Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1475

Barong Barong சிங்கம்புலி பாரோங்(கு) ... (பாலி பயணத்தொடர் 10 )

$
0
0
ஒரு காட்டிலே ஒரு புலி  ஒன்னு இருந்துச்சு. இதுக்கு சிங்கத்தைப்போலவே நீளநீளமான சடாமுடி. இது ரொம்ப நல்ல புலி.  இந்தப் புலிக்கு  நண்பனா இருந்துச்சு ஒரு குரங்கு. ரெண்டு பேரும் தினம் சந்திச்சு நல்லாப்பேசி பொழுது போக்குவாங்க.



ஒருநாள் பனங்கள்ளு இறக்கும் மூணு மனுசனுங்க காட்டுக்குள்ளே வர்றாங்க. குடி மயக்கத்தில் ரொம்ப ஜாலியா ஆடிக்கிட்டு வந்தவங்க புலியைப் பார்த்ததும் பயந்து ஓடாமக் கோவமா புலிமேல் பாயறாங்க. கடுமையான சண்டை நடக்குது. இந்த மூணு பேரிலொருவனது  குழந்தையை புலி முன்பொரு சமயம் கொன்னுருச்சு என்பதே கோபத்துக்குக் காரணம். சண்டை நடக்கும்போது குரங்கு பயந்து எதிர்ப்புறம் ஓடி  ஒளிஞ்சு உக்கார்ந்துச்சு. அப்புறம் சண்டையில் புலியின் கை கொஞ்சம் ஓய்ஞ்சு போனது தெரிஞ்சதும் உதவிக்கு வந்து மனுசரை  எதிர்த்து நிக்குது.    நடந்த சண்டையில்  ஒரு மனுசனின் மூக்கைக் கூடக் கடிச்சுருச்சு புலி. குய்யோ முறையோன்னு அவுங்க பாய்ஞ்சு ஒருபக்கம் ஓட புலியும் குரங்கும் இன்னொரு பக்கம் பாய்ஞ்சு போய் ஒளிஞ்சுக்கிச்சு. (குரங்கு எகிறிக்குதிச்சு பார்வையாளர்க்கிடையில் ஒளிஞ்சது! நல்ல சிரிச்ச முகம்)


ரெண்டு அழகான மங்கையர்  நளினமா விரல்களையும் இடுப்பையும் அசைச்சு  முழங்காலை அரையா மடக்கி  ஆடறாங்க.   (நிமிர்ந்து நிக்கவும் முடியாது , கீழே உக்காரவும் முடியாதுன்னா  எப்படி இருக்குமோ அப்படி!) ரங்டா   என்ற மன்னரின் அரசவை நாட்டியம்! ரங்டா  தீமைகளின் அரசன். கொடுங்கோலன்!


தேவி குந்டி  (குந்தி?) பிரதமரைப் பார்க்க அந்த வழியா வர்றாங்க. கூடவே அவருடைய மகன் செடேவா.(சகாதேவா?)


ஆடும் மங்கையர் உடலில்  இப்போ ஒரு கெட்ட ஆவி புகுந்துருச்சு. பார்வையே ஒன்னும் சரியில்லை! மன்னன் ரங்டா , குந்டியின் மகனை தனக்கு பலி கொடுக்கணுமுன்னு   தாயிடம் கேட்க , அம்மா சம்மதிச்சுட்டாள்!  குந்டிக்குள்ளேயும் கெட்ட ஆவி புகுந்துருச்சு! பிரதமர் வர்றாரு. கெட்ட ஆவி அவரையும் விட்டு வைக்கலை.  செடேவாவைக் கொண்டு போய் காட்டில்  ஒரு மரத்தில் கட்டிப்போட்டுட்டாங்க.






சிவன் (சாமி)  அப்ப தனியாக் கிடக்கும்  செடாவா முன் தோன்றி  சாகா வரம் கொடுத்துட்டுப் போறார். செடேவாவைக் கொல்ல ரங்டா வர்றான். அவனால் செடாவாவை சாகடிக்கவே முடியலை!  உடனே அவன் காலில் விழுந்து  எனக்கு மோட்சம் கொடுன்னதும் இட் வாஸ் க்ரான்ட்டட்:-) ரங்டாவைக்  கொன்னு சொர்கத்துக்கு அனுப்பியாச்சு.



ரங்டாவின்  வேலைக்காரி  கலிகா அப்போ அங்கே வந்து எனக்கும் சொர்க்கம் போகணுமுன்னு  கேட்க, செடேவா அதெல்லாம் முடியாதுன்னு சொன்னதும் கலிகாவுக்கு கோபம் வந்துருது. உடனே கரடி ரூபம் எடுத்து  'நான் உனக்கு மோட்சம் கொடுக்கறேன் பார்ன்னு ' அவனைக் கொல்லப் பாய்கிறாள்.

செடேவா கரடியுடன் சண்டை போட்டுத் துரத்தறான். கரடி உடனே பறவையா மாறிமீண்டும் அவனோடு சண்டை போடுது. அப்பவும் தோல்விதான்.  உடனே பறவை ரங்டாவா மாறி  செடேவா முன் நிக்குது. ஒன்னும் புரியாம ஆல்ரெடி  மோட்சத்துக்கு அனுப்புனவன் எப்படி  திரும்பி வந்தான்னு செடேவா திகைச்சு நிக்கறான். கொன்னவனை எப்படி திரும்பக் கொல்வது?

கண்ணை மூடி தியானிச்சதும்  செடெவா  பாரோங் என்னும் மிருகமா மாறிடறான்.  அட! இதுதான் நாம் முன்னே பார்த்த சிங்கம்புலி!   ஒரு  பூசாரி வந்து  பூஜை செஞ்சார் .

இதுக்குள்ளே  ரங்டாவின் படை வீரர்கள்   ராஜாவின் உதவிக்கு வந்து சேர்ந்தாங்க.  பெரிய போர் நடக்குது.  ஆனால் சிரஞ்சீவியான பாரோங்  எல்லாரையும் கொன்னு குவிச்சது.






கெட்டவங்க எல்லோரும் காலி.  நல்லவனுக்கு வெற்றி.

இதுவரை ஸ்கிப் பண்ணாம வாசிச்சவங்களுக்கு தலை சுத்தல் வரவே இல்லைன்னு துண்டையோ துப்பட்டாவையோப் போட்டுத் தாண்டுங்க பார்க்கலாம்!!

ராமாயணத்தை மட்டுமே தெரிஞ்சு வச்சுக்கிட்டவங்களுக்கு மகாபாரதம் நடந்த சமாச்சாரம் எப்படி தெரியவந்துச்சுன்னு என் விசாரம். இந்த பாரோங் நடனம் பத்தாம் நூற்றாண்டு பழசாம்.  BARONG &KRIS  DANCE..  Pemogan  Village.

பாலியில் பார்க்க வேண்டியமுக்கியமான  நடனம்  இந்த பாரோங்தான்னு  பலமுறை 'அழுத்திச் சொன்ன ந்யோமேனை நம்பினதால் வந்த வினைன்னும் வச்சுக்கலாம். காலையில்  நாம வண்டிக்குச் சொல்லி வச்சோம் பாருங்க அப்பவே  இந்த நடனம் ஒருமணி நேரம்தான். அதுவும் தினம்  மார்னிங் ஒரு ஷோ மட்டும்தான் நடக்கும். பார்த்துட்டுப்போறீங்களான்னு ஆவலைக் கிளப்பி விட்டுருந்தார்.  இதுலே நீங்க இப்போ பார்த்த  கீச்சக்கைவிட ரொம்பநல்லா இருக்குமுன்னு சர்ட்டிஃபிகேட் வேற.

நாங்களும் இன்னிக்குப் பொழுது விடிஞ்சதும் பீச் பார்க்கப்போகலை. எல்லாம் நேத்துக் காலையில் பார்த்த மாதிரி அதே கடல் தானேன்னு சுணக்கம். இன்னிக்கு இந்த ஊரில் இருந்து கிளம்பறோம் வேற. அதனால் காலையில் கடமைகளை முடிச்சுப் பொட்டிகளைக் கட்டி வச்சுட்டு கீழே ரெஸ்ட்டாரண்டில் காலை உணவுக்குப் போனோம். நல்ல கூட்டம்.  பொதுவா 'டே ட்ரிப்' போகும் மக்கள்ஸ்க்கான பஸ்கள் எட்டரைக்கு பிக்கப்.  அதுக்குள்ளே  சாப்பிட்டுக் கிளம்பணுமுன்னு அவசரம் எல்லோருக்கும். சாப்பாட்டை முடிச்சு ரெடியானவங்க கூட்டம் வரவேற்பில் காத்திருக்கு.

ந்யோமேனும் ரெடியா இருந்தார். நடனம் போய் பார்த்துட்டுத் திரும்பி இங்கே வந்து  அறையைக் காலிச் செஞ்சுக்கிட்டுப் போறோமுன்னு நிகழ்ச்சி நிரல் சொன்னேன். (இப்ப இன்னொருதடவை படியேறி இறங்க முடியாது.  கொஞ்ச நேரம் போகட்டும்)


பாரோங் நடனம் நடக்கும் இடத்துக்கு  ஒரு இருவது நிமிச  ட்ரைவ்தான். கோபால் வேற  லட்சம் லட்சமா செலவு பண்ணி  காசெல்லாம் தீர்ந்து போச்சு. இன்னும் கொஞ்சம் காசு மாத்திக்கணுமுன்னு  சொன்னார். முந்தாநாள் ஏர்ப்போர்ட்லே மாத்துனது கிட்டத்தட்ட எல்லாம் காலி. இதுலே ஒன்னு பாருங்க..... ஏர்ப்போர்ட்லே நல்லா ஏமாத்தறாங்க இந்த மணி சேஞ் மகாத்மாக்கள். அங்கே நூறு டாலர் நோட்டுக்கு ஒரு தொகை, மற்ற சில்லறை நோட்டுகளுக்கு  இன்னும் குறைஞ்ச தொகைன்னு  நம்ம தலையிலே மிளகாய் அரைக்கறாங்கன்னு  ஒரு ரெண்டு மணி நேரத்துலேயே தெரிஞ்சு போச்சு:(

விமானநிலையத்துலே இருந்து ஹொட்டேலுக்கு வந்துட்டு அப்புறம் சாப்பிட இடம் தேடி நடந்தோம் பாருங்க, அப்ப கண்ணில் பட்டுச்சு  இன்னொரு  மணி சேஞ்ச்  இடம்.  ஒரு யூ எஸ் டாலருக்கு  9750 ரூபாயாம்.  நூறுன்னு இல்லாம எல்லா நோட்டுக்கும்  ஒரே மாதிரி.  அடப்பாவிகளா...  நம்மகிட்டே  ஒரு லட்சத்துக்கு ஆட்டையைப் போட்டுட்டாங்களேன்னு .....

இந்தத் தெரு  ஒன்வே என்பதால் திரும்பி ஹொட்டேலுக்கு வரும்போது மறக்காம  இங்கேயே காசு மாத்தணுமுன்னு  மூளையில் முடிச்சுப்போட்டு வச்சேன்.

நடனம் நடக்கும் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  டிக்கெட்டு ஆளுக்கு  ஒரு லட்சம்  ரூபாய். கார்பார்க்  ஃப்ரீதான். கோவில் வாசலில்  காலை பூஜைக்கான பிரசாதம்(கோலம்) வச்சுருந்தாங்க. கோவில் என்பதால் சில தட்டுகள்  கூடுதலா  இருக்கு போல!  கோலமுன்னதும் நினைவுக்கு  வருது இன்னொன்னு. பல இடங்களில் தரை அலங்காரமா  கோலத்துக்குப் பதிலா டிஸைன்போட்டு வச்சுருக்காங்க.  காங்க்ரீட்லேயே சின்னச்சின்ன வண்ணக் கற்கள் (ஆரஞ்சு, கருப்பு, வெள்ளை) பதிச்சுருக்காங்க. நம்ம ஸ்டிக்கர்  கோலத்துக்கு இது பெட்டர் இல்லையோ!




வாசலில்  பாலி நடன உடை அணிஞ்ச பெண் கைகூப்பி நமஸ்கரிச்சு நம்ம டிக்கெட்டை  சரி பார்த்துட்டு நடனம் பற்றிய குறிப்பு ஒன்னும் (ஆங்கிலம்) கொடுத்தாங்க. நிகழ்ச்சியை படம் எடுக்க அனுமதி உண்டான்னா  'உண்டு. நீங்க உள்ளே போய்க் கோவிலைக் கூடப்போய்ப் பார்க்கலாம்' என்றும் சொன்னாங்க.

கோவில் வாசலுக்கு முன்  ஒரு பெரிய மேடை. கல்வச்சுக் கட்டுனது.  ரெண்டு பக்கமும் இடைவெளிவிட்டு   கூரை போட்ட பெரிய திண்ணைகள்.  மேடைக்கு முன்னே ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு  இன்னொரு பெரிய  மேடை அதே உயரத்தில்.  அங்கே வரிசையா நாற்காலிகள் போட்டு வச்சுருந்தாங்க.

முன் வரிசையில்  உக்கார்ந்தோம்.  நமக்கு நேர் எதிரா  கோவில் . வழக்கம்போல் மூடிய கதவு.வாசலில் த்வாரபாலகர்கள். வலப்பக்கத் திண்ணையில் ம்யூஸிக் பார்ட்டி. மிருதங்கம் ஜால்ரா, ஜலதரங்கம் மாதிரி  ஒலிக்கும்  மரக்கட்டை  இசைக்கருவின்னு ஒரு பத்துப்பேர். இடப்பக்கத் திண்ணை காலியாத்தான் இருந்துச்சு. சரியா ஒன்பதே காலுக்கு நிகழ்ச்சிஆரம்பம் ஆச்சு.  சிங்கம்புலி ( அவுங்க கொடுத்த குறிப்பில் புலின்னு போட்டுருந்தாலும்  சடைசடையான முடிகளோடு சிங்கம் போலத்தான் இருக்கு அந்த மிருகம்!) வந்து கொஞ்ச நேரம் ஆடிட்டுப் போச்சு.

எனக்கு  சீனர்களின்  சிங்க நடனம் ரொம்பப் பிடிக்குமென்பதால் இதை(யும்) வெகுவாகவே ரசிச்சேன். மிருகத்தின் முன்கால்களுக்கும் பின் கால்களுக்கும் (!!) நல்ல கோ ஆர்டிநேஷன் இல்லைன்னா டான்ஸ் பணால்!  அடுத்த சீனில் குரங்கு வந்து ஆடுனார். அப்புறம் சிங்கம்புலி வந்ததும் ரெண்டு பேருமா ஆடிட்டுக் கொஞ்ச நேரம் உக்கார்ந்து பேசுனாங்க.


மற்ற  கதையெல்லாம் நீங்க இந்த இடுகையின் முதல் பகுதியில் வாசிச்ச(??) மாதிரியேதான்.தலையும் புரியலை வாலும் புரியலை என்பதே நிஜம். பார்வையாளர் கூட்டத்திலே  நாங்க எல்லோருமே பயங்கர சைலன்ஸ். யாருக்காவது எதாவது புரிஞ்சால்தானே? இசைகுழுவின் ஜல்ஜல் சப்தம்தான் ஓங்கி ஒலிச்சுக்கிட்டு இருந்துச்சு.


நடனம் முடிஞ்சதுன்னு  வாசலில் நின்ன பாலிப் பொண்ணு வந்து மைக் பிடிச்சுச் சொன்னதும்தான் (அப்பாடா)  எல்லோரும் கை தட்டினோம்:-) நல்லவேளை ஆங்கிலத்தில்  சொன்னாங்க. இல்லைன்னா......


கோவிலைப் பார்க்கப் போனால்  மூடிய கதவுக்கு முன் படிகளில் சிங்கம்புலி உக்கார்ந்து ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுக்குது.  வாயில் கொஞ்சம் ரூபா நோட்டை திணிச்சுட்டு பக்கத்தில் நின்னு படம் எடுத்துக்கலாம்.


 சாமி எங்கேன்னு கேட்டதுக்கு ஒரு மரஸ்டேண்டில்  இருக்குன்னு காமிச்சாங்க. கும்பிடும் க்ளிக்கும் முடிச்சுக்கிட்டுக் கிளம்பினோம்.

இந்த பாரோங் நடனம் பாலி முழுசும் வெவ்வேற ஊர்களில்  நடக்குது. ஆனால் வெவ்வேற கதை(!) இருக்காம்.  ஹீரோ மட்டும் எப்பவும் பாரோங். வில்லன்ஸ்  சொல்லும் கதைகளும் கேரக்டரும் மட்டும் வேற!

கோவிலின் காம்பவுண்டு கட்டைச்சுவர்தான் நடன மேடைக்கு க்ரீன் ரூம். அங்கிருந்துதான் நடிகர்கள் என்ட்ரி.திறந்த வெளி என்பதால் நல்ல வெளிச்சம். பேக்ட்ராப்பில் சுள்ளுன்னு சூர்யரஸ்மிகள். படங்கள் எல்லாம் அவ்ளோ நல்லா வரலை. போகட்டும்....

சிட்டி வழியா வரும்போது இன்னொரு இடத்தில்  காசு மாத்திக்கலாமுன்னு ந்யோமேன்  வண்டி நிறுத்தினார்.  சொன்னா நம்ப மாட்டீங்க.....  ஒன்னு,நூறுன்னு பாகுபாடில்லாமல் எல்லா நோட்டுகளுக்கும்  டாலருக்கு 10200  ரூபா!!!

'ஆல் சீஸன்ஸ்'க்கு வந்து கணக்கை முடிச்சுட்டுப் பொட்டிகளை எடுத்துக்கிட்டுப் புள்ளையாருக்கு ஒரு கும்பிடும் போட்டுக்   கிளம்பினப்ப மணி சரியா 11.11.


தொடரும்.........:-)







Viewing all articles
Browse latest Browse all 1475

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>