பொதுவா ப்ரம்மோத்ஸவம்னு எப்பவாவது தரிசனத்துக்குச் ச்சான்ஸ் கிடைச்சுருக்குதான். ஆனால் தாயாருக்குன்றது இப்பதான் முதல்முறையாக நமக்குக் கிடைச்சுருக்கு. இடம் நம்ம ஸ்ரீ பத்மாவதி அம்மவாரு கோவில்தான்.
வழக்கம்போல் கால்சிகிச்சை முடிச்சுக் கிளம்பும்போது மணி மூணு. சென்னையில் நொறுக்குத்தீனி என்றது பிரச்சனையே இல்லை. ரெண்டு நிமிட் நடையில் சுஸ்வாத். நியூஸியில் இப்படியா ? இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் நொறுக்ஸ்தான். முக்காலும் வட இந்திய சமாச்சாரங்கள். எல்லாத்துலேயும் லேசா புளிப்பு. ஆம்ச்சூர் சேர்ப்பாங்க போல. தென்னிந்திய வகைகளுக்கு, அதிலும் குறிப்பாக மத்ராஸி சமாச்சாரங்களுக்குப் பழகிப்போன நாக்கில்லையோ நமது !
ஒரு காலத்துலே வீட்டுலேயே கூடியவரை எல்லா வகைகளையும் செஞ்சு வைப்பேன். மகள் ப்ரைமரியில் படிக்கும்போது , ஸ்கூல் ஃபேருக்காக ஒரு முறை ஒரு பெரிய இருவது லிட்டர் பக்கெட் நிறைய முறுக்கு செஞ்சு கொடுத்துருக்கேன். அதுலே என்ன விசேஷமுன்னா.... இருநூறு கிராம் உள்ள சின்னச் சின்ன பேக்கட்டா போட மற்ற டீச்சர்ஸ் எல்லாம் உதவி செஞ்சாங்க. தேனெடுப்பவன்..... கை.... கதை தெரியும்தானே ? கடைசியில் ஃபேர் பார்க்க வரும் பொதுமக்களுக்கு ஒன்னுமே கிடைக்கலை. எல்லா பொதிகளையும் டீச்சர்ஸே வாங்கித் தனியா எடுத்து வச்சுக்கிட்டாங்க.
அப்பக் கையில் பலம் இருந்தது. வயசும் குறைவு. இப்பெல்லாம் இந்தக் கைவலியால் ஒன்னும் செஞ்சுக்க முடியறதில்லை.உள்ளுரில் ஒரு இண்டியன் கடையில் அரவிந்த் ப்ராண்ட்னு நம்ம தெக்கத்திய சமாச்சாரமா சீடை, முறுக்கு, தட்டை எல்லாம் ஒருமுறை கிடைச்சது. கூடுதல் கொக்கி..... செட்டிநாடு ஸ்நாக்ஸ் !!! விலை அதிகம் என்றாலும் கிடைப்பதே பாக்கியம் இல்லையோ ! சில சமயம் ரொம்ப பழைய ஸ்டாக்கோ என்னமோ.... ஒரு சிக்குவாசனை. ப்ச்.... எல்லாம் கொஞ்ச நாள்தான். இப்பக் காணவே காணோம்.
இவ்ளோ புலம்பல் எதுக்குன்னா..... மாவு வீட்டுலே ரெடி பண்ணித்தரேன், பிழிய மட்டும் உதவி செய்யுங்கன்னு நம்மவரிடம் சொன்னால்..... அதெல்லாம் வேணாம். கஷ்டப்படாதே (!!!!)ன்னுட்டு தடை போட்டவர், நோகாமல் பிழிஞ்செடுக்க நெட்டில் உபாயம் தேடி இருக்கார் ! அப்படி ஒன்னு லோட்டஸுக்கு ரெண்டு தெரு தள்ளி ராஜாபாதர் தெருவிலே கிடைக்குதுன்னு முதலில் அங்கே போனோம். இடியாப்பம் மேக்கர்னு ஒன்னு. டெமோ எல்லாம் காமிச்சாங்க. சுலபமா பிழியுது !
https://www.facebook.com/share/v/14yCyfQm8wC/
அதுலே முறுக்குப் பிழிஞ்சால் ஆச்சுன்னு ஒரு மெஷீன் வாங்கினார் நம்மவர். நியூஸி வந்த பிறகு ஒருநாள் செஞ்சு பார்த்தோம்தான். உள்ளே போடும் வில்லைகள். எல்லாம் இடியாப்பம், நூடுல்ஸ், தேன்குழல் செய்யும் வகைகளே. ரிப்பன் முறுக்குக்குக்கூட ரொம்ப மெல்லிஸா ஒரு வில்லை இருக்கே தவிர, முள் முறுக்குப் பிழியும் வில்லை இல்லை ! பார்க்கலாம், நம்ம பழைய அச்சில் இருக்கும் வில்லையை, இந்த அளவுக்கு வெட்டிப்போட முடியுமான்னு.....
வீட்டு வேலைகளைச் சுலபமாச் செய்ய அருமையான சாதனங்கள் இருக்கு !
காப்பிக்கடையில் டீ குடிச்சுட்டு பாண்டிபஸாரில் ஒரு சுத்து...... வேண்டுதல் :-)
ஒரு ஆறுமணிபோல ஜி என் சாலை தாயார் கோவிலுக்குப் போனோம். அன்றைக்கு சிம்ம வாஹனம். மண்டபத்தில் இருக்கும் மேடையில் சிங்கத்தைக் கொண்டுவந்து நிறுத்தி அலங்கார ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு.
நாங்க சந்நிதிக்குப்போய் தாயாரை தரிசனம் பண்ணிட்டு, வெளியே மண்டபத்தாண்டை வந்தப்ப, நமக்கு உக்கார இடம் கிடைச்சது. கலைநிகழ்ச்சிகள் ஆரம்பிச்சுருந்தது. யாரோ ஒருவர் வயலின் வாசிச்சுக்கிட்டு இருந்தார். எலெக்ட்ரிக் வயலின், புதுடிசைனில். ராக்பேண்ட்லே இப்படி வயலின் இருக்குல்லே ?
மற்ற வாகனங்கள் எல்லாம் மண்டபத்தில் வரிசைகட்டி நிக்குதுகள். பார்க்கவே அழகு! அதென்னமோ அவ்வளவாக் கூட்டமில்லை.
https://www.facebook.com/share/v/157ARQ7vo7D/
தாயார் தயாரானதும் தீபாராதனை, உபச்சாரம் எல்லாம் ஆச்சு. உபயதாரர்களுக்கு மரியாதை, கலைநிகழ்ச்சிக் கலைஞர்களுக்கு சம்பாவனைன்னு ..... நாம் இந்தப்பக்கம் கடைசியில் இருந்ததால் எட்டிஎட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தேன். திடீர்னு கூட்டம் வரத்தொடங்கியதும், நம்மவர் எழுந்துபோய் ஓரமா நின்னுட்டார். நாமும் கிளம்பினோம். இன்றைக்கு மூணாம்நாள்தான். இன்னும் ஆறுநாட்கள் இருக்கே..... முடிஞ்சால் வந்து போகணும்.
இன்றைக்கு பகல் சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டதால் டின்னரைக் கொஞ்சம் சீக்கிரமாகவே நம்ம கீதாவில் முடிச்சுக்கிட்டு, லோட்டஸ் திரும்பியாச்சு.
தொடரும்............ :-)
