Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1475

குரங்குக்கும் யானைக்கும் முதலைக்கும் இங்கே தரிசனம் உண்டு ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 69)

$
0
0
6.6 கிமீ கடக்கக் காமணி ரொம்பவே அதிகம்! பசுமையான வயல்களையும், திண்ணை வச்சக் கூரை வீடுகளையும் பார்த்துக்கிட்டே  போறோம். திடீர்னு  ரொம்பதூரம் வந்தது போல் இருக்கேன்னு   தெருவில் எதிர்ப்பட்டவரிடம் விசாரிச்சால்....

'இப்படியே வந்த வழியில் திரும்பிப்போங்க. வேகத்தடைக்கு  அப்புறம் வலது பக்கம் திரும்புனா கோவில்'என்றார்.  வேகத்தடை !   ஹைய்யோ.... என்ன  அழகாத் தமிழில் சொன்னார் என்று எனக்கு ஒரே வியப்பு. என்னைத்தவிர எல்லோரும்  நல்ல தமிழில் பேசறாங்க!  எங்க மாமியார் கூட  அருமையான தமிழில் பேசுவாங்க. அவருக்கு வாய்ச்ச மருமகள், அப்படி  ஒன்னும் சொல்லிக்கறதுக்கில்லை:-)
தோ....   கோவில் வந்தாச்சு. மேலகபிஸ்தலமாம்!  உழக்கில் கிழக்கு மேற்கு  பார்த்தாப்போல்:-) தகரக்கொட்டகை மாதிரி  இருக்கும் முன்வாயிலைக் கடந்து உள்ளே போறோம். 'காலனி'களை  இங்கு விடுன்னு சொல்றாங்க.
ரெண்டு பக்கமும் காடாக வளர்ந்து நிற்கும் செடிகளுக்கு நடுவில் பாதை. நேரெதிரில்  கொடிமரமும் பலிபீடமும். பெரிய திருவடி சின்ன அளவில் இருக்கார்.  அடுத்து இன்னொரு தகரக்கூரை.  அதைக் கடந்து  கோவிலுக்குள் நுழைகிறோம்.



கஜேந்திர வரதன், கிடந்த கோலத்தில் புஜங்க சயனத்தில்.  நாபியில் ப்ரம்மா! காலடியில் தேவிகள்!


 மடியில் முருகன்!

தனிச் சந்நிதியில்  தாயார் ரமாமணி வல்லி!  பொற்றாமரை வல்லி என்றும் பெயர்.  ஆண்டாள் சந்நிதி என் கண்ணில் படலை:(




பெருமாளுக்குக் கண்ணன் என்றொரு பெயரும் உண்டு. பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரத்தில் இந்தக்கோவிலும் ஒன்று.  மற்ற நான்கும்..... திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை,  திருக்கண்ணங்குடி என்னும் ஊர்களில். இந்த அஞ்சுமே 108 திவ்ய தேசக்கோவில்கள் பட்டியலில் உள்ளவைதான். நாம்தான் இன்னும் அங்கெல்லாம் போகலை.

கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வைகயறிந்தேந் ஆற்றங்
கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு

திருமழிசை ஆழ்வார்  பாசுரம்



 சொர்க்கவாசல்..........

நம்ம ஆஞ்சநேயருக்கு தரிசனம் கொடுத்த பெருமாள் இவர். அதுவும்  நேயடுவுக்குப் பிடிச்ச ஸ்ரீராமர் கோலத்தில்! இங்கே இதே இடத்தில் என்பதால்  கபி (குரங்கு) ஸ்தலம் என்று பெயர் வந்துருக்கு ஊருக்கு!  பொதுவா பெருமாள் தரிசனம்  கொடுத்தவர் பெயரோடும் சேர்ந்துக்குவாரே...  இங்கே ஏன்  கபி வரதன்னு  சேர்த்துக்கலைன்னு எனக்கு ஒரு கவலை! 
 ஆஞ்சி மட்டுமில்லாமல்,  வாலி சுக்ரீவனும் வந்து வழிபட்டார்களாமே...  எப்போ ? சண்டை இல்லாமல் இருந்த  காலத்திலா?  இல்லே சீதையைத் தேடி வந்த வாநரர்கள்  வழி பட்டார்களோ என்னவோ?  அப்படின்னா.... வாலி ஏது?   சரி விடுங்க....  குரங்குப்புராணம்  இப்போ எதுக்கு?

இந்ரத்யும்னன்  என்ற அரசன் கடவுள்பக்தி மேலிட்டு தியானம் செஞ்சுக்கிட்டு இருக்கான். அப்பப்பார்த்துஅங்கே துர்வாசர் வர்றார்.  கண்ணை மூடி தவம் செய்யும் அரசன்,தன்னை உடனே கவனிச்சு மரியாதை  செய்யலைன்னு கோபம் பொத்துக்கிட்டு வருது.  அதென்ன எப்பப் பார்த்தாலும் துர்வாசர் அப்படிச் செஞ்சார், இப்படிச் செஞ்சாருன்னே கதை சொல்லிக்கிட்டு இருக்காங்களே.   தேவலோகத்துலே இவருக்கு ரொம்பவே கெட்ட பேர் போல! எல்லாப் பழியையும் தூக்கி இவர்மேல் போட்டு வில்லனாவே ஆக்கிப்புட்டாங்க!

கதை போற போக்கில் சில இடங்களில் இந்தக் கோபக்கார முனிவர் அகத்தியர் என்று சொல்றாங்க. எனக்கென்னமோ அகத்தியரா இருக்கமாட்டாரு என்ற எண்ணம் இருக்கு.  சீர்காழி முகத்துக்குக் கோபம் பொருத்தமா இருக்குமா?  ஊஹூம்....

"அகங்காரம் மிகுந்து நீ என்னை அவமரியாதை செஞ்சதால் நீ மதம் பிடித்த  யானையாக மாறக்கடவாய்"

மமதை பிடிச்சதுக்கு உதாரணமான மிருகம் யானையா? மனுஷன் இல்லையோ!  என்னமோ போங்க.....  நம்ம யானையை இப்படி எல்லாம் திட்டுனா நல்லாவா இருக்கு?

ஐயோ....  முனிவரே....கண்ணை மூடிக்கிட்டு இருந்ததால் கவனிக்கலைன்னு கெஞ்சுனாலும் 'சாபம் விட்டது விட்டதுதான்'னுட்டார் துர்வாஸர். ஆனால் உன் கடவுள் பக்தி மட்டும் உனக்கு எப்பவும் நினைவு இருக்கும். நீ பக்தியுள்ள யானையாத்தான் இருப்பாய் என்றார்.

யானைப்பிறவி எடுத்த மன்னன்,  தாமரை பூக்கும் தடாகங்களில் இருந்து அழகான தாமரை மலர்களை தினத்துக்கொன்னாய் பறிச்சு, பெருமாள் கோவிலுக்குப்போய்   அந்த மஹாவிஷ்ணுவின் காலடியில் வச்சு கும்பிட்டுக்கிட்டு இருக்கார்.  இவருக்கு கஜேந்த்ரன் என்ற பெயர்.

இது இப்படி இருக்க,  கூஹூ என்ற அரக்கன் ஒரு விளையாட்டுப்பிள்ளை! தண்ணீரில் மூச்சடக்கி ரொம்பநேரம் இருக்க அவனால் முடியும். இதையே பயன்படுத்திக்கிட்டு, குளத்துத் தண்ணீக்குள்ளே  கொயட்டா மூழ்கிக்கிடப்பான். யாராவது குளத்துலே இறங்குனாங்கன்னா....  அப்படியே தண்ணீக்கடியிலேயே நீந்தி வந்து அவுங்க காலை லபக்னு பிடிச்சுத் தண்ணிக்குள்ளே இழுத்துருவான். லபோ திபோன்னு அவுங்க போடும் கூச்சலைக் கேட்டால் பரம சந்தோஷம்.

ஒருநாள் தண்ணீருக்கடியில்  அசையாமல் உக்கார்ந்துருக்கான்.  வர்றார் கோபக்கார முனிவர்.  காலைப்பிடிச்சு இழுத்ததும்  தண்ணிக்குள் விழுந்த முனிவருக்குக் கோபம் பொத்துக்கிட்டு வந்துருச்சு. பிடி சாபம். நீ முதலையாகக் கடவாய். இப்போ 'லபோ திபோ' வர்றது கூஹூ வாயில் இருந்து!

'சாபவிமோசனம் சொல்லுங்க'ன்னு கெஞ்சறான். 'இங்கே ஒரு  பக்தியானை வரும். அப்போ காலைப் பிடிச்சுக்கிட்டு விடாதே'ன்னுட்டுப் போனார்.

ஒருநாள்  இந்தக் குளத்தில்  மலர்ந்து நிற்கும் தாமரைப்பூக்களைப் பார்த்த கஜேந்த்ரன்,  அட! இவ்ளவு அழகான பூக்களா  இருக்கே. இதிலிருந்து பறிச்சுக்கிட்டுப்போய் பெருமாளுக்கு சமர்ப்பிக்கலாமேன்னு தண்ணீரில் இறங்கினதும்,  முதலை மெதுவா நகர்ந்துபோய் யானைக்காலை கவ்வியது!

முதலைக்கு நீரில் இருக்கும்போது பலம் அதிகம். காலைக் கவ்விப்பிடிக்கத் திறந்தவாயை கெட்டியா மூடிக்கிச்சு. பாவம்  யானை!  கால் வாயில். ரெண்டுமா இழுத்துக்கிட்டுக் கிடக்குதுங்க. இருவருமே விடாகண்டர்களா  இருப்பதால்  வெற்றிதோல்வியை முதலில் கணிக்க முடியலை. காலம் கடந்து போய்க்கிட்டு இருக்கு.  இப்படியே ஆயிரம் ஆண்டுகள் ஆச்சாம்!  நெசமாவா? யானைக்கால் புண்ணு புரையோடி இருக்காதோ:-(

அங்கே வைகுண்டத்தில் இந்தக் காட்சியைப் பார்த்துக்கிட்டு டேக் ஆஃப் ஆக ரெடியா இருக்கும் கருடன்மேல் இருக்காராம் பெருமாள்!

தாங்கமுடியாத ஒரு கட்டத்தில், 'ஆதிமூலமே'ன்னு  யானை கதறியதும்  நொடியில் பறந்துவந்து சக்கரத்தை செலுத்தி முதலையின் கழுத்தை  வெட்டி, கஜேந்திரனைக் காப்பாற்றினார்னு புராணம் சொல்லுது.

பக்தனுக்கு ஒரு கஷ்டமுன்னா தானே ஓடி வந்து காப்பாத்த வேணாமோ? இவரே நேரில்  வரணுமுன்னுகூட இல்லையே. ப்ரயோகச்ச் சக்கரத்தை அனுப்பினால்  வேலை முடிஞ்சது. ஆபத்துலே இருக்கும் பிள்ளை, அம்மான்னு கூப்ட்டா வரலாமுன்னா பெற்றதாய்  இருப்பாள்?  இது என்ன  கருணை?  அதுவும் நம்ம 'யானை'ஆபத்துலே இருக்கும்போது! எனக்குக் கொஞ்சம் கோபம்தான் பெருமாள் மீது.....

பெருமாள் கையால்  வெட்டுப்பட்டதும் சாபவிமோசனம் ஆச்சு  அரக்கனுக்கு. மரணத்துடன் அந்தப் பிறவி போயிருதுல்லே!  அரக்கரூபம் கூட மாறிப்போய்  தேவனாட்டம் ஜொலிக்கிறான். ஆனா  யானை மட்டும் யானையாவே இருந்து  தன்னைக் காப்பாத்துனவரை அதே தாமரை மலர்களால் பூஜிக்குது.

ஆமாம்....  முதலைக்குச் சாப விமோசனம் கொடுத்து, கூடவே காட்சியும் கொடுத்து மேலோகத்துக்குக் கூட்டிப்போன சம்பவத்துக்கு   முதலை மோட்சம்  என்று சொல்லாமல் ஏன் எப்பவும்  கஜேந்த்ர மோட்சம் என்று பெயர் வச்சுட்டாங்க?

நேரில் வந்து காப்பாத்துனதுமில்லாமல்  முதலைக்கும் யானைக்கும் கிடந்த கோலத்தில் ஸேவை சாதிச்சாராம்.  அவர் விரும்பினால்  வகைவகையா தரிசனம் கொடுப்பார்.  மாயக்கண்ணன்!

கோவிலைக் கடைசி முறையா  பழுது பார்த்துப் பெயிண்ட் அடிச்சது அநேகமா 1959 இல்தான் போல:-(  அதுக்குப்பின்  ...........  ஒன்னுமே நடக்கலை. பார்க்கும்போதே மனசுக்குள் வலி முள்ளாய் குத்துது.

ஆமாம்... அறநிலையத்துறைன்னு ஒன்னு இருக்காமே!  நெசமாவா? கோவில்களில் இருக்கும் உண்டியல் வரவுக்கு மட்டும் பாய்ஞ்சோடி வரும் இத்துறை, பராமரிப்புன்னுன்னதும் ஓடிப்போய் ஒளிஞ்சுக்குமோ:-(

கபிஸ்தலம் என்றதும்  எப்பவும் எனக்கு முதலில் மனசில் வரும் பெயர் நம்ம கருப்பையா மூப்பனார்தான். அந்தக் காலத்தில் திருவையாறு தியாகராஜர் உற்சவத்தின்போது  அடிக்கடி  காதில் பட்ட பெயர். மஹா சங்கீத ரசிகர்!  அரசியல்வியாதியாகவும் இருந்த  அவரின் மறுபக்கம் பற்றி எனக்கொன்னும் தெரியாதுன்னு சொல்லிக்கறேன்.
2009 இல் நவகிரகக் கோவில்களுக்குப் போனபோது  கபிஸ்தலம் தாண்டித்தான் போனோம். அப்பவும் மூப்பனார்தான் நினைவுக்கு வந்தார். ட்ரைவரிடம் இதுதானே மூப்பனார் ஊருன்னு கேட்டேன். ஆமாம்னு தலையாட்டிக்கிட்டுப் பறந்துட்டார்!  நாம் அப்ப எடுத்தது  நவகிரக டூர் ஸ்பெஷல் நடத்தும் வண்டி. ஒன்பது கோவில்ன்னா ஒன்பதே கோவில் என்ற கணக்கில் ஒரே நாளில் கொண்டு போயிட்டு வந்துருவாங்க. அக்கம்பக்கம் வேற நல்ல கோவில்கள் இருந்தாலுமே அதெல்லாம் அவுங்க கணக்கில் வராது. கண்ணுக்கும் தெரியாது! "கிரகம் பார்க்க வந்தே... கிரகம் பார்த்துட்டுப் போயிரு" அதுவுமல்லாமல் அப்ப நமக்கு 108 பைத்தியம் வேற பிடிக்கலை பாருங்க!
பட்டரிடம் கோவில்பற்றி விசாரிக்கும்போது   மூப்பனார் குடும்பம் கோவிலுக்கு ஒன்னும் செய்யறதில்லையான்னேன்.   அவுங்க செய்யறதால்தான் பெருமாளுக்கு  தினப்படி பூஜை நைவேத்தியங்கள் நடக்குது. கோவிலுக்குன்னு வர்ற வருமானம் ரொம்பவே குறைவு.  அதனால் மற்ற செலவுக்கெல்லாம் கஷ்டம்தான்னார்.  அடப்பாவமே.... ஊருலகத்தைக் காப்பாத்தறவனுக்கும் இப்படி ஒரு கதியான்னு மனசு  துக்கப்பட்டது:(


பாடல் பெற்ற ஸ்தலம், பரிதாபமாக் கிடக்கே:(  பெருமாளும்  போனால் போகட்டும் போடான்னு கிடந்த நிலையில் கிடக்காரே:(  அவர் கொடுத்து வச்சது இவ்ளோதானா?  ஒரு விநாடி நின்னு பார்க்க முடியாத  அண்டை மாநிலக்கோவிலில்  செல்வம் கொட்டோகொட்டுன்னு  கொட்ட....    ஹூம்....  நீர் இருக்குமிடம் சரியில்லைவோய்ன்னு சொல்லி வச்சேன்.

பாருங்க நான் எங்கே இருக்கேன் என்பதை!
கோவிலைத் தொட்டடுத்து  ஒரு அம்மன் கோவில்.  ஸ்ரீ மனோன்மணி மாரியம்மன் ஆலயம்!
கூரைமேல்  அம்மன் நடுவில் இருக்க சரஸ்வதி வீணை வாசிக்க, லக்ஷ்மி தாளம் தட்டும் சிலை.
ஆனானப்பட்ட மஹாலக்ஷ்மியே  இப்ப செல்வத்துக்குத் தாளம்  போடுறான்னு சிம்பாலிக்காச் சொல்ல வர்றாங்களோ!

 தொடரும்............:-)




Viewing all articles
Browse latest Browse all 1475

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>