நேற்று தோழி வந்து போனபிறகு நாமும் ஒரு கொலுவிஸிட்டுக்குப் போய் வந்தோம். ஆக்லாந்தில் இருந்து நம்மூருக்கு இடம் பெயர்ந்த குடும்பம். அழகான கொலு அங்கே ! சின்னக்குழந்தைகள் இருக்கும் வீடானதால் பிள்ளைகளுக்கு ஒரு சின்னக்குட்டிக்கொலு வேற ! நம்ம வீட்டுக்கும் வரச் சொல்லி அழைச்சுட்டு வந்திருந்தோம்.
ஆறாவது நாள் நம்ம வீட்டுக் கொலுவுக்குப் புதுக்கோலமும், நைவேத்யமும் ஆச்சு. இன்றைக்கு இன்னொரு தோழி வர்றதாக சொன்னாங்க. அப்புறம் நேற்று நாம் கொலுவிஸிட் போன குடும்பமும் ஆறு மணிக்கு வரேன்னு ஃபோன் பண்ணாங்க.
ஊஞ்சலைப் பார்த்ததும் ஒரே குஷி ! குழந்தைகளைப் பார்த்ததும் ரஜ்ஜுவுக்குப் பிடிச்சுப்போச்சுன்னு நினைக்கிறேன். பிள்ளைகள் ஆசையாக் கிட்டே போனதும் ஓடாமல் இருந்தான்.
நம்ம பூனை ஜோஸியத்தின்படி பாஸிடிவ் வேவ்ஸ். தோழி, அருமையாப் பாடினாங்க. ஆக்லாந்தில் சிலருக்குப் பாட்டு சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருந்தாங்களாம். புதுசா இப்ப நம்மூருக்கு வந்துட்டதால் பிள்ளைகளுக்கான பரதநாட்டிய வகுப்புகள் நடக்குதுன்ற விவரம் சொன்னேன். நம்ம வித்யா சுப்ரமணியம் அவர்கள் அனுப்பித்தந்த ஆதிகேசவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டாங்க.
அப்பதான் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் வரைஞ்சதுன்னு சொன்னேனா.... அவ்ளோதான்.... 'ஆஹா.... அவுங்க கதைகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். இப்பக்கூட அவுங்க நாவல்தான் வாசிப்பில்'னாங்க. அவுங்க ஆதர்ச எழுத்தாளர் படமும் வரைவாங்கன்றது இதுவரை தெரியாதாம். உடனே அவுங்க அம்மாவுக்கும் வீடியோ கால் செஞ்சு எல்லா விவரமும் சொல்லி, ஆதிகேசவனை அப்படியே லைவாக் காமிச்சாங்க. எனக்குமே பெருமையாத்தான் இருந்தது. நம்ம வித்யா அவர்களுக்கு நல்லாப் புரை ஏறி இருக்கணும் !
நேரமாச்சுன்னு அவுங்க கிளம்பும் சமயம் இன்னொரு தோழி வந்தாங்க. வேலைநாளா இருப்பதால் நேரம் அப்படியிப்படின்னு தாமதமாயிடறதுதான். என்ன செய்வது சொல்லுங்க ? இங்கே இருந்து இதே தோழிவீட்டுக்குப் போறதாகத்தான் ப்ளானாம். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிஞ்சுருக்கு. சின்ன உலகம் !
