Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1443

யானையை உக்காரவச்சுட்டாங்களே!! (இந்திய மண்ணில் பயணம் 3 )

$
0
0
காலை ஆறு முதலே கங்கையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். கிழக்காலெ இருக்கும் ஹிமயமலைத் தொடரின்  அடிவாரத்துலே இருக்கும் ஊராச்சே இது.  மலைக்குப்பின்னால் இருந்து மெள்ள வெளியில் வருவானான்னு  பார்த்தால் சூரியனைக் காணோம். ஒரே  மசமசன்னு  ஃபோகியா இருக்கு.
சாலையில்  வண்டிகளைக்கூடக் காணோம். எப்பவாவது  ஒன்னு ரெண்டு.  காலையில் லேட்டா எழுந்திருக்கும் ஊர்.  ஏழரைக்கு ஷிவாலிக்  மலைத் தொடர்களின்     மூணடுக்கு மலைக்கு மேலே போய்  'நான் இருக்கேனே'ன்னு தலையைக் காமிச்சான் சூரியன்.  பார்த்தபிறகு தான் நிம்மதி ஆச்சு.  வரலையே வரலையேன்ற தவிப்போடவே  காலைக் கடமைகளை முடிச்சு ரெடியாகி இருந்தோம்.
காலை உணவுக்கு மாடிக்குப் போகணும்.  காரிடார் முழுக்க  அங்கங்கே யானைகளா இருக்கு.   காரிடார் முடியும் இடத்தில் காவிக்கண்ணன்  குழலூதிக்கிட்டு இருக்கான்.
அறையிலேயே கவனிச்சேன்...  சின்னச்சின்ன இடங்களில் எல்லாம் பூக்களும் கொடிகளுமா ஒரு  பெயின்டிங்.  கலாரசனை  உள்ளவர்கள் போல !  நமக்கேத்த இடம்தான்னு  மெச்சிக்கிட்டே  மேல்மாடிக்குப்போனா  இன்னொரு இன்ப அதிர்ச்சி.

 'த ஸிட்டிங் எலிஃபென்ட்' இதுதான்  இங்கத்து ரெஸ்ட்டாரண்ட் பெயர். வாசலில் தொடங்கி  எங்கே பார்த்தாலும்  யானைகளே! (என்னையும் சேர்த்துத்தான்!)டிஷ்யூ பேப்பர் கூட யானைக் காலில்.
பஃபேதான். சௌத் இண்டியன்  வகையில் இட்லியும் தோசையும் உண்டாம். ஆனால் இன்றைக்கு தோஸான்னார் மேனேஜர்.  சொன்னா தோசை ஊத்துவாங்களாம். ஊத்திக்கோ....  ரெண்டா ஊத்திக்கோ....

ஒரு பக்கம் மொட்டைமாடியும்,தொங்கு தோட்டமுமா கங்கையைப் பார்த்தபடி இருக்கும் இடத்துக்கு நேர் கீழேதான் நம்ம அறை!  அதனால் கங்கையின் அதே காட்சிதான். இடையில் கண்ணாடித் தடுப்பு இல்லை:-) வேடிக்கையில் மனம் போனதால் வேற   என்ன சாப்பிட்டோமுன்னு சரியா நினைவில்லை....
முகேஷ் வந்ததும் கிளம்பினோம். நகரம் முழிச்சாச்சு. சாலையில் போக்குவரத்து அதிகம். சாலையோரக் கடைகள் திறந்து வியாபாரம் நடக்குது. பக்கத்துலே பெண்கள் பள்ளி  இருக்குபோல..... பிங்க் யூனிஃபார்ம் போட்ட மாணவிகள் கூட்டம் ஒன்னு நடந்து போய்க்கிட்டு இருக்கு. பெண்குழந்தைகள் படிக்கட்டும். அதுதான் நாட்டையும் வீட்டையும் முன்னேற்றும்!
நாங்க  முதலில் போன இடம் பரத் மந்திர்.  போனமுறை போனபோது  கோவில் மூடி இருந்துச்சு. இவர்  நம்ம ராமாயண பரதன் இல்லை. அப்போ எழுதுனது  இது. கோவில் சரித்திரம்  இப்பவும் அதேதான் :-)  விரும்பினால் க்ளிக்கி வாசிக்கலாம்.

பெரிய வளாகம்தான். கோவில் வாசலுக்குப் பக்கம் ஒரு  பெரிய மரம். சுத்திவரமேடை கட்டி விட்டுருக்காங்க. அரசும் ஆலுமா இருக்கும் இந்த மரத்துக்கு வயசு ஒரு முன்னூறு இருக்குமாம். இதுலே இன்னொரு மரமும் சேர்ந்து இருக்குன்னார் முகேஷ்.  அதன் பெயர் தெரியாதாம். போகட்டும், நம்ம முகேஷ்  ட்ரைவர்தான்.  கைடு இல்லை. அதுக்காக ஒன்னுமே தெரியாதுன்னும்  சொல்ல முடியாது.  உள்ளுர் சமாச்சாரம்  கொஞ்சமாவது தெரிஞ்சுருக்கும்தானே? இப்பப் பாருங்க... இதுலே மூணு மரம்னு சொன்னாரே!

(அப்புறம் கோவில் பட்டரிடம் விசாரிச்சப்ப இது பேல்  வ்ருக்ஷான்னார். நம்ம வில்வமரம்!  சிவா, விஷ்ணு, ப்ரம்மான்னு  மும்மூர்த்திகள்  அதுலேன்னார்! )

கோவில் திறந்துருக்கு.  வாசலில் இருந்து   பார்க்கும்போதே வெள்ளிக் கவசம் போட்ட கதவினூடே ரிஷிகேஷ் நாராயணன்  நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். பட்டர் ஸ்வாமிகளிடம் படம் எடுத்துக்க அனுமதி  வாங்கினேன்.

ப்ரஸாதமும் கொடுத்தார்.  பக்கத்து சந்நிதியில் வராஹ மூர்த்தி!
அந்தாண்டை  உற்சவ மூர்த்திகளுக்கு  ஒரு சந்நிதி.  வட இந்தியக்கோவில் வழக்கப்படி ஜிலுஜிலு உடையில்  இருக்காங்க எல்லோரும். இந்தாண்டை பெரிய , சிறிய திருவடிகள்!  பெரியவர்  இதுவரை பார்க்காத வடிவில்!  இவுங்க ரெண்டு பேருக்கும் நடுவில்  ப்ரளயத்தில் ஆலிலையில் மிதக்கும் ஸ்ரீகிருஷ்ணன்.  கங்கையில் நின்னு தியானம் செய்யும் முனிவர், ரைப்யர்.
ஒருபக்கம் நர்த்தன விநாயகர் விளக்கு!  சின்னதா ஒரு மண்டபம். அதில் பட்டுத்துணியில் பொதிஞ்சு வச்சுருக்கும்  ராமாயணம்,  ராதாக்ருஷ்ணர், வெண்ணை உண்ணும் கண்ணன், இப்படி அழகான சித்திரங்கள். கோவில் படு சுத்தம்.  மாடத்தில் ஒரு கல் புள்ளையார்!




அஞ்சாறு படிகள் இறங்கிப்போகும் இருட்டுச் சந்நிதியில்  சிவன், லிங்க ரூபத்தில்.   வெளியே பிரகாரத்தில் வலம் வர்றோம். தளதளன்னு நான் இருக்கேன் :-)
புதுவிதமான கோபுர அமைப்பு. அதில் ஒட்டிப்பிடிப்பிச்சு இருந்த  சலவைக்கல் சிலா ரூபங்களில்  சிலதைக் காணோம்.  டெர்ரகோட்டாவாகவும் இருக்க வாய்ப்புண்டு.

நரசிம்மம்,  ஹிரண்யனைக் கீசிண்டு இருக்கு! அடுத்தடுத்து  வெவ்வேற அவதாரங்கள் போல.... எனக்கு வாமனர்தான்  தெரிஞ்சது.

கழுத்துலே கத்தி வச்சுட்டாங்க.......
ஆதி சங்கரர் இருக்கார். இவர்தான் எட்டாம் நூற்றாண்டில்  கோவிலில்  நாராயணனைப் பிரதிஷ்டை செய்தவர். ஏற்கெனவே இருந்த  கோவில் கிட்டத்தட்ட அழிஞ்சு போன நிலையில் இருந்ததாக சேதி. உண்மையில் இந்தக்கோவில் ரிஷிகேஷில் ப்ராச்சீன் தான். பக்கத்தில் போகும் தெருவையொட்டியே இந்தக் கோவில் பிரகாரம். எதிர்வாடையில் ப்ராச்சீன் பத்ரகாளி மந்திர்  இருக்கு. காளியைக் கிட்ட வரவழைச்சு ஒரு க்ளிக்.

 ரிஷிகேஷ் நாராயணர்  முழுக்க சாளக்ராம மூர்த்தியாம். வருசத்துக்கொரு முறை   வஸந்த பஞ்சமி நாளில் இவரை (மூலவரையே)  ஊருக்குள் ஊர்வலமாக்கொண்டு போய் திருப்பிக் கொண்டு வந்து ப்ரதிஷ்டை செய்யறது வழக்கமாம்.

 அக்ஷயத்ருதியை நாளில் 108 முறை இவரை வலம் வந்தால் பத்ரிநாத் போய் வந்த பலன் உண்டாம்!  அன்றைக்கு ஒருநாள்தான்  நாராயணனின் பாத தரிசனம் கிடைக்கும்.  மற்ற நாட்களில் இப்படிக் கால்வரை நீண்ட அங்கிதான். நன்றி சொல்லிட்டு வெளியில் வந்தோம்.
வாசலைத் தொட்டடுத்து சிவன் சந்நிதி . அபிஷேகதாரையின் கீழ்  அரவத்தோடு இருக்கார். நாமும் போய் கும்பிட்டுக்கிட்டோம்.



வளாகத்தில் மற்ற கட்டிடங்களைக் கட்ட நிலத்தைத் தோண்டியப்ப பழைய சிலைகள் நிறைய கிடைச்சதாம்.  மூணாம் நூற்றாண்டு சிலைகளாம்.(அப்ப ப்ராச்சீன்தான்,  இல்லே? )  கோவில் வாசலையொட்டிய ஒரு சின்ன ஹாலில் ம்யூஸியம் வச்சுருக்காங்க.
கிளம்பி வர்றப்ப,  நாளைக் காலையில் சீக்கிரம் கிளம்பணுமுன்னு  பேசிக்கிட்டு  இருந்தோம்.  அப்ப இப்பவே போய் பர்மிட் வாங்கிக்கலாமுன்னு  அதுக்குண்டான அலுவலகத்துக்குக் காரைத் திருப்பினார் முகேஷ்.  இங்கே நமக்கு  சார்தாம் யாத்திரைக்கான பர்மிட் கொடுக்கறாங்க.  நம்மை  படம் எடுத்துக்கிட்டு, மற்ற விவரங்கள்   வாங்கிக்கறாங்க. ட்ரைவருக்கும்தான்.
பேரு, ஊரு, எப்பப் போறோம், எப்ப வர்றோம் , எத்தனை பேர், எந்த வண்டி, அதோட ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்  எல்லாம்....   நாளைக்கு எதாவதொன்னு ஆச்சுன்னால்....  அப்ப யாரு என்னன்னு விவரத்துக்காக அலைய வேணாம் பாருங்க. இது முற்றிலும் இலவசச்சேவைதான். உத்தரகண்ட் மாநிலம் நல்லாவே சுற்றுலாப் பயணிகளைக் கவனிச்சுக்குது ! போனவருசம்தான் ஆரம்பிச்சாங்களாம்!  ரொம்ப நல்ல விஷயம்.




இந்த வளாகத்துலேயே  அங்கங்கே சின்னச்சின்ன சந்நிதிகளில் ஆஞ்சி, சரஸ்வதி, ஸ்ரீகிருஷ்ணர், சிம்மவாஹினி, சிவன் இருந்து பயணிகளுக்கு அருள் பாலிக்கிறாங்க. புள்ளையாரைக் காணோம். வேற இடத்தில் இருக்கலாம்.... எல்லோருக்கும் ஒரு கும்பிடு போட்டு, நல்லபடியாத் திரும்பி வர உதவுங்கன்னு  வேண்டிக்கிட்டேன்.
வாங்க.... சௌத் இண்டியன் மந்திர் இருக்காமே.....  அங்கே போகலாம்.

தொடரும்..........:-)




Viewing all articles
Browse latest Browse all 1443

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>