வணக்கம். வணக்கம். வணக்கம். நம் துளசிதளத்தின் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
'பொது'வருட வாழ்த்துகளுடன், பதிவுகளை எழுத ஆரம்பிக்கிறேன்,
உங்கள் அன்பும் ஆதரவும் வழக்கம் போல் தொடரும் என்ற நம்பிக்கையுடன்!
அஞ்சு மாசம் ஆகியிருக்கு, இங்கே வந்தே...... எல்லாப்பழியும் 'கால்'நிலைக்கே.....
அதை அப்புறம் பார்க்கலாம்.
இந்த வருஷத் தொடக்கம் எப்படி இருந்ததுன்னு இப்போ பார்க்கலாமா ?
நேத்து இரவு ஒரு பதினொன்னரை மணிவாக்கில் நம்ம வீட்டுக்கு அருகில் (!) இருக்கும் அன்புவிநாயகர் கோவிலுக்குக் கிளம்பினோம். போகுமுன் மறக்காமல் நம்ம வீட்டு முகப்பு அலங்கார விளக்குகளை போட்டாச்.
பொதுவா நம்ம முக்கிய பண்டிகைகள் நாட்களுக்காக சாமி அறை ஜன்னல்களில் நிரந்தரமாகவே ஒரு அலங்காரவிளக்கு தோரணத்தை மாட்டி வச்சுருக்கோம். நமக்குப் பண்டிகைகள் எண்ணிக்கை குறைவா என்ன ? ஆன்னா ஊன்னா விளக்கை எரியவிடறதுதான். ஹிஹி....
நம்ம தெருவில் இப்போ பல வருஷங்களா, வீட்டு ஜன்னல் விளக்கு போடறது நாம் மட்டுமே..... முந்தி இன்னொரு வீட்டிலும் க்றிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் அலங்காரவிளக்கு தோரணம் போடுவாங்க. ரெண்டு வீடுகளா இருந்தது..... அவுங்க வீடு மாறிப்போனதும் தெருவுக்கே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு நம்ம வீட்டில் மட்டும்தான் !
இங்கே வந்த நாள் முதலாக (ஆச்சு 37 வருஷங்கள் ) க்றிஸ்மஸ் அலங்காரங்களும் ஓரளவு செய்யறோம்தான். இந்த வழக்கம் நம்ம ஃபிஜி வாழ்க்கையில் கத்துக்கிட்டது. அங்கே மத வித்தியாசம் பார்க்காமல் எல்லோரும் பண்டிகைகளைக் கொண்டாடறாங்க. அது நல்ல வழக்கம் என்பதால் நாமும் ஜோதியில் கலந்தாச்சு !
அன்பு விநாயகர் கோவில் உரிமையாளர்களான பவித்ராவும், சந்தீப்பும் நம்ம நண்பர்கள்தான். நாங்கள் போய்ச்சேரும்போது அவுங்க ரெண்டுபேரும் விளக்கு வரிசைகளை அடுக்கிக்கிட்டு இருந்தாங்க. இன்னும் நாலு கைகள் சேந்ததும் பரபரன்னு வேலை நடந்தது. முடியும் நேரம் மற்ற நண்பர்களும் பக்தர்களும் வந்து சேர்ந்தாங்க.
பனிரெண்டுக்கு அஞ்சு நிமிட் இருந்தப்ப, விளக்குகளை ஏற்றத் தொடங்கினோம். இந்தக் கோவில் ஆரம்பிச்சதில் இருந்து ஒவ்வொரு வருஷமும் ஜனவரி முதல் தேதி பொறக்கும் நேரம் நள்ளிரவு ஜோதி தரிசனம் நடந்துவருது. மூத்தகுடிமகள் என்ற வகையில் முதல்விளக்கேற்றும் வாய்ப்பு எனக்குத்தான் ! (வயசாகறதால் இருக்கும் முன்னுரிமை இல்லெ !!! இதுகூட நல்லாத்தான் இருக்கு ! )
வழக்கம்போல் விளக்கேற்றித் தொடங்கி வச்சதும், வந்திருந்த அனைவரும் பங்கெடுத்தாங்க. ( இந்த முறை விளக்குகள் எண்ணிக்கை கொஞ்சம் குறைவுதான் ! )
மணி பனிரெண்டானதும் பூஜை, தியானம் எல்லாம் நடந்து புதுவருஷ வாழ்த்துகளைப் பரிமாறிக்கிட்டு வீட்டுக்கு வந்து சேரும்போது மணி ஒன்னு.
உண்மையில் அந்த நிமிட்தான் புது வருஷம் பொறக்குது. நமக்கு இங்கே நியூஸியில் கோடைகாலம் என்பதால் 'டே லைட் சேவிங்க்ஸ்'ன்னு ஒரு மணி நேரம் முன்பாக்கி வச்சுருக்கு அரசு. ( உண்மையில் காலை 6 மணின்னா, உள்ளூர் நேரம் 7 மணின்னு காட்டும் )
நியூஸிலாந்து நாடு, டேட்லைனில் வேற இருக்கு. இந்தக் கணக்கில் ஊர் உலகத்துக்கு பொழுது விடியறதே இங்கிருந்துதான் ஆரம்பம். போதாக்குறைக்குப் பொன்னாம்மான்னு இப்ப டேலைட் சேவிங்ஸ் இருப்பதால் ராத்ரி 11, இங்கே ராத்ரி 12 !
பொழுது விடிஞ்சதும் கடமைகளை முடிச்சுத் தயாராகி பத்துமணிக்கு நம்ம சநாதன் சபாவிற்குப் போனோம். எல்லாம் நம்ம ஃபிஜி மக்கள்தான். வருஷப்பிறப்புக்கு இங்கே ஹவன் நடத்துவது வழக்கம். நம்ம இந்தியாவில் மாநிலவாரியா வருஷப்பொறப்புகள் வர்றமாதிரி ஃபிஜியில் இல்லை. ஜனவரி முதல்தேதின்னு ஒரே ஒரு வருஷப்பிறப்பு மட்டுமே !
ஒரு நாலுவருஷமா ஆஞ்சு ப்ரதிஷ்டை நடந்ததுமுதல் , சந்நிதிக்கு முன்னால்தான் இந்த ஹவன் (ஹோமம்) நடக்கும். இன்றைக்கு மழையும் குளிருமாக ( வெறும் 13 டிகிரி. இது நம்ம கோடைகாலம்) இருந்ததால்...... ஹவனை, ஹாலுக்குள் நடத்த ஏற்பாடாகி இருந்தது. முதலில் வெளியில் ஹனுமன் சந்நிதியில் பூஜையும், ஹனுமன்சாலீஸா வாசிப்புமா நடத்திக்கொடுத்தார் நம்ம பண்டிட் ரூப் ப்ரகாஷ் ஜி ! பூஜை முடிஞ்சு எல்லோரும் ஹாலுக்குள் போனோம்.
ஹாலில் மேடையின் ஒருபக்கம் ஸ்வாமி சிலைகள் ப்ரதிஷ்டை போனவருஷம் (April 2024 )நடந்தது. இப்போ ஒரு மூணு மாசத்துக்கு முன்னால் நவராத்ரி சமயம் புதுசா ராதா & க்ருஷ்ணா சிலைகள் பிரதிஷ்டை ஆச்சு. என் உடல்நலக்குறைவு காரணம் நம்மால் அதில் கலந்துக்க முடியலை. இன்றைக்குத்தான் முதல்முறை தரிசனம் செஞ்சோம். அழகோ அழகு !
நவக்ரஹ ஹோமம் நல்லபடி நடந்து முடிஞ்சதும், ப்ரஸாதம் ஸ்வீகரிச்சுட்டு
நாங்க கிளம்பி , நம்ம புள்ளையார் கோவிலுக்குப் போனோம். இன்றைக்கு அங்கே விசேஷ பூஜையா, காலை எட்டரை முதல் ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருக்கு. மதியம் ரெண்டு மணி வரை கோவில் திறந்து வைக்கறாங்க. காலை அபிஷேகம், ஆரத்தி எல்லாம் கோவில் வாட்ஸப் குழுவில் வீடியோவாகப் பார்த்துக்கிட்டுதான் இருந்தோம்.
நாங்க போய்ச் சேரும்போது பனிரெண்டு மணி சமீபம். அப்பவும் கோவிலில் நல்ல கூட்டம்தான். ஜொலிக்கும் அலங்காரத்தில் நம்ம 'செல்லப்'புள்ளையார் ! தரிசனம் செஞ்சு, நண்பர்களுடன் புதுவருஷ வாழ்த்துகளையெல்லாம் பரிமாறி மகிழ்ந்து, ரெண்டுமணிக்குக் கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம் !
புத்தாண்டு விழா நல்லபடியாக முடிஞ்சது.
உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துகளைச் சொல்லி, இந்நாளைக் கொண்டாடியாச் !
எல்லோருக்கும் நல்லபடியாக இந்த வருஷம் அமையட்டும் !
