Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1438

பா டன் ...... தர்பார் சதுக்கம் ( நேபாள் பயணப்பதிவு 31 )

$
0
0
புள்ளையாரைக்  கும்பிட்டு எல்லோருக்கும் நல்லதே செய்யச் சொல்லி வேண்டி அடுத்த கால் மணியில் அடுத்த ஊருக்கு  வந்துட்டோம்.  வெறும் அஞ்சு கிமீ தூரம்தான்.   நேபாள் அரசர்கள் காலத்தில்  தலைநகரா இருந்த மூணு ஊர்களில்  ரொம்பவே அழகானது இது .  ஊருக்கே,  அழகான ஊர் னுதான் பெயரே வச்சுருக்காங்க. லலித்பூர்.

தலைநகரா இருந்த காலத்தில்  இங்கேயும் அரண்மனை, கோவில்கள் எல்லாம்  கட்டியிருக்கணுமே!  ஆமாம். ரொம்பவே அழகான கோவில்களையும் அரண்மனைகளையும் கட்டி விட்டுருக்கும் இடம்தான் இந்த பாடன் தர்பார் சதுக்கம்.  உச்சரிப்பு எப்படின்னா   பா....  ட்டன். Patan Durbar Square. லலித்பூர் என்ற பெயர் பழைய பெயர்னு ஒரு பேச்சு:-)

சுற்றுலாப் பயணிகளின் சொர்கமா இருக்கு இந்த 'பா   டன்'தர்பார் சதுக்கம்.

ஊருக்குள்ளே நுழையும் இடத்துலேயே  நம்மைப் பிடிச்சு கட்டணம் வசூலிச்சுடறாங்க. நமக்கு ஆளுக்கு  இருநூத்தியம்பது நேபாளி ரூபாய். காசைக் கட்டுனவுடன், பயணிகள் கழுத்துக்குப்போட ஒரு மஞ்சக்கயிறு கிடைச்சுருது.

நகரைப்பற்றிய சின்ன சரித்திரக்குறிப்பு கையோடு கொடுத்துட்டாங்க.            ( ஹைய்யோ... இப்படி நம்ம தமிழ்நாட்டுச் சுற்றுலாத்துறை செய்யக்கூடாதா?  ஏக்கம்தான்...)
'நான்   ஒரு பயணி'னு எல்லோருக்கும் காமிச்சுக்கணும். சரின்னு  போட்டுக்கிட்டோம்.  பார்க்கிங்லே வண்டியைப் போட்டதும் நடக்கணும். சுமார்  ஒன்னரை கிமீதூரம்! பழங்காலக் கட்டடங்கள் நிறைஞ்சுருக்கும் ஊருக்குள் போறோம்.  ரொம்ப அகலமில்லாத குறுகலான தெருக்கள்.  எதிரும் புதிருமா வரும் வண்டிகளில் அடிபட்டுக்காமல் சட்னு  தொட்டடுத்துள்ள கடை/வீடுகளின் வாசலுக்குத் தாவிக்கணும்:-)






மரத்தில் இவ்ளோ வேலைப்பாடான்னு அப்பப்ப வாயைப் பொளந்துக்கிட்டே'வேடிக்கை பார்த்துக்கிட்டே போறதால்  அவ்ளோ தூரமான்னு  நினைக்கத் தோணலை. இடைக்கிடைக்கு சட்னு வரும் சின்னச்சின்னக் கோவில்கள் வேற!




முழுக்கமுழுக்கப் பயணிகளைக் குறி வச்சே  மொத்த வியாபாரமும்!  கலைப்பொருட்கள் கண்ணைக் கட்டி இழுக்குது. பெரிய பெரிய பித்தளைச் சிலைகள்!


நிலநடுக்கத்தின் பாதிப்பு வேற! ஆனால்   பழுதான கட்டடங்களுக்கு பெரிய மரக் கடைகளை முட்டுக்கொடுத்து  வச்சுட்டு,  ஒன்னுமே நடக்காதமாதிரி வியாபாரம் அதுபாட்டுக்கு நடக்குது! கடவுளே நீயே காப்பாத்துன்ற சரணாகதித் தத்துவம்தான்!

சட்னு ஒரு சின்னக்கடையில் பாசிமணி  மாலைகள்! கடைக்காரம்மா, பாசிமணிகளைக் கோர்த்துக்கிட்டு இருக்காங்க. சடன் ப்ரேக் போட்டேன்.
எனக்கான மணிகள் அங்கே எனக்காகவே காத்திருக்கு:-) ஜமீலா பாசிமணி கோர்க்கிறதை சின்னதா ஒரு  22 விநாடி வீடியோ! அத்தனை மெல்லிஸ்ஸான ஊசிகளை நான் பார்த்ததே இல்லை. பாசிமணி மாலையோடு  சில ஊசிகளையும் வாங்கிக்கிட்டேன். நம்ம வீட்டுலேயும் 'தட்டு'இருக்குல்லே.... ஆட்டி ஆட்டிக் கோர்க்கலாம்.....



நினைச்சது கிடைச்சவுடன், நடக்கும் சிரமம் கொஞ்சம்கூடத் தெரியலை.  அரைமணிக்குமேலே நடந்துருக்கோம்.  தர்பார் சதுக்கத்துக்கு  முன்னே கூட்டமான கூட்டம். என்ன ஆடுதாம்?  ஹிஹி...ஒன்னுமில்லை....






மோட்டர்ஸைக்கிள்ஸ் ராலி! விதவிதமான வண்டிகள். இளசுகளைக் கவர்ந்திழுக்க இது ஒன்னு போதாதா?

உண்மையைச் சொன்னா எனக்கே ஆசையாத்தான் இருக்கு, பின்னாலே உக்காந்துக்கிட்டுப் போக. "ஏங்க... உங்களுக்கு  இப்ப இதையெல்லாம் ஓட்ட வருமா? இல்லே மறந்துட்டீங்களா?" உள்ளே உறங்கிக்கிடந்த  மிருகத்தைக் குத்தி எழுப்பியாச்:-) "ஓட்டவராம என்ன?   இதெல்லாம் மறக்கற சமாச்சாரமா? " 
கற்பனை வளருது.... ஸீட் ரொம்பச் சின்னதா இருக்குல்லே? விழுந்துருவேனோ....

இந்த லலித்பூர் கட்டிமுடிச்சது  மூணாம் நூற்றாண்டின் கடைசியிலாம். அரசர் வீர் தேவாவின் ஆட்சிகாலம்.  ஏகப்பட்ட கல்வெட்டுகள் ஆவணங்களா இதை உறுதிப்படுத்துதாம். உண்மையில்  காத்மாண்டு பள்ளத்தாக்குகளில் உண்டாக்கின தலைநகரங்களில் இதுதான் வயசுலே மூத்தது.

அசோகச் சக்ரவர்த்தி தன் மகளுடன் இங்கே வந்துருக்காராமே! அவருடைய காலம் யேசு பிறப்பதற்கு முன் இல்லையோ?  அப்பவே இங்கே வந்து நகரின் நாலு பக்கமும் புத்த ஸ்தூபா  அமைச்சாருன்னு சொல்றாங்க. இந்தக் கணக்குலே பார்த்தால்  அப்பவே லலித்பூர் நகரம் ஓஹோன்னு இருந்துருக்கணும். மூணாம் நூற்றாண்டுன்னு கல்வெட்டுகளில் இருக்கறது  இந்தக் காலம்தான் போல!

சும்மா சொல்லக்கூடாது.....  கலை அழகு கொட்டித்தான் கிடக்கு இங்கே!  மற்ற மூணு தலைநகரங்களைப் பார்க்கலைன்னாலும் இதை மட்டுமாவது ஒரு முறை பார்க்கத்தான் வேணும். சமயசந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுடாதீங்க.

யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரியக் கட்டிடங்கள், இடங்கள்  (World Heritage Site) இப்படி வகைப்படுத்தி வைக்குது பாருங்க.... அதுலே காத்மாண்டு பள்ளத்தாகில் மட்டுமே ஏழு இடங்களைப் பட்டியலில் சேர்த்துருக்கு!   என்ன ஒன்னு....  இயற்கைச் சீற்றத்தால்  நிலம்நடுங்கி  ஏகப்பட்ட  சமாச்சாரங்கள்  பாழாகிருச்சு.  ஆனால்... அவைகளைத் திரும்ப  சீரமைக்கும் வேலைகள் நடக்குது, இதுக்கு  யுனெஸ்கோ பொருளுதவி செய்யுது என்பதும் கொஞ்சம் ஆசுவாசமான தகவல்தான். ஜெர்மனி நாடு உதவி செய்யுதுன்னு  தகவல் பார்த்தேன். நல்லா இருக்கட்டும், அந்த நாடு!
சதுக்கத்தில் சுற்றிப் பார்வையை ஓடவிட்டால்  கோவில்கள் எல்லாம் கம்பிக்கட்டங்களுக்குள்ளே....  Scaffolding  சாரம் கட்டிவிட்டு  ரிப்பேர்  வேலைகள் நடக்குது.  அழகான வாசலூடே அரண்மனை வளாகத்துக்குள் நுழையறோம்.

அரண்மனையின் ஒரு பகுதியா முகப்புலே இருக்கும் மூணுமாடிக் கட்டடம் இப்போ ம்யூஸியம். உள்ளே பெரிய  முற்றத்தின் நடுவில் ஒரு கோவில்.  சட்னு பார்த்தால்  சமீபத்து வரவோன்னு தோணல். ஒருவேளை அதுக்குப் பூசுன வெள்ளை நிறம் காரணமா இருக்கலாம்.....


மஹாவிஷ்ணு,  சங்கு சக்கரத்தோடு   நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கறார்.    வலப்பக்கம் லக்ஷ்மி, இடப்பக்கம் கருடன் (அதானே  வாகனம் இல்லாம கிளம்பமுடியுதா? ) நம்ம பக்கங்களில்  சங்கும் சக்கரமும் பொதுவா மேற்கைகளில் இருக்கறதைப்போல் இல்லாமல் இங்கெல்லாம்  வலப்பக்கக் கைகளில்  மேல் கையில் சக்கரம், கீழ் கையில் சங்கு.  இடப்பக்கம்  மேல் கையில்  Gகதையும் கீழ் கையில் தாமரை மலருமாத்தான் இருக்கார்.   இந்த Gகதை கூட  நம்ம பக்கங்களில் இருக்கும்  அமைப்பா இல்லாமல் உருட்டுக் கட்டையாட்டம் இருக்கு!  தடி எடுத்தால்தான் எல்லாம் சரிப்படுமுன்னு குறிப்பால் உணர்த்தலோ?

அரண்மனை வளாகத்துக்குள்ளேயே  சாப்பிட இடம் இருக்குன்னு  சொன்னார் பவன். இதன் அடித்தளத்தின்   உள்  முற்றத்தில் ம்யூஸியம் கேஃபே இருக்கு.  சாப்புடறதுதான் சாப்புடறோம், அதை அரண்மனையிலே சாப்ட்டா என்ன?



மூணுபேரும் அவரவருக்குத் தேவையானதைச் சொல்லியாச். எனக்கு (வழக்கம்போல்)காரமே இல்லாமல்   உருளைக்கிழங்கு சிப்ஸ். அரண்மனை என்பதால் கொஞ்சம் விலை கூடுதலா இருக்கலாம். இருக்கு.  சிப்ஸ் கூடவே ஒரு ஸாண்ட்விச்சும் வந்தது.

ரெஸ்ட்ரூம் வசதிகள்  நல்லாவே இருக்கு.   என்ன இருந்தாலும் அரண்மனை பாருங்க..... :-)

 வாங்க  அரண்மனைக்குள்ளே போகலாம்  :-)

தொடரும்.....   :-)



Viewing all articles
Browse latest Browse all 1438

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>