ந்த கடையில் மலிவாக் கிடைச்சது !
வெயில் வெயில்ன்னதும் ரொம்ப மகிழ்ச்சி அடைய வேண்டிய அவசியமில்லை. வீட்டுக்குள் ஹீட்டர் போடவேண்டியதில்லை. அவ்ளோதான்....
