தமிழ் சினிமா க்ளைமாக்ஸ் சண்டை அண்ட் கொடுமைக் காட்சிகளுக்காக எப்படி ரூம் போட்டு யோசிப்பாங்களோ.... எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கென்னவோ சின்னச் சின்னச் சின்ன கொடுமைகள் செய்வது கைவந்த கலையாக இருக்கு. எல்லாம் தானாய் வருதே!
ஜஸ்ட் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் ஹாஹா எத்தனை வகை!!!! ஆனாலும் ஆள் அசருவாரா? ஊஹூம்..... ஆம்பளை அழக்கூடாதுன்னு சொல்லி வளர்க்கும் சமுதாயம் அல்லவா நம்மது. ஆனால் அதையும் மீறி ஓசைப்படாமல் கண்ணீர் விடும்போது எனக்கு(ம்) கொஞ்சம் கஷ்டமாத்தான் போயிருது. எத்தனையோ வகைவகையான விவசாயக் கண்டு பிடிப்புகள் இருக்குன்னாலும், நறுக்கும்போது கண்ணீர் வராத வெங்காயத்தைக் கண்டுபிடிக்காதவர்களை கொஞ்சம் சத்தமாவே வையத்தோணுது!
அதுக்காக ரொம்பவே கல் நெஞ்சுக்காரின்னு நினைச்சுடாதீங்க. இந்த வெங்காய சமாச்சாரமெல்லாம் இப்போ ஒரு நாலு மாசமாத்தான். நாப்பது வருசக் கஷ்டத்தை நினைச்சு யாருக்கும் தெரியாமல் அழ நானே ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கேன் பாருங்க!!!!
ஆமாம்.... ரூபி என்றால் மாணிக்கம் என்றும் கெம்புக் கல் என்றும் தமிழில் சொல்றாங்களாமே! மாணிக்கம் சிகப்பாவா இருக்கும்? கூகுளார் இப்படி கலர் காமிக்கிறார். குழப்பம் தீர்ந்தால்தான் ஒட்டியாணத்துக்கு ஆர்டர் தரமுடியும்:-)
இப்ப எதுக்கு ரூபி? 40 வருசமாச்சுல்லே, கண்ணாலங்கட்டி, அதுக்குத்தான். வெள்ளைக்காரன் ரூபி ரூபின்னு சொல்லிக்கிட்டே இருக்கானே!
இனி உள்ள காலத்தையும் இதே மகிழ்வுடன், அதிகமாக் கஷ்டமில்லாமல் கழிக்க எம் பெருமாள் அருள் செய்வார் என்ற நம்பிக்கையுடன், காதல் கணவருக்கு நன்றி சொல்லிக்கறேன்.
இன்றைய ஸ்பெஷல்?
எங்கூர் ஸ்வாமிநாராயணன் கோவிலுக்குப் போய் சாமிக்கு நன்றி சொல்லிட்டு மஹாராஜா போகணும், மகளுடன்.
அனைவரின் அன்பையும் வேண்டி,
துளசி.
