'கோவிலுக்குப் போகணுமா'ன்னார் நம்மவர். இல்லையா பின்னே ? ஏற்கெனவே சில முறைகள் வந்துபோன கோவில்தான் என்றாலும் மூலவரை ஒரே ஒருமுறைதான் தரிசனம் செஞ்சுருக்கேன். 1989 ஜனவரின்னு நினைவு.
பயணத்தில் இங்கே வரும் நேரம் எப்பவும் வெயில் மண்டையை பிளக்கும் நேரமாகவே அமைஞ்சுடறது..... பெரிய நந்திதேவரை தரிசனம் செஞ்ச கையோடு, பாதங்கள் கொப்புளிக்க ஓடிப்போய் வெளிப்ரகாரத்தில் மதில் ஓரமாக மூணு பக்கங்களிலும் சிவலிங்கங்கள் இருக்கும் மண்டபத்தில் தஞ்சம் அடைஞ்சுருவோம். இடக்கைப்பக்கம் ஆரம்பிச்சு அப்படியே வலப்பக்கம் போய்ப்போய் மண்டபத்தின் கடைசி எல்லையில் இறங்குவதோடு சரி. நடுவே ப்ரகார முற்றத்தில் இருக்கும் சந்நிதிகளுக்கெல்லாம் போறதே இல்லை . நாம் போகும் நேரம் எல்லாம் உச்சிகால பூஜை முடிஞ்சு சந்நிதிகள் பூட்டி இருக்கும் நேரமும் கூட. இந்த தஞ்சைப் பெரிய கோவில், தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் காலை முதல் இரவு வரை வளாகம் திறந்தேதான் இருக்கும் என்பது ஒரு கூடுதல் வசதிதான்.
இந்த முறை கொஞ்சம் நிதானமா, முற்றத்தில் இருக்கும் சந்நிதிகளைத் தரிசிக்கவேணும் என்று சொன்னேன். நம்ம சங்கத்தில் இருந்து ரொம்பப் பக்கம்தான். ஒரு ரெண்டு, ரெண்டரைக் கி மீ தூரம் வரும். போறவழியில் (Tea Boy)டீ பாயில் நிறுத்தி ஆளுக்கொரு டீ ஆச்சு. ஏற்கெனவே தயாரிச்சு வச்சு விளம்பறாங்க. நம்ம லோட்டஸ் பக்கம் இருக்கும் 'காப்பி ரெடி'யில் அப்பப்ப டீ தயாரிச்சுக் கொடுப்பார் காப்பிக்கடைக்காரர்! அந்த ருசியே வேற லெவல் !
கோவில் வாசலில் இறங்கும்போது நல்ல கூட்டம். எப்போதும் இப்படித்தானே இருக்கும்.... அதுவும் சாயங்காலம் கோவிலுக்கு வர்றது ஒரு உள்ளுர் வழக்கம் இல்லையோன்னு போனால்..... ஒரு பக்கம் பெரிய பெரிய பாத்திரங்களை அடுக்கிவச்சுக்கிட்டு இருக்காங்க.பெரிய பேனர் ஒன்னு !
அடடா..... இன்றைக்கு மஹாசிவராத்ரியா !!!!! ஓ..... அதுதான் நேற்று ப்ரதோஷத்துக்காக குடங்குடமாத் தண்ணீர் கொண்டு வந்து ரொப்பியிருக்காங்க திருவானைக்கோவிலில் !!!! இந்த மஹாசிவராத்ரி சமாச்சாரம் தெரிஞ்சுருந்தால் தஞ்சாவூரைப் பயணத்தில் சேர்த்திருக்கமாட்டாரே நம்மவர் ! விழாக்காலங்களில் கூட்டம் அதிகம் என்பதால்..... அந்த நாட்களில் அந்த ஊர்களுக்குப் போவதைக் கட்டாயம் தவிர்த்துவிடுவதே வழக்கம். (ஆனால் எப்படியோ... இந்தக் கும்பமேளா சமாச்சாரம் தெரியாம அயோத்யாவில் போய் மாட்டிக்கிட்டது எவ்ளோ சோகம் பாருங்க.....)
காலணி வைக்கும் இடத்தில் போய் செருப்புகளை வச்சுட்டு, பக்கத்துலே இருக்கும் பொம்மைக்கடையின்மேல் ஒரு பார்வையை வீசிட்டு (அப்பாலிக்கா வாறேன் !) நந்தி மண்டபம் நோக்கிப்போனோம். சூரியன் இருந்தாலும் தகிப்பு இல்லை. மூலவர் தரிசனத்துக்குக் கம்பித்தடுப்புகள் வச்சு ஒரு வழி உண்டாக்கி இருந்தாங்க.
'கூட்டமா இருக்குமே ...போகணுமா'ன்னார். ஆமாம். மெல்ல நடந்து வர்றேன்னு சொன்னேன். ரெண்டு மூணு திருப்பங்கள் முடிஞ்சுப் பக்கவாட்டில் இருக்கும் படிகளுக்குப் போகுது பாதை. நிதானமா நின்னு, மேலே வாசல் மண்டபத்தில் ஏறியாச்சு.
எதுத்தாப்லெ இருக்கும் பெரிய நந்திதேவர் மண்டபத்தில் கூட்டம் வரிசையில் நகருது ! கோவிலில் நிறைய மக்கள் கூடியிருந்தாலும் வளாகம் ரொம்பவே பெருசு என்பதால் பரவலாக அங்கங்கே கொத்துக் கொத்தாக சின்னச் சின்னக்கூட்டம்தான் அப்போ.
மூலவர் தரிசன வரிசையில் நின்னு முன்மண்டபம் கடந்தோம். படம் எடுக்கக்கூடாதுன்ற சேதி சொல்லும் அட்டையை யாரும் சட்டை பண்ணலை. ஒரு இருபது இருபத்தைஞ்சு நிமிட்டில் மூலவர் தரிசனம் கிடைச்சது ! நம் வலப்புறம் இருக்கும் வாசல்வழி வெளியேறணுமுன்னு கோவில் ஊழியர் கை காமிச்சார் ! அதே போல் ஆச்சு. படிகள் இறங்கி வரும்போது பக்கத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு ஒரு கும்பிடு. இங்கே எல்லா சந்நிதிகளும் கொஞ்சம் உயரத்தில்தான் இருப்பதால் படிகள் ஏறிப்போக வேண்டியிருக்கு.
கீழே முற்றத்தில் இறங்கினதும் எதிரே இருந்த ஒரு மண்டபத்தின் படிகளில் போய் உக்கார்ந்தோம். இந்த மண்டபத்தைச் சுற்றிலும் கம்பியழி போட்டு வச்சுருக்காங்க. ஊஞ்சல் மண்டபமா இருக்கணுமுன்னு நினைக்கிறேன். நம்மவர் ஒரு நாலுபடிவரை ஏறிப்பாத்துட்டு வெறும் மண்டபம்தான்னு சொன்னார். ஒரு ஓரத்தில் இருந்த இடத்தில் நாமும் உக்கார்ந்தோம்.
வலையில் கிடைச்ச கோவில் அமைப்புப் படம் ஒன்னு இதோ... உங்களுக்காக !
நமக்கெதிரில் ஒரு சின்னக்கூட்டம் வந்து உக்கார்ந்தாங்க. ராஜஸ்தான் மக்கள். பஜனைப்பாட்டு பாட ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரம் அதை ரசிச்சுக்கிட்டு இருந்தேன்.
அப்பதான் இங்கே வந்தும் இதுவரை இங்கே வேறெந்த சந்நிதிக்கும் போகலையேன்னு..... எழுந்தவள், மண்டபப்படிகளில் உள்ளூர்க்காரர் போல இருந்த ஒரு பெரியவரிடம் , கருவூரார் சந்நிதி எங்கே இருக்குன்னு விசாரிச்சதில், ஒரு அஞ்சு விநாடி யோசிச்சவர், மூலவர் இருக்கும் பகுதியில் உள்ளே போகணும் என்றார். அட ராமா..... திரும்ப மூலவர் சந்நிதிவரை ஏறிப்போக முடியாதே...... மேலும் கோவிலுக்குள் கூட்டம் நிறைய வர ஆரம்பிச்சு, மூலவர் தரிசனத்துக்கு..... ரொம்ப நேரம் வரிசையில் நிக்கணுமேன்னு இருந்துச்சு. ப்ச்.....
போகட்டும், அடுத்த முறை வந்தால் (! ) தரிசிக்க ணுமுன்னு மூளையில் முடிச்சுப் போட்டு வச்சேன். கோவில் விமானத்தை எல்லாப் பக்கங்களிலும் இருந்து க்ளிக் செஞ்சுக்கிட்டே.... பின்பக்கம் போனால்..... அங்கே விமானம் இல்லாமல் ஒரு கட்டடம் இருக்கு! கொஞ்சம் கூட்டமும் கூட. இதுவரை முற்றத்தில் இருக்கும் எதையும் பார்க்கலையேன்னு அங்கே போனால் ..... அட ! இதுதான் கருவூரார் சந்நிதி !!!

இந்த சந்நிதிக்கு வலப்புறமும் இடப்புறமும் விமானங்களோடு கூடிய இரண்டு சந்நிதிகள் நம்ம புள்ளையாருக்கும், சுப்ரமணியருக்கும்! கோவிலின் மற்ற அமைப்புகளில் இருக்கும் அதே ஸ்டைலில் ! கருவூரார் சந்நிதி மட்டும் ஏதோ சமீபத்தில் கட்டுனதாகத் தோணுச்சு. இன்னொருக்காக் கிட்டப்போய்ப் பார்த்தால் தூண்கள் எல்லாம் கருங்கல் தூண்களே ! மேற்கூறையும் உட்புறச் சுவர்களும்தான் இப்படி ஒரு தோற்றத்தைக் கொடுக்குது...... இல்லே ? அப்புறம் பார்த்தால் தொல்லியல்துறை வச்சுருக்கும் தகவல் கிடைச்சது !
வளாகத்தின் கடைசியில் இருக்கும் மேற்கு வரிசை மண்டபத்தில் சரியாக் கோவிலின் பின்புறம் பார்த்து ஒரு சின்ன சந்நிதி, விளக்கெல்லாம் போட்டு ஒரு ஜொலிப்பில் ! உள்ளே வெள்ளை நிறத்தில் ஒரு சிலை. என்ன சாமின்னு தெரியலையேன்னு , ஃபேஸ்புக் மூலம் நண்பர்களிடம் விசாரிச்சதில் இவர் வருணபகவான் என்றும், கோவிலின் மேற்குத்திசைக்கான திக் பாலர் என்றும் நம்ம கீதாப்ரியன் சொன்னார். அவருக்கு என் நன்றி !
இளவயதினர் பலரும் சின்னக்குழுக்களாக அங்கங்கே நின்னு படங்கள் எடுத்துக்கறாங்க. நம்மால் ஆன சிறு உதவின்னு நானும் கொஞ்சம் உதவி செஞ்சுட்டுப் பதில் உதவியும் வாங்கிக்கிட்டேன்:-)
வெளிச்சம் முழுசும் மங்கி மசமசனு இருட்டுக்கவியத்தொடங்குச்சு. மதில் மேல் ஒரு மயிலார் வந்து உக்கார்ந்திருந்தார் ! விளக்குகள் போட்டதில் கோவில் வளாகம் பளிச்சுன்னு ஜொலிக்குது. எத்தனை முறை க்ளிக்கினாலும் இன்னும் இன்னும்னு தீராத பசி நம்ம கெமெராவுக்கு !
பெரியநாயகி அம்பாள் சந்நிதிக்கு வெளியே நின்னு ஸேவிச்சதோடு சரி. கால் வைக்க இடமில்லை. போகட்டும்.... முற்றத்தில் இறங்கிச் சுத்தலை என்ற குறை இந்தமுறை தீர்ந்தது. ஆனால் முற்றத்தில் உள்ள சந்நிதிகளை உள்ளே போய் ஸேவிக்கவேணும் என்ற குறை மட்டும்தான் இப்போதைக்கு ! பார்க்கலாம்..... அடுத்தமுறை ஈசன் அழைப்பானான்னு....
நம்ம ஸ்ரீரங்கம் கோவில் பரப்பளவில் ஏறக்கொறைய கால்பாகம்தான் இந்தக்கோவில். அங்கே இடுக்கு முடுக்குன்னு ஒரு இடம் விடாமல் ஏகப்பட்ட சந்நிதிகள் ! எம்பத்தியொன்னுன்னு ஒரு கணக்கு. இங்கே விரல்விட்டு எண்ணும் கணக்குதான் ! அதைக்கூட உள்ளே போய்ப் பார்க்கலையேன்னு இருக்கேன்.....
நாட்டியாஞ்சலி விழா வேற நடந்துக்கிட்டு இருக்கு. நடராஜர் மண்டபம் வரை போகணும். தோட்டத்துச் செடிகளைக் கடந்து போகவேணாமேன்னு நினைச்சு, அங்கே போகலை.
காலணி பாதுகாக்கும் இடத்துக்குப் போயிட்டு, அப்படியே பக்கத்துக் கடையில் நுழைஞ்சேன். எல்லாமே அழகோ அழகு. ஏதாவது ஒன்னு மட்டும் வாங்கிக்கலாம் என்ற மன உறுதியோடு ஒரு செட்டியார் தம்பதிகளை வாங்கினோம். நம்ம கொலுவுக்கு ஆச்சு !
மனசில்லா மனசோடு கோவிலைவிட்டு வெளியில் வந்தால் அன்னதானம் விறுவிறுப்பாக நடந்துக்கிட்டு இருக்கு. வழக்கம்போல் கெமெராக்கண்ணால்தான் சாப்பிடவேணும். பஞ்சமுக ருத்ராக்ஷம் ஒன்னு கையில் கட்டிவிட்டாங்க. அது போதும். நம்ம வீட்டில் இருக்கும் ருத்ராக்ஷங்களுக்கு கூட்டாச்சு ! ( ஒரு முகம் முதல் ஆறு முகம் வரை சேர்ந்துருக்கு ! )
தஞ்சைக்கோவிலில் எடுத்த படங்களை ஃபேஸ்புக்கில் ஆல்பமா போட்டு வச்சுருக்கேன். அதிகம் ஒன்னுமில்லை. ஒரு நூற்றியறுபத்தியொன்பதுதான். விரும்பினால் எட்டிப்பாருங்கள் !
https://www.facebook.com/share/p/18e4jsWUpV/
தொடரும்..... :-)
