காலையில் கண் விழிக்கும்போதே.... 'கால் வலி பின்னியெடுக்குது.ன்னார் நம்மவர். இருக்காதா பின்னே? வழக்கத்தில் இல்லாத வகையில் என்னமா ஒரு நடை நேத்து, இல்லே ? அதுவும் ஒரு ஒன்பது கிமீ !!!!
நேத்து நம்மை ஐராவில் இறக்கிவிட்டப்பயே... நம்ம சஞ்சய் சொன்னாராம்..... "கல்யாண வீட்டு முக்கிய நிகழ்வுகள் எல்லாம் மறுநாள் பகல் ஒரு ரெண்டு மூணு மணிவரை இருக்கு. உங்களுக்குக் காலையில் எங்கியாவது போகணுமுன்னா கூப்பிட்டுச் சொல்லுங்க. வேற ஒரு வண்டியை ஏற்பாடு செஞ்சு அனுப்பிடறேன். பிரச்சனை இல்லை"
எனக்குமே ரெண்டு தோள்பட்டைகளிலும் ரொம்பவே வலிக்குது. பேசாம ரெஸ்ட் எடுத்துக்கிட்டு, சாயந்திரமா எங்கியாவது போகலாமுன்னேன். அப்புறம் கவனிச்சது, என் ரெண்டு மேற்கைகளிலும் கருப்பா ரத்தம்கட்டிக்கிடக்குன்னு. ரெண்டுநாளாவே இந்த வலி இருக்கேன்னு யோசிச்சதில்...... குண்டும் குழியுமா இருக்கும் கீக்கிடமான சந்து பொந்துகளில் இந்த ஆட்டோ போகும்போது தடால் தடால்னு தூக்கித் தூக்கிப்போட்டுக் குலுங்குனதோடு, பக்கவாட்டுக் கம்பிகளில் கை இடிச்சுக்கிட்டே இருந்ததே....அதுதான்..... காரணம் பிடிபட்டுப்போச்சு. ப்ச்.....
சஞ்சயைக் கூப்பிட்டு, சாயங்காலம் நாலு மணிக்கு வந்தால் போதுமுன்னு சொல்லிட்டு, நாங்களும் குளிச்சு முடிச்சு, ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குக் கீழே போகாம ரூம் சர்வீஸ்லெ இட்லியும் காஃபியும் கொண்டு வரச் சொல்லிட்டோம்.
அன்றைய நியூஸ் பேப்பரில், முதல்பக்கமே மஹாகும்பமேளாதான். இன்றைக்குப் பௌர்ணமி. ரொம்பவே விசேஷமாம் !
நேத்துவாங்கிவந்த ராமனை எடுத்துப் பார்த்தோம். நல்லாவே பேக் பண்ணியிருந்தாங்க. ராமனுக்கு டஸ்ட் கவர் போட்டுருக்கு. அதைமட்டும் பிரிக்கலை. அழகாத்தான் இருக்கான். இவனை எப்படிக் கொண்டுபோகப் போறோமுன்னு இப்போ புதுக்கவலை வந்துருச்சு. 'பேசாம லோட்டஸுக்குக் கூரியர் பண்ணிடலாம்'னு சொல்றார் நம்மவர். மார்பிள் கல், உடைஞ்சுட்டா ? என் பயம் எனக்கு.
பலவித யோசனைகளுக்குப்பின், கையோட கேபின்பேகாக் கொண்டு போகலாமேன்னேன். ஏழுகிலோவுக்கும் அதிகமாத்தான் இருக்கும். ஏர்போர்ட்டில் பிரச்சனை ஆச்சுன்னா ? சாமி இருக்குன்னு சொல்லிக்கலாம்..... நமக்கு செக்கின் லக்கேஜ் முப்பது கிலோ இல்லைதானே ? கூடிவந்தால் உங்க செக்கின்பெட்டி பத்துப்பனிரெண்டு கிலோதான். ஏர்லைன்ஸுக்குப் பதினெட்டு கிலோ நம்மால் லாபம்தான் !
"அப்ப நம்மவரின் கேபின்பேகா இப்ப இருக்கும் பையில் உள்ளவைகளை எப்படிக் கொண்டுபோறது ?"
புறப்படும் முந்தியே சொன்னேன், கொஞ்சம் பெரிய பெட்டியாக் கொண்டு போகலாமுன்னு.... கேட்டுட்டாலும்.... தன்னுடைய கேபின்ஸூட்கேஸை செக்கின்பண்ணிட்டு, ஷோல்டர் பையைக் கையிலே எடுத்துக்குவேன்னார்.
சரி. போகட்டும். இப்ப என்ன செய்யலாமுன்னு பார்க்கணும். எப்படியும் சென்னையிலிருந்து நியூஸி கிளம்பும் சமயம், ஒரு ஸூட்கேஸ் வாங்கிக்கணும்தான். அதையே இப்ப வாங்கினால் ஆச்சு! வலையில் தேடுன்னப்ப அதுக்கான தனிப்பட்டக் கடையே ஃபைஸாபாத்லே இருக்குன்னு காமிக்குது. ஐராவிலிருந்து ஆறரை கிமீதான். ராமர் கோவில் இருக்கும் திசைக்கு நேர் எதிர்த்திசை. வலை இன்றி வாழ்வில்லைன்னு ஆகிப்போச்சு பாருங்க !!!
ஆளாளுக்கு வலை மேய்ஞ்சுக்கிட்டே இருந்து அசதியில் அப்படியே தூங்கிட்டோம். முழிப்பு வந்தப்பப் பார்த்தால் மணி மூணு. லஞ்சு டைம் போயிருச்சு. அதென்னவோ இந்த மூணுநாளா பகல்சாப்பாட்டுக்கு நேரமே அமையலை. கைவசம் இருந்த மாதுளையை உரிச்சு உள்ளே தள்ளினோம்.
லேஸர் ஷோ ஒன்னு இருக்கு. சாயங்காலம் அதுக்குப் போகலாமுன்னு வலையில் பார்த்து வச்சுருந்தார் நம்மவர். நாலுமணிக்கு சஞ்சய் வந்துட்டேன்னு ஃபோன் செஞ்சதும் கிளம்பிப்போய் ஃபைஸாபாத் கடைத்தெருவில் ஒரு பெட்டியை வாங்கினோம்.

பக்கத்துக்கடையில் ஆண்களுக்கான ரெடிமேட் உடுப்புகள்! மாடியில் கடை. நம்மவர் மட்டும் போய்ப் பார்த்துட்டு வரேன்னார். நான் ஆட்டோவில் உக்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் கடை உதவியாளர் ஏழெட்டு செட் உடைகளைக் கொண்டுவந்து எனக்குக் காமிக்கிறார். அதுலே ரெண்டு செலெக்ட் செஞ்சேன். குழந்தைகளுக்கானது இருக்கான்னு கேட்டால் இதோ கொண்டுவரேன்னு போனவராண்டை மூணு வயசுக்குன்னு சொன்னதும் , இன்னும் ஒரு ஏழெட்டு வந்தது. அதில் நம்மவனுக்கு மூணு ஆச்சு. அடுத்தமாசம்தான் ரெண்டு வயசு முடியுது. விசேஷத்துக்குப் போடும் உடுப்புக் கொஞ்சம் பெருசா இருந்தால் இன்னொரு வருஷம்வரை வச்சுக்கலாம். இண்டியன் உடுப்புக்காக அடிக்கடி இந்தியா வரமுடியுதா ?
அப்புறம்..... இன்னொரு முக்கிய சமாச்சாரம்.... ஏற்கெனவே சென்னையில் வாங்கினவைகளைவிட இங்கே விலை ரொம்பவே மலிவு ! சுமார் 70 % குறைவுன்னா பாருங்க. இந்தத் துணிமணி சமாச்சாரத்துலே கொஞ்ச நேரம் போயிருச்சு. லேஸர் ஷோவுக்கு லேட்டாப் போனா எப்படி?
அங்கே போகறதுக்கு நம்ம ஹொட்டேலைத் தாண்டித்தான் போகணும் என்பதால் பெட்டியையும் துணிமணிகளையும் நம்ம அறையில் வச்சுட்டு அடிச்சுப்புடிச்சுக் கிளம்பி தர்ஷன் நகர் போறோம்.
அங்கே சூரஜ் Kகுண்ட் என்ற இடத்தில்தான் ஷோ நடக்குது. அயோத்யா ஊருக்குள் போகும் மேம்பாலத்தின் வழியாத்தான் போகணும். ஆனால் ராமர் கோவில் இருக்கும் பக்கம் திரும்பாமல்.... வலது பக்கம் இறங்கும் வழியில் போறோம். நமக்கு முன்னால் போகும் வண்டியில் யானை !
ஒரு ஆறேகால் மணி ஆகிருச்சுப் போய்ச் சேரும்போது. இங்கெல்லாம் பொதுவா ஆறுமணிக்கே இருட்டிருது இல்லே? வாசல் கேட்டாண்டை இருக்கும் கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கிக்கிட்டு உள்ளே போறோம். ஆளுக்கு முப்பது ரூ . சஞ்சய் விறுவிறுன்னு முன்னால் போக நாம் பின்னால்...... அக்கம்பக்கம் நின்னு பார்க்க நேரம் இல்லை.... ஒரு பெரிய குளக்கரைப் படிக்கட்டாண்டை நின்னவர், இங்கே வசதியா உக்கார்ந்துக்குங்க. இன்னும் கொஞ்ச நேரத்துலே ஷோ ஆரம்பிக்கும். முடிஞ்சதும் நான் வந்து கூட்டிப்போறேன்னுட்டு சஞ்சய் போயாச்சு.
ஐயோ... திரும்பப் படிக்கட்டுலே தாழ்ந்து உக்காரணுமேன்னு பயந்தாலும், வேற வழி இல்லைன்னு மேல் படியிலேயே உக்கார்ந்துட்டோம். கீழே மூணாவது வரிசையில் கால். எழுந்துக்கும்போதுதான் கஷ்டப்படணும். ப்ச்..... சுத்திமுத்திப்பார்த்தால் யாருமே இல்லை. நாங்க ரெண்டுபேர் மட்டுமே ! எதிரில் தண்ணீர் பரப்பைத் தாண்டி அலங்காரச் சுவர் நீண்டு போகுது. ஒரு அஞ்சே நிமிட் இடைவெளியில் திமுதிமுன்னு மக்கள் கூட்டம் வந்து சேர்ந்து முதல் படி முதல் , தண்ணீரைத் தொட்டு நிற்கும் கடைசிப் படி வரை ரொம்பிட்டாங்க. அதுவரை காத்திருந்த மாதிரி கொசுப்படை வந்து கடிக்க ஆரம்பிச்சது.
சாயங்காலம் குளிரா இருக்கப்போகுதுன்னு நம்மவர் ஸ்வெட்ஷர்ட் எடுத்துக்கிட்டு வந்தவர், எதுக்கும் இருக்கட்டுமுன்னு என் ஷாலையும் எடுத்துப் பைக்குள் போட்டுருந்தார். அதுதான் கடியில் இருந்து காப்பாத்துச்சு !
ஆறரைக்கு ஆரம்பிச்ச லேஸர் ஷோ முக்கால் மணி நேரம் வரை நடந்துச்சு. மஹாவிஷ்ணு, பழையகால அரண்மனைகள், ராமன் பிறப்பு வளர்ப்பு, முனிவர்கள், இப்படி ராமாயணக்காட்சிகளும் 'சூர்யகுண்ட் சரித்திரம்'கொஞ்சமுமா போச்சு. சின்னச் சின்னதா ஒரு அஞ்சு வீடியோ க்ளிப்ஸ் எடுத்தேன். பளிச்னு இல்லாம ரொம்ப சுமாராத்தான் இருந்தது அந்த ஷோ , என்பதே உண்மை. காட்சி ஓடும்போதே தண்ணீரில் அங்கங்கே அமைச்சுருக்கும் நீர் ஊற்றுகளில் விதவிதமா தண்ணீர் பீறிட்டு வருவதும், கலர் லைட்டுகளுமா..... ரொம்ப டிஸ்ட்ராக்ஷன்..... ப்ச்.
அந்த அஞ்சு க்ளிப்ஸையும் ஃபேஸ்புக்கில் போட்டு வச்சுருக்கேன். இங்கே அந்த லிங்க்ஸ் களையும் போட்டுருக்கேன். விருப்பமும் நேரமும் இருந்தால் பாருங்க. (அப்புறம் என்னைத் திட்டக்கூடாது.... சொல்லிட்டேன். )
https://www.facebook.com/share/v/1NjePyVF9u/
https://www.facebook.com/share/v/164Vifqq2t/
https://www.facebook.com/share/v/1EY9VYyQqP/
https://www.facebook.com/share/v/14mr91FNey/
https://www.facebook.com/share/v/1QWoQhsycv/
அன்றைக்குப் பௌர்ணமி என்பதால் நிலா பளிச்ன்னு இருந்தது !
இந்த சூரஜ்குண்ட் ( சூரியன் குளம்) இங்கே ஏற்பட்டதுக்கு ஒரு கதை இருக்கு. ஆனால் ரெண்டு வெர்ஷன். ஒன்னும் கண்டுக்காமக் கதையை கேட்டுக்கலாம், வாங்க.
ராமன் பிறப்பு சமயம், (பகல் 12 மணி )ஆகாயத்தில் சஞ்சரிச்சுக்கிட்டு இருந்த சூரியன், ராம அவதாரம் நடந்த மகிழ்ச்சியில் அப்படியே தன்னைமறந்து அங்கேயே அப்படியே ஆகாயத்துலே ஒரு மாசம் வரை நின்னுட்டானாம். சைத்ர மாசம் வெயில் காலம்தானே ! ஆனால் இங்கே இரவுன்னு ஒன்னு வராமலேயே ஒரு மாசம் முழுக்க பகல் வெளிச்சமே ! (ஆர்க்டிக் மாதிரி.... !!!)ராமனும் சூரிய குலமாச்சே ! அந்த அபிமானமா இருக்கலாம், இல்லே ! சூரியனின் கருணையை நினைச்சு ஒரு குளம் வெட்டுனாங்க ! ( சூடு தாங்காமல் தண்ணிக்குள்ளே போய் உக்கார்ந்துக்கறதுக்காக இருக்குமோ )
இன்னொன்னு என்னன்னா...... இந்த ஒரு மாச சூரியன் சம்பவம் நடந்தது... ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்த சமயம்தானாம்.
(எப்படியோ ஒரு மாசவெயில் கன்ஃபர்ம்டு !)
ராமருடைய அவதார காலம் முடிஞ்சபிறகு, அயோத்யாவின் அரச வம்சம் தொடர்ந்து இருந்துக்கிட்டே இருந்தப்ப... தர்ஷன் என்ற பெயருடைய அரசரின் ஆட்சி நடந்துக்கிட்டு இருக்கு. ஒரு சமயம் காட்டுவழியாப்போன அரசருக்குத் தாகம் எடுத்துச்சுன்னு தண்ணீரைத் தேடும் சமயம் ஒரு சின்ன குட்டை கண்ணில் பட்டுருக்கு. அரச ஊழியர்கள் அங்கிருந்து தண்ணீர் கொண்டுவந்து அரசரின் தாகத்தைத் தணிச்சாங்க. எங்கிருந்து கொண்டுவந்தீங்கன்னு கேட்டதும் , இடத்தைக் காமிக்கிறாங்க ஊழியர்கள். அங்கெ போய்ப் பார்த்தால் சிலபல முனிவர்கள் அந்தக்குட்டையில் குளிப்பதும், நீர் மொண்டு போவதுமா இருந்துருக்காங்க. விசாரிச்சதில், அது சூரியன் உருவாக்கிய அபூர்வ சக்தியுள்ள குளம்னு தெரியவந்தது.
அட ! அப்படியான்னுட்டு, அரசனும் அதில் நீராடினான். அவனுக்கு இருந்த சில நோய்கள் பட்னு நீங்கிருச்சு. அதுக்கான நன்றிக்கடனா... அந்தக் குட்டையைச் சுத்தப்படுத்தி இன்னும் விரிவாகக் கட்டறான். இந்த வேலைகள் நடக்கும்போது தண்ணீருக்குள்ளில் இருந்து சூரியபகவானுடைய சிலை ஒன்னும் சிவலிங்கம் ஒன்னும் கிடைக்குது. அங்கேயே கரையில் ஒரு கோவில் கட்டி, அந்த சிலைகளை ப்ரதிஷ்டை செஞ்சுடறான். கோவில் வந்தவுடன், மக்களும் வரப்போகன்னு சின்ன ஊர் ஒன்னும் உருவாகிருச்சு! அந்த இடத்துக்கே தர்ஷன் நகர்னு பெயரும் ஏற்பட்டுப்போச்சு. அட ! இப்பவும் இந்த இடத்தை தர்ஷன் நகர்னுதான் குறிப்பிடறாங்க.
அந்தக் கோவில்தான் இப்பவும் இருக்கு. மூலவர் சிலையும் அதேதானாம் ! இப்போ ராமனுக்குப் புதுக்கோவில் வந்த சமயம் ஊரை அழகுபடுத்தறோமுன்னு குளத்தையும் கோவிலையும் சீர்படுத்தி, சுத்திவரத் தோட்டமும் அமைச்சு, லேஸர் ஷோவும் நடத்திக்கிட்டு இருக்காங்க! நகரசபை நல்லாவே செயல்படுது. ஆனாலும் ரொம்பப் பழைய நகரம் என்பதாலும், சின்னச் சின்னச் சந்துகளும் ஒரு ஒழுங்கில் இல்லாத வீடுகளும் கட்டடங்களுமாய் இருப்பதால்..... நகரை ஒழுங்குபடுத்திப் பாதாளச் சாக்கடை போன்ற சுத்த சமாச்சாரங்கள் வர நாள் செல்லும்தான்.
நாம் வளாகத்துக்குள்ளே வந்த பெரிய அலங்கார வாசலின் மேலே ரெண்டு பக்கங்களிலும் மெட்டல் ஆர்ட் என்ற வகையில் பித்தனையால் சூரியனுடைய தேர்களையும், நடுவில் சூரியனையும் செஞ்சு வச்சுருக்காங்க. பாவம் அந்த சூரியன்..... ரெண்டு பக்கமும் தேர் இழுத்தால் நகரமுடியுமோ !!!!! கீழே இருக்கும் சுட்டியில் பார்க்கலாம். வெறும் 2.17 நிமிட் வீடியோதான் !
https://youtu.be/DWDbQEYtLWI
சஞ்சய் வந்து நம்மைக்கூப்பிட்டுப்போனார். சூர்யபவனுடைய கோவில் கொஞ்சம் உயரத்துலே இருக்கு. படிகள் ஏறணும் என்றதால் நம்மவர் மட்டும் போய் தரிசனம் செஞ்சுக்கிட்டுச் சில படங்களும் எனக்காக க்ளிக்கிட்டு வந்தார். சிவனுக்கான சந்நிதி கீழேயே குளத்தாண்டை இருக்கு!
வளாகம் முழுசும் விளக்குகள் போட்டு பளிச் ! மொத்தம் 99 ஏக்கர் நிலமாம் ! கழிப்பறை வசதிக்குக்கூடத் தனிக்கட்டடம் வாசல் கேட் பக்கத்தில் ! ஸ்வச் பாரத் !
இந்த இடமும், குளமும் பகல் நேரத்தில் வந்து அனுபவிக்க வேண்டிய சமாச்சாரம். நமக்கு விவரம் தெரியாமல் போயிருச்சு. காலையில் லேஸர் ஷோ பத்திச் சொன்னப்ப, நானாவது வலையில் புகுந்து என்ன ஏதுன்னு பார்த்திருக்கலாம். மெத்தனமா இருந்துட்டேன். ப்ச்....
வளாகத்தின் இன்னொரு பக்கம் நிறைய சாப்பாட்டுக்கடைகள் ! டின்னர் இங்கேயே சாப்பிட்டுப் போகலாமான்னார் நம்மவர்.
உடனே சஞ்சய், 'நான் ஒரு அருமையான இடத்துக்குக் கூட்டிப்போறேன். சுவையும் அருமை. வயிற்றுக்கும் கேடு வராது. சாப்பிட்டதும் என்னைக் கட்டாயம் பாராட்டுவீங்க'ன்னார் !
சரி. அங்கேயே போகலாமுன்னு பார்த்தால் நம்ம ஐராவைத் தாண்டி மூணாவது கட்டடம். சின்னதா உள்ளே தள்ளி இருக்கு. நம்ம கண்ணில் படவே இல்லை. இந்த மூணு நாளில் எத்தனைமுறை இதைத் தாண்டிப்போயிருக்கோம், இல்லே ?
க்ளாஸிக் அவத் ரெஸ்ட்டாரண்ட். சஞ்சயை நம்மோடு உள்ளே வந்து சாப்பிடக் கூப்பிட்டால்..... வெளியே போட்டுருக்கும் இருக்கைகளில் காத்தோட்டமாய் உக்கார்ந்து சாப்பிடறேன்னார்.
உள்ளே போனால் சின்ன இடமா இருந்தாலும் சுத்தமா இருந்தது.மெனு கார்ட் கைக்கு வந்ததும், என்ன சாப்பிடலாமுன்னு நாங்க பேசிக்கிட்டு இருந்தமா, அப்ப ஒருத்தர் வந்து வணக்கம் சொல்லி, தமிழான்னு கேட்டார். ரெஸ்ட்டாரண்ட் ஓனராம். ஆர்மியில் வேலை. இப்ப ரிட்டயர்ட். ஊட்டி ஸ்டேஷனில் பலவருஷம் வேலை பார்த்தவராம். போதாதா நமக்கு ! கல்லாவில் உக்கார்ந்திருந்த அவருடைய மனைவியும் எழுந்து வந்து சந்தோஷமாப் பேசுனாங்க. ஆனால் ஹிந்தியில். தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியுமாம். பேசினால் புரியுமாம். இந்த க்ளாஸிக் அவத் ரெஸ்ட்டாரண்ட் பல ஊர்களிலும் இருக்காம். தனித்தனி ஓனர்கள். மட்காவில் ரெண்டு மஸாலா டீ ஆன் த ஹௌஸ் !



பஃபே சாப்பாடு ஒரு விதத்தில் வசதின்னாலும், மொத்தமாச் சமைச்சு வச்சுட்டு எடுத்துப்போட்டுத் தின்னுக்கோ என்பதைவிட தனித்தனியா நமக்கு வேணுங்கறதை மட்டும் ஆர்டர் செஞ்சு சாப்பிடறது நல்லாத்தான் இருக்குல்லே
சாப்பாடு ருசி நல்லாவே இருந்தது. முன்கூட்டியே சொன்னால் சௌத் சாப்பாடே செஞ்சு தருவாராம். சஞ்சய்க்கு வேண்டியதைக் கொடுக்கச் சொல்லி இருந்தோம். எல்லாம் சேர்த்து பில் வரும்போது..... ஹைய்யோ.... இவ்ளோ மலிவான்னு இருந்தது. ஐராவுக்குத் திரும்பி வந்து கொஞ்சம் வலை மேய்ஞ்சுட்டுத் தூங்கியாச்.
தொடரும்...........:-)
