எண்ணி அஞ்சாவது நிமிட்லே நம்ம சார்ங்கபாணி கோவிலுக்குள் நுழைஞ்சாச்சு. அதான் எல்லாக் கோவில்களையும் அக்கம்பக்கத்துலேயே சுத்திச் சுத்திக் கட்டிவிட்டுருக்காங்களே அந்தக் காலத்தில்! இப்பமாதிரிக் கூட்டமோ, வாகனப்போக்குவரத்தோ, கடைகண்ணிகளோ அவ்வளவாக இருந்துருக்காதுதானே ? கோவிலுக்குப்போறேன்னு கிளம்பினால் ஒரு ஏழெட்டுக் கோவில்கள் தரிசனம் செஞ்சாட்டு வீட்டுக்குப் போகலாம், இல்லே !!!
குடந்தை சார்ங்கபாணி ராஜகோபுரத்துக்கு , தமிழ்நாட்டின் உயர்ந்த கோபுரங்கள் வரிசையில் மூணாவது இடம்! 146 அடி உயரம். பதினோரு நிலை! கோபுரவாசல் கடந்து முன்மண்டபம் போறதுக்கே ஒரு படுவிசாலமான முற்றத்துலே நடந்து போகணும். கோவில் திருவிழா வருது போல ! பந்தல்போடும் வேலைகள் ஆரம்பிச்சுருக்காங்க.
ஸ்ரீசார்ங்கா ஸ்ரீசார்ங்கா ஸ்ரீசார்ங்கா ன்னு மூணுமுறை சொல்லி நம்மை வான்னு கூப்பிடும் முன்மண்டப முகப்பு. அதுக்குள்ளே போனால்தான் கொடிமரமும் பலிபீடமும்.பெரிய திருவடியை சேவிச்சுட்டு உள்ளே போறோம்.
நம்ம கமலவல்லி போலவே இங்கேயும் கோமளவல்லிக்கே முதல்மரியாதை ! என்ன இருந்தாலும் இது கோமளாவின் பொறந்தாம் இல்லையோ !!! என்ன ஒன்னு, தனிச்சந்நிதியில் கோவில் கொண்டுருக்காள். அங்கே சேவிச்சுட்டுத்தான் சார்ங்கபாணியை சேவிக்கணும் என்ற நியதி உண்டு. இடும்பர்களுக்குத்தான் தனிவழியாச்சே..... விடுவிடுன்னு மூலவரை நோக்கி ஓடும் நம்மவர் பின்னே நானும் ஓடினேன்.
நம்ம சக்கரராஜா கோவில்போலவே இங்கேயும் மூலவருக்கு ரெண்டு வாசல். உத்தராயணம் (தை ஒன்னு முதல் ஆனி கடைசிநாள் வரை)& தக்ஷிணாயணம் (ஆடி ஒன்னு முதல் மார்கழி கடைசிநாள் வரை !)
ஆனால் சக்கரராஜா போல அத்தனை படிகள் ஏறிப்போகும் அமைப்பு கிடையாது. அது மாடி ! இங்கே ரதம் ! அதுவும் யானை பூட்டிய ரதம் ! மஹாவிஷ்ணு அப்படியே ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து வந்து இங்கே இறங்கியிருக்கார். அதனால் தனியா சொர்கவாசல் கூட கிடையாது இந்தக் கோவிலில் ! இவரை தரிசனம் செஞ்சாலே சொர்கம் கிடைச்சுரும்.
ஆமாம்.... ரதத்துலே உக்கார்ந்து வரவேணமா ? அதென்ன ஒய்யாரமா படுத்துக்கிட்டே வர்றது ? திருமழிசை ஆழ்வார் வந்து பாசுரம் பாடறார்..... சட்டைசெய்யாமல் ஒரு கிடப்பு ! அஞ்சு பாசுரம் ஆச்சு.... புள்ளி அசையவே இல்லை.... வனவாசம் காரணம் அயோத்தியில் இருந்து காட்டுக்குப்போய் அங்கே இங்கேன்னு நடந்துதானே இருக்கணும். கடைசி வருஷம், காணாமப் போன மனைவியைத்தேடி அலையோ அலைன்னு அலைஞ்சு திரிஞ்சுக் கடைசியில் லங்காவரை நடந்துதானே போயிருக்கணும்? அந்தக் கால்வலியில் ( அட ராமா..... உன் கால்வலிதான் எனக்கும் வந்துருச்சா!!) முடியாமல் கிடக்கிறாய் போல.... போகட்டும் போ.... இதோ ஒருத்தன் வந்துருக்கானேன்னு தலையைத் திருப்பியாவது பார்க்கக்கூடாதா ? அட்லீஸ்ட் கொஞ்சம் உடம்பை உசத்தி எழுந்துக்கற பாவனை ?
நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்
இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே.
இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே.
பக்தன் சொல்றது சரிதான்னு தலையைத் திருப்பி..... லேசாத் தன்னுடம்பை உயர்த்தி........... ஒரு பாவ்லா..... உத்தான சயனம்னு பெயராம் ! பத்துவித சயனப்போஸ்களில் இதுவும் ஒன்னு ! அட! உம்மால் முடியுதே ! இப்படியே இருந்து பக்தர்களுக்கு அருள் புரியவேணுமுன்னு கோரிக்கை வச்சுட்டார் ஆழ்வார். பக்தன் வேண்டுகோளை மறுக்க முடியுமா ? அப்படியே ஆச்சு. (பாவம்.... கால்வலி போய் இடுப்புவலி வந்துருக்கும் இல்லே? )
ரதத்தின் படிகளேறி உத்தராயண வாசல் வழியா நாமும் போய் பெருமாளை சேவிச்சுக்கிட்டோம். கருங்கல் சிலையில் உத்தான போஸ் அமைஞ்சுருக்கான்னு தெரியலை. நிறைய பூக்குவியல்களுக்குள் இருந்தார் ஆராவமுதன் ! உற்சவருக்கும் இதே பெயர்தான் !
மேலே படம்: கோவில் வலைப்பக்கத்தில் இருந்து !
சந்நிதிக்கு வெளியே வந்து அந்தாண்டைக் கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தேன். நல்ல பெரிய ரதம் !
இந்தக் கோவிலில் ஒரு ஸ்பெஷல் என்னன்னா..... தீபாவளியன்னிக்குக் காலையில் மூலவர் தரிசனம் கிடையாது. உச்சிப்பூஜையில்தான் சந்நிதி நடை திறப்பு ! ஏனாம் ? கார்த்தாலை வேற வேலை இருக்கு ! பக்தனுக்குத் திதி கொடுக்கபோயிருவார் ! ஆ....... நெசமாவா !!!
இப்பதான் ஒரு ஒன்பது வருசத்துக்கு முன்னே ஒரு பதிவில் விவரமா எழுதியிருந்தேன். அதையே இங்கேயும் சொன்னால் ஆச்சு......
இவ்வளவு பாக்கியம் செய்த பக்தர் லக்ஷ்மிநாராயணன் என்பவர். குருதாத்தாச்சாரியாரின் சீடர். பரம ஏழை. பெருமாள் மீது அளவுகடந்த அன்பு. இப்போ நாம் கடந்து வந்த ராஜகோபுரம் இவர் முயற்சியால்தான் கட்டப்பட்டது.
மடப்பள்ளி ஸேவகம். பெருமாளே கதின்னு கல்யாணம் கட்டாம வாழ்ந்துட்டார். கடைசியில் ஒரு தீபாவளி அமாவாசையன்னிக்குப் பெருமாள் திருவடிக்குப்போய்ச் சேர்ந்துட்டார். தனிக்கட்டையா இருந்ததால் திதி செய்யக்கூடக் குடும்பம் இல்லை. அன்றைக்குப் பட்டர் கனவிலே வந்த பெருமாள், என் கையில் இருக்கும் தர்ப்பையை எடுத்துக்கொண்டுபோய் வேண்டியதைச் செய்யும் என்று உத்தரவிட்டாராம்.
மறுநாள் காலை கருவறையைத் திறந்தால்.......... ஈரவேட்டியும், கையில் தர்ப்பையுமா காட்சி கொடுத்ததாகக் கோவில் புராணம் சொல்லுது!
அதேபடிக்குத் தீபாவளி அமாவாசை தினம் காலை நேரத்தில் கோவில் திறக்கறதில்லை. கோவில் வகையில் தர்ப்பணம் கொடுத்து முடிச்சப்பறம் உச்சி காலபூஜைக்குக் கோவிலைத் திறந்துடறாங்க.
இன்னும் கோவில்கதைகள் எல்லாம் விஸ்தாரமாய் அந்தப் பதிவில் இருப்பதால் கீழே இருக்கும் சுட்டியை க்ளிக்கி வாசிக்கலாம் விருப்பம் இருந்தால் !!!
https://thulasidhalam.blogspot.com/2016/08/76.html
மூலவர் சார்ங்கத்தோடு சேவை சாதிப்பதால் சார்ங்கபாணிகோவில் என்ற திருநாமம் கோவிலுக்கு! மஹாவிஷ்ணு கையில் இருக்கும் வில்லின் பெயர் சார்ங்கம். அது எப்படியோ சாரங்கம்னு ஆகிப்போய், சாரங்கபாணின்ற பெயர் பரவலாகிப்போச்சு. கும்மோணம் ஏரியாவில் ஏகப்பட்ட நபர்களுக்கு சாரங்கபாணி என்ற பெயர் (அந்தக் காலத்தில் )உண்டு. இப்பெல்லாம் 'ஷ்'எண்டிங் இருந்தால்தான் பேஷன் ! அதேபோல பெண்களிடையில் கோமளா என்ற பெயர் பரவல். நம்ம பூனா மாமியின் பெயர்கூட கோமளாதான். பொறந்த ஊர் கும்பகோணம்னு தனியாச் சொல்லவேண்டியதே இல்லை ! இதுலே இன்னும் ஒரு அதிசயமுன்னா..... மாமியின் மருமகன் பெயர் ஆராவமுதன் ! !!! ரிட்டயர்ட் வாழ்க்கையில் கோஷ்டி சொல்லும் குழுவில் அங்கம் ! பெருமாள் சேவையில் இனிய வாழ்க்கை !
சார்ங்கம் சொல்லில் இலக்கணப்பிழை இருக்குன்னு நண்பர் பழைய பதிவில் வந்து சொல்லிட்டுப்போனார். அடராமா..... அது ஒரு வில்லின் பெயர். அர்ஜுனனின் வில்லின் பெயர் காண்டீபம் என்பதைப்போல் இது மஹாவிஷ்ணுவின் கையில் இருக்கும் வில்லின் பெயர். அதுவும் இது சமஸ்க்ரத மொழிச் சொல். இதுலே தமிழ் இலக்கணம் எங்கே வந்தது ? மண்டையை உடைச்சுக்கத்தான் வேணும்.
அது இருக்கட்டும்....... மஹாவிஷ்ணு, சங்கு, சக்கரம், உடைவாள், Gகதாயுதம், வில் என்ற அஞ்சு ஆயுதங்களை (!) தரித்திருக்கிறார். பஞ்சாயுதம் என்றுதான் சொல்வோம். ஒவ்வொன்னுக்கும் ஒரு பெயரும் இருக்கு!
சங்கு - பாஞ்சஜன்யம்
சக்கரம் - சுதர்ஸனம்
உடைவாள் - நந்தகம்
கதாயுதம் - கௌமோதகி
வில் - சார்ங்கம்
இவற்றில், சக்கரத்துக்கும், சார்ங்கத்துக்கும் கோவில்கள் இருக்கு. மற்ற ஆயுதங்களுக்குத் தனிக்கோவில் இருக்கான்னு யோசனையா இருக்கேன். விவரம் தெரிஞ்சவுங்க சொன்னால் நல்லது.
ரதவடிவில் கருவறை இருப்பதை திருஎழுகூற்றிருக்கை என்ற வகையில் பாடலாகப் பாடி இருக்கார் நம்ம திருமங்கை ஆழ்வார். ஒன்னுமுதல் ஏழுவரைசொற்களை அமைச்சு மேலேறிப்போய், அங்கிருந்து ஒவ்வொன்னா கீழிறிங்கி வரும் சொற்களைக் கொண்டு ஒன்னில் முடிக்கணுமாம்.
இந்தக் கால்வலியால் ..... மற்ற சந்நிதிகளுக்குப் போய்ப் பார்க்கத் தோணலை. திரும்பி வெளியே வரும்போது ஆழ்வார்சந்நிதி மூடிக்கிடக்கு..... ப்ச்....
பஞ்சரங்கத்தலங்களில் இந்தக்கோவிலும் ஒன்னு. நம்ம ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட நூற்றியெட்டு திவ்யதேசக்கோவில்களில் இதுவும் சேர்த்தி !
பெருமாளுக்கு பாக்கி வச்சவங்க பெயர்களைப் போட்டுவச்சுருக்காங்க. ப்ச்.....
ராயாஸுக்குத் திரும்பி வந்து ஆயுர்வேதத்தைலம் காலில் தேய்ச்சுக்கிட்டு கொஞ்சம் ஓய்வு. ஒரு ஒன்பது மணிபோல கீழ்தளத்தில் இருக்கும் ரைஸ்n ஸ்பைஸில் எனக்கான ரெண்டு இட்லி ! நம்மவருக்கும் விஜிக்கும் அவரவர் விருப்பப்படி !
நாளைக்கு இன்னொரு கோவிலுக்குப் போகலாம். சரியா ?
தொடரும்........ :-)
