Quantcast
Channel: துளசிதளம்
Viewing all 1446 articles
Browse latest View live

தமெலில் ஒரு எலுமிச்சை மரம் ( நேபாள் பயணப்பதிவு 3)

$
0
0
த்ரிபுவன் இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் தரையை தொட்ட விமானத்துலே இருந்து ஏணிப்படிகளூடா இறங்கினோம்.  பிரமாதமான கட்டிடமெல்லாம் இல்லை.  உள்ளே போனதும்   நமக்கு,  நாட்டுக்குள் நுழைய விஸா வாங்கிக்கணும். இந்தியாவில் இருந்து வரும் மக்களுக்கு விஸா தேவை இல்லை. ஆனால்  பாஸ்போர்ட், ஓட்டர்ஸ் ஐடின்னு  கொண்டு வரணுமாம்.


பதினைஞ்சு நாட்களுக்கு 25 டாலர் (யூ எஸ்) ஒரு ஆளுக்கு என்ற மேனிக்கு  அம்பது கட்டி விஸா வாங்கினோம். கார்டெல்லாம் நீட்ட முடியாது.  காசாக் கொடுக்கணும். கூடவே நம்ம பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஒன்னும் அந்தப் படிமத்தில் ஒட்டிக்  கொடுக்கணும். ஒட்டறதுக்குப் பிசின் கூட வைக்கலை.  நம்மவர்  கொஞ்சம் செல்லோ டேப் வச்சுருந்தார். அதை எடுத்ததும்  நமக்கு அங்கே டிமாண்ட் கூடிப்போச்சு.  'எனக்கு எனக்கு'ன்னு  ஆயிரம் கைகள் நம்மைச் சுத்தி.....   ஒருவழியா  பாஸ்போர்ட் என்ட்ரி போட்டுத் தந்தாங்க.  இதுக்கே  ஒரு  மணி நேரமாச்சு. நிதானம் பிரதானம்னு  வேலை. இந்த அழகில் கம்ப்யூட்டர் டௌன்னு  ....    ரெண்டே ரெண்டு கவுன்ட்டரும், நூத்துக்கணக்கில் பயணிகளும். முக்கால்வாசியும் வெள்ளைக்காரர்கள்தான்.  சின்னப் பிள்ளைகளுக்கு  வரிசையில் நிக்க போரடிக்குது. அதுக பாட்டுக்கு அங்கே இங்கேன்னு ஓடி விளையாடுதுங்க.

ஒருவழியா இந்தப் பகுதியில் இருந்து பொட்டிகளை எடுத்துக்கும் பகுதிக்குப் போனால் அங்கேயும் குழப்பம்.  தரையில் கூட்டமாப் பொட்டிகளைப் போட்டு வச்சுருக்காங்க. நம்மதைத் தேடி எடுக்க இன்னும் ஒரு அரைமணி நேரம் ஆச்சு.
வெளியே வர்றோம். நம்மவர் பெயர் எழுதுன அட்டையைத் தூக்கிப் பிடித்தபடி ஒரு  இளைஞன். என்ன ஒரு பதினாறு பதினேழு  இருக்கலாம்.
நம்ம பெட்டிகளை வாங்கிக்கிட்ட, சுமன், சூர்யா என்ற  ரெண்டுபேருடன் கார்பார்க்  போனோம். சாமான்களை வண்டியில் போட்டுட்டுக் கிளம்பியாச்சு.  சூர்யா லாமாதான் ட்ரைவர்.  சுமன்?  லெமன் ட்ரீ ஹொட்டேல் பணியாள்.
வலையில் தேடிப்பிடிச்ச இடம்தான் இந்த லெமன் ட்ரீ ஹொட்டேல். மெயில் மூலம்தான் இதுவரை தொடர்பு.  உரிமையாளர் ப்ரகாஷ்  நமக்குத் தேவையான தகவல்களை அனுப்பிக்கிட்டே இருந்தார். அவரிடமே நம்ம தேவைகளைச் சொல்லி ஒரு உள்நாட்டு பயணத்திட்டம் தயாரிக்கச் சொல்லி இருந்தோம். நேரில் போய் அதிலுள்ள சாதக பாதகங்களைப் பேசினால் ஆச்சு.

த்ரிபுவனில் இருந்து  தமில் என்ற பகுதிக்குப் போறோம். இங்கேதான்  எலுமிச்சைமரம் இருக்கு:-) சுமார் அரைமணி நேரப் பயணம். அது ட்ராஃபிக் இல்லாத நேரமாம். வழியெல்லாம்  நடைபாதைக் கடைகளும்,  நெருக்கமா  கடைகள் இருக்கும் வீதிகளும்,  கூட்டமுமா இருக்கு.  நேப்பாளமொழிக்கு எழுத்துரு ஹிந்தி எழுத்துகள்தான். அதனால்  கடைப்பெயர்களை வாசிச்சுக்கிட்டுப் போனேன்.  பழக்கம் விட்டுப்போனதால் தத்தித்தத்தித்தான் படிக்க முடியுது :-(  ஒரு சின்ன சந்து போலிருந்த இடத்துக்குள் கார் நுழைஞ்சது.   தரையில்  பாவியிருந்த  கற்கள், டைல்ஸ்,  எல்லாம் உடைஞ்சு போய்  இருக்கு இந்த சந்தில். உண்மையில் இது சந்தே இல்லை. தெரு! பெரிய வண்டிகள் எல்லாம் இதுக்குள்ளே வந்து போகுது. அதான் கல் பதிச்ச  பாதை இந்த அழகில் கிடக்கு போல...



ஒரு ஏழெட்டு கட்டடம் தள்ளிப்போனா  லெமன்ட்ரீ வந்துருது.  இறங்கி உள்ளே போறோம்.  பெயரை நியாயப்படுத்த முற்றத்தில் சில எலுமிச்சை மரங்கள்(!) தொட்டிகளில்:-)  கைகூப்பி வணக்கம் சொல்லி வரவேற்றார் வரவேற்பாளர் இந்த்ரா.
நமக்கான அறை ரெண்டாவது மாடியில் ஒழுங்குபடுத்தி வச்சுருந்தாங்க. லிஃப்ட் கிடையாது. நான் நினைக்கிறேன், என் உடல் இளைக்க ஆரம்பிச்சது அப்போ இருந்துதான். தினம் இருவது கிராம் என்ற கணக்கு:-)  ரூம் வித் வ்யூ வேணுமுன்னு என் வழக்கப்படிக் கேட்டு வச்சேன்.  எதிரில் இன்னொரு புது ஹொட்டேல் வருது. அதோட தோட்ட வேலைகள் , அலங்காரங்கள் நடந்துக்கிட்டு இருந்துச்சு.  நாலைஞ்சுபேர் சேர்ந்து  ஃபவுன்டெய்ன், சின்னதா  புத்த ஸ்தூபா  மாடல் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.

நம்ம  ஹொட்டேலில் மொத்தம்  பனிரெண்டு அறைகள்தான். ஒரு பழைய வீட்டை வாங்கி அதை இப்படி மாத்தி அமைச்சுருக்காங்க. வெளிமுற்றத்தின் ஒருபக்கம் சமையலறை.  முற்றத்தின் எதிர்ப்பக்கம் ரெண்டு மூணு மேஜை போட்டு  அவுட் டோர் ஸிட்டிங் & டைனிங்.  முற்றம் கடந்து உள்ளே காலடி வச்சால் சின்னதா ஒரு  வரவேற்புப் பகுதி.  தொட்டடுத்து ஒரு ஆஃபீஸ் ரூம். இந்தாண்டை  ரெண்டு சோஃபா போட்டு வச்சுருக்காங்க.  இதையடுத்து  ஹாலில் பாக்கி இருக்கும்   இடத்தில் நடக்க இடம் விட்டுக் கடைசியில் மாடிப்படிகள். இந்தாண்டை ஒரு வரிசையில் அஞ்சு மேஜைகள். ப்ரொப்பர் டைனிங் ஏரியா, கேட்டோ!

  'ஏஸி வேலை செய்யலை, அறை ரொம்ப சூடா இருக்கே'ன்னு வரவேற்பில்  சொன்னதுக்கு ஒரு சின்ன ஃபேன் எடுத்துக்கிட்டு வந்த இந்த்ரா, அன்றைக்கு எதோ மெயின்டனன்ஸ் வேலைன்னு  காலையில் இருந்து எலக்ட்ரிசிடி இல்லை.  இன்னும்  அரைமணியில்  பவர் வந்துருமுன்னு சொல்லி பேக்கப் பவர்க்கு  இருக்கும்  ப்ளக் பாய்ன்டில் ஃபேனைப் பொருத்திட்டு, 'ப்ரகாஷ் நாம் வந்துட்டோமான்னு கேட்டாராம். இன்னும் பத்து நிமிட்லே வந்துருவார். வந்தவுடன்  ஃபோன் பண்ணறேன்'னு சொல்லிட்டுப் போனாங்க.   ஃபோன் வந்துச்சு.

நாங்க ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கீழே போனோம். அதுவரை  இமெயிலில் சந்திச்ச ப்ரகாஷ் , நல்ல ஸ்மார்ட் மனிதர்.  ட்ராவல் & டூரிஸம் படிச்சவர்.  சிலவருசங்கள்  வெளியே வேலை பார்த்துட்டு, இப்போ சொந்தமா பிஸினஸ் ஆரம்பிச்சுருக்கார். நமக்கான பயணத்திட்டங்களை தயாரிச்சு வச்சதைச் சரி பார்த்தோம். மாற்றிக்கும்படியா ஒன்னும் இல்லை.
மொதல்லே கொஞ்சம் காசை மாத்திக்கணும். இந்திய ரூபாய்களையும் கடையில் வாங்கிக்கறாங்களாம்.  நம்ம ப்ரகாஷிடமே  கொஞ்சம் நேபாள் காசு கிடைச்சது. ஒரு யூஎஸ் டாலருக்கு 105 நேபாள் ரூபாய்,  ஒரு இந்திய ரூபாய்க்கு  ஒன்னரை  நேபாள் ரூபாய்னு ஒரு கணக்கு.  இந்தியாக் காசுன்னா, 500, 1000 மாத்திரம் புழக்கம். (இப்ப அங்கே என்ன செய்வாங்களோ? ) 

இன்றைக்குப் பகல் சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டோமேன்னு....   வெளியில் எங்கே ரெஸ்ட்டாரண்ட் இருக்குன்னு நம்மவர் கேட்க,  ரெண்டு தெரு தள்ளி  ஏராளமானது இருக்குன்னு சொல்லி,   வழிகாட்ட இன்னொரு பையனை நம்மோடு அனுப்பினார்.
நம்ம சந்துக்குப் பேரலலா   இன்னொரு சந்துக்குள் நுழைஞ்சோம்.  இனி நேரப்போக வேண்டியதுதான்.  நாங்க போய்ப் பார்த்துக்கறோமுன்னு  பையர் போலாராமைத் திருப்பி அனுப்பிட்டோம்.
 தமில் (  தமெல்னு எழுதினாலும் பேசும்போது தமில்னுதான் சொல்றாங்க!)  ஏரியா டூரிஸ்ட்களால் நிரம்பிக் கிடக்கு! ஏகப்பட்டக் கலைப்பொருட்கள் கடைகள்,  பெரிய பெரிய ஷோரூம்களிலும், அதே சாமான்கள் நடைபாதைக் கடைகளிலுமா........
காசு மாத்திக்க ஏராளமான கடைகள்! தங்கும் விடுதிகள்,  மலை ஏத்தம்,  சின்ன விமானத்தில் சுத்திக் காமிக்கிறது, ராஃப்டிங் இப்படி ......  இன்னொரு  மணி சேஞ்சரிடம்  இன்னும் கொஞ்சம் காசு மாத்திக்கிட்டோம். ஒரு வாரம் தங்கப்போறோம். வேண்டித்தானே இருக்கு! இதுலே பாருங்க  யூஎஸ் டாலர், யூரோ,அஸ்ட்ராலியா, சிங்கப்பூர் கரன்ஸி எல்லாம் எடுத்துக்கறாங்க. நியூஸி டாலர் எடுக்கமாட்டாங்களாம். இத்தனைக்கும் நியூஸிக்கும் நேபாளுக்கும் ரொம்பவே  சம்பந்தம் இருக்கு.  எங்க எட்மண்ட் ஹிலரிக்கும் டென்சிங் நோர்கேக்குமில்லாத  உறவா?  ஆனா....  காசுன்னு வந்துட்டா... சொந்தமாவது பந்தமாவது...................
ரெண்டுங்கெட்டான் நேரமா இருக்கே...  ஸ்நாக்ஸ் போதும். முதல்லே எனக்கொரு காஃபி.....   ஒரே தலை வலி....  ஒரு இடத்தில் ஆனியன் ரிங்ஸ், பொட்டேடோ சிப்ஸ்,  காஃபி கிடைச்சது.  கையிலே காசு... வாயிலே தோசை. வெள்ளைக்காரப் பயணிகளுக்கான மெனுதான்  அநேகமா எல்லா இடங்களிலும்.... இப்படிச் சொல்றேனே தவிர...  இந்த  உருளைக்கிழங்குதான் என்னைக் காப்பாத்தியது  என்பது உண்மை :-)
நம்ம சந்துக்குத் திரும்பிவரும்போது, சந்தின் ஆரம்பத்தில் ஒரு பக்கம் குழாயடி!  பெரிய தொட்டி மாதிரி ஒரு டிஸைன். படிகளில் இறங்கிப்போகணும்.  குழாயைக் கூட ஒரு கலை அழகோடுதான் அமைச்சுருக்காங்க. குழாயைத் திறக்கவோ மூடவோ  ஒருவிதமான வசதியும் இல்லை. தண்ணி பாட்டுக்கு  மெலிஸா வந்துக்கிட்டே இருக்கு!
அந்தப் படிகளில் ரெண்டு இளைஞர்கள்  உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. கல்லூரிப் பையர்கள், ஓஜ்   அண்ட் ராபின் என்ற  பெயர்கள். படிச்சு முடிச்சதும் வேலை தேடி வெளிநாட்டுக்குத்தான் போகணுமாம்....        உள்ளூரில் வேலை கிடைப்பதில்லைன்னு....  ப்ச்...
ஓஜ் போட்டுருந்த  டிஷர்ட்டில் புள்ளையார்! எங்கே வாங்கினார்னு கேட்டதுக்கு இதே தமில் ஏரியாக் கடைகளில்தான்னார். தேடிப்பார்க்கணும்.



பஷுபதிநாத் மந்திர் ( நேபாள் பயணப்பதிவு 4 )

$
0
0
லெமன்ட்ரீயில் நமக்காகக் காத்திருந்தார் துர்கா! நமக்கான  தனிப்பட்ட   கைடு.  மறுநாள்  குறிப்பிட்ட வேறொரு ஊரில் நம்மை சந்திப்பதாக ஏற்பாடு. எல்லாம் ப்ரகாஷின் பயணத்திட்டத்தின் படியே!  'இன்றைக்கு மீதி  இருக்கும் நேரத்தில் என்ன செய்ய உத்தேசம்' என்றார் ப்ரகாஷ். கோவில்னு சொன்னேன்.  பெருமாளை ஸேவிக்கணும்.  'அது கொஞ்ச தூரத்தில் இருக்கு. ஏர்ப்போர்ட் கடந்து போகணும். சிவன் கோவில் போறீங்களா'ன்னார். ஓக்கே!  நம்ம லிஸ்ட்டில் இருக்காரே அவரும்:-)
இன்றைக்குத் திங்கள் கிழமை!  நல்ல நாளில் வந்துருக்கீங்க! சாயங்காலம் ஆறுமணிக்கு  பசுபதிநாத் கோவிலில் ஆரத்திக்குப் போயிட்டு வந்துருங்கன்னு சூர்யா லாமாவிடம் எங்களை  ஒப்படைச்சுட்டார் :-) திங்கள் கிழமைதான் ஆர்த்தி இருக்காம். அப்ப மற்ற நாட்களில்  சாமிக்கு  ஒன்னும் இல்லையா?   இது எப்படின்னு எனக்குப் புரியலை.  அதோடு, பர்ஸ், பெல்ட்ன்னு தோல் பொருட்களுக்கு கோவிலில் அனுமதி இல்லைன்னும் சொன்னார்.  காத்மாண்டுவின் முக்கிய கோவில்களில்  பசுபதிநாத்துக்கே முதலிடம்! இதுவும்  விமானநிலையத்துக்குப் போகும்  வழியிலேயே இருக்கு.  மதியம்  லெமன்ட்ரீ போகும்போது  ஒரு ஆற்றுப் பாலத்தைக் கடந்தப்பப்  பார்த்தோமே.......

கோவில் வரலாறுன்னு பார்த்தால்.... ப்ராச்சீன் என்ற பதில்தான். கைலாயமலையில் இருக்கும் சிவனுக்கு, அங்கேயே இருந்திருந்து போர் அடிக்குது. இடமாற்றம் வேணுமேன்னு கீழே இறங்கி வர்றார்.  மலையடிவாரம்  கடந்து போகும்போது  ஒரு பள்ளத்தாக்கு கண்ணில் பட்டது. நதியும், காடும் மிருகங்களுமா இருக்கும் அந்த இடம் பிடிச்சுப்போச்சு. அங்கிருக்கும் பசுக்களின் நேசனா,  பஷுபதி என்ற பெயருடன்  சுத்தித் திரியறார். எப்படின்னா....  மான் வேஷம் போட்டுக்கிட்டு!

இந்த பெயர் நேபாளிகளிடையே  இருபாலருக்கும் பொது. சென்னையில் நம் வீட்டு வேலைகளில் உதவி செஞ்ச பெண்ணுக்கு இதே பெயர்தான். பஷுபதி! அப்பழுக்கு சொல்லமுடியாத தரத்தில் வேலை செய்வாங்க. இதைப்போல ஒருவர் கிடைப்பது குதிரைக் கொம்பு!  இவுங்க  கணவர் நம்ம அபார்ட்மென்டுக்குக் காவல்காரராக இருந்தார்.  ஆ.... கொம்புன்னதும்.... இப்ப மான் கொம்பைப் பார்க்கலாம்... 

தலைவரைக் காணோமுன்னாத் தேடாம  இருக்கமுடியுமா?  தேவர்கள் தேடிக்கிட்டு  வர்றாங்க. கூட்டத்துலே மஹாவிஷ்ணுவும் மச்சானைத் தேடி....  மானைப் பார்த்ததும்.. ஓடிவந்து கொம்பைப் பிடிக்க,  கொம்பு உடைஞ்சு போயிருது. அதையே லிங்கமா வச்சுக் கும்பிட ஆரம்பிச்சாங்கன்னு  ஒரு கதை.

அதெல்லாம் இல்லை. இவர் ஸ்வயம்பு.  எந்தக் காலமுன்னு சொல்லமுடியாத ஒரு காலத்துலே தானாகவே லிங்க வடிவில் உருவானவர். காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதையுண்டு போச்சு. அந்த மேட்டில் தினமும் ஒரு ஆடு வந்து பால் சொரியும். இதைக் கவனிச்ச ஆட்டுக்காரர்,  அங்கே என்னதான் இருக்குன்னு  தோண்டிப் பார்க்க லிங்கம்  இருந்துருக்கு. அதையே வச்சுக் கோவில் எழுப்புனாங்கன்னு இன்னொரு கதை.

ஒன்னு கவனிக்கணும். இந்த பால் சொரியும் வகைக் கதைகள் நிறைய இடங்களில் கேட்டுருக்கோம். திருப்பதி கோவிலுக்கும் இப்படி ஒன்னு இருக்கு. என்னன்னா.... இதுவரை மாடுன்னு கேட்டது இங்கே ஆடு. அம்புட்டுதான். போகட்டும்... ஒரு எழுத்துதான் வித்தியாசம்:-)

எப்படி இருந்தாலும் நாலாம் நூற்றாண்டில் இங்கே கோவில் எழுந்தது  மட்டும் உண்மை. சுபஸ்பதேவர் என்ற மன்னர் கட்டியதுன்னு  கோவில்குறிப்புகள் சொல்லுது.


  மெயின் ரோடில் இருந்து  இடதுபக்கம் திரும்பி,   இப்பக் கோவில் வாசலுக்குப்பக்கம் போய் இறங்கியது  வேற ஒரு வழி.  இங்கேயும் எல்லா பெரிய நகரங்களையும் போல பார்க்கிங் பிரச்சனை அதிகம். சூர்யா நம்மை இறக்கி விட்டுட்டு தரிசனம் முடிச்சு வந்ததும் செல்லில் கூப்புடுங்கன்னு சொல்லி  அவர் நம்பரைக் கொடுத்துட்டுப் போனார்.  நம்ம  டாடா வண்டிகள்தான் அதிகமா ஓடுது இந்தப் பக்கங்களில்!
வழக்கமில்லாத வழக்கமா கோவிலுக்கு எதிரில் இருந்த  கோவில் சம்பந்தமான பூக்கள், ப்ரஸாதம் விற்கும் பெண்களிடம் கொஞ்சம் பூ வாங்கிக்கிட்டுப் போகலாமுன்னு  நினைச்சது என் தப்பு. வரிசையா   நாலைஞ்சு பேர் உக்கார்ந்துருக்காங்க...  நாங்க ஒரு பெண்மணியிடம் கொஞ்சம் பூ வாங்கினோம். சின்னதா ஒரு இலைக்கூடையில் வச்சுக் கொடுத்தாங்க. நூறு ரூபாய்.  அவுங்களுக்குக் காசு  கொடுத்துக்கிட்டு இருக்கும்போது   அடுத்துருந்த  பூ வியாபாரியம்மா, சட்னு  பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நம்மவர் மேல்  அப்படியே கவுத்துட்டாங்க.  எங்களுக்கு 'திக்'னு ஆகிப்போச்சு:-( பாவம்..  இவர்....   கோபம் முகத்துலே....  விளையாட்டா என்ன?  நானும் கொஞ்சம் கடுமையாத் திட்டினேன். தன்னிடம் வியாபாரம் பண்ணலைன்னு இப்படிச் செஞ்சுட்டாங்களாம் அந்தம்மா. மன்னிச்சுக்கோன்னு  சொல்லிட்டுத் தலையை குனிஞ்சுக்கிட்டாங்க.  நம்மவருக்கு எதோ  முன்ஜென்மத்துலே உறவோ என்னவோ :-)
நல்ல வெய்யில் நாள் என்பதால்  சட்டை உலர்ந்துருமுன்னு சமாதானப்படுத்திக்கிட்டுக் கோவில் வளாகத்துக்குள் போனோம்.  (எதிர்பாராம நம்ம மேல் தண்ணி  விழுந்தா நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்ததுன்னு  வச்சுக்குங்கோ!!  துள்ஸி மாதாவின் அருள்வாக்கு! )  வாசலில் ரெண்டு பக்கமும் சின்னதா சந்நிதிகள். ஒன்னில் புள்ளையார். இன்னொன்னில் சிவனோ?  இல்லெ தன்வந்திரியா?   ஆளுருவத்தில் உக்கார்ந்த நிலையில். ஆனால் கையில் எதோ கலசம் இருக்கே!  அம்ருதமோ?


நல்ல பெரிய வளாகத்தில் மக்கள் அங்கங்கே உக்கார்ந்துருக்காங்க. குரங்குகள்  அதுபாட்டுக்கு அங்கே இங்கேன்னு போகுதுகள்.


புறாக்களுக்காகத் தரையில் கொட்டி வச்சுருக்கும் பொரிகளை அப்படியே தலை சாய்ச்சு நாக்கால் நக்கி எடுத்துத் தின்றாங்க சிலர்! ஒருபக்கம் புத்தர் கோவில்போல பகோடாக்கள் தெரிஞ்சது.
எந்தப்பக்கம் போகணுமுன்னு  முழிச்சுக்கிட்டு இருந்தப்ப, ஒரு சின்னப்பொண் வந்து  வலதுபக்கம் கை காமிச்சு அங்கே செருப்புகளை விட்டுட்டுப்போகணும். கொஞ்ச நேரத்தில் ஆரத்தி ஆரம்பிச்சுருமுன்னு  சொன்னதும்  அதேபோல செருப்புகளை விடப்போனோம்.  ஒரு கம்பத்துலே கிளைகள் போல் கம்பி அடிச்சு வச்சு அதுலே  பைகளாத் தொங்க விட்டுருக்காங்க.
அதுலே ஒரு பையை எடுத்து நம்ம காலணிகளைப் போட்டு, இந்தாண்டை இருக்கும் கவுண்ட்டரில் கொடுத்தால் வாங்கி வச்சுக்கிட்டு டோக்கன் தர்றாங்க.  எந்தவிதமான தோல் பொருட்களுக்கும் (பர்ஸ், ஹேண்ட் பேக்,  பெல்ட் எல்லாம் ) அனுமதி இல்லைன்னு நம்ம ப்ரகாஷ் சொல்லி இருந்ததால் அறையிலே  வச்சுட்டுக் கேமெரா, செல்ஃபோன்  மட்டும் கையிலே வச்சுருந்தோம்.
டோக்கன் வாங்கிக்கிட்டு  சின்ன மேடேறி அந்தப்பக்கமா சுத்திக்கிட்டுக் கோவில் வாசலுக்குப் போறோம்.  இந்த சுத்தல் தேவை இல்லைன்னு அப்புறம் புரிஞ்சது:-)  வலப்பக்கம்   நாலஞ்சு படி இறக்கம். அதையொட்டி தீர்த்தம் வரும் முற்றம். அஞ்சு  தீர்த்தக் குழாய்கள். நம்ம ஹொடேலுக்கு போகும் சந்தின் ஆரம்பத்துலே குழாயடி இருக்குன்னு சொன்னேனே... அதே மாதிரியான குழாய்கள்!  கோவிலுக்குப்போகுமுன்  கைகால்களைக் கழுவிக்கொண்டு போக ஒரு ஏற்பாடு. ஆனால் தண்ணீர் வரலை.

கோவில் வாசலில்  உள்ள தகவல் போர்டு பார்த்ததும்  ஜஸ்ட் க்ளிக்கினேன்.  உள்ளே படம் எடுக்கக்கூடாது  :-(  இந்துக்கள் மட்டும் உள்ளே வரலாம்.

முன்வாசல்கதவு  பெருசா இருக்கு. நம்மூர் கோபுரவாசக் கதவுகள் உயரம் வரும்.  வாசல் முகப்பில்  மேலே மனுஷ்யரூப சிவன்,வலக்கையில் உடுக்கையும், இடக்கையில் சூலாயுதமும் பிடிச்சு நிக்கறார். பின்புலத்தில் பனிமலை!  கைலாயம்!  பக்கத்தில் பெருகி ஓடும் ஆறு கங்கையோ?  'ஸ்ரீபஷுபதிநாத் மந்திர்'னு எழுதி இருக்கு.  ஹிந்தி எழுத்துன்றதால் படிச்சுட்டேன்:-)

வாசலுக்கு ரெண்டு பக்கமும் சாமிகள். நமக்கிடதுபக்கம் புள்ளையார். அவர் தலைக்கு மேல் சந்திரன். வலதுபக்கம் இருக்கும் சாமி யார்னு தெரியலை.... சிவனோ இல்லை சக்தியா?  தலைக்கு மேல் சூரியன் இருக்கே! ரெண்டு பக்கங்களிலும் சிங்கங்களும் உண்டு!
கோவில் ஆடுகள் அங்கங்கே உக்கார்ந்து ஓய்வெடுத்துக்கிட்டு இருக்கு. நேர்ந்து விட்டவைகளாம். தாடியும் மீசையுமா.... சாமியார்கள் போலவே !

மெஷீன் கன் கையில் வைத்திருக்கும்  ராணுவத்தாரைக் கடந்து வாசலுக்கு அந்தாண்டை இருக்கும் படிகளில் இறங்கி கோவிலுக்குள் நுழையறோம்.  லேசா  மசமசன்னு இருட்டு....   கண் எதிரே  மேடையில்  பெரிய நந்தி ஸார்!  சாமியை நோக்கி உக்கார்ந்துருக்கார்.... அவர் பிருஷ்டப்பகுதி கோவில் வளாகத்தில் இருந்தே தெரியுமளவுக்கு  ப்ரமாண்டம்!  அவருடைய முகத்துக்குக் கீழே ஒரு சின்ன  பீடத்தில் சுமாரான சைஸில் இன்னொரு நந்தியும் இருக்கார்.  சைஸ் பெருசா இருக்கே தவிர, நம்மூர்ப்பக்கம் இருக்கும் நந்தியின் முக அழகு  இதில் இல்லை :-(  இது மாடு. அம்புட்டுதான்....  அலங்காரம், நகைநட்டு கூட அதிகம் இல்லை....  ப்ச்....

கையில் பிரஸாதத்தட்டுகளுடன் பக்தர்கள் நிற்கும் வரிசையில் போய் நின்னோம்.

வலையில் சுட்ட படம். கூகுளாருக்கு நம் நன்றிகள்.

கருவறை  வாசலுக்கெதிரா இருக்கும் நந்திக்கும்,   உயரமா இருக்கும்  கருவறை   வாசக் கதவுக்கும் இடைப்பட்ட இடத்தில்  ஒரு மரமேடை. ஏழெட்டுப் படி ஏறிப்போகணும்.  அங்கே நின்னுபார்த்தால் உள்ளே சிவன் இருக்கார். லிங்க ரூபம்!  தீபஆரத்தி இப்பதான்  முடிஞ்சதாம்.  மேடையில் இருந்து  எதிர்ப்பக்கமா இறங்கிப் போயிடலாம்.  மேடையில் இருந்தே ரெண்டு படி இறங்கினால் கருவறைக் கதவுக்கருகில் போக முடியும்.  காவல்துறை அம்மணி  அங்கே நிக்கறாங்க. என்னவோ புதுமுகமா இருக்கேன்னு, நம்மை  அந்தக் கதவருகில் போய் நிற்கச்சொல்லி வழி விட்டாங்க. கேரளா ஸ்டைல் போல கீழ்பாதிக் கதவு  மூடியும் மேல்பாதிக் கதவு திறந்தும் இருக்கு.
உள்பக்கமா நின்ன  பட்டர்  நம்ம கையில் இருக்கும் பூக்கள் உள்ள இலைப்பொதியை வாங்கி  உள்பக்கம் சிவன் கண்ணில் இங்கிருந்தே காமிச்சுத் திருப்பி தந்துட்டு,  அவருக்குப் பக்கம் இருந்த  உண்டியல் பொட்டியைக் கை காமிச்சார். நம்மவர் ஒரு நூறு எடுத்து அதில் போட்டதும்  கொஞ்சூண்டு சந்தனத்தை எங்கள் நெத்தியில் தீத்தி விட்டார். ஆச்சு தர்ஷன்!

பெரிய சிவலிங்கம்தான்.  அரைக்கதவினூடே  பார்த்தால் கொஞ்ச தூரத்தில்தான் இருக்கு. ஏராளமான பூக்களை மலைபோல் சார்த்தி இருக்காங்க!  ஐந்து முகங்கள் இருக்காம். நாலு திசைக்கும் ஒவ்வொன்னு, அஞ்சாவது முகம்  மேலே ஆகாசத்தைப் பார்த்து!  இஷான் என்று பெயர் அந்த முகத்துக்கு!  மற்ற நான்கு முகங்களுக்கும் தத்புருஷா, சத்யோஜதா, வாமதேவா, அஹோரா என்று பெயர்களாம்!

காவல்துறை அம்மணிக்கு நன்றி சொல்லிட்டு, ஆர்த்தி எப்போன்னால்  ஏழுமணிக்குன்னாங்க. இன்னும் கொஞ்ச நேரம்தான்  இருக்கு. ஒரு இருவது நிமிட். அதுவரைக் கோவிலைச் சுத்திப் பார்க்கலாமுன்னு  வலம் போறோம்.
ரெண்டு  தட்டுக் கோவில் இது.  சதுரமான  மரக்கூரைகளுடன் கட்டிடம்.  நாலு பக்கமும்  கதவுகள்.  எல்லாம் வெள்ளி!  சுவர்களில் பித்தளைகவசம் போட்டுருக்கு. அதிலே பித்தளையில் சிலைகள். ரொம்பத்திருத்தமான முகத்தோடு ஒவ்வொன்னும்   அழகோ அழகு.  படம் எடுக்க முடியலையேன்னு மனசு பதறுனது உண்மை....  கோவில் கூரைகளின்மேல் மரத்துக்குச் செப்புத்தகடு போர்த்தி இருக்காங்க. அதுக்குமேலே தங்கமுலாம்.  உச்சாணியில் இருக்கும் கலசம் முழுத் தங்கமாம்! வளாகத்துலே மெயின் கோவில் இதுதான்.
காலை அஞ்சு மணிக்கும் மாலை ஆறுமணிக்கும் ஆரத்தி எடுக்கும்போது நாலு வாசல்களையும் திறந்து வச்சு  நாலு பட்டர்கள்  ஒரே சமயத்தில் ஆரத்தி எடுப்பாங்களாம்! இது முடிஞ்சதும் மேற்கு வாசலைத்தவிர மத்த மூணு வாசல்களையும் மூடிருவாங்க. நாம் உள்ளே போனப்ப ஆரத்தி முடிஞ்சுருந்ததால் மூடுன கதவுகளைத்தான் பார்த்தோம். விளக்கு வெளிச்சம் மஞ்சளா இருப்பதால் எல்லாமே தங்கம்போல் தகதகன்னு மின்னுது!

இந்த மெயின் கோவிலைத்தவிர  அங்கங்கே சந்நிதிகள்  ஏராளம்.  நாங்களும் சில சந்நிதிகளுக்குள் போய்க் கும்பிட்டுக்கிட்டு வந்தோம். கொஞ்சம் இருட்டாக்கூட  இருந்துச்சு.  தட்டுத்தடுமாறி  சிவனைச் சுற்றி வந்தாச்சு:-)  இதுதவிர தரையில் எல்லாம் சிலைகளைப் பதிச்சுருக்காங்க. கவனமா நாம்தான் பார்த்து நடக்கணும். எல்லா இடங்களிலும் சின்னதும் பெருசுமா சிவலிங்கங்கள்!  வரிசைவரிசையா  மாடங்களில் கூட!  மாடம் போலிருந்த   ஒரு சின்ன சந்நிதியில்  உள்ளே உக்கார்ந்துருந்த  பட்டர் சிரிச்சமுகத்தோடு பளிச்ன்னு இருந்தார்.  சந்நிதிக்குள்  புள்ளையார்!  பட்டர், கர்நாடக மாநிலமாம்!  அவரிடம் ஆரத்தி எப்போன்னதுக்கு  'இன்னும் கொஞ்ச நேரத்துலே.... ஆரம்பிச்சுரும். இந்த வழியாப் போங்க'ன்னு கை காட்டினார்.

தொடரும்.......:-)

போவது உறுதி.... வழிதான் வேற ! ( நேபாள் பயணப்பதிவு 5 )

$
0
0
பட்டர் கை காட்டுன வழியிலே போனால்... ஒரு  கோவில்கட்டிடத்தின் மொட்டை மாடியில் போய்ச் சேர்வோம்.  கீழே நதி ஓடுது. எதிர்க்கரையில் ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடக்குது!  ஆஹா... நாம்தான் கோவிலுக்குள் ஆர்த்தின்னு தப்பாப் புரிஞ்சுக்கிட்டோம்..... ஹரித்வார், காசியில் பார்த்தமாதிரி   இந்த பாக்மதி நதிக்கு (Bagmati) எடுக்கும் ஆரத்தி போல!

காத்மாண்டுவின் கங்கை இது!  பித்தளை அடுக்கு விளக்குகளை தயாராக்கி வச்சுருக்காங்க. ஆத்தங்கரைன்னு நல்லா சிமெண்ட் போட்ட இடம்தான்.  ஒரு ஏழெட்டு மீட்டர் அகலமா இருக்கு. அதுக்கு அடுத்தாப்லே சின்னச்சின்ன  சந்நிதிகள் மாதிரி வரிசையா இருக்கு. உள்ளே என்ன சாமிகளோ? சிவனாகத்தான் இருக்கணும். சந்நிதிகளுக்கிடையில் இருக்குமிடத்தில்  திண்ணைபோல ஒரு அமைப்பு. எல்லாத்துக்கும் பின்னால் சின்னக்  குன்றுபோல் உசரமா ஒன்னு நீண்டு போகுது ஆற்றின் நீளத்தையொட்டியே....  அதுலேதான் அங்கொன்னு இங்கொன்னுன்னு விளக்குகள். மேலே எதோ தோட்டம் இருக்கோ என்னவோ?
கொஞ்சம் இருட்டா வேற இருக்கு. எதிர்க்கரையில் நடப்பதை சிரமப்பட்டுக் கவனிக்கவேண்டி இருக்கே....திண்ணைப்பகுதியிலெல்லாம் மக்கள் கூட்டமா அடர்த்தியா உக்கார்ந்துருக்காங்க.  மக்கள் நடமாட்டமும் அதிகம். அந்தப்பக்கத்தில் இருந்து ஆற்றில் இறங்க படிகள் மூணு அடுக்கில் இருக்கு. படிகள் ஒவ்வொன்னும் உயரம் கூடுதல். இறங்கி ஏறினால் கால் முட்டி காலி எனக்கு.....

மொட்டைமாடியின் கைப்பிடிச்சுவரின் இடது  பக்கம் ஒரு ஓரமா இடம் பிடிச்சு நின்னுக்கிட்டு இருக்கோம். அங்கே இருந்து இடதுபக்கம் கீழே போகும் படிகள் தெரியுது. ஆனால் படிகளுக்கான வாசலுக்கு எந்தப்பக்கம் போகணுமுன்னு தெரியலை.....    வரவர மக்கள் கூட்டம் நம்மை நெருக்கித் தள்ளுது.  நாங்க மாடியின் மூலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம்.     நம்மவர்தான் எனக்குப் பாதுகாப்பு வளையமா இருந்தார்.

 வெளியில்தானே இதெல்லாம் நடக்குது. இங்கே  படம் எடுக்கலாமா இல்லே கூடாதான்னு எனக்கொரு யோசனை.  கூட்டத்துலே இருக்கும் மக்கள் செல்ஃபோனில் படங்களும் வீடியோக்களுமா எடுத்துத் தள்ளிக்கிட்டு இருக்காங்க.  நம்மவரும் அவருடைய செல்லை வெளியில் எடுத்து அப்பப்ப ஒன்னுன்னு க்ளிக்க ஆரம்பிச்சார். முக்கால் இருட்டுலே என்ன தெரியுதோ அது............

எனக்குப் பக்கத்துலே இருந்தவர்களை முண்டியடிச்சுக்கிட்டுச் சுவர் பக்கமா வந்த சிலர், சில்லறைக் காசுகளை கீழே வீசி எறியறாங்க. என்ன நடக்குதுன்னு குனிஞ்சு பார்க்கிறேன்.....  ஆஹா..... எனக்கு  ரொம்பப் பிடித்த  விஷயம் கீழே நடந்துக்கிட்டு இருக்கு!!!!
ஆற்றின் இந்தாண்டைக்  கரை இது. இங்கே.... கும்பல்கும்பலா மனிதர்கள் தண்ணீராண்டை. படிக்கட்டுகளுக்கு இடைவெளி விட்டுட்டு அங்கங்கே மேடை அமைப்பு. இறந்தவர்களை  எரிக்கும் இடம். ஸ்மசான் காட்!!  ஆர்யா காட்ன்னு பெயராம்.    இனி என் கவனம் எங்கே போகுமுன்னு தனியாச் சொல்லணுமா?
படிக்கட்டுகளுக்கிடையில் கடைசி மூணு நாலு படிகளில் சரிவா ஒரு  கல் நாலாவது படிகளில் ஆரம்பிச்சுத் தண்ணீர்வரை போகுது.  இறந்தவர்களைத் தூக்கிட்டு வந்து முதலில்  நதியில் இறங்கி  அவுங்களை மூணுமுறை தண்ணீரில் முக்கி எடுத்துட்டு அந்த சரிவான கல்லில்  கால்கள் தண்ணீரில் இருக்கும்படி   படுக்க வைக்கிறாங்க.  மேல்படியில்,    தலைமாட்டில் ஒரு சின்ன சிவலிங்கம் அமைப்பு. அதுக்குப்பின்னால் ஒரு பள்ளம் இருக்கு போல!  அதுக்குள்  கைவிட்டு தண்ணீர் கோரி எடுத்து  இறந்தவர்கள்  தலையில்  ஊத்தறாங்க. இதை ஒரு நாலைஞ்சு பேர்  செய்யறாங்க. ரொம்ப நெருங்கிய சொந்தமா இருக்கணும். பிள்ளைகளாக இருக்கலாம்.

அப்புறம்  மேடைக்குப்பக்கம் ஒரு ஸ்ட்ரெச்சர் போல இருக்கும் மூங்கில் ஏணியில் இறந்தவர் உடலை வச்சு அலங்கரிக்க ஆரம்பிச்சாங்க. புதுத்துணிகள், பூமாலைகள் இப்படி. இதுக்கும் அதே நாலைஞ்சுபேர். ஒரு பண்டிட் கூடவே நின்னு என்ன செய்யணுமுன்னு சொல்லிக்கிட்டு இருக்கார். அரை இருட்டுலே அத்தனையும் நடக்குது.

அப்பதான் நம்ம பக்கத்துலே புதுசா வந்து சேர்ந்துக்கிட்ட உள்ளுர்வாசி,  யார் யார் சாஸ்த்திரங்களைச் செய்யணும் என்றெல்லாம் எனக்கு விளக்கம் சொல்ல ஆரம்பிச்சார். இங்கேயும் போனவங்களின் அந்தஸ்த்துதான் எங்கே எரிப்பது என்ற இடத்தை நிர்ணயம் செய்யுதாம்.  முக்கியப்பட்டவர்கள், மால்தாரிகள் எல்லாம்  இங்கேயும் இதுக்குப் பக்கத்துலே இருக்கும் நாலைஞ்சு மேடைகளிலும். வசதி குறைஞ்சவர்கள், பிரபலம் இல்லாதவர்கள் எல்லாம்  ஆத்துக்கு நடுவில் இருக்கும் பாலத்தைக் கடந்து  போயிடணும். இதே கரைதான் என்றாலும்  கொஞ்ச தூரத்தில்.  இந்த இடம்தான்   ஜஸ்ட் கோவிலுக்கு நேர் கீழே,  கோவிலின் பார்வையில்  இருக்கு!
கைப்பிடிச்சுவரைக் கெட்டியாகப்பிடிச்சுக்கிட்டு  எட்டிஎட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தேனா..... என் கைகளை   உரசிக்கிட்டுச்   சட்னு தாண்டி ஒரு உருவம்  கைப்பிடிச்சுவர் மேலேயே  நடந்து போச்சு. யம்மாடி... ஆஞ்சி.....!!!

நாங்கள் நிக்கும் இடத்துக்குக்கீழே மூணு சந்நிதிகள் இருக்குன்னு சொன்னேன் பாருங்க.... அதோட  கும்மாச்சி மேலே காசு எறியுது சனம். குறிப்பா பெண்கள் தான் காசு எறிஞ்சுக்கிட்டு இருந்தாங்க. என்ன சமாச்சாரமுன்னு  உள்ளுர்க்காரரைக் கேட்டதுக்கு, வீசிப்போட்ட காசு கும்மாச்சிக்குக்கீழே சுத்தி இருக்கும்  சின்ன இடத்துலே விழுந்து அங்கே நின்னுட்டால் நினைச்ச காரியம் நடக்குமாம். ஆஹா...  ஜோஸியம் பார்த்துக்கறது போலவா? இதுக்கு என்னவோ ஒரு சொல் இருக்கே....  ஆங்....  ஆரூடம் பார்க்கறது...  சரிதானே?
அப்புறம் ஒருநாள் நான் எடுத்த படம் இது. மூணு சந்நிதியும் கும்மாச்சியோடு இருக்கு. மேலே தெரியும் மொட்டைமாடியின் ஓரத்தில் நாங்க நின்னுருந்தோம்.

பார்த்தவரை  ஒரு காசுகூட  அங்கே நிக்கலை. எல்லாம் தெறிச்சுத் தெறிச்சு உருண்டு  வேறெங்கியாவது இடுக்கில் போய் நிக்குது.  முக்கால்வாசியும் கீழே தரையில்தான் விழுது. நாலைஞ்சு பசங்க ஓடியோடிக் கீழே விழும் நாணயங்களைப் பொறுக்கிக்கிட்டு இருந்தாங்க.

இதுக்குள்ளே எதிர்க்கரையில் ஆரத்தி ஆரம்பிச்சது.  சில குடும்பங்களைப் பெயர் சொல்லி மைக்கில் கூப்பிட்டாங்க. அவுங்கதான் இன்றைய ஆரத்திக்கு ஸ்பான்ஸர்கள். போனவாரம் இங்கே உறவுகளின் சம்ஸ்காரம் செஞ்சவங்களாம்.  அப்புறம் வெளியூரில் இருந்து வந்த  ஆன்மீக யாத்திரைக்குழுவின் தலைவர்,  அஞ்சு நிமிட் பேசினார். சங்கு ஒலிக்க, மணியோசையுடன்  நடந்த   ஆரத்தியைக் கவனிச்சுக்கிட்டு இருக்கும்போதே.... கீழே  அலங்காரம் முடிச்சு, சிதைக்குப்போகக் காத்திருந்த உடம்பு,  தகனமேடைக்குப் போச்சு.
ஆரத்தி    மொத்தமே ஒரு இருவது நிமிட்தான். அதுக்குள்ளே கீழே நாலு பேர்     வந்து,  குளிச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டாங்கன்னா பாருங்க........... இந்த நேரத்தில் இப்படி பிஸியா?  அப்பப் பகலில் கேக்கவே வேணாம்.....

காசியைப்போல் இங்கே வந்து சாமிகிட்டே போனால் மறுபிறப்பு இல்லை, நேரடியா சொர்கம்தான் என்ற நம்பிக்கை இருப்பதால் போனவங்களும் சரி, போகப்போறவங்களும் சரி  இங்கே வந்து சேர்ந்துடறாங்க.  பலர் இங்கே வந்து காத்துக்கிடக்கறாங்களாம்.... கோவிலின்   வளாகத்தில்   அவுங்களை ஆஸ்ரம சேவகர்கள்  கவனிச்சுக்கறாங்களாம்.

இப்ப தரிசனம் பண்ணமே நம்ம பஷுபதிநாத்தை.... நமக்குக்கூட மறுபிறவி கிடையாதுன்னு  இங்கே ஒரு பலத்த நம்பிக்கை. நல்லதாப் போச்சு :-)

ஆரத்தி முடிஞ்ச அடுத்தகணம் கூட்டம் கலைய ஆரம்பிச்சது. கீழே என்ன நடக்குதுன்னு நின்னு பார்க்க விடாம, கோவில் காவலாளிகள் பிகில் ஊதிக்கிட்டே கூட்டத்தைத் திருப்பி அனுப்பறதில் மும்முறமா இருக்காங்க. கொய்ங் கொய்ங்ன்னு பிகில் சத்தம் காதைக் கிழிக்குது.  எதிர்க்கரைக்கு எப்படிப் போகணும்னு பார்த்தால்  கொஞ்சதூரத்தில் ஒரு பாலம் தெரிஞ்சது. பகல் நேரத்தில்  வந்து பார்க்கணும்....

பாக்மதி நதிக்கு அப்பாலும் இப்பாலுமா பரந்து விரிஞ்சுருக்கும் கோவில்வளாகம் மொத்தம் 652 ஏக்கர்  பரப்பளவு! அம்மாடியோ.............  எந்தக் காலத்துலே முழுசும் சுத்திப் பார்க்கப்போறோம்?

கூட்டத்தோடு கூட்டமா நாமும் நகர்ந்து  கோவில் கருவறை  வாசலுக்கு வந்திருந்தோம்.  மஞ்சள் விளக்கில் தங்கமா மின்னும் கருவறைக் கதவுகளை
 இழுத்துப் பூட்டி இருந்தாங்க. நந்தி மட்டும் பெரிய கண்களால் நம்மைப் பார்க்குது. முன்வாசல் கேட்டுக்கு போங்கன்னு விரட்டிக்கிட்டே இருந்தாங்க காவலாளிகள்.  நாம் வெளியே வந்துட்டோம். கொஞ்ச நேரத்துலே  கம்பிக் கதவை மூடிட்டாங்க.  வெளி முற்றத்தில் பளீர்னு விளக்கு வெளிச்சம். பயணிகளிடையே  முக்கிய  சமாச்சாரமா க்ளிக்ஸ் நடக்குது. நாமும்  ஜோதியில் கலந்தோம். நந்தி கம்பிகளினூடே....  க்ளிக்!
அடுத்து.... காலணி பாதுகாக்கும் இடத்துக்குப் போய்  நம்ம பையைத் திரும்ப வாங்கிக்கிட்டுக் காலிப் பையை மரத்தில் தொங்க விட்டாச்சு.  சாயங்காலம் பார்த்த அந்தப் பெண்,   தரிசனம் ஆச்சான்னு கேட்டுக்கிட்டே  சாளக்ராமம், ருத்ராக்ஷம் எல்லாம் தரமானது வேணுமான்னு கேட்டாங்க. எதிரே கடை வச்சுருக்காங்களாம். அகர்வால்னு ஒரு கடை பார்த்த நினைவு. அது இல்லையாம். அதுக்கு அந்தாண்டையாம்.  இன்னொருநாள் வரேன்னு சொல்லிட்டு  வளாகத்தை விட்டு வெளியே வந்தால்  நம்ம வண்டி கொஞ்ச தூரத்தில் கண்ணில் பட்டது.
லெமன்ட்ரீக்குப் பக்கத்தில் வந்ததும், அந்த தமில் ஏரியாவில் முன்பக்கமாவே இருக்கும் கடையில் கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கலாமேன்னு தோணுச்சு. வயித்துலே உ .கி  வேற  உக்கார்ந்துருக்கு. ராத்திரி சாப்பாடு வேணாம்.

 ஏற்கெனவே பார்த்து வச்சுக்கிட்ட கடையில் பழங்களும், மாம்பழ ஜூஸும் வாங்கிகிட்டோம்.  மாம்பழம் என்ன ரூபத்தில் வந்தாலும் நான் விடமாட்டேன்:-)  நிறைய  நட்ஸ், சீஸ், பிஸ்கெட்ஸ் வகைகள் இருக்கு அங்கே. 200 கிராம் பாக்கெட்டுகளாப் போட்டு வச்சுருப்பதில் நாமும் கொஞ்சம்  பாதாம், பிஸ்தாவும் ரெண்டு பாக்கெட் பிஸ்கெட்ஸும் வாங்கினோம். நாளையப் பயணத்துக்கு  வழியில்  பயன்படும்.

லெமன்ட்ரீ வந்து சேர்ந்தோம். ப்ரகாஷ்  இருந்தார்.  இந்த்ரா வீட்டுக்குப் போயிட்டாங்களாம். ப்ரகாஷின் அண்ணன் மகள்தான் இவுங்க. அப்பா அம்மாவுடன்   மகன்கள் இருவரும் கூட்டுக் குடும்பமா வசிக்கிறாங்களாங்களாம். அடுத்துள்ள கிராமத்துலே இருந்த இவுங்க வீடுகள் எல்லாம் இப்போ ஒன்னரை வருசத்துக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்  அழிஞ்சே போயிருச்சாம்.  அங்கே இருந்த குடும்பமெல்லாம் இப்ப  நகரத்துக்கே வந்துட்டாங்க. அதான்  நிறையக் கூட்டமா இருக்கு.

எம்பது கிமீ தூரத்துக்கப்பால் என்பதால்   இங்கே நகரத்தில் சேதாரம் அவ்வளவா இல்லைதான்...  கோவில்  வளாகத்தில் கூட சில இடங்கள் பாதிக்கப்பட்டு இருக்கு என்பதை  அங்கங்கே கட்டைகளை வச்சு முட்டுக் கொடுத்துருக்கறதைப் பார்த்தேனே... சில இடங்களில் தார்பாலின் போட்டு மூடித்தான் வச்சுருக்காங்க. உலக பாரம்பரியச் சின்னங்களில் இந்தக் கோவிலையும் யுனெஸ்கோ சேர்த்துருக்கு..  என்பதால்  அழிஞ்ச பகுதிகளைப் புனர்நிர்மாணம் செய்ய இவுங்க உதவிக்கு வர்றாங்கன்னு நினைக்கிறேன்.


நிலநடுக்கத்தின் பாதிப்பை நேரடியா உணர்ந்தவங்க நாங்க என்பதால்   அங்கத்து நிலமை  நல்லாவே புரிஞ்சது. கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் உயிர்கள் போயிருக்கு :-( என்ன கொடுமை..... 7.8  அளவில் நடுக்கமுன்னா சும்மாவா........... ப்ச்....

இந்த ஃபிப்ரவரி 22 வந்தால் எங்க ஊரில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு வயசு 6 ஆகும். ஊரில் பாதி அழிஞ்சே போச்சு. அதிலிருந்து  இந்த மாதிரி சேதி கேட்டாலே மனசு நடுங்கிருது...:-(

மறுநாள் எங்களுக்கான பயணத்திட்டங்களை விளக்கிச் சொன்னார்.  நாலைஞ்சு நாட்களுக்குத் தேவையான துணிமணிகளை எடுத்துக்கிட்டு, மற்ற பெட்டிகளை இங்கேயே விட்டு வச்சுட்டுப்போகும் ஏற்பாடு. பகல்  ஒன்னேமுக்காலுக்குத்தான்   ஃப்ளைட் என்பதால்  காலையில்  சில இடங்களைச் சுத்திப் பார்த்துக்கலாமாம்.  கார் ஏற்பாடாகி இருக்கு.

லெமன்ட்ரீ ஹொட்டேலுக்குன்னு தனியா இன்னும் வண்டிகள்  வாங்கிக்கலை. ஆனால்  வேற ட்ராவல்ஸ் வண்டிகளை இவுங்க பயன்படுத்திக்கறாங்க.

ராச்சாப்பாட்டுக்கு எதாவது சமைக்கணுமான்னு கேட்டார். வேணாமுன்னு சொன்னோம்.  இங்கே காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் நம்ம அறை வாடகையில் சேர்த்தி. மற்ற நேரங்களில் சாப்பாடு வேணுமுன்னா சொன்னால் செஞ்சு தர்றாங்க. மெனு கார்டு பார்த்துட்டு நாம் சொன்னால்... இவுங்க தயாரிப்பு இல்லைன்னாலும் வெளியே இருந்து வாங்கி வந்து தர்றாங்க.

இதெல்லாம்  இங்கே நாங்க பேசிக்கிட்டு இருந்தப்ப, சுமனும் இன்னொரு  பணியாளான  போலாராமும்  ஒரு மூலை டேபிளில் உக்கார்ந்து படிச்சுக்கிட்டு இருந்தாங்க. மாணவர்களாம். ஆஹா... அதானே  பையனாட்டம் இருக்காங்களேன்னு பார்த்தேன்.  வசதி இல்லாத குடும்பம் என்பதால் நம்ம ப்ரகாஷ்தான் படிக்க வைக்கிறாராம். கிராமத்தில் இருந்து வந்து இங்கேயே தங்கி இருக்காங்க. பள்ளிக்கூட நேரம் போக  மற்ற நேரங்களில்   இங்கேயே வேலை செய்யறாங்க. ஸ்டூடன்ட் ஜாப்!

நீங்க நல்லா இருக்கணும். உங்க பிள்ளை குட்டிகளுக்குப் புண்ணியமுன்னு வாழ்த்தினேன். ஒரு பெண் குழந்தை, ஒன்னரை வயசில் இருக்காளாம். செல்லில் இருக்கும் குடும்பப்படங்களைக் காமிச்சார். கொள்ளை அழகு அந்தப் பாப்பா!

அறைக்குப்போய் அடுத்த சிலநாட்களுக்குத் தேவையானவைகளை சின்ன கேபின் பேகில் வச்சுட்டு,  பாக்கி எல்லாத்தையும் பெரிய பெட்டிகளில் போட்டுப் பூட்டி வச்சோம். லேப் டாப் கொண்டு போக வேணாமுன்னு முடிவு.  செல்ஃபோன்,  ஒரு கேமெரா, அதுக்கான சார்ஜர்கள் போதும்.

பழத்தை  முழுங்கி ஜூஸைக் குடிச்சுக் கட்டையைக் கிடத்தியாச்சு.
பாக்மதி நதி .வலையில் சுட படம் இது. கூகுளாருக்கு நன்றி.

தொடரும்.........:-)


பதினொரு தலைகளோடு ஒரு பா......ம்....பு.... ( நேபாள் பயணப்பதிவு 6 )

$
0
0
காலை எட்டுமணிக்கு வண்டி வந்துரும்.  இங்கே  ப்ரேக்ஃபாஸ்ட், நம்ம அறை வாடகையில் சேர்த்தி என்பதால்  காலை நேர அலைச்சல் இல்லை.  அநேகமா எல்லா இடங்களிலும் இப்படி ஆரம்பிச்சு வச்சுருக்கறது நல்லாத்தான் இருக்கு.  குளிச்சு முடிச்சுக் கீழே போனோம். லிஃப்ட் இல்லாத    ரெண்டாவது மாடியில் அறை என்பதால்  எல்லாம் கணக்காத்தான் இருப்பேன்.  அடிக்கடி  ஓடிப்போய், ஓடிவர முடியாது பாருங்க....
மற்ற பெரிய ஹொட்டேல் போல பஃபே கிடையாது.  ஒரு   நல்ல  ஐடியாவா மெனு கார்டில் இருக்கும் ஐட்டங்களில் நமக்குத் தேவையானதை மார்க்கர் பேனாவால் டிக் போட்டுக் கொடுத்துட்டால் போதும். அதன்படி நமக்கு தயாரிச்சுக் கொடுத்துருவாங்க. அப்புறமா அந்த  டிக்கை அழிச்சுட்டால் அடுத்த கெஸ்ட்டுக்கு மெனுகார்ட் ரெடி :-)

இன்றைக்கு சமையல் அறை  பொறுப்பில் சுமன் & கேஷவ்.  இதுபோல சின்ன பொட்டீக் ஹொட்டெலில்  தங்குவது எனக்குப் பிடிக்கும். வீட்டில் இருப்பது போல ஹோம்லி. ஹொட்டேல் ஓனர், பணியாளர்களுடன் நமக்கு நேரடித் தொடர்பு. அடுக்களைகூட வீட்டு சமையலறை போலவே!
எனக்கு   தேனுடன்  ஒரு பேன்கேக்,  நம்மவருக்கு டோஸ்ட் வித் பட்டர் & ஜாம்.   கூடவே ஆப்பிள் ஜூஸ்,  பழங்கள், காஃபி.  சிம்பிள் அண்ட் பெஸ்ட். சமையல் தயாராகும்வரை சந்தில் நடந்துட்டு வந்தோம். நாலைஞ்சு ஹொட்டேல்களும் தர்மசாலையுமா....   ஆஹா.....
சரியா எட்டுக்கு  வண்டி  வரலை. கால்மணி லேட்.  கிளம்பிப்  பெருமாளை ஸேவிக்கப்போறோம். சுமார் ஒன்பதரை கிமீ பயணம்.  புதாநீல்கண்டா/ புதாநீல்கந்தா.....

உள்ளே  பதினொரு தலை ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்ட பெருமாளுக்கும் புத்தருக்கும் நீலகண்டருக்கும்  என்ன சம்பந்தமோ.... எல்லாம் ஒன்று என்ற தத்துவமோ என்னவோ.....
கோவில்வாசலில் எங்களை இறக்கிவிட்டுட்டு எங்கியாவது பார்க்கிங் போட்டுக்கறேன்னுட்டுப் போனார் சூர்யா லாமா.  வளாகத்துக்குள்ளே நுழையறோம். நல்ல கூட்டம்தான். நடுவிலே  சுத்துச்சுவர் போட்ட இடத்துக்குள் குளம்.  சுத்திவர நடைபாதை.  அதைச் சுத்தி ஏகப்பட்டத் தனித்தனி சந்நிதிகள். மேடைகளில் குங்குமம் அப்பிக்கிடக்கும்  சிவலிங்கங்கள். அங்கங்கே   சங்கிலிகளில்  தொங்கும் காண்டா மணிகள்!


முதலில் பெருமாள்னு குளக்கரைக்குப் படிகள் இறங்கினோம். அஞ்சாறு படிகள்தான்.  குளத்தின் நடுவில் இல்லாமல் ஒரு பக்கம் கரைக்கருகில் கிடக்கிறார்.  பெருமாளை விட அந்தப் பாம்புதான் எனக்குப் பிடிச்சுப்போச்சு!  ஃபோம் பெட்டில் கிடந்தால் அங்கங்கே  மெத்தை,  உடம்புக்கு வெளியில் வழியும் பாருங்க அதேபோல்  பின்னிக்கிடக்கும் பாம்பு உடல் வழியுது! (சரியாச் சொல்லத் தெரியலை....)



சின்னப்பையன்தான் பட்டர்.  படம் எடுக்கலாமான்னு கேட்டதுக்கு  வெளிப்புறம் போய் நின்னு எடுத்துக்கலாம். இங்கே முடியாது என்றார். பக்தர்கள் வழிபாட்டுக்குன்னு  பூ, பிரஸாதங்கள்னு கொண்டு வர்றாங்க. அதை வாங்கிக்கிட்டு,  பாம்பு உடல்மேல் நடந்து போய் பெருமாளின் சிரஸில் வச்சு எடுத்துக்கிட்டு வர்றார் பட்டர். பெருமாள் பார்க்கறதுக்கு மிதக்கறவர் போல் இருந்தாலும்  கீழே ஸாலிட்டாக இருக்கார் போல.
பக்தர்கள் நின்னு பார்க்க  குளக்கரையில் அகலமான  பாதை. தடுப்பு போட்டு வச்சுருக்காங்க. பெருமாளுக்கு எதிரில் நடைபாதையையொட்டி, அடுக்கடுக்கா சின்னச்சின்ன சந்நிதிகள் போல  இருக்கு. படிகளும் திண்ணை போல  இருப்பதால்   அங்கே உக்கார்ந்து பெருமாளைக் கண் நிறைய, நிறையப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

வலக்கையில் சக்கரம். இடக்கையில்  கதை. அப்ப சங்கு?  நாலு கைகள் இருக்கே.... அதில் இன்னொரு  இடக்கையில் சங்கு இருக்கு. இன்னொரு வலக்கையில்  உருண்டையா இருப்பது  வெண்ணெயா? இல்லே சாளக்ராமா இருக்கணும்.  கால்களை நீட்டிக்கிடக்காமல், சின்னக்குழந்தைகள் காலை லேசா மடக்கி வச்சுக்கறமாதிரி, கால் மேல் கால் போட்டுக் கிடக்கிறார்.
பதினொரு தலை ஆதிசேஷன்! பொதுவா நம்மூர் கோவில்களில் அஞ்சு தலைகள்தான் அதிகம்.  சில இடங்களில் குறிப்பா கம்போடியா, பாலி, தாய்லாந்துக் கோவில்களில்  ஏழு, ஒன்பதுன்னு பார்த்திருக்கேன்.  பதினொன்னு இங்கே நமக்கு முதல்முறை!

பெரிய சைஸ்.....  பதினெட்டு அடி  நீளம்!  இந்தக் குளமே  நாப்பத்திமூணு அடி அகல நீளம்  இருக்கும்  சதுரக்குளம்.  இவ்ளோ பெரிய குளத்துக்கு  மேற்கூரை கட்ட முடியாதுன்னு நினைச்சோ என்னவோ, பெருமாளுக்கு மட்டும் ஷாமியானா போட்டு வச்சுருக்காங்க. நடுப்பகலில் அடிக்கும் சுள் வெயில்  முகத்தில் படாம இருக்கட்டும், பாவம்....
கரைக்கு ரெண்டடி தள்ளி தண்ணீருக்குள் இருக்கும் பெருமாளுக்கு அந்தத் தண்ணீரை மொண்டு அபிஷேகம் செஞ்சு மஞ்சள் ஆடை, மலர்மாலை,   க்ரீடம் சார்த்தி,  நெத்தியில் நாமம், உதட்டுக்கு லிப்ஸ்டிக்னு போட்டு  அலங்காரம் செஞ்சுடறாங்க. விசேஷநாட்களில்  பூக்குவியலின் உள்ளே இருப்பார்! கண்ணுக்கு சிகப்பு  மை வேற !!
பார்க்கப்பார்க்க.... இவரைத் தூக்கிட்டுப் போயிடணும் என்ற ஆசையை அடக்க முடியலை. அப்போ அங்கே வந்த இன்னொரு வயசான பட்டரிடம், இவரோட விக்கிரஹம் கிடைக்குமான்னு கேட்டதுக்கு,  'வா என்னோடே'ன்னு  விடுவிடுன்னு முன்னாலே போக ஆரம்பிச்சார்.  ஒல்லி உடம்பு வேக நடை. ஓட்டமும்  நடையுமாப் பின்னே போனால்.... நாம்  உள்ளே நுழைஞ்ச வழியா வெளியே போறார். ரெண்டுமூணு நிமிச நடையில் அந்தத் தெருவில்  இருக்கும்  கடைகளில் முன்னாலே இருக்கும் கடையாண்டை போய் நின்னு  'இங்கே இருக்கு,  பாரு'ன்னார். அடுத்தடுத்து நிறைய கடைகள் இருக்கு.
கண்ணையோட்டிப் பார்த்து நானொரு கடையைத் தேர்ந்தெடுத்தேன்.
பித்தளையாக இல்லாமல் கற்சிலைகளா இருக்கு. சாளக்ராம் ஒன்னு எடுத்துப் பார்த்தேன். ஒரிஜினலாம்!   பெருமாள் வெள்ளைக்கல்லிலும் கருப்புக் கல்லிலுமா  இருக்கார். கருப்பே அழகுன்னு  கருப்பை வாங்கினேன். அதை என்னிடமிருந்து வாங்கிப் பார்த்த பட்டர், 'வா என்னோடு'ன்னு திரும்பக் கோவிலை நோக்கி விடுவிடுன்னு போனார்.

குளத்துப்படிகளில் இறங்கினவுடன், சின்னப் பட்டர், என்னிடம் இருந்த  சயனநாராயணனை வாங்கிக்கக் கைநீட்டுனார். அந்தக் கையைப் பட்டுன்னு தட்டிவிட்ட  பெரிய பட்டர்,  அங்கிருந்த மஞ்சள் துணியொன்னை எடுத்து நம்ம சிலைக்குச்   சுத்தி, குளத்துத் தண்ணீர்விட்டு  அபிஷேகம் செஞ்சு , அங்கிருக்கும் பூக்கள் சந்தனம் எல்லாம் வச்சு அலங்கரிச்சு, மந்திரங்கள் சொல்லிக்கிட்டே  பாம்பின்மேல் நடந்து போய் பெருமாளின் சிரஸில் வச்சு  பூக்களால்  அர்ச்சனை செஞ்சுட்டுத் திரும்ப கரைக்கு வந்து என்னிடம் கொடுத்தார். நான் துப்பட்டா முந்தானையை    ஏந்தி    வாங்கிக்கிட்டேன்.  மடிப்பிச்சை!  பூஜை செஞ்சதுக்கு  நம்மவர் பெரிய பட்டருக்கு தக்ஷிணை கொடுத்தார்.  நம்மவரிடம் உடனே,  சின்னப் பட்டருக்கும் கொடுக்கச் சொன்னேன். பாவம்  குழந்தை.....  ஏமாந்து போகப்டாது இல்லையோ?

எந்தக் காலக்கட்டத்தில் செஞ்ச சிலைன்னு கேட்டதுக்கு, பெரிய பட்டர் ஆடிப்போயிட்டார். ஸ்வயம்புவாம்!!!!  சரின்னு கேட்டுக்கிட்டேன்:-) சுமார் 1380 வருசமாச்சு வயசுன்னு  ஒரு குறிப்பு. இன்னொன்னில்  லிச்சாவி வம்ச அரசர் விஷ்ணுகுப்தா ஆட்சியில் ஏழாம் நூற்றாண்டில் (633  A.D.)செதுக்கப்பட்ட சிலை.  நாம் நினைக்கறதுபோல்   இந்த  ஒரு சிலை மட்டுமில்லாமல் மொத்தம் மூணு சிலைகள் இதைப்போலவே இருக்காம் நேபாளில்!  ஒன்னு இங்கே... இன்னொன்னு (Balaju Gardens) பாலாஜு கார்டனில்.  இது பதினெட்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாம்.

மன்னர் ப்ரதாப் மல்லா காலத்தில்,  புதாநீல்கந்தாக் கோவிலுக்குப் போகும் அரசர்களை, சீக்கிரம் எமன் கூட்டிட்டுப் போயிருவான்னு யாரோ கிளப்பிவிட,    அதுக்குப்பின் அரசவம்சத்தினர் யாருமே 'கிடப்பவனை'க் கண்டுக்கிடலையாம்.  இவ்ளோ அழகை நம்மால் பார்க்க முடியலையேன்னு  நினைச்ச அரசகுடும்பம் பாலாஜு தோட்டத்தில் ஒன்னு செஞ்சு வச்சுருக்காங்க.  இந்த ரெண்டும் தரிசிக்கப்  பொதுமக்களுக்கு அனுமதி உண்டு.  மூணாவதா ஒன்னு  அரண்மனைக்குள்ளே இருக்குன்னும்,  மக்களுக்கு அங்கே அனுமதி இல்லைன்னும் கேள்வி.

பெயரில் குழப்பம் இருக்கேன்னு  பார்த்தால்  இது புத்தர் இல்லையாம். புட்டா....   கிழவன், முதியவன் என்று பொருள் வரும் ஹிந்திச் சொல். முதுமை, பழசு  .... இப்படி. பதினெட்டாம் நூற்றாண்டில் புதுச்சிலை வந்தபின், ஏழாம் நூற்றாண்டுச் சிலை   பழேசாகிருச்சே...  பூடா ஹோ கயா! இந்த பூடா...மெள்ள மெள்ள புத்தா ஆகிப்போச்சு:-) புத்தர்வேற இங்கே நேபாளில் பொறந்துருந்தார் இல்லையோ!!!

அப்ப அந்த நீல்கந்தா?  வேறென்ன  நம்ம சிவர்தான்!  இப்ப இருக்கும் இந்த  ஜலசயன நாராயணனை அப்படியே திருப்பி வச்சால் (??!!!) அடிப்பக்கத்தில்  சிவனுடைய உருவம் கிடந்த கோலத்தில் இருக்குமாம்.  எப்படி? ஆலகால விஷத்தை உண்டபின் ஏற்பட்ட மயக்கத்தில் கிடக்கிறாரே.... நம்ம  சுருட்டப்பள்ளியில். அதைப்போல!  அதான் விஷம் உண்ட நீல கண்டன்.....

 நல்லாத்தான் கிளப்பி விடுறாங்க.  யாரு, எப்போ, எப்படி சிலையை உள்ட்டா பண்ணிப் பார்த்தாங்களாம்?

  ஜலசயன நாராயணனுக்கு  இப்படி ஒரு பெயர் அமையணுமுன்னு விதி இருந்துருக்கு போல :-)))) ஆனால் ஒன்னு..... எது எப்படி இருந்தாலும் இந்த சிற்பத்தைச் செதுக்கிய கலைஞனுடைய ரசனையைப் போற்றித்தான் ஆகணும்!  ஹைய்யோ!  என்ன ஒரு வேலைப்பாடு!  முக்கியமா அந்தப் பாம்பு!!!

பாம்பு பாம்புன்னு ஆசையா நான் இருக்கறது  ஏன்னு  பின்னால்  கண்டுபிடிச்சேன்,  ஒரு ரெண்டுநாள் கழிச்சு.....   எதிர்பாராத விதமா, எதிர்பாராத இடத்துலே!  அதை  அப்பாலிக்கா சொல்றேன். ஓக்கே :-)

வலம் வரும்போது  நம்ம ஜலசயன நாராயணர் தலைப்பக்கத்துக்கு நேரெதிராத்தான் கோவிலின் முன்வாசலே இருக்கு!

நாராயணரை நெஞ்சிலும் மடியிலும் சுமந்துக்கிட்டுக் கோவிலை வலம் வர்றோம்.  பெரிய வளாகம்தான். இங்கேயும் ஏகப்பட்ட சந்நிதிகள் அங்கங்கே!
லக்ஷ்மி மந்திர்னு  தனியா மேட்டில்  ஒரு சந்நிதி. வளாகத்தில் வலம் வரும்போது  ஒரு மூலையில் சிவனுக்கும் ஒரு சந்நிதி. நேர் எதிரா  இன்னொரு சந்நிதி சரஸ்வதிக்கு! எல்லாம் நாமே உள்ளே போய் சாமியைத் தொட்டுக் கும்பிட்டுக்கலாம். சிவனுக்குத் தலைமேல் உள்ள  பாத்திரத்தில் அபிஷேக நீர்  கொண்டு வந்து  கொட்டிட்டுப்போகுது சனம். முக்கியமாப் பெண்கள்!  அபிஷேகப்பிரியனுக்கு  தாராபிஷேகம்  நடந்துக்கிட்டே இருக்கு!

இந்தப்பக்கம் ஒரு யாக சாலை. அதையடுத்து  க்ருஷ்ணருக்கு ஒரு சந்நிதி.  காளிங்கமர்த்தனம் ஸீன். ஃபயர்ப்ளேஸ் போல  தரையை யொட்டி இருக்கும் இடத்தில் இருக்கு.  நாம் மூணு படிகள் இறங்கிப்போய் கும்பிட்டுக்கணும்.  வெளியே வரும்போது  அங்கெ ஒரு பட்டர், கம்பியில் இங்லீஷ் 'யு'மாதிரி ஒன்னு வச்சு சந்தனக்குழம்பில் முக்கி எடுத்து நம்ம நெத்தியில் பதிக்கிறார்!  ட்டடா.....  யூ நாமம்! சந்தனத்தில்!  எனக்கு அதைப்போல ஒன்னு வேணும். அவரிடமே கேட்டேன். தானே அதைச் செஞ்சாராம்!  நம்மவரிடம் சொல்லி ஒன்னு செஞ்சுக்கணும். எஞ்சீனியர் செஞ்சு தரமாட்டாரா என்ன? :-)

நாமத்துக்கு மேலே அரிசியும் குங்குமமும் குழைச்சு வச்ச மொத்தையில் இருந்து  ஒரு சிட்டிகை நம்ம நெத்திக்கு!
இந்த வெளிப்புறச் சந்நிதிகளில் எல்லாம்    இரும்புக் கம்பியை  சுத்திவரத் தடுப்புக் கம்பியா வச்சு அதுலே வரிசையா பித்தளை விளக்குகளைப் பிடிப்பிச்சுருக்காங்க. அகல் வடிவம் இல்லை. வட்டவடிவ விளக்குகள். அதுலே  விளக்கேத்தும்போது அட்டகாசமா இருக்கும், இல்லே!  விழா சமயங்களில் ஏத்துவாங்களோ என்னவோ?  சாயங்காலமா வர்றவங்க     கண்களுக்கு  செம விருந்து !!!


This photo of Budhanilkantha  க்ருஷ்ணா is courtesy of TripAdvisor  இதுதான் அந்த க்ருஷ்ணர் சந்நிதி. சுட்ட படம் :-)

இங்கே வேதபாடசாலை நடக்குது.  வேதம்படிக்கும் மாணவர்கள் தங்கும் வித்யாஷ்ரம்.  கட்டடவாசலில் நின்னு கவனிச்சால்  எங்கியோ தூரத்தில்   மாணவர்கள் வேதம் சொல்லும் ஒலி ரொம்ப லேசாக் கேட்டது!
கோவிலின்    முன்வாசப்பக்கம் எப்படி இருக்குன்னு பார்க்கப்போனோம்.  பூஜைக்கான பொருட்கள் விற்கும் சிறு வியாபாரிகள் வரிசையில் உக்கார்ந்துருந்தாங்க.  சில பிச்சைக்காரர்களும் அங்கங்கே!

பக்கச் சுவர் மாடங்களில் கடவுளர்களின் சிலைகள்.  வாசலின் நடுவில் பெரிய தாமரைப்பூவில் நிற்கும் மஹாவிஷ்ணு! வலக்கைகளில் சக்கரம், சங்கு!  இடக்கைகளில் கதை,  தாமரை! நான்கு திசைகளுக்கும் ஒவ்வொன்னு என்ற கணக்கில் ஒரே சிலையில் நால்வர்!
முன்வாசல் பக்கம் வந்ததும், கிளம்பலாமுன்னு  சூர்யாவுக்கு ஃபோன் செஞ்சால் சிக்னலே இல்லை.  நாலைஞ்சுமுறை முயற்சி செஞ்சு பார்த்துட்டுக் கோவிலுக்குள் போறோம். அங்கே அவர் நம்மைத் தேடிக்கிட்டு இருக்கார்!
மணி இப்போ பத்தேகால்தான். இன்னொரு இடம் பார்த்துட்டு லெமன்ட்ரீ போகலாம்.

தொடரும்......... :-)

PINகுறிப்பு:  நம்ம வீட்டில் ஜலசயனன்:-)

சாமி நம்மைப் பார்த்துக்கிட்டே இருக்கார்! ( நேபாள் பயணப்பதிவு 7 )

$
0
0
அடுத்த அரைமணி நேரப்பயணத்தில் கடைகள் அதிகமா இருக்கும் ஒரு பகுதிக்குள் நுழைஞ்சுருக்கோம். சூர்யா லாமா.... மேன் ஆஃப் ஃப்யூ வேர்ட்ஸ் என்பதால்.... வாயைப்பிடுங்கி சேதி வாங்கவேண்டி இருக்கு.  போதிநாத்/ போதாநாத் ஸ்தூபா வந்து சேர்ந்தாச்சு.  மெயின் ரோடில் இருக்கும் இன்னொரு தெருவுக்குள் நுழைஞ்சு நடக்கணும்.

கண் எதிரில் பிரமாண்டமான வட்டமான கட்டடம். நிலநடுக்கத்தின் பாதிப்பு இங்கே அதிகம். ஆனாலும் பழுதுபார்க்கும் வேலையை உடனடியாத் தொடங்கி இருக்காங்க.

உலகப்பாரம்பரியச் சின்னங்களில் சேர்க்கப்பட்டுருக்கு. உள்ளே போய்ப் பார்க்க ஒரு கட்டணம் உண்டு. நமக்கு ஆளுக்கு அம்பது ரூபாய். தெருவின் ஆரம்பத்துலேயே அலங்கார வளைவு வச்சு, அதன்பக்கத்துலே டிக்கெட் கவுன்ட்டர்.
இந்த வட்டமான அமைப்பை வலம் வர்றது முக்கியம். பரிக்ரமா என்று சொல்றாங்க. நெடுக ப்ரேயர் வீல் என்ற  அமைப்புகள். இதுலே ஒவ்வொன்னும் மந்திரங்களின் சக்தி நிறைஞ்சதாம். ஒருக்கா சுத்திவிட்டா   கோடி  மந்திரம் ஜெபிச்ச பலன். கண்ணில் பட்ட சக்கரத்தையெல்லாம் சுத்திக்கிட்டே போனேன்னு  உங்களால் ஊகிக்க முடியாதா என்ன? :-)

சுத்துச்சுவர் போலக்கட்டி அங்கங்கே ஜன்னலாட்டம் வச்சுருக்காங்க. சுவருக்கு அந்தாண்டை வரிசையா பிரார்த்தனைச் சக்கரங்கள். ஒவ்வொரு ஜன்னலுக்கும் அஞ்சுன்னு....  கம்பி வழியாக் கைநீட்டிச்   சுத்திவிடலாம். ஆச்சு அஞ்சு  கோடி. அடுத்த ஜன்னலில் வரவு இன்னும் ஒரு அஞ்சு  கோடி. கோடிகளைச் சேர்த்துக்கிட்டு நகர்ந்து போறோம்...  மொத்தம் நூத்தியெட்டு சக்கரம் இருக்குன்னு நினைக்கிறேன். உள்பக்கமாப் போயிருந்தாத்தான் என் வழக்கப்படி எண்ணி இருப்பேனே :-)

ஒருமுறை இதை வலம் வந்தாலே  செஞ்சபாவம் எல்லாம் தொலைஞ்சு போயிருமாம். ஒரு சமயம் ரொம்ப கெட்ட மனுசன் ஒருத்தன் இருந்தானாம். முகம் எப்பவும் கடுகடுன்னே இருக்குமாம். அன்பா ஒரு வார்த்தை வாயிலே இருந்து வராதாம். எதுக்கெடுத்தாலும் கெட்ட பேச்சு, அடுத்த உயிரை இம்சிக்கிறது, பொறாமை, ரொம்பவே சுயநலம்னு எல்லாக் கெட்ட பழக்கங்களும் சேர்ந்த ஒருத்தன் இவன். போற நேரம் வந்ததும் போய்ச்சேர்ந்தான். இவனுடைய குணத்துக்கு நேராப் போய் விழுந்தது நரகத்தில்தான். அங்கேதான் விசாரணை நடத்தி, நம்ம பாவபுண்ணியத்துக்குத் தகுந்தமாதிரி மேற்கொண்டு  தண்டனைகளோ, சௌகரியங்களோ கிடைக்கும். இவனுடைய குற்றப்பத்திரிகையை வாசிச்சு முடிச்சுத் தண்டனை  இதுன்னு சொல்லப்போகும் சமயம் அங்கே புத்தர் வந்துட்டார்.

இவனைப் பார்த்ததும், 'கடுமையான தண்டனை இவனுக்குத்  தேவை இல்லை. இவன் பாவி இல்லை'ன்னு சொல்லி இருக்கார். 'என்னடா இது....  இவன் பண்ணாத பாவமில்லை... இவனுக்குப்போய்னு....  தயங்கும்போது சொன்னாராம்... இவன்  போதாநாத் ஸ்தூபாவை  ஒரு முறை வலம் வந்துருக்கான்னு!  அதனால் செஞ்ச அத்தனை பாவமும் போயே போச்!

இவனுக்கே ஆச்சரியமாப் போச்சு. நரகம் இல்லைன்றது மகிழ்ச்சியான சமாச்சாரம் என்றாலும் கூட... அதைவிட தான் எப்போ ஸ்தூபாவை வலம் வந்தோம்னு  தெரிஞ்சுக்கலைன்னா மண்டை வெடிச்சுடும்போல இருக்கு. புத்தரிடமே கேட்டுட்டான்....   எப்பங்க நான் வலம் வந்தேன்னு?  அவர் சொல்றார்.... 'நீ ஒரு நாயைக் கல்லால் அடிக்கப்போனப்ப அது  ஸ்தூபாவைச் சுத்திக்கிட்டு ஓடுது. நீ விடாம அதை எப்படியாவது அடிக்கணுமுன்னு  அதன் பின்னாலேயே ஓடுனே பாரு.. அப்ப'னு!

ஆஹா....   இனி   நமக்கு நரகமே இல்லைன்னு எனக்கு நிச்சயமே ஆகிருச்சு. 'ஓம் மணி பத்மே ஹம்'னு மந்திரத்தை வேற சொல்லிக்கிட்டேக் கைக்கு ஆப்ட்ட   சக்கரத்தையும் சுத்திக்கிட்டே போய்க்கிட்டு இருக்கேன்!
இந்த ஸ்தூபாவின் விளக்கங்கள் எல்லாம் அங்கங்கே தகவல் பலகைகளாக வச்சுருப்பதால் நமக்குப் போற போக்குலேயே கொஞ்சம் தெரிஞ்சுக்க முடியுது.  பூட்டான்  நாட்டு புத்த மதத்தினர் கட்டுனது இது!

எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருக்கு. புத்தர்னு நாம் இப்போ சொல்றோமே அவர் மட்டும் புத்தர் இல்லையாமே....     அவர் காலத்துக்கு முன்னேயே  இருபத்தியெட்டு புத்தர்கள் இருந்துருக்காங்களாமே!   நமக்குத் தெரிஞ்ச கௌத்தமர் என்ற புத்தரைத்தான் சாக்கியமுனின்னு குறிப்பிடறாங்களோ? அப்ப நம்ம புத்தர் இருபத்தியொன்பதாவது புத்தரா?  அப்ப ஏன் முப்பதாவது புத்தர் இன்னும் அவதரிக்கலை....   புத்தமதத்துக்குள்ளே புகுந்து பார்க்க ஆசையா இருந்தாலும்.... அதுவும் ஒரு பெரிய சமுத்திரம் என்பதால்.... மூழ்கிப்போய் என்னையே தொலைச்சுருவேனோன்ற பயத்துலே கரையிலே நின்னுகிட்டே எதாவது தெரியுதான்னு பார்க்க வேண்டியதுதான்....  பெருமாளே.... எதுக்கு இப்படி என் மனசை அலைய விடுகிறாய்?


முந்திக்காலத்துலெ பூட்டானில் இருந்து காத்மாண்டு நிலப்பகுதிக்கு  வியாபாரம் செய்யன்னு வந்துபோய்க்கிட்டு இருந்த பூட்டான் பௌத்தர்களுக்கு இந்த ஸ்தூபா ரொம்பவே விசேஷப்பட்ட இடமா இருந்ததால் இங்கே அக்கம்பக்கத்துலேயே குடி இருப்பை ஏற்படுத்திக்கிட்டாங்களாம்.  அப்புறம் 1959லே சீனர்கள் திபெத்தைப் பிடிச்சு வச்சுக்கிட்டதும், அங்கிருந்து அகதிகளாக ஏகப்பட்ட திபெத்திய பௌத்தர்கள் காத்மாண்டு வந்து சேர்ந்ததும்...அவுங்களுக்கும் இது முக்கியமான வழிபாட்டுத் தலமா ஆகி இருக்கு!
நிறைய நாய்கள்  அதுபாட்டுக்கு  ப்ரேயர்வீலாண்டை கிடக்குதுகள். நம்ம சுத்தல் கோடிகளில் சில கோடிகள் அவுங்களுக்கும் போய்ச்சேரட்டும்..... பாவம்....



இந்த ஸ்தூபாவின் வெளியில் வளாகத்தின்  வெளிவட்டத்தில் நினைவுப்பொருட்கள், புத்தமத சம்பந்தமுள்ள  கலைப்பொருட்கள் இப்படி ஏராளமாக் கொட்டிக்கிடக்கும் கடைகள். கண்ணால் மட்டுமே பார்க்கணும் என்ற நிபந்தனை எனக்கு:-( பெரிய பெரிய யானைகளும் சிலைகளுமா....  சீச்சீ.... இந்தப் பழம் ரொம்பவே புளிப்பு......

வாங்க நாம் ஸ்தூபாவைப் பார்க்கலாம்.  ஏராளமான மணல் மூட்டைகளை அங்கங்கே வச்சுருக்காங்க. அதிர்வைத் தடுப்பதற்காக இருக்கலாம்.  ட்ரக்குகளில் இன்னும் மூட்டைகள் வந்து இறங்கிக்கிட்டே இருக்கு.
வலம் வந்துக்கிட்டு இருந்த நாங்க ஒருவாசலுக்கு வந்துருந்தோம். வாசலில் செக்யூடிட்டி  நிக்குது. உள்ளே போக அனுமதிக்கறாங்க. வாசலுக்கு முன்னால் இருக்கும் சந்நிதியில் மூணு பெண்கள் விளக்கேத்தி வச்சுக்கிட்டு இருந்தாங்க.


மேலே  மாடங்களில் சாமிகள், பக்கத்துலே மேடையிலே மணிகள்!  அங்கிருக்கும் சாமி சிலைகளில் எல்லாம் குங்குமம் பூசி வச்சுருக்காங்க. என்ன சாமி, யார்னு விவரம் ஒன்னும் இல்லை....  'பழுது பார்க்கும் வேலைக்கிடையில் பயணிகளைக்  குறைஞ்சபட்சம் உள்ளே விட்டதே அதிகம்.  இதுலெ விளக்கம்வேறு சொல்ல ஆளில்லைன்னு அழறே....'  கேட்டது மனத்தின் குரல்தான். கூடவே இன்னொன்னும் சொல்லுச்சு... உங்க நியூஸியிலே எர்த்க்வேக் வந்தாட்டு மூணுவருசம் சிட்டிக்குள்ளே யாருக்குமே அனுமதி இல்லாம மூடி வச்சது மறந்து போச்சா? இப்பக்கூட பழுது பார்க்கும் வேலை நடக்கும் இடத்தில் கால் வைக்க விடுவாங்களா என்ன? பாதுகாப்பு பாதுகாப்புன்னு பூச்சி புடிச்சுக்கிட்டு இருப்பதைப் பார்க்கறே தானே?  ஆமாம்னு ஒப்புக்கொள்ள வேணும்தான். கப்சுப்.....
ஒரு பெரிய அறையில் கூரையை எட்டிப்பிடிக்கும் அளவில் ரெண்டு ப்ரமாண்டமான ப்ரேயர் வீல் வச்சுருக்காங்க.  அதையும் சுத்திட்டோம்!  மேலே படிஏறிப்போய்  முதல் நிலை வரை பார்க்க முடிஞ்சது. நேரெதிரா இருக்கும் கட்டடத்தில்தான் கோவில் நடக்குது இப்போ.

கிண்ணத்தைக் கவுத்து வச்சாப்லெ இருக்கும் அமைப்புக்கு மேலே  சதுரமா இருக்கும் ஒரு அமைப்பு. இதுலே நாலு பக்கத்துலேயும் ரெவ்வெண்டு கண்கள்!
சாமி நம்மைப் பார்த்துக்கிட்டே இருக்கார்னு நாம் சின்னப்புள்ளைகளா இருந்தப்ப நம்ம தாத்தா பாட்டி சொன்னதை,  அப்போ நம்புனமாதிரி இப்பவும் நம்பணும்.  புத்தரின் கண்கள்! கண்களுக்கு இடையில்  கொஞ்சம் கீழே  கேள்விக்குறி போல ஒரு அடையாளம்.  மூக்கு இருக்கற இடம்? மூக்குன்னே வச்சுக்கலாம்:-) ஆனால் இது மூக்கு இல்லை(யாம்!)நேபாள மொழியில் எண் ஒன்று என்பதை இப்படித்தான் எழுதுவாங்களாம். நம்பர் ஒன்!  அப்ப அது ஒன்னுன்னு சொல்லுது! எது ஒன்னு? நாமெல்லாரும் ஒன்னு. ஒத்துமையைக் குறிப்பிட,  'ஒன்னாயிருக்கக் கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும் 'என்று சொல்லுது!
இந்த சதுரத்துக்கு மேலே இன்னொரு கோபுர அமைப்பு.  மேலே போகப்போக அளவு குறுகுதே தவிர நாலு பக்கமும் சதுரமாவே இருக்கும் பதிமூணு அடுக்குகள்.  இதுக்கு மேலே ஒரு தாமரை. அதுக்கும் மேலே ஒரு குடை. அப்புறம்  கடைசியில் எல்லாத்துக்கும் மேலே ஒரு கும்மாச்சின்னு  அடுக்கடுக்கா இருக்கு! இதை அழகா விவரிச்சு இருக்கும் ஒரு படம் கூகுளார் அருளினார். படத்தின் ஓனருக்கு நம் நன்றிகள்.

  நிலம், நீர், நெருப்பு, வளி , வான்  இப்படிப்  பஞ்சபூதத்தைக் குறிக்கும் அடையாளங்கள் கூட இதுலே இருக்காமே!!!

சரித்திரம் இப்படிச் சொல்லுதுன்னு  நம்ம கோபு சொல்றார்!   கோபாலராஜவம்சாவழியில் லிச்சாவி அரசர்கள் சிவதேவா, மானதேவா ஆட்சி காலத்துலே (அஞ்சாம் ஆறாம் நூற்றாண்டுகள்)போதிநாத் புத்தமதம் நிறுவப்பட்டதுன்னு!  அதுக்குப்பின் நாம் இப்போ பார்க்கும்  இந்த ஸ்தூபாவை பதினாலாம் நூற்றாண்டுலே கட்டி எழுப்பி இருக்காங்க.

பூட்டான் நாட்டுச் சரித்திரக்குறிப்புகளில் வேற வகையில், வேற காலக்கட்டத்தில் இன்னும் ஒரு நூற்றாண்டு தள்ளி கட்டுனதுன்னு இருக்காம்.

பூட்டான் நாடுன்னதும்  இது சம்பந்தப்பட்ட கதையொன்னும் வாசிச்சேன். ஒரு தேவதை, எதோ பாவம் செய்யப்போய் மனித உயிரா பூமியில் வந்து பூட்டானில் பிறந்துட்டாள். ரொம்ப சாதாரண எளிய குடும்பமாம்.  அவளுக்கு நாலு  கணவர்கள். ஒவ்வொரு கணவனிடத்திலும்  ஒரு பிள்ளைன்னு நாலு மகன்கள். (ஆஹா... பூட்டான் நாட்டுப் பாஞ்சாலி! ) இவள்தான் ஒரு காலத்துலே  இந்தக் கோவிலைக் கட்ட ஆரம்பிக்கிறாள்.  நாலுவருசமா வேலை நடக்குது. நாலாவது வருசம் முடிஞ்ச கையோடு இவளுடைய ஆயுசும் முடிஞ்சுருது. கட்டடம் இன்னும் பூர்த்தி ஆகாத நிலையில் இவளுடைய நாலு பிள்ளைகளும் சேர்ந்து இன்னும் மூணு வருசம் உழைச்சு இதைக் கட்டி முடிக்கறாங்க. ஆகமொத்தம் ஏழு வருசம் ஆகி இருக்கு இதைக் கட்டி முடிக்க!

இவுங்களுக்கு ஒரு நம்பிக்கை என்னன்னா....  மேலோகத்தில் இருக்கும் தேவர்களும், கடவுளர்களும்தான்   இந்த போதா ஸ்தூபாவில் புத்தமத லாமாக்களா அவதரிக்கிறாங்களாம். அப்போ  நம்ம சூர்யா லாமா?

ஸ்தூபாவின் மேல்பாகம் நிலநடுக்கத்தில் உடைஞ்சு போனதால் திரும்பப் புதுசாக்கட்டிக்கிட்டு இருக்காங்க. கட்டி முடிச்சுட்டாங்க போல... ஆனால் மக்கள் பார்வைக்குப் படாமல் திரை போட்டு வச்சுருக்காங்க. முழு வேலைகளும் முடிஞ்சு திறப்பு விழா நடக்கும்போது திரையை எடுத்துருவாங்கன்னு நினைக்கிறேன். அதுவரை புத்தர் உக்கார்ந்துருப்பார்!
நிலநடுக்கத்துக்கு முன்னால் இருந்த ஸ்தூபாவின்  இந்தப் படத்தை வலையில் இருந்து எடுத்துருக்கேன். கண்ணு தெரியுதோ?

கீழே இறங்கி வந்து எதிர்வரிசையில் இருக்கும் கோவிலுக்குப் போறோம். இடதுபக்கம் இருக்கும் ஒரு அறையில் பெரிய ப்ரேயர் வீல்!  உம்.... சுத்து சுத்து சுத்திக்கோ.....
மாடி ஏறிப்போகும் வழியில் சுவற்றில் புத்தர் கதைகள் பலதும் சித்திரங்களாக! மாடி ஹாலில் கோவில் ! அவலோகிடேஷ்வரா
  (Avalokiteshvara) இருக்கார். இவரை நம்ம தாய்லாந்து, பாலி, கம்போடியாப் பயணங்களில் தரிசனம் செஞ்சுருக்கோம்!
புத்தபிக்ஷுக்கள் பலர் வரிசையா உக்கார்ந்து  அவர்கள் வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இந்தக் கோவில்களில் வெளிநாட்டினருக்கும் அனுமதி உண்டு என்பதால் வெள்ளைக்காரப் பயணிகள் அதிகம் இருந்தாங்க.  படம் எடுத்துக்க தடை ஒன்னும் இல்லை.


ஸ்தூபா மாடியில் இருந்து இந்தக் கோவிலைக் க்ளிக்கியது  மாதிரி, இங்கிருந்தும் ஸ்தூபாவை க்ளிக்கினேன்.  பழுதுபார்க்கும் வேலைகள் மும்முரமாத்தான் நடக்குது. இன்னும் ஒரு வருசத்தில் வேலை முடிஞ்சுரும்போல!  செக்யூரிட்டிகளுக்குத் தனியா பந்தல் போட்டு வச்சுருக்காங்க, வெயிலுக்குப் பாதுகாப்பா!  அனாவசிய நாட்டாமை பண்ணாம எல்லோரும் அமைதியாத்தான் இருந்தாங்க.
கீழே பரிக்ரமா போகும் மக்கள் ஒன்னு ரெண்டுபேர்  அப்பப்ப வலம் போய்க்கிட்டு இருந்தாங்க. அப்பதான் நான் பாதியில் வலத்தை விட்டுட்டு எதிர்ப்பக்கம் வந்துட்டேனேன்னு தோணுச்சு. மீதி வலத்தை முடிச்சோம், சக்கரத்தைச் சுத்தாமல்....

ஒன்வே என்பதால் தெருமுனையில் வண்டியை நிறுத்தி இருக்காராம் சூர்யா லாமா. தேடிப்போய் ஏறி லெமன்ட்ரீக்கு வந்து சேர்ந்தோம். ப்ரகாஷ் இருந்தார்.  பயணத்திட்டத்தை  இன்னொருமுறை சரி பார்த்துப் புரிஞ்சுக்கிட்டு, பெரிய பெட்டிகளை அங்கேயே விட்டுட்டு ஆளுக்கு ஆறு கிலோ எடையுள்ள பைகளை  எடுத்துக்கிட்டு இதோ ஏர்ப்போர்ட்டுக்குக் கிளம்பியாச்சு.

எதிரே வரப்போகும் புது ஹொட்டேலில்  சின்ன  ஸ்தூபா கட்டும் வேலை  இன்னும் முடியலை :-)

தொடரும்..........:-)


அம்மனுக்குக் கோவம் வந்தாலும் ஊரே வெள்ளக்காடுதானாம்! ( நேபாள் பயணப்பதிவு 8)

$
0
0
நாம் நேபாளுக்கு வந்த காரணத்துக்கான பயணம் இதோ இந்த நிமிட்தான் ஆரம்பிக்குது:-) யேட்டி  (Yeti)ஏர்லைன்ஸ்லே நமக்கு டிக்கெட் போட்டுருக்கார் ப்ரகாஷ். உள்நாட்டுப் பயணிகளுக்கு ஒரு விலையும், வெளிநாட்டினருக்கு அதைப்போல ரெண்டு மடங்குமா இருக்கு. இந்தியர்களுக்கு அநேகமா உள்நாட்டுப் பயணிகளுக்கான சலுகை உண்டு.
ஏற்கெனவே  இது கொஞ்சம் ஆபத்தான பயணமுன்னு கேள்விப்பட்டதை நம்ம ப்ரகாஷ் உறுதிப்படுத்தினார். அதான் அப்பப்ப பத்திரிகையில் சேதி வருதாமே! இப்ப நாம் போக்ரா என்ற ஊருக்குப் போறோம். இங்கே  கார்லே  போக ஆறுமணி நேரம் ஆகுது.  போறவழியில் ரொம்ப அழகான இடங்கள் எல்லாம் பார்க்கலாமுன்னு கேள்வி. பஸ் போக்குவரத்தும் உண்டு. நேத்து நம்மை லெமன்ட்ரீயில் வந்து சந்திச்ச துர்கா, பஸ்ஸுலேதான் போயிருக்கார். நம்மை போக்ரா ஏர்ப்போர்ட்டில்  சந்திப்பார்னு  ஏற்பாடு.
காத்மாண்டு உள்நாட்டு முனையம் நம்முர் போலவேதான்... பஸ் ஸ்டாண்டு. நல்ல கூட்டம். குட்டிக்குட்டி விமானங்கள்  பல இடங்களுக்கும்  போய்வருது. செக்யூரிட்டி எல்லாம் ஒன்னும் பெருசா இல்லை. நம்ம ஃப்ளைட்  ஒன்னேமுக்காலுக்கு. டைம்டேபிள் சொல்ற டைமுக்கு இங்கே எதுவும் நடக்காதாம். எவ்ளோ லேட்டுன்னு தெரிஞ்சுக்கத்தான் அந்த டைம்டேபிள். நம்ம ப்ளேன் இன்னும் வந்தே சேரலை.  வந்துருச்சுன்னா அரைமணியில் கிளம்பிருமாம்.

இப்போ மணி ஒன்னரை. பகல் சாப்பாடு என்ன கிடைக்குமுன்னு பார்த்தால்.... ஒன்னும் எனக்கு சரிப்படலை. நம்மவர்தான் ஒரு வெஜிடேரியன் மோமோ  வாங்கிக்கிட்டார். பார்க்கவே ரொம்ப அழகா இருந்துச்சு.  கூடவே மஞ்சள் கலரில் ஒரு ஸாஸ், தொட்டுக்கன்னு  கொடுக்கறாங்க. பிரிச்சு வாயில் வச்சாரோ  இல்லையோ....    உச்சந்தலையில்  மிச்சம் மீதி இருக்கும் தலைமுடிகள் எல்லாம் அப்படியே நட்டுக்கறது.... காரமாம். கண்ணெல்லாம் சிவந்து,  கண்ணீர்  கரை கட்டுது.  இத்தனைக்கும் இது  வெரி மைல்ட்  !   நேபாளிகள் பயங்கரமா காரம் சாப்பிடறாங்க. ஆந்த்ரா காரம் எல்லாம் ஜூஜுபி :-)
அடுத்த வாய்க்கு, வாயே இல்லாமப்போச்சு. ஒன்னும் வேணாம். தண்ணி குடிக்கலாம். ராத்ரி வாங்கி வச்ச பிஸ்கெட் பாக்கெட் செக்கின்லே போயிருச்சேன்னு  இன்னொரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கிட்டேன். ஆளுக்கு ரெண்டு.   எல்லோரும் அவுங்கவுங்க போகும் ப்ளேன் வந்துருச்சா, வந்துருச்சான்னு எட்டிஎட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தோம். ஒருவழியா யேட்டி வந்து சேர்ந்து,  நாம்  நடந்துபோய்  உள்ளே  உக்கார்ந்தோம். ஸீட் நம்பரெல்லாம் கிடையாது. அவரவர் சௌகரியம்.  ஒருபக்கம் ஒத்தை வரிசையும் அடுத்தபக்கம் ரெட்டை வரிசையுமா இருக்கு. நாங்க ஒத்தை வரிசையில் உக்கார்ந்தோம். ஆளுக்கொரு ஜன்னல் :-)
ரெண்டு முட்டாய்,  சின்னதா ஒரு நிலக்கடலை பாக்கெட், ஒரு  அரை டம்ப்ளர் தண்ணி  கொடுத்தாங்க.யேட்டியை இன்னும் பார்க்கலையேன்னு புதுக்கவலை :-)    அரைமணி நேரத்துக்கும் குறைவான ஃப்ளைட்ன்னது நமக்கு முக்கால்மணி நேரம் எடுத்துச்சு. உயரம் குறைவாப்  பறக்கறதால் கீழே இருக்குமிடங்கள்  தெளிவா, அழகாத் தெரிஞ்சதுன்னாலும்....  மேகக்கூட்டம் முழுசா வந்து மறைச்சுக்கிட்டதுதான் அதிகம்.
 இளைஞர்(வயசு ஒரு 19/20 இருக்கலாம்) ஒருத்தர் குட்டியாக் கைக்கு அடக்கமான வீடியோ கெமராவை ஜன்னலில்  ஒட்டிவச்சுட்டு நிம்மதியா  வேடிக்கை பார்த்துக்கிட்டு வந்தார். அது எங்கே கிடைக்குதுன்னு விசாரிச்சேன். கொரியாவிலாம். காலேஜ் லீவு இப்போ. ரெண்டு வாரம் சுத்திப் பார்த்து மலை ஏற வந்துருக்காராம்.


போக்ராவில் இறங்குனதும்  பைகள் வரக் காத்திருக்கோம். பெல்ட் கில்ட்டெலாம் கிடையாது. அப்படியே வாரி வண்டியில் போட்டுக் கொண்டாந்து வச்சதும் நாம் கை நீட்டி எடுத்துக்கணும். துர்கா அங்கே நமக்காகக் காத்திருந்தார். இந்த விநாடி முதல் மறுபடியும் நம்மை இங்கே ப்ளேனுக்குள் ஏத்தும் வரை இவரே நமக்கு கைடு. பெர்ஸனல் கைடாக்கும்,
கேட்டோ :-)




ஹொட்டேல் மௌன்ட் வியூவில் தங்கறோம். ஓனர் நம்ம ப்ரகாஷின் நண்பர். அருமையான இடம் என்று நமக்கு ஏற்கெனவே  சொல்லித்தான் அனுப்பி இருந்தார் ப்ரகாஷ். இது கொஞ்சம் பெரிய ஹொட்டேல். ப்ராப்பர் ஹொட்டேல் கேட்டோ!  அருமையான வியூவோடு அறை கிடைச்சது.  இந்த ஊரே சுத்திவர மலைகள் இருக்க, அதுக்கு நடுவிலே இருக்கே:-)
ஊர் முழுக்கச் சுற்றுலாப் பயணிகள்தான்! முக்கால்வாசிப்பேர் இளைஞர்கள். எல்லோரும் மலை ஏற வந்துருக்கும் கோஷ்டி!  மூணுமணிக்கு  ஹொட்டேலில் செக்கின் செஞ்சு , ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு  மூணரைக்கெல்லாம்  கிளம்பியாச்சு ஊர்சுத்த:-)

காத்மாண்டுபோல வெயில் கொளுத்தாமல் இதமா இருக்கு என்பதால் நடந்தே போகலாமுன்னு முடிவு.  எங்கே பார்த்தால் ஹொட்டேல்களே!  கடைத்தெருவில் வேடிக்கை பார்த்தபடி நாம் போன இடம் ஃபேவா ஏரி.   வளாகத்தில்   சின்னதா   ஒரு    சிவன் கோவில்.
 Fewa Lake பிரமாண்டமான ஏரிதான்.   நீளம் 17 கிமீ. அகலம்  9 கிமீ.  மொத்தம் 4.43 சதுர கிமீ பரப்பளவு. தூரத்தில் ஒரு தீவு போல ஒன்னு. அங்கே ஒரு கோவில் இருக்கு. பராஹி இருக்காள். இவுங்களுக்கும் 'வ'வர்றதில்லை!  வராஹி அம்மன் கோவில். .  Thal Barahi   தால் பராஹி!

தால் ன்னு சொன்னால் அதுக்கு ஏரி என்று பொருள். நம்ம காஷ்மீர்லே பாருங்க  ஒரு ஏரிக்கே தால் லேக்குன்னு பெயர் நிலைச்சுப்போச்சு:-)  ஏரி ஏரி. வாட் இஸ் திஸ்? வாட் நேம் ஃபார் திஸ் லேக்?   யே தோ தால் ஹை.  ஓக்கே தால்!  தால்  லேக்!  குட்!    சரியா:-)

கோவில் இருக்கும் தீவு அப்படியொன்னும் ரொம்ப தூரத்தில், நட்ட நடு ஏரியில் இல்லையாக்கும்.  மிஞ்சிப்போனால் ஒரு  அரைக்கிமீ இருக்கலாம். ஆனால் படகில்தான் போகவேணும். இங்கே  இது ஒரு பெரிய பிஸினஸாக ஆகி இருக்கு. ரொம்ப ஆழமான ஏரி என்பதால் லைஃப் ஜாக்கெட் போட்டுக்கிட்டுத்தான் படகில் ஏறணும். இதுக்கு பத்து ரூ வாடகை வசூலிக்கறாங்க.



படகில்  கோவில்வரை போய் வர  ஒரு சார்ஜ், சும்மா மணிக்கணக்கில் வாடகைக்கு எடுத்துக்கிட்டு ஏரியைச் சுத்தி வர ஒரு சார்ஜ்ன்னு பலவிதமான சர்வீஸ்கள்.  சின்னப்படகு, பெரிய படகுன்னு  பல சைஸ்களில்  படகுகள். நாங்கள் போய்வந்தது பத்துப்பேர்கள் போகக்கூடியது. இதில் என்ன ஒரு  சௌகரியம்ன்னா....  கீழே படகுத்தரையில் காலை மடக்கி உக்கார வேணாம். பெஞ்சுலே உக்கார்றமாதிரி உக்கார்ந்துக்கலாம். அப்பாடா....   என் கால் முட்டி  தப்பிச்சது:-)
நேபாளிகளுக்கு  அம்பது ரூபாயும்,  வெளிநாட்டு  மக்களுக்கு ஆளுக்கு நூத்தியம்பது ரூபாயுமா டிக்கெட்டுக்குக் கொடுக்கணும். ஏற்கெனவே    மூணுபேர் உள்ள ஒரு குடும்பம் படகில் இருந்தாங்க. நாங்க மூணு பேர். அப்புறம் இன்னொரு  மூணுபேர் வந்து சேர்ந்தாங்க.  ப வடிவில் மூணு பெஞ்சு. ரெண்டு  படகுகளுக்கு மேல்  மரப்பலகைகளை  அடுக்கிக் கட்டி, அதுக்கு மேல் மூணுபக்கங்களில் பெஞ்சு. படகோட்டி, அந்த கீழே இருக்கும் படகுகள் ஒன்றில்  உக்கார்ந்து துடுப்புப் போட்டுக்கிட்டு வர்றார்! நம்மப் படகில் இருந்த பொடியன், காலியா இருக்கும் இன்னொரு படகில்  உக்கார்ந்து தண்ணீரை அளைஞ்சுக்கிட்டே வந்தான்.  குழந்தையா இருப்பது எவ்ளோ சுகம்!!!
ஒரு ஏழெட்டு நிமிசத்துலெ கோவில் படகுத்துறைக்கு வந்து சேர்ந்தோம்.  லைஃப் ஜாக்கெட்டைப் படகிலேயே விட்டுட்டுப் போகலாம்னு சொன்னது  மகிழ்ச்சி.


 படிகளில் ஏறி  கோவில்வளாகத்துக்குள் நுழைஞ்சோம்.  நல்லா சுத்தமாப் பராமரிக்கப்படும் இடம்.  நிறைய மரங்கள். அதைச்சுத்தி உக்கார்ந்துக்க வட்டமேடைகள்.  நமக்கு நடந்து போக சிமென்ட் பாதைகள். கோவில் பூஜைக்கான பொருட்கள் வாங்கிக்க ஒரு கடை.  கூடவே  வண்ணவண்ண பாசிமணிகள் விக்கறாங்க. என்றைக்குமில்லாமல்   இந்த மணிகள் மேல் எனக்கொரு காதல் வந்தது  இங்கேதான்:-)


இந்துக்கள் மட்டுமில்லாமல் ஏகப்பட்ட பௌத்தர்களும் இந்தக் கோவிலுக்கு  வர்றாங்களாம். அவுங்களுக்கும் இது முக்கிய வழிபாட்டுத் தலமாம்! நல்லது. ரொம்ப நல்லது.
வராஹி அம்மனுக்கு  ரெண்டு நிலைக் கட்டடம். பகோடா ஸ்டைல்.  சந்நிதியே நாலைஞ்சு படிகள் இறங்கிப்போகும் பள்ளத்தில் இருக்கு. வெளியே ரெண்டு பக்கமும் வாயிலே 'தீ நாக்கு'களோடு இருக்கும் சிங்க உருவங்கள்.  சந்நிதி வாசல் முகப்பில்  உள்ளே இருக்கும்  சாமியை விளக்கும் ஒரு டிஸைன். இங்கே எல்லாக் கோவில்களிலும் முகப்பில் இப்படித்தான்  ப்ரீவ்யூ இருக்கு.   இங்கே சந்நிதிக்குள் போக ரெண்டு படி ஏறி நிலைவாசலுக்குள் குனிஞ்சு  மூணு படி இறங்கணும்.


குங்குமம் அப்பிக்கிடக்கும் வராஹி  சின்னதா  செதுக்கிய    சிலைவடிவில்!  கொஞ்சூண்டு சந்தனம் கைகளில்.  ஒரு ப்ளாஸ்டிக் ட்ரே பக்கத்தில்  இருக்கு. விரும்பினால்   அம்மனுக்கு தக்ஷிணை கொடுக்கலாம்.  இடப்பக்கம் ஒரு தேங்காய். அவ்ளோதான் சாமி அலங்காரம்:-(    மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்று நம்பிக்கை!!  உள்வாசல்பக்கம் உக்கார்ந்துருக்கும் பட்டர்,  குங்குமமும் அரிசியும் கலந்து  குழைச்சு வச்சுருக்கும் பிரஸாதத்தை  ஒரு சிட்டிகை எடுத்து நம்ம நெற்றியில்  அழுத்தி ஒட்டவைக்கிறார்.
அம்மன் சிலை எத்தனை காலத்துப் பழசுன்னு கேட்டதுக்கு ஒரே சொல் சொன்னார், ப்ராச்சீன் !

 அப்டீன்னா....  ரொம்ப காலத்துக்கு முந்தி,  ஆதி காலம்!    ஒரு ராத்திரியில் இந்த ஊருக்கு  வராஹி  வந்துருக்காள்.  மனித உருவில் வந்தவள், ஊர் மக்களிடம் தனக்கு  அன்னம் அளிக்க வேணுமுன்னு கேட்க,  எல்லோரும் ஒன்னும் தராமக் கதவை சாத்திக்கிட்டாங்க. ஒரே ஒரு  ஏழைக்குடும்பத்தினர் மட்டும், 'ஐயோ  யாரோ ஒரு பெண் இந்த  அர்த்த ராத்ரியில் பசியோடு வந்துருக்காளே'ன்னு, தங்களிடம் இருந்த  சாப்பாட்டை  அவளுக்கும் பகிர்ந்து  கொடுத்து,  ராத்திரி தூங்க இடமும் கொடுத்துருக்காங்க.

காலையில் பொழுது விடிஞ்சு பார்த்தா, இவுங்க வீட்டைத்தவிர, ஊர் முழுசும் தண்ணீர் நிரம்பி  பெரிய ஏரியாக் கிடக்கு.    ராத்திரி வந்து சாப்பிட்டுத் தூங்குன பொண்ணைக் காணோம். அப்புறம்தான் தெரிஞ்சுருக்கு, வந்தவள் வராஹின்னு!  அவள் தூங்குன இடம்  தான்  இந்தக் கோவில். தங்குன வீடுதான் இந்தத் தீவு!

இப்ப ஏரியைச் சுத்தி வேற ஊர் உருவாகிருச்சுன்னு வையுங்க.
சாமி தரிசனம் முடிச்சுட்டுத் தீவைச் சுத்திப் பார்த்தேன். தேங்காய் உடைக்க தனி இடம்,  ஏரி மீன்களை 'தரிசிக்கும் 'இடம்னு இப்படி இருக்கு. காக்காய்கள் நிறைய !  நியூஸியில் காக்கா இல்லை தெரியுமோ? அதனால் நல்லாவே பார்த்தேன்:-)
புறாக்களும் ஏராளம். பறவைகளுக்குத் தீனி விக்கறாங்க. வாங்கிப்போட்டால் புண்ணியம்.  வளாகத்தில் காளிக்கு ஒரு சின்ன சந்நிதியும், புள்ளையாருக்கு கொஞ்சம் பெரிய சந்நிதியும் இருக்கு. ஆனால் மூடி இருந்துச்சேன்னு    கேமெராக் கண்ணை அனுப்பி புள்ளையாரை தரிசித்தேன்:-)
நம்மவரும் துர்காவும்   ஒரு  இடத்தில் உக்கார்ந்து  பேசிக்கிட்டு இருந்தாங்க.  இந்தத் தீவில் இறங்குனது முதல் மொத்த சுத்தலுக்கும்  அரைமணி நேரம்கூட ஆகலை.  பகல் நேரமா இருந்தால்  வெயிலுக்கு இதமா நிழலில்  உக்கார்ந்து    அமைதியான சூழலை  அனுபவிக்கலாம்.
நாம் இருட்டுக்கு முன்னே கொஞ்சம் மத்த இடங்களையும் பார்க்கணுமேன்னு   கிளம்பிட்டோம். வந்த படகிலேயே போக வேணும் என்ற அவசியமில்லை. பத்துப்பேர்  வந்ததும் படகு கிளம்பிரும்:-)
கூட்டம் வராததால் நம்ம படகு அங்கேயே நின்னுருந்துச்சு.   நம்மோடு வந்த பொடியன் குடும்பமும் வந்துருந்தாங்க.    இப்பப் புதுசா ஒரு பொடியளும் குடும்பமும் நம்ம படகில்! ஆறே நிமிட்லே கரைக்கு வந்து சேர்ந்தோம்.

தொடரும்.......... :-)




ஏரிக்கரை மேலே.... போறவரே ( நேபாள் பயணப்பதிவு 9 )

$
0
0
இப்பத்தான் ஹிந்தியில் எழுதி வச்சுருக்கறதைப் படிச்சேன். போக்கரா இல்லையாம்ப்பா. பொகராவாம்பா!  அச்சச்சோ...  இப்போ எல்லாத்தையும் மாத்தணுமா?  சனம் போக்ரான்னு சொல்லுது. அத்தையே ஃபாலோ பண்ணிக்கலாமா? 'ஷாந்தி பைதல் மார்க்'ஏரிக்கரை மேலேயே அதையொட்டியே நீண்டு போகுது.  வராஹி தரிசனம் முடிஞ்சதும் கரைக்கு வந்தவங்க.... அப்படியே அமைதியா(!) நடக்கறோம்  பீஸ் ஃபுட் ட்ராக்கிலே. Peace foot track
நம்ம வலதுபக்கம் முழுசும்  உணவுக் கடைகள், இடது பக்கம் முழுசும் ஏரியும் அதுலே  பொழுதுபோக்கிக்க உள்ள சாதனங்களுமா....  நீண்டு போகுது பாதை!






மூங்கிலை வச்சே விதவிதமான இருக்கைகள்.  கூடவே, விதவிதமான குடிக்கடைகள் :-) எனக்குப் பார்க்கவே அலுப்பா இருந்துச்சு. இங்கிருந்து  வெளியே சாலைக்குள் போக வழி இருக்கான்னு கேட்டதுக்கு இதோன்னு வலதுபக்கம் ஒரு ஒத்தையடிப் பாதையைக் காமிச்சார்.  அதுலே போனதில் பாதை நம்மை வெளியே தள்ளிருச்சு.



அங்கங்கே  வீடு வாசலில் உக்கார்ந்து கம்பளி நூல்களால்  பூனை, யானை வேலைப்பாடுகள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க பெண்கள்.

கடின உழைப்புக்கு  இவுங்களை எடுத்துக்காட்டா வச்சுக்கலாம்.


உண்மையான பேக் பேக் இதுதான்:-)





மெயின் ரோடில் நடந்து ஒரு  ரெஸ்ட்டாரண்டுக்குள் போனோம். உள்முற்றத்தில் உக்காரும் வசதி! மணி அஞ்சே முக்கால். டின்னருக்கு  இப்போ நேரம் சரி இல்லை.  காஃபிக்கு  ரொம்ப லேட்.  நடந்து வந்த களைப்பு தீரட்டுமேன்னு லஸ்ஸி சொன்னேன்.  மற்றவங்களும் அதையே சொன்னாங்க.

துர்காவிடம் இதுவரை சரியா ஒன்னும் பேசிக்கலை, அவரைப்பற்றித் தெரிஞ்சுக்கலையேன்னு விசாரிச்சால்  இவர் கைடுதான். ஆனால்.... என்னைப்போல சோதாவுக்கு  இதுவரை இல்லை! நாப்பத்தியஞ்சு கிலோ மூட்டையை முதுகில் சுமந்துக்கிட்டு  எவரெஸ்ட் பேஸ் கேம்புக்கு இளைஞர்களை கூட்டிக்கிட்டு போற  கைடு வேலை செய்யறார்னு  தெரிஞ்சதும் எனக்கு ஒரே அதிர்ச்சி! Trekking Guide at Himalaya Heart Treks & Expedition(P)Ltd.
நெசமாவா?
இல்லையா பின்னேன்னு அவர் செல்லில் இருக்கும் படத்தைக் காமிச்சார்!




 அட!  ஆமாம்.....

என்னத்துக்கு  இந்தம்மாவுக்கு கைடா வர்றோமுன்னு ஒரு வேளை நொந்துக்கிட்டும் இருக்கலாம்  :-)

ரொம்ப அதிராத இனிமையான பேச்சு. பொறுமை. வயசானவங்களைப் பார்த்துக்கறோமேன்னு ஒரு கூடுதல் கவனம்.... இதெல்லாம்தான்  துர்கா!




 
லஸ்ஸியை முடிச்சுட்டு இன்னும் சில கடைகளில் விண்டோ ஷாப்பிங் செஞ்சுக்கிட்டே வரும்போது மூணு வேஷ்டிகளைப் பார்த்தோம். வேட்டி தென்னிந்தியாவில்  நிறையப்பேர் கட்டுனாலும். கட்டி இருக்கும் தோரணையைப் பார்த்தவுடன் தமிழ்நாடுன்னு புரிஞ்சு போச்சு !  ரொம்பச்சரி நம்ம  அனுமானம்:-)
மருதைக்காரர்கள். முக்திநாத் போயிட்டு முதல்நாள் திரும்பி வந்துருக்காங்க. இன்றைக்கு இங்கே தங்கல்.  சங்கரநாராயணன் - மதுரை, பிச்சுமணி - தேனி, பாலசுந்தரம் -ஆண்டிப்பட்டி.  இவுங்க ஊரைக்கேட்டதும் நம்மவருக்கு பரம சந்தோஷம். என்ன இருந்தாலும் ஊர்ப்பாசம் போகுமா? இவர் போடிக்காரர் இல்லையோ:-) உடனே அவுங்களோடு சில க்ளிக்ஸ்.  எனக்கும்  நம்மவரோடு படத்துலே இருக்க இப்பச் சான்ஸ் கிடைச்சுருக்கு.  அதான் கூடவே ஃபொட்டாக்ராஃபர் இருக்காரே.... நம்ம துர்கா :-)
இங்கே ஸ்பெஷல்  சாப்பாடு என்னன்னு பாருங்க!  ஹைய்யா!!!!


ரொம்பப்பெரிய பெரிய மரங்கள் சாலையின்  ஓரத்தில்.  அங்கெல்லாம் மேடைகள் கட்டி விட்டு ஒவ்வொரு சாமிகளையும் வச்சுருக்காங்க.  வயசான மரங்கள்தான். ஆனாலும் பச்சைபச்சேர்னு பளிச்ன்னு  இருக்கு!
நல்ல அகலமான சாலைகள்!  எனக்கு இந்த ஊர் ரொம்பவே பிடிச்சுப் போச்சு!
மெதுவா நடந்து ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். மறுநாளையப் பயணத்திட்டத்தை இன்னொருக்கா பேசி முடிச்சோம்.
காலையில் அஞ்சு மணிக்கு ஏர்ப்போர்ட்டில் இருக்கணும். நாலுமணிக்கு எழுந்தால் சரியா இருக்கும். நாளைக்கு நாம் போகும் இடம் ஜொம்ஸொம் என்ற ஊர்.  இதுவும் ஒரு மலைப்பகுதிதான்.   உசரே ஒரு பள்ளத்தாக்கில் இருக்குமிடம். இந்த ஊருக்குப் போக ரெண்டு ஏர்லைன்ஸ் இருக்கு. நாம் போகப்போறது ஸிம்ரிக் ஏர்லைன்ஸ். இன்னொன்னு டாரா.

தினம் மூணு ஃப்ளைட் இருக்கு. எல்லாம் காலை நேரத்தில் மட்டும்தான். காலை ஆறேகாலுக்கு முதல் ஃப்ளைட் . வெறும் இருவது நிமிசம்தான் ஃப்ளைட் டைமே!  போய் வந்து  போய் வந்துன்னு  மூணுவாட்டி. ஆச்சு. அன்றைக்கான காந்தாயம். மூணாவது முறையா அங்கெ இருந்து கிளம்பறது காலை எட்டேமுக்காலுக்கு.   காத்தடிக்கும் பிரதேசமாம். அதுவும் காலை ஒன்பதாச்சுன்னா... அம்புட்டுத்தான்.... பேய்க்காத்து 'டான்னு'வந்துருமாம்.  அதுக்குமுன்னாலே இடத்தைக் காலி பண்ணிறனும். இல்லேன்னா  அது நம்மளைக் காலி பண்ணிரும்!   அதுகூட டைம் பார்த்து வச்சு சரியா ஒன்பதுக்கு அட்டன்டென்ஸ் கொடுக்குது பாருங்களேன்!!! ஆனா நாம   அதுக்கு முன்னாலே  போயிட்டு வந்துடணும் என்பதுதான் கணக்கு.

நமக்கு பொகராவிலிருந்து  போக ஆறேகால், ஏழேகால் எட்டேகாலுன்னு  மூணு ஃப்ளைட் இருந்தாலும்.... நிச்சயமாப் போகுமுன்னு சொல்லிக்க முடியாதாம். அதான் காலையில் முதல் ஃப்ளைட்டுலே போட்டுருக்காராம் நம்ம ப்ரகாஷ். அது போகலைன்னா ஏழேகாலில் கிளம்பும்(!) ரெண்டாவதிலாவது  இடம் கிடைச்சுரும். அதுவும் இல்லைன்னா இருக்கவே இருக்கு  எட்டேகால்.  அப்ப....  அதுவும் இல்லாமப்போச்சுன்னா?  பேசாம இங்கே இன்னொருநாள் தங்கிட்டு, மறுநாள் காலையில் ஃப்ளைட் பிடிக்க (!) முயற்சிக்கலாம்.

காத்து மட்டுமில்லை.... மழை பிடிச்சுக்கிட்டாலும் ஃப்ளைட் கேன்ஸலாகிரும். போனமாசம் தென்னிந்தியாவிலிருந்து  வந்த தம்பதிகள்  இப்படி ஒரு வாரம் பொகராவில் தங்கி இருந்தும்  ஜொம்ஸம் ஃப்ளைட் போகமுடியாமல் போயிருச்சு. முக்திநாத் தரிசனம் இப்படி அவுங்களுக்கு ரெண்டுமுறை மிஸ் ஆகிப்போச்சு. அடுத்த வருசம் திரும்ப வருவோமுன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்கன்னு ப்ரகாஷ் சொன்னதுலே இருந்து எனக்கு வயித்துலே புளி கரைச்சல்தான்:-(

பெருமாளே....   கொஞ்சம் தயை காமிச்சுருடான்னு மனசுக்குள்ளே புலம்பிக்கிட்டே இருந்தேன். பசுபதிநாத் கோவிலிலும்...  'மச்சான் தரிசனம் கிடைக்க வழிபண்ணுப்பா'ன்னு வேண்டுனதும் உண்மை!

சில சமயம் பேய்க்காத்து வரக்கூடாத நேரத்தில் வந்து விமானத்தைக்கொண்டுபோய் மலையில் இடிக்க வச்சு கூண்டோடு வைகுண்டம் அனுப்பி வச்சும் இருக்கு என்பதால்  அதிகக் கவனமாகத்தால் செயல்படுது இந்த விமான நிறுவனங்கள் எல்லாம்...

இப்படி எதாவது ஆகிட்டால்....   குறைஞ்சபட்சம்  நியூஸிஅரசு, மகளுக்கு  நம்மைக் கண்டுபிடிக்க உதவும் என்பதால்தான்   ஃபாரினருக்கு அதிகக் கட்டணங்கள் என்பதையும் பொருட்படுத்தலை.

இங்கே காலை ப்ரேக்ஃபாஸ்ட் நம்ம அறை வாடகையில் சேர்த்தி என்பதால்  கேட்டுக்கிட்டால் நாம் கிளம்பும் நேரத்துக்கு  பார்ஸல் பண்ணிக் கொடுத்துருவாங்கன்னு துர்கா சொன்னார். அட!  இப்படியும் செய்யலாமுன்னு நமக்கு இதுவரை தெரியாமப் போயிருச்சே!
வரவேற்பில் சொல்லி வச்சோம். 'ஸான்ட்விச்தான் செய்யமுடியும்.  சமைச்ச உணவு கிடைக்காதே'ன்னு  சொல்லிட்டு குறிச்சு வச்சுக்கிட்டாங்க.

சாப்பாட்டையும் சாமியையும் இங்கெல்லாம் குழப்பிக்கறதில்லை என்பதால்   வெஜிடபுள் ஸாண்ட்விச்ன்னு எழுதிக்கச் சொன்னேன். முக்திநாத் பயணம் முடிச்சுட்டுத் திரும்ப ஒருநாள் இங்கேயே வந்து தங்கணும். ஆனால் எப்போ வருவோமுன்னு சொல்ல முடியாது.... எல்லாம் ஓப்பன்  புக்கிங்தான்.

இதுக்குத்தான் பயணத்திட்டம் போடும்போது கூடுதலா ரெண்டுமூணு நாள் வச்சுக்கணுமுன்னு நம்ம  நண்பர் லதானந்த்  கூடச் சொல்லி இருந்தார். அதன்படியே நேபாளுக்கு ஒரு வாரம் னு திட்டம் போட்டுருந்தார் நம்மவர்.

ராச்சாப்பாட்டுக்கு  வெளியில்  போகவேணாமுன்னு  நினைச்சோம். ரூம் சர்வீஸில் எதாவது வாங்கிக்கிட்டுப் பொழுதோடு தூங்கப் போகணும். காலை நாலு மணிக்கு அலார்ம் சொன்னோம்.
நம்ம துர்காவும் இங்கேயேதான் தங்கறார்.  அவருக்கும் நல்ல ரெஸ்ட் வேணும். நாளை எப்படி இருக்கப்போகுதோ?

சப்பாத்தி, பருப்பு, ஜீரா ரைஸ் அறைக்கு வந்தது.

தொடரும்..........:-)


வீட்டுலே விசேஷமும், லீவு லெட்டரும்..........

$
0
0
அன்புள்ள நண்பர்களுக்கு  வணக்கம்.

மகளின் திருமணம் வரும் ஃபிப்ரவரி 4 ஆம்தேதி நடக்கவிருக்கின்றது. மறுநாள்  ஒரு திருமண வரவேற்பும் வைத்துள்ளோம்.

கல்யாண வேலைகளில் கொஞ்சம் பிஸி. ஊரில் இருந்து வரும்  உறவுகளுடன் கொஞ்சம் நியூஸியைச் சுத்திப் பார்க்கணும்.

ஹாஹா  பாருங்க.... எப்படியாவது பயணம் அமைஞ்சு போகுது :-)

டீச்சருக்கு ஒரு ஒன்னரை மாசம் லீவு வேணும்.

போனமுறைபோலவே  இப்பவும் சில பதிவுகளை எழுதி ட்ராஃப்ட் போட்டு வைக்கிறேன்.

வாரம் ஒன்னுன்னு வச்சுக்கலாம். ஓக்கே!

திருமண அழைப்பிதழ் இத்துடன்.



தங்கள் அனைவரது அன்பையும் ஆசிகளையும் வேண்டும்,

துளசியும் கோபாலும்.




ஜம் ஜம்முன்னு ஜொம்ஸம் போய்ச்சேர்ந்தோம்:-) ( நேபாள் பயணப்பதிவு 10 )

$
0
0
ராத்திரியெல்லாம் சரியாத் தூக்கமே வரலை. எங்கே தூங்கிப் போயிருவேனோன்னு அரைத்தூக்கத்துலே நினைச்சுக்கிட்டே இருந்து, தூங்கித்தான் போயிருக்கேன். அலார்ம் கால் நாலு மணி அடிச்சதும், சட்னு எழுந்து ரெடியாகிக் கீழே வந்தாச்சு. இந்தப் பயணத்துக்குன்னே கொண்டு வந்த ஷூக்களைப் போட்டுக்கிட்டு, செருப்புகளை மட்டும் பையில் எடுத்துக்கிட்டோம். ஆளுக்கொரு பை உண்டு. எனக்கு அது  என்  கேபின் பேக்:-) ஆனால் செக்கின் செஞ்சுடணும். துர்கா தயாரா இருக்கார்.  காருக்குச் சொல்லிட்டாராம். இப்போ வந்துருமுன்னு சொன்னார். மணி  அஞ்சுபத்து. நமக்கான ப்ரேக்ஃபாஸ்ட் பார்ஸல்கள்  டைனிங் ரூமில் ரெடி.  கார் வந்ததும் கிளம்பி ஏர்ப்போர்ட் வந்தோம். வாசல் கேட்டில் அரைத் தூக்கத்தில் இருந்த வாட்ச்மேன் வண்டிக்குள் டார்ச் அடிச்சுப் பார்த்துட்டுக் கேட்டைத் திறந்துவிட்டார். ஏர்ப்போர்ட் இப்படி இருந்தது :-)

எங்களை இறக்கிவிட்டுட்டு வண்டி போயிருச்சு. ஒரு அஞ்சு நிமிட் இருட்டுலேயே நின்னுக்கிட்டு இருந்தோம். அப்புறம் ஒரு செக்யூரிட்டி வந்து  கதவைத்திறந்து விளக்குப் போட்டுட்டு, நம்மை உள்ளே வந்து உக்காரச் சொன்னார். காலை அஞ்சரை இப்போ.  பெருமாளை வேண்டிக்கிட்டு 'கேசவா நாராயணா...'சொல்லிக்கிட்டே அப்பப்ப ஒரு க்ளிக்.    தேவுடு காக்கறது இப்படித்தான் :-) இன்னொரு பயணி வந்து சேர்ந்தார்.  அப்புறம் இன்னும் ரெண்டு பேர்ன்னு.... மலையேறும்  பயணிகள்.
முக்கால்மணி காத்திருந்தபின் கவுன்ட்டர் ஆள் வந்து செக்கின் செஞ்சு போர்டிங் பாஸ் கிடைச்சது.  பெட்டி, பைகளையெல்லாம்  எடை பார்த்துட்டு, நம்மையும் தனித்தனியா எடை போட்டுப் பார்த்து  எழுதிக்கறாங்க.  ஒருத்தர்  ஸ்கேலில் ஏறி நிக்கும்போது  பணியாளர், எவ்ளோன்னு பார்த்துட்டுச் சத்தமா  அதை உலகுக்குக்கே அறிவிக்கிறார்!  ஐயோ... இது என்னடா எனக்கு வந்த சோதனை.....  அதுவும் டிஜிட்டல் ஸ்கேல் கிடையாது. ரயில்வே ஸ்டேஷனில் இருக்குமே அதைப்போல முள்ளு காமிக்குது.  அவரும் எல்லாத்தையும் ரவுண்ட் பண்ணிச் சொல்லிக்கிட்டு இருக்கார்.  குறிப்பிட்ட எடைக்கு மேல் விமானத்தில் ஏத்தக்கூடாதாம்.  'பீலிபெய் சாகாடும்  அச்சிறும் அப்பண்டம்... .....'
பைகளை உள்ளே அனுப்பிட்டு உக்கார்ந்துருக்கோம். உள்ளே அனுப்பறதுன்னா....   பைகளுக்கு டேக் போட்டு கவுன்டருக்கு முன்னால் குவிச்சு வச்சுட்டுன்னு பொருள்:-)
என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வரேன்னு துர்கா போனார். அப்ப ஒரு ஆள் வந்து மாடியில் ரெஸ்ட்டாரண்ட் திறந்துட்டாங்கன்னு  சொல்லிட்டுப்போனார்.  காஃபியாவது  குடிச்சு வைக்கலாமேன்னு துர்காவைத் தேடிப்பிடிச்சுக்  கூப்பிட்டுக்கிட்டு மாடிக்குப் போனோம்.  மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் முழு விமானதளமும் தெரியுது. இங்கேயும் இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. ராத்திரி பெய்ஞ்ச மழையில் எல்லா இடமும் ஈரம்.


மற்ற பயணிகளும் இப்போ மாடிக்கு வந்துட்டாங்க. நம்மவர்தான்   ப்ரேக்ஃபாஸ்ட் பார்ஸலைத் தூக்கிட்டு  அலைய வேணாம். இப்பவே சாப்புட்டுடலாமுன்னு சொன்னதும், என் பார்ஸலை துர்காவுக்குக் கொடுத்துட்டேன். இன்னொரு பாக்ஸைத் திறந்து  நாங்க ஷேர் பண்ணிக்கிட்டோம். ஸாலட் ஸாண்ட்விச். ஜூஸ், ஆப்பிள், வாழைப்பழம் வச்சுருந்தாங்க. எல்லாம் இதுபோதும் போ..... காபி மட்டும் கப்புச்சீனோ கிடைச்சது!    இங்கே எல்லா இடங்களிலுமே கப்புச்சீனோ நல்லாவே இருக்கு. ஃபில்ட்டர் காஃபின்னா...  கடுங்காப்பிதான்.
இதுக்குள்ளே காலையில் போகும் மூணு ஃப்ளைட் மக்களும் வந்து சேர்ந்துட்டாங்க. ஏழே முக்காலுக்கு  விமானத்தை நடத்தி வந்து நிக்க வச்சு அதுக்கு சாப்பாடு போட்டு முடிச்சு, ஏர் ஹோஸ்டஸ் 'வந்து கேறிக்கோ'ன்னு  கையாட்டுனாங்க. நாங்கதான் ஸிம்ரிக்கையே பார்த்துக்கிட்டு இருந்தோமே.... விடுவிடுன்னு  நடந்து போனோம்.
பிநோக்கியோ மாதிரி நீள மூக்கு ஸிம்ரிக்குக்கு:-) மொத்தம் 18 ஸீட். பக்கத்துக்கு எட்டுன்னு ரெண்டு வரிசை.   இன்னொரு இந்தியக் குடும்பம் இருந்தாங்க . ...  பாலக்காட்டு மும்பைவாலாஸ்.

நான் கடைசியா உள்ளே ஏறுனதாலே கடைசி வரிசை வலப்பக்கம் ஒன்னும் இடப்பக்கம் ஒன்னுமா காலி. ஏர்ஹோஸ்டஸ் கிட்டே எந்தப்பக்கம் உக்கார்ந்தால்  மலைச்சிகரங்கள்   நல்லாத் தெரியும்னு கேட்டால் ரெண்டு பக்கமும் பார்க்கலாம். இடப்பக்கம் நல்லதுன்னு சொன்னாங்க. சரின்னு உக்கார்ந்துக்கிட்டு ஜன்னல்வழியாப் பார்க்கிறேன்.... துர்கா ஓட்டமும் நடையுமா வர்றார். அவருக்கு வலப்பக்க இருக்கை.
வால்பக்கம் சின்ன இடத்துலே  தீனி சப்ளைஸ் வச்சுக்கிட்டு ஏர்ஹோஸ்டஸ் உக்காரணும். அங்கே ஜன்னலே  கிடையாது. அப்ப எந்தப்பக்கம் காட்சிகள் நல்லாத் தெரியுமுன்னு எப்படித் தெரிஞ்சதாம்? எல்லாம் ஒரு யூகம்தான் :-)

ஹோஸ்டஸ் சொல்மா, தில்லியில் கொஞ்சநாள் இருந்தாங்களாம். அப்பா  இண்டியன் ஆர்மியில் இருக்கார். இந்தியா ரொம்பவே பிடிக்குமாம். எல்லோருக்கும் முட்டாய் கொடுத்தாங்க. அம்புட்டுதான்.  'ஏன் ஃப்ளைட் டிலே'ன்னு கேட்டதுக்கு  சிரிச்சுக்கிட்டே... 'பைலட் வரலை. தூங்கிட்டாராம். அவரை எழுப்ப ஆள் போய் கூட்டியாந்தாங்க'ன்னு சொன்னாங்க. இப்ப ஜொம்ஸம் போய் திரும்பி வந்துட்டால் ட்யூட்டி முடிஞ்சதாம்.  இன்னிக்கு ஒரே ஒரு ஃப்ளைட்டோடு  முடிச்சுக்கறாங்க. இன்னும் கொஞ்சம் லேட்டாகி இருந்தால் எல்லாமே கேன்ஸல்தான்.  ஒன்பதுக்குள்ளே திரும்பி வர்றது கஷ்டமாப் போயிருமுன்னு சொன்னாங்க. இப்பவே மணி எட்டடிக்கப் போகுது.  வெறும் இருவது நிமிட் பறக்க இத்தனை கலாட்டா....


கண்ணில்பட்ட காட்சிகளையெல்லாம் க்ளிக்கிக்கிட்டே வந்தேன். வலது பக்கம் நல்லா இருக்கும் காட்சிகளுக்காக  துர்காவுக்கு அப்பப்ப நம்ம கேமெரா கை மாறிக்கிட்டு இருந்துச்சு. அன்னபூரணா மலைத்தொடர்களும் சிகரமும் கண்கொள்ளாக் காட்சி!!  தவளகிரி சிகரமும் சூப்பர்!  என் செல்ஃபோன் கேமெரா நல்லா எடுக்குதுன்னு  நம்மவர் அதுலே க்ளிக்கிட்டு வந்தார். பாருங்க பதிவுக்காக எப்படியெல்லாம் எனக்கு உதவறார்னு!!!  (இந்தப் பயணப் பதிவின் ரெண்டாம் பகுதியில் நம்ம நெல்லைத் தமிழன் சொன்ன மச்சபுச்சரே சிகரம் இப்பதான்  வருது! )  





நீல்கிரி மலையடிவாரத்தில் இருக்கும் ஜொம்ஸொம் ஏர்ப்போர்ட்டில் விமானம் இறங்குது.  உடனே அதுலே கிளம்பிப்போக  தயாரா நிக்குது சனம்.  இந்தப் பள்ளத்தாக்குலே காத்து வந்து சேருமுன் தப்பிச்சுப்  போகணுமே.... அவுங்க!


நீல்கிரியில்  பனி படர்ந்து அழகா இருக்கு!  விடமுடியுமோ? க்ளிக் க்ளிக்....

நீலகிரியுடே  சகிகளே... ஜ்வாலா முகிகளே.....   (பாட்டுதான்.... பழைய படம். பணித்தீராத்த வீடு!  மலையாளம்.  நஸீரிண்டே சூப்பர்ஹிட் மூவி,  கேட்டோ! )











பைகளையும் பொட்டியையும்  கொண்டுவந்து  ஏர்ப்போர்ட் கட்டடத்தின் ஒரு பக்கம் இருக்கும் பெஞ்சுலே வரிசையா வச்சாங்க பணியாட்கள். நம்மதை எடுத்துக்கிட்டு வெளியே போறோம். வாசலில் வலதுபக்கம் திரும்பி நடக்கறார் துர்கா.  கற்கள் பதிச்ச சாலை.  ரெண்டுபக்கமும் ஹொட்டேலும் கெஸ்ட்ஹௌஸுமா ஏராளம்! அநேகமா எல்லாமே ரெண்டடுக்குகள்.

இந்த ஊர்  கடல்மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் அடி உசரம்.  மலைப்ரதேச நாய் கூட  அடர்த்தியா ரோமத்தோடு இருக்கு. முகம்கூட நேபாளி முகமோ? டூரிஸ்ட் நடமாட்டம் பழகிப்போச்சு என்பதால்  குரைக்கக்கூட இல்லை.  இப்பதான் நினைவுக்கு வருது....  அங்கே நிறைய நாய்க்கூட்டத்தைப் பார்த்தாலும் குரைக்கிற சத்தம் கேக்கவே இல்லையே.....  குளிரில்  குரல் அடங்கிப்போச்சோ...

காய்கறி பழங்கள் விற்கும் கடைகள் ஒன்னுரெண்டு.  ஆப்பிளைத்தவிர வேற பழங்களைக் காணோம். ப்ச்....
சாலை  அழகு , கண்ணுலே ஒத்திக்கலாம் போல .....   ஆனால் கண்ணைக்குத்திரும் :-)
'ஹொட்டேல் ஹிமலயன் இன்'நாம் தங்கப்போற இடம்!  வைஃபை இருக்காம். ஆஹா.... பேஷ் பேஷ் :-)வாசலில் ரெண்டுபக்கமும் திண்ணைகள் வேற!!!!  ஆஹா ஆஹா.... முக்கியமான குறிப்பு  இந்த ஹொட்டேலில் குழந்தைத் தொழிலாளர்கள் கிடையாது!! வெளிநாட்டு டூரிஸ்ட்டுகள்  கவனிக்கறாங்க என்பதால் ஏற்பட்ட முன்னேற்றம். (  இவுங்க குழந்தைகள் எல்லாம் இந்தியாவில் குறிப்பா சென்னையில் வேலை செய்யுதோன்னு எனக்கொரு சம்ஸயம். )



துர்கா  போய்  வரவேற்பில் பேசிட்டு  இடுக்கமா இருக்கும் படிகள் வழியே மாடிக்குக் கூட்டிப்போனார். டைனிங் ஏரியா. இன்னும் நமக்கான அறைகள் ரெடி ஆகலையாம். பெட்டி பைகளை வச்சுட்டுப்போய்   உங்க வேலைகளைக் கவனியுங்க. அறை தயாரானதும் அதுலே கொண்டு வைக்கிறேன்னு  பெருக்கித் துடைச்சுக்கிட்டு இருந்தம்மா சொன்னாங்க.  அது சரி. ஆனால் எந்த அறை நமக்குன்னு தெரிஞ்சுக்கணும் என்றேன். துர்கா போய்  வரவேற்பில் நமக்கு ஒதுக்கப்போகும் அறை எண்ணைக் கேட்டுக்கிட்டு வந்தார். அதைப் போய்ப் பார்த்தோம். பரவாயில்லை.  இங்கே எல்லா ஹொட்டேல்களிலும் இப்படி சுமாராத்தான் இருக்கும். ரொம்ப வசதி எதிர்பார்க்கமுடியாதுன்னார் துர்கா. உண்மைதான். ஒரு இரவுதானே தங்கப்போறோம். சமாளிச்சுக்கலாம்னு சரின்னுட்டேன்.

நிறைய செடிகளைத் தொட்டியில் வச்சுருக்காங்க. நியூஸி மணி ப்ளான்ட் கூட இருக்கு! அநேகமா எல்லாச் செடிகளும் இங்கே நியூஸியில் இருக்கும் வகைகள்தான்.  இதில் பலதும் நம்ம வீட்டுலேயே இருக்கு. பார்த்தவுடன்  எனக்கு ரொம்ப ஹோம்லியான ஃபீலிங்ஸ் வந்தது உண்மை :-)

மணி எட்டேமுக்கால்தான் ஆகுது. நான்போய் முக்திநாத் போக வண்டிக்கு ஏற்பாடு பண்ணிட்டு இப்ப வரேன்னுட்டு போனார் துர்கா. நாங்க ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு,  ரெடியாகி திண்ணையில் போய் உக்கார்ந்து வேடிக்கை பார்த்தோம்.  நம்மவர் கையில்  சின்ன back pack.  தண்ணீர் பாட்டில்,  கொஞ்சூண்டு தீனிகள் (நியூஸியில் இருந்து கொண்டுபோன ம்யூஸ்லி பார்கள்) முக்கியமா என்னுடைய இன்ஹேலர்.  இன்னொரு இன்ஹேலரும்,  கேமராவுக்கான எக்ஸ்ட்ரா பேட்டரியும் என் ஜாக்கெட் பையில்.

வாசலில் வந்து நின்ன வண்டி ட்ரைவரிடம் என்னமோ கேட்டுட்டு வந்த துர்கா,  இன்னொரு வண்டியைக் காமிச்சு அதுலே நாம் போறோமுன்னு சொன்னதும் போய் ஏறிக்கிட்டோம். ரொம்ப உயரமான படி. ஏறி உக்கார கஷ்டமாப் போச்சு.  நாலு கட்டடம் தள்ளி வண்டியை நிறுத்தினதும், துர்கா கீழே இறங்கிப்போனார். இது செக்போஸ்ட்.  போலிஸிடம் அனுமதி வாங்கிக்கணுமாம்.


அப்போதையக் காலநிலை, மற்ற விவரங்கள் எழுதி வச்சுருக்காங்க. 12 டிகிரி த ற்சமயம் :-)

இதே வண்டி குறுக்குப் பாதையில் கண்டகியைக் கடந்து நேரே முக்திநாத் போகுமுன்னு  சொன்னதும் எனக்கு மனசுக்குள்  பெருமாளைப் பார்க்கப்போறோம் என்று  உற்சாகமாகவும் அதேசமயம்.... பெருமாளே  நல்ல தரிசனம் கொடுன்னு வேண்டும்போது,  சட்னு கண்ணீர் எட்டிப் பார்த்துக்   கொஞ்சம் உணர்ச்சிகரமாவும் இருந்துச்சு.

கேசவா நாராயணா கோவிந்தா......


தொடரும்........  :-)


அம்மு கல்யாண வைபோகமே.......

$
0
0
எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரின் அன்பும் ஆசிகளும் நிறைந்து இருந்ததாலும் மகளின் திருமண வைபவம் நல்ல முறையில் நடந்தது.

அனைவருக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்.

சிலபலப் படங்களை  இத்துடன் இணைத்துள்ளேன்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள்,  விருந்துகள் ஆகியவற்றின்  அஃபீஸியல் படங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

வந்தவுடன் வலையேற்றினால் ஆச்சு, இல்லையோ? :-)

மகளின் திருமணப்  படங்கள்

  கல்யாண ஹால் !






 மணவறை

 மாப்பிள்ளையும் மாப்பிள்ளைத் தோழர்களும், கல்யாணம் நடத்தி வைக்கும் பண்டிட்டும் :-)
 பொண்ணு வூட்டுக்காரர்கள் :-)
 மாப்பிள்ளை வூட்டுக்காரர்கள் :-)

 Flower girl  & Page boy :-)

 முஹூர்த்த நேரம் வந்தாச்சு.... சீக்கிரம் பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ  :-)
 மணமகளின் தோழிப்பெண்கள்,
  இந்தப் பையனை / பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க சம்மதமா?
  மோதிரம் மாத்திக்குங்கோ !!!
 Newly married with Flower girl and page boy!
 Bride's Parents
 Groom's  பாட்டி ( அப்பாவின் அம்மா)
 மணமகனின்  பெற்றோர்களுடன்
 ரெண்டு குடும்பமும் !
 மணமகளின் மாமா & மாமியுடன் :-)
 யாரோ?

 ரெண்டு குடும்ப அங்கங்களுடன் :-)
 மணமகளின்  பாடல் குழு.  World women's choir group

 மணமகனின் நண்பர்களுடன்.....
 மாப்பிள்ளைத்தோழர்களின்  மறுபாதிகளுடன் !
 குடும்ப நண்பர்களுடன்
 நம்ம இந்திய நண்பர்களுடன்!

திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள்.

கண்ணா..... உங்க ஆயர்பாடியில் இப்படியா தயிர் கடைவீங்க? ( நேபாள் பயணப்பதிவு 11)

$
0
0
காலி கண்டகி நதின்னு பெயர் . கருப்பு நிறமா இருப்பதால் 'காலி'. ஆத்துக்கு அந்தாண்டை போக  சின்னதா ஒரு பாலம் இருக்கு. மலையேறும் மக்கள் அந்தப்பாலத்தைக் கடந்து போறாங்க. ஊர் எல்லையைக் கடந்து  பொட்டல்காடா இருக்கும்  ஆற்றுப்படுகை வந்துருந்தோம். அங்கங்கே குதிரைகள் மேய்ஞ்சுக்கிட்டு இருக்கு!

மணலும் கல்லும் கொஞ்சூண்டு தண்ணீருமா இருக்குமிடத்தில்   ஜீப் ஆற்றுப்படுகையில் இறங்குச்சு.   ஒரு  பத்திருபது மீட்டர் தூரம் போறதுக்குள்ளே   வண்டியின் கதவு உசரத்துக்குத்   தண்ணி. அப்படியே கதவைத் தள்ளுது. நம்ம ஜீப்பும் தண்ணியின் வேகம் தாக்குப்பிடிக்க முடியாம தண்ணீரோடு  போகுது. ப்ரேக்கை அழுத்துனாக் கூட வேலைக்காகலை.  நமக்கு  கண்டகியில் ஜலசமாதிதான் போல.
ட்ரைவரிடம்  நேபாளி மொழியில் , கரைக்கு வண்டியைத் திருப்பிடச் சொல்றார் துர்கா.  ட்ரைவர் ஒரு சின்னப் பையந்தான்.  இருவது வயசுருக்குமோ என்னவோ.... நேத்துப்போனேன் , நேத்துப்போனேன்... இன்னும் கொஞ்சதூரம்தான்  அந்தாண்டை போயிட்டால்  ஆழமில்லைன்னு சொல்றானாம். வண்டியைத் 'திருப்பு திருப்பு'ன்னு  ஹிந்தியிலும் நேபாளியிலும், இங்லீஷிலும் ஆளாளுக்குக் கத்திக்கிட்டு இருக்கோம்.  இந்தக் கத்தலில் கேமெராவை க்ளிக்க மறந்துபோயிட்டேன்:-)
கஷ்டப்பட்டு வண்டியைத் திருப்பிக் கரைக்குக் கொண்டுவந்தார் ட்ரைவர் பையர். அப்புறம்  எங்களை வரும்போது பார்த்த மரப்பாலம் வரை கொண்டுபோய் விட்டுட்டு மன்னிப்பும் கேட்டுக்கிட்டுப் போனார்.

 இன்னொரு காங்க்ரீட் பாலம் கட்டும் வேலை நடக்குது. ஆனால் பாதிப்பாலம் தான் முடிஞ்சுருக்கு. மீதி?  எப்ப வருமுன்னு தெரியாதாமே!
மரப்பாலம் கடந்து போறோம். கண்டகி நதி எங்கே  காலாவா இருக்கு? வெளிறிப்போய் அடிச்சுக்கிட்டு ஓடுது.  'மழை  நல்லாப் பேய்ஞ்சுருக்கும் மலையில்னு' துர்கா சொன்னார்.


இது ஒரு சரித்திரத்தில் இடம் பெற்ற பாலம். நூறு வருசத்துக்கும் மேலே பழசு.  ரொம்ப பலஹீனமா இருக்காம் இப்போ. அதனால் ஒரு சமயத்தில் ஒரே ஒரு மோட்டர்பைக், இல்லேன்னா ஒரு குதிரை,  அதுவுமில்லேன்னா ஒரே ஒரு கோவேறுக் கழுதை கடந்து போகலாம். ஒன் அட் அ டைம். மனுசர்?  ஒரே சமயத்துலே அஞ்சு ஆட்கள் நடந்து போகலாமாம் !  (அஞ்சா? அப்ப ஒல்லிக்குச்சி உடம்பா இருக்கணுமோ?)

அறிவிப்பு போட்டு வச்சுருக்காங்க.  நாங்க மூணு பேர் என்பதால் நிதானமா பயமில்லாமல் நடந்து போனோம்.
பாலம் முடிஞ்சு ஒரு சின்ன கிராமம். சந்து போல ஒரு பாதை. கல் பாவியதுதான்.  ரெண்டு பக்கமும் தங்கும் விடுதிகளும்,  ரெஸ்ட்டாரண்டுகளும், ஹொட்டேல்களுமா இருக்கு. ரிவர் வ்யூ! விடமுடியுதா?   ஒரு  500 மீட்டர் நடை இருக்கலாம். அது முடிஞ்சு ஒரு பெரிய  பரந்த வெளி.




ஒரு பக்கம் பெரிய புத்த மடாலயம்.  இந்தாண்டை  முக்திநாத் ட்ரான்ஸ்போர்ட் ஆஃபீஸ் :-) இங்கேதான் முக்திநாத்  போக ஜீப் எடுக்கணும். உள்ளுர் மக்களுக்கு  ஒரு சார்ஜ். வழக்கம்போல் வெளிநாட்டு மக்களுக்கு  டபுள், சிலசமயம் ட்ரிபிள் சார்ஜ்.  நம்மிடம் இருபத்தி ஆறாயிரம் ரூபாய் கட்டச் சொன்னாங்க. இது ஒரு ஜீப்புக்கான போகவர உண்டான சார்ஜ்.  இங்கே நம்ம பாஸ்போர்ட் காப்பி, எத்தனை பேர் போறோம் , அவர்கள் பெயர்கள், வயசு விவரங்கள் தரணும். பக்காவா ரசீது கொடுத்துட்டு, நமக்கான ஜீப் எண், ட்ரைவர் பெயர் எல்லாம்  அதுலே எழுதி ஸ்டாம்பு அடிச்சு (பர்மிட்)  ஜீப் ட்ரைவரைக் கூப்பிட்டு அவரிடம் நம்மை ஒப்படைக்கிறாங்க.
எதாவது அசம்பாவிதம் ஆனால் அப்போ'யாரு என்ன ஊரு'ன்னு அலையவேணாம் பாருங்க!  இது இந்த ஜொம்ஸொம் டவுன்(!) கவுன்ஸிலும், மஸ்டாங் ஜில்லாவும் நேபாள் அரசும் சேர்ந்து செய்யும் ஏற்பாடு. துர்கா எல்லாம் சரியாக்கி வரும்வரை புத்தமடாலயத்துக்குள்  போய் வரலாமான்னு நினைச்சேன். அதுக்குள்ளே நம்ம வண்டி ரெடியாகிருச்சு.   இந்த டிரைவரும் இளைஞர்தான்.  இளங்கன்று பயமறியாது என்பதைத் தெரிஞ்சு வச்சுருக்காங்களோ!
தார் ரோடு என்ற  நாமதேயமே இல்லை. கரடுமுரடான  கல்லும் மண்ணுமா இருக்கும் சாலை. அகலமும் அதிகமில்லை.  பெருமாளேன்னு இதோ கிளம்பிப்போய்க்கிட்டு இருக்கோம். மலைப்பாதை என்பதால் மெள்ளமெள்ள உயரம் அதிகமாகிக்கிட்டே  போகுது.  மருந்துக்குக்கூட செடிகளோ, பசுமையோ இல்லாத மலைகள். இந்த வழுக்கையான இடங்களில் பனி காலத்தில் பனிமழை பெய்து   வழுக்கையை மறைச்சுரும்.  வெள்ளை விக் போட்டுக்கிட்டமாதிரி. எஸ் மை லார்ட் :-)  இப்பவும் நியூஸியில்  கோர்ட்டில்  ஜட்ஜ்மார்  இப்படித்தான்....   ஓக்கே... யூ கேன் ப்ரொஸீட்  ! 

 இங்கெ நம்ம நியூஸியிலும்  மொட்டை மலைகளைப் பனிகாலத்தில் பார்க்கணுமே....  பனி தங்கி இருக்கும் இடம் என்பதால் இங்கே ஒன்னுமே முளைக்காது. தப்பித்தவறி இண்டு இடுக்கில் எதாவது தாவர உயிர், புல்லோ பூண்டோ இருந்தாலும் குளிர் ஆரம்பிச்சவுடன் மண்டையைப் போட்டுரும். மலைகளில் மட்டும்தான் இப்படி.  கீழே நிலப்பகுதியில் பனி நிரம்பி வழிஞ்சாலும் வெயில் ஆரம்பிச்சு, நிலம்  குளிரை உதறி விட்டுட்டால்   செடிகொடிகள் முளைக்கும்தான்.




மலையடிவாரத்துலே  விளைநிலங்கள். என்னவோ பயிர் போட்டுருக்காங்க. தூரம் அதிகம் என்பதால்....   என்ன விளைவிக்கறாங்கன்னு தெரியலை.



இதுலே ஜீப் குலுங்கிக் குலுங்கி  ஆறுதிசையிலும் நம்ம உடம்பு  போய்ப்போய் இடிக்குது. ஸீட் பெல்ட் இருக்கப்டாதோ? ஊஹூம்..... ஹார்லிக்ஸ் பாட்டில்லே  தயிராடையைப் போட்டுக் குலுக்கி வெண்ணெய் எடுப்பாங்களே.... அதே மாதிரி.  நாங்கதான் தயிராடைகள். வெண்ணை மட்டும் திரளவே இல்லை.
இந்தக் களேபரத்திலும் கூடியவரை க்ளிக்ஸ் உண்டு. கடமையை ஆத்த வேணுமா,  இல்லையா? :-)

அப்பப்ப கண்டகி நதி கீழே  ஓடும் காட்சி.  நாலைஞ்சு வீடுகளுடன் சின்னச்சின்ன கிராமங்கள். நிறைய ஆப்பிள் மரங்கள்.  எல்லாம் சின்னச்சின்ன ஆப்பிள்பழங்கள். இதுலே சிலர்  மலைப்பாதையில் நடந்து போறதும் வாறதுமா இருக்காங்க. வீட்டுக்கூரைகளில் வெயில் பாழாக வேணாமேன்னு விறகுகளைக் காய வைக்கிறாங்க.  காத்து அடிக்கும் சமயம் கூரையைத் தூக்கிட்டுப்போகாமல் இருக்கவும் இது டபுள் ட்யூட்டி செய்யுது:-)
அங்கங்கே  சிலவீடுகளின் வாசப்பக்கம் பெரிய டிஷ் ஆன்ட்டெனா மாதிரி ஒன்னு வச்சுருக்காங்க. நானும் டிவிக்காக வச்சுருக்காங்கன்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தால்  இது சூரிய அடுப்பு!!!  நடுவில் கம்பி ஸ்டேண்டில் பாத்திரம் உக்கார்ந்துருக்கு!  சமையல் நடக்குது அதுபாட்டுக்கு!  பருப்பு வேகுதோ என்னவோ?  இங்கே பருப்பு சாதம்  ரொம்ப முக்கியமான சமாச்சாரம். தால்பாத் ! (முஜே பி ச்சாஹியே!)
புது சாலை போடும் வேலை ஆரம்பிச்சுருக்காங்க. அங்கங்கே மெதுவா வேலை நடந்துக்கிட்டு இருக்கு.  சில இடங்களில்  தண்ணீர் ஓடும்  பாதையைக் கடக்கறோம்.  மேலே இருந்து வழியும் அருவி நீராக இருக்கணும்.
பொட்டல் காடையும் மலைகளையும் பார்த்துக்கிட்டே வரும்போது  திடும்னு கற்களை  அடுக்கி  வச்சுருக்கும் சுவர் கண்ணில் விழுந்துச்சு.  கொஞ்ச தூரத்தில் நிறைய கட்டிடங்கள்.  பெரிய ஊர் போல!


அங்கங்கே  இன்னும்  எவ்ளோ தூரம் என்னன்னு தகவல் பலகைகள்.  இன்னும் 40 நிமிட் போகணுமாம்!
சுமார் ஒரு  ஒன்னேகால் மணி நேரப் பயணத்துலே  ஒரு பெரிய  வெளியில் வண்டி நின்னது. அக்கம்பக்கம் நிறைய ஜீப்புகள் நிக்குது.  ஓ.... இதுதான் ஜீப் ஸ்டேண்ட்.   ஜீப் இதுவரைதான். இங்கே நாம் இறங்கிக்கணும்.  இங்கே ஒரு டிக்கெட் கவுண்ட்டரும் இருக்கு. திரும்பிப்போக இங்கே வந்து மறுபடி ஜீப்  எடுத்துக்கணும்.

டீக்கடை இருக்கு :-) மக்கள் ஓய்வெடுத்துக்க ஒரு  இடைவெளி விட்டுக்கறாங்க. டாய்லெட் வசதியும் உண்டு.  அநேகமா சுத்தமாக இருக்கலாம்........   குளிருக்கான ஸ்வெட்டர், கம்பளி மஃப்ளர், ஷூ எல்லாம் விக்கறாங்க.  தேவைப்பட்டால் வாங்கிக்கலாம்தானே? இதுலே புடவையைக் காயவச்சுக்கிட்டு இருந்தாங்க ஒரு அம்மா.
ஒருபக்கம் ஏழெட்டு குதிரைகள் சேணம் போட்டுக்கிட்டுத் தயாராக நின்னுக்கிட்டே... கிடைச்ச ஓய்வில் புல் மேய்ஞ்சுக்கிட்டு இருக்கலாம்தான். ஆனால்  புல் ?   குதிரை வேணுமான்னு கேட்டுக்கிட்டே சிலர் நம்மைச் சூழ்ந்துக்கிட்டாங்க.  எனக்குத்தான் குதிரைகளைப் பார்க்கப் பாவமா இருந்துச்சு.


தொடரும்........  :-)



பிஸ்னுவின் பஸந்தி..... ( நேபாள் பயணப்பதிவு 12)

$
0
0
நாம் பயணத்திட்டம் வகுக்கும்போது, நம்மவர் பல இடங்களில் தேடித்தேடித் தகவல்கள் சேர்த்துக்கிட்டு இருந்தார். எனக்கும் 'ஹோம் ஒர்க் 'செஞ்சுக்கிட்டுப் போறது பிடிக்கும். டீச்சர் பாருங்க.... நோட்ஸ் ஆஃப் லெஸன் எழுதிப் பழக்கம் இருக்கே:-)   'இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்'ன்னு செந்தில் சொன்னாலும் கூட  அந்த வெல்த்துக்கும் ஒரு அளவு இருக்குல்லே. கூடுதல் இன்ஃபர்மேஷன்  கடைசியில் நம்மை குழப்பத்தில் கொண்டு விட்டுருது பாருங்க....

 No குதிரை,  என்னால் முடியாதுன்னு நம்மவரிடம் சொன்னப்ப, மோட்டர்பைக்கில் கூடப் போகலாம். பில்லியனில் உக்கார்ந்து போகணும். அது பரவாயில்லையான்னார். நோ ஒர்ரீஸ்னு சொல்லி இருந்தேன். ஆளுக்கொரு பைக்!

இப்ப இங்கே நேரில் வந்து நின்னுக்கிட்டு இருக்கோம். பைக் ரைடுக்கு வழியே இல்லை. கொஞ்சநாள்  பைக்கில் கொண்டு விட்டுக் காசு சம்பாதிக்கும் வழி கண்டுபிடிச்சுருக்காங்க சிலர். அப்ப குதிரையை  வச்சுப் பிழைக்கும் மக்களுடைய வாழ்வாதாரம் போச்சேன்னு குதிரைக்காரர்கள் போராட ஆரம்பிச்சதும், வாயில்லா ஜீவனைப் பட்டினி போட முடியுமான்னு யோசிச்ச  பஞ்சாயத்து  நிர்வாகமோ என்னவோ....   மோட்டர்சைக்கிளைத் தடை பண்ணிருச்சு.
'என்னம்மா சொல்றே?'ன்ன நம்மவரிடம், 'நான் நடந்தெ வர்றேன்னு'சொல்லி நடக்க ஆரம்பிச்சேன். சரியா பாதையெல்லாம் கிடையாது. மக்கள் நடந்து நடந்து உண்டான பாதை.  ஆரம்பத்துலேயே     மெள்ள மெள்ள ஒரு மேட்டில் ஏறணும்....
முக்திநாத்துக்கு நுழைவு வாசல் ஒன்னு கட்டிவிட்டுருக்காங்க. அதன்வழியாத்தான் புது ரோடு வரப்போகுது.

அங்கங்கே   இங்கே  நியூஸியில் நம்ம வீட்டுலெ இருக்கும் செடிகளைப் பார்க்கும்போது  ஒரு க்ளிக்.  இங்கேயும் தங்கும் விடுதிகள்  இருக்கு. பேசாம இங்கே ஒருநாள் தங்கிட்டுக்கூடப் போகலாம்!  அதுக்கு  கீழேயே அனுமதி வாங்கி இருக்கணும்.  மேலே போன ஆட்கள்  இருட்டுனபிறகு(ம்) வரலைன்னா  'மேலே'யே போயிட்டாங்களோன்னு   தேடணுமே ........
நம்ம நியூஸியில் கூட  'மலையேறிப்பார்க்க, காட்டுக்குள் போக 'ன்னு வரும் மக்கள் உள்ளே போகுமுன் அங்கே வச்சுருக்கும் விஸிட்டர்ஸ்  நோட்டில்  பெயர் மற்ற விவரங்கள், என்றைக்கு உள்ளே போறோம். எப்போ திரும்பி வர்றோம் என்று பதிவு செஞ்சிட்டுப் போகணும். திரும்பி வந்தவுடன், நாம் ஏற்கெனவே எழுதிட்டுப்போன இடத்தில் 'வந்தாச்சு. திரும்பி வந்தாச்சு. வந்துட்டேன்'னு   சொல்லி,  வந்த நேரம், கையெழுத்து எல்லாம் பதிஞ்சுட்டுப் போகணும். தப்பித்தவறி எழுத மறந்துட்டால் அவ்ளோதான்.....    கான்ஸர்வெஷன் டிபார்ட்மென்ட் ஆட்கள் நம்மைத் தேட ஆரம்பிச்சுருவாங்க. இதுலே ஏகப்பட்ட தன்னார்வலர்கள் கூட்டமும் சேர்ந்தே தேடும்!  

அங்கங்கே சாளகிராம் விற்கும் கடைகள். சும்மாத் தெருவில் ஒரு பலகை போட்டு அதில் பரத்தி வச்சுருக்காங்க. கோலிகுண்டு சைஸ் முதல் கொஞ்சம் பெரிய கைப்பந்து சைஸ் வரை!  விலை அதுக்கேத்தாப்போல். எல்லாம் வர்றப்ப விசாரிக்கலாம்னு  லேசா உயர்ந்துபோகும் வழியில் ஏறிக்கிட்டு இருக்கோம். போலீஸ் செக் போஸ்ட் ஒன்னு. க்ளிக்:-)
கொஞ்சம் பெரிய (!)கிராமங்கள் போல சில இடங்களில் ரெண்டுபக்கமும் வீடுகள், சாலையும் அகலம்தான். மண்ணும் கல்லுமான சாலை. அங்கே வசிக்கும்  மக்கள்  பைக்கில் போய் வந்துக்கிட்டு இருக்காங்க.

ஒல்லியான துர்கா விடுவிடுன்னு நடந்து போறார். அப்பப்ப ஞாபகம் வருது நாமும் கூடப் போறோம் என்பது:-) சட்னு நாம் போய்ச் சேரும்வரை காத்திருந்து கூடவே மெள்ள நடக்கறார். ஒரு அஞ்சாறு நிமிட்லே பழைய விடுவிடு நடை வந்துருது :-) நம்மவரும்  ஒரு நிதானத்துலே  துர்கா பின்னாடி போனாலும், அப்பப்ப நான் எந்த கதியில் இருக்கேன்னு பார்த்துக்கிட்டே அடி எடுத்து வைக்கிறார்.
ஒரு நாப்பது நிமிசமா நடக்கறேன்.... நம்ம ஆஸ்த்மா தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சது. அப்பப்ப இன்ஹேலரில் ஒரு இழுப்பு இழுத்துக்கறேன். இதைக் கவனிச்ச கோபாலும் துர்காவும் நான் நிக்கும் இடத்துக்குத் திரும்பி வந்தாங்க. 'இதுக்குத்தான் சொன்னேன்...பேசாம குதிரையில் வந்துருக்கலாமுல்லே'ன்னு நம்மவர் கடிஞ்சுக்கறார். அப்பப் பார்த்து எங்கிருந்தோ வந்தமாதிரி ஒரு குதிரை இறக்கத்தில் வருது.
குதிரைக்காரரை நிறுத்தி விசாரிச்ச துர்கா, 'பேசாம இதுலே ஏறிவாங்க'ன்னு சொல்றார். பரவாயில்லாம இருக்கு  குதிரை!  வெள்ளைக்குதிரை! கல்கியோ?

கொஞ்சம் தயங்குனதும், அதெல்லாம் பயமில்லை. பத்திரமாப் போயிடலாமுன்னு  குதிரைக்காரரும், கோபாலும் வற்புறுத்தவே  சரின்னு தலை ஆட்டினேன். பேச முடியாது. அதான் இழுக்குதுல்லே....  ஒரு சின்ன மேட்டுக்குப் பக்கம் குதிரையை நிறுத்தி அதில் ஏறிக்க  உதவி செஞ்சாங்க நம்மவரும் துர்காவும்.  முதல்முறை குதிரை சவாரி. என்னடா எனக்கு வந்த சோதனை? கையில் இருந்த கேமெரா, இடம் மாறி கோபாலின் கைக்குப் போயிருச்சு :-(
தடியா ஒரு மெத்தை போல இருக்கும் ஸீட்! அதுலே நடுவிலே ஒரு  மரக்கட்டைக் கைப்பிடி. கெட்டியாப் பிடிச்சுக்கணுமாம்.  பாதங்களை அதுக்கான  மிதி வளையத்துக்குள்  வச்சுக்கணும். எந்தப் பக்கமும் உடம்பைச் சரிக்காமல் நேரா நடுவா உக்காரணும். குதிரை கிளம்பிருச்சு.  கோபாலுக்கு டாடா காமிக்கக்கூட அவகாசமில்லை :-)


கோவிலுக்கான தோரண வாசலில் நுழையறோம். வெல்கம் டு த முக்திநாத் டெம்பிள்னு  வரவேற்பு. கூடவே இன்னொரு பெயரும் போட்டுருக்கு.

அந்தக் காலத்துலே ஒரு தமிழ்ப் படத்துலே வைஜயந்திமாலா பாடுன பாட்டு.... 'அகிலபாரத பெண்கள் திலகமாய் அவனியில் வாழ்வேன் நானே....'மாதிரி டொக்டொக்குன்னு போறேனா? ....  ஊஹூம்... :-) குதிரையின் கடிவாளத்தைப் பிடிச்சுக்கிட்டு பக்கத்துலேயே நடந்து வர்றார் குதிரைக்காரர்.  கொஞ்சம் மேடான பகுதி வரும்போதெல்லாம் நாம் தலையைக் குனிஞ்சுக்கிட்டுத் தரையைப் பார்க்கணுமாம்.  இல்லேன்னா தலை சுத்துமாம்.

  தரை எங்கே? குதிரை முதுகுதான் கண்ணுக்குத் தெரியுது.  காட்சிகளை வேடிக்கை பார்க்க முடியலை  கண்களால். அதுக்காக வாயைச் சும்மா வச்சுருக்கலாமா?

குதிரைக்காரரிடம் பேச்சுக் கொடுக்கறேன். பெயர் பிஸ்னு.
ஹைய்யோடா...... விஷ்ணு!  நாம் சென்னை மக்கள்னு  தெரிஞ்சுக்கிட்டதும் அவருக்கும் ரொம்பவே உற்சாகமாப் போயிருச்சு. ரெண்டு வருசம் சென்னையில் வேலை செஞ்சுருக்காராம். நல்ல சனம், நல்ல சாப்பாடுன்னு  புகழ்ந்து பேசுனார்.  குனிஞ்ச தலை நிமிராமல் பேச்சு நடக்குது.  கல்யாணத்துலே கூட தலை குனியாத என்னை...இப்படி தலை குனிய வச்சுட்டாரே  பிஸ்னு :-)
நம்ம குதிரைக்குப் பெயர் பஸந்தி!  சூப்பரூ.....
பக்கவாட்டில் படிகள் மேலேறிப்போகுது. முதலில் படிகளூடே குதிரை போகுமோன்னு திகிலா இருந்தது உண்மை.  சைடுலே இருக்கும்   சின்ன, குறுகிய பாதையில் தான் குதிரை கொஞ்சம் கஷ்டப்பட்டு காலை  மேலே எடுத்து வைக்குது. கரடும் முரடுமா கற்கள். அதுமேலேதான் நடக்கணும். ஸ்லிப் ஆனால் போச்சு.  பாவம்..... பஸந்தி..


மன்னிச்சுக்கோ பஸந்தி......   குண்டா இருக்கேன்... மன்னிச்சுக்கோ...

பிஸ்னுவிடமும் 'குண்டா இருக்கேன், மன்னிச்சுக்கோங்க'ன்னதுக்கு சத்தம் போட்டுச் சிரிச்சவர்.... 'நீங்க குண்டே  இல்லை. யார் சொன்னது?  உங்க மாதிரி டபுள் சைஸ் ஆட்களையெல்லாம் பஸந்தி சுமந்துருக்கு'ன்னார்!  அப்பாடா.... ஒரு மன ஆறுதல்தான்.  எப்படியாவது    கொஞ்சம் இளைக்கணும்.  பேலியோவுக்கு மாறியே ஆகணுமுன்னு மூளையில் ஒரு முடிச்சைப் போட்டேன்!
நம்ம பிஸ்னு நல்லாவே ஹிந்தி பேசறார்.  நாங்க ஜாலியாப் பேசிக்கிட்டே போனோமா... சட்னு ஒரு இடத்துலே  இதோ கோவில் வந்துருச்சுன்னார். தலை நிமிர்ந்து பார்த்தால்.....  கோவில் வாசல் கேட்டில் இருக்கோம்.   காலை இந்தப் பக்கம் போட்டு,  கழுத்தாண்டைக்  கையை அண்டைக்கொடுத்து  என் தோளைப் பிடிச்சுக்கிட்டு அப்படியே மெள்ள  இறங்கிடலாமுன்னு சொன்னதும் அப்படியே ஆச்சு.



(என்ன பஸந்தி.... இப்படிப்பண்ணிட்டே.... உன்னை நம்பித்தானே உன்னிடம் ஒப்படைச்சேன்.... நைஸா அப்படியே தள்ளி விட்டுருன்னு......    கோபாலின் மைண்ட் வாய்ஸ்......  )

இன்னும் இவுங்க வந்து சேரலை.  மெள்ள வரட்டும். இந்த பெஞ்சில் உக்கார்ந்துக்குங்கன்னு சொல்லிட்டு,  அங்கே ஒரு  இடத்தில் இருந்த பாத்திரத்தை எடுத்து, பக்கத்தில் இருந்தகுழாயில் தண்ணீர் பிடிச்சு பஸந்திக்குக் கொடுத்தார். அது தாகத்தோடு  இருக்கு போல. சட்னு குடிக்க ஆரம்பிச்சது.  சுத்திவர மலை. இந்தாண்டை பள்ளமாப்போகுது பாதாளம். கையில் கேமெரா இல்லையேன்னு நொந்துக்கிட்டு நின்னேன். ஜாக்கெட் பாக்கெட்டில் போட்டு வச்சுருந்துருக்கலாம்.... பதட்டத்திலே  தோணலை  :-(


தொடரும்........  :-)

PINகுறிப்பு: நம்மவர் நமக்காக அங்கங்கே க்ளிக்கிட்டு வந்த படங்களை இங்கே போட்டுருக்கேன்:-)

முக்தி முக்தின்னு நினைக்கவச்சுப் பாடாய்ப் படுத்திய முக்திநாதர் இங்கே! ( நேபாள் பயணப்பதிவு 13 )

$
0
0
இதோ முக்திநாத் கோவிலின் நுழைவு வாசல்.  மேலே மூணு கலசங்களோடு ஒரு அமைப்பு.  கொஞ்சம் கேரளா ஸ்டைலோ?  அதுலே  அஞ்சு கண்ணாடி மாடங்களில்  பொம்மைகள் போல ஒன்னு. என்ன சாமின்னு  தெரியலை.  மரப்பொம்மை மாதிரி....   சட்னு பார்த்தால் கார்ட்டூன் கேரக்டர்ஸ்....
அதுக்குக் கீழே  ஒருபக்கம் மூடி இருக்கும் பெரிய கேட். கேட்டில் சக்கர டிஸைன். (தர்ம சக்ரம்!)     பத்துப்பதினைஞ்சு  படி ஏறணும். நேபாள வழக்குப்படி பெரிய மணியைக் கட்டித்தொங்க விட்டுருக்காங்க.  இவுங்க நாட்டுலே மணிகளுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்குபோல.
கோவில்களுக்குப் போனால்.... எங்கே பார்த்தாலும் சின்னதும் பெருசுமா மணிகளே! காண்டாமணிகளை  ரெண்டு தூண்களுக்கிடையில்  சங்கிலி போட்டுத் தொங்க விட்டுருக்காங்க. சின்னப்புள்ளைங்களுக்குக்கூட எட்டும் உயரத்தில்தான்!

அஸ்ட்ராலியாவில்  ப்ரிஸ்பேன் நகரின் சவுத் பேங்க்கில் ஒரு நேபாளக்கோவில்  இருக்கு.  இந்நாட்டு மக்களின் அன்பளிப்பு. முழுக்க முழுக்க மரக்கட்டிடம். அங்கேயும் இப்படி ஒரு பெரியமணி உண்டு.  அதனால்   இதெல்லாம் நமக்குப் பரிச்சயம் உள்ளவைகள்தான்...

 நம்ம துளசிதளத்தில் ஏற்கெனவே  நிறைய எழுதி இருக்கேன். ஆமாம்.... எதை விட்டு வச்சுருக்கேன்.... :-)


வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கும்போதே  கோபாலும் துர்காவும் வந்துட்டாங்க. முதல்லே கெமெராவைக் கொடுங்கன்னு  கையை நீட்டுனதும், 'உனக்காக வர்ற வழியில் படமெல்லாம் எடுத்துக்கிட்டே வந்தேன்னு'சொன்னார் நம்மவர்.  பிஸ்னுவுக்குக் காசு கொடுக்கணும். எவ்ளோன்னு கேட்ட துர்காவிடம், அஞ்சுன்னு கையைக் காட்டுன பிஸ்னு, என்னிடம்  'இன்டியாக்கா தீன் சௌ, நேப்பாலி பாஞ்ச்'ன்னார்.  நான் நம்மவரிடம் கொஞ்சம் காசு கூடுதலாத் தரச் சொன்னேன். மூட்டையைத் தூக்கி வந்த பஸந்திக்கு  இன்னிக்கு விருந்து வைக்கணும்:-)  இது பஸந்திக்குன்னு சொல்லியே கொடுத்தேன். பாவம்..... செல்லம்.



பிஸ்னுவுக்கு நன்றி சொல்லிட்டுப் படியேறினேன்.  காண்டாமணியை அடிச்சு, நம்ம வரவை முக்திநாதருக்குச் சொன்னார் கோபால்:-) பக்கத்துலேயே சின்னதா  மூணு ப்ரேயர் வீல்ஸ் இருக்கு.  புத்தர் கோவிலா என்ன?  எதுக்கும் இருக்கட்டுமுன்னு  அதை ஒரு சுத்து சுத்தினேன்.  மூணு கோடி மந்திரம் சொல்லியாச்.  வலப்பக்கம்  ரெண்டு மூணு வரிசைகளில் மணிகள்  கட்டிவுட்டுருக்காங்க. கேட்டு வழியா அந்தாண்டை போனோம். இடதுபக்கம் இன்னொரு பெரிய ப்ரேயர்வீல்.  நம்மாட்கள் சுவரில் ஆட்டோக்ராஃப் போட்டுக் கெடுத்துருக்காங்க போல..... போடாதேன்னு ஒரு அறிவிப்பு.
தலையில் மஞ்சள்துணி கட்டிய  நேப்பாளமக்கள் அங்கங்கே....
வனப்பகுதிதான். இடையில்  கல்பாவிய படிகள்.   ரெண்டு மூணு மீட்டர் தரை.... அங்கிருந்து கொஞ்ச உயரத்தில்  இன்னொரு   ரெண்டு மூணு மீட்டர் நீளத் தரை இப்படிக்கொஞ்சம் கொஞ்சமா மேலெழும்பிப்போகும் படிகள். ரொம்ப ஓடாம நிதானமா நடந்து போகணுமுன்னு துர்கா சொன்னார்.  மேலே போகப்போக  சுவாசிக்க எனக்குக் கஷ்டமாப் போயிருமோன்னு  அவருக்கு பயம்...
நிதானமா ஏறிப்போய்க்கிட்டு இருக்கேன்.  படிப்பாதை நீண்டு போய்க்கிட்டே இருக்கு.  வழியில் அங்கங்கே சின்னதா  யாகசாலைகள்.  வாசலில் கோலமும், சுவரில் சாத்திவச்ச போர்டில் தமிழுமா இருக்கு!!!

வலப்பக்கம்  கொஞ்சதூரத்தில்   ஒரு புத்தர் சிலை  கட்டிக்கிட்டு இருக்காங்க போல....  ஒரு இடத்தில்  பாதை பிரிஞ்சு ஜ்வாலாமாயிக்குப் போகும் வழின்னு அம்புக்குறி.  இருக்கட்டும். முதலில் நம்ம சாமி....




சட்னு தண்ணீர் பாயும் பலத்த  ஓசை. இரைச்சலோடு  ஒரு  கால்வாயில் தண்ணீர் ஓட  மேலே ஒரு பாலம். படிகளேறிப் பாலம் கடந்து  போனதும் அந்தாண்டையும் படிகள் மேலேறிப்போகுது.
வலதுபக்கம்  ஒரு பெரிய மாடத்துலே பெருசா ரெண்டு ப்ரேயர் வீல்ஸுக்கான இடங்கள். ஒன்னுலே மட்டும்  ப்ரார்த்தனைச் சக்கரம் இருக்கு. தண்ணீர் வரும்  வேகத்தில் கீழே உள்ள ஒரு அமைப்பு சுத்தும்போது,  அதோடு இணைக்கப்பட்டக் கம்பியில்  இருக்கும் அந்த ப்ரேயர் வீலும் சுத்துது. தானே தானாய் கோடிகோடியாய் மந்திரங்கள்...........  ஓம் மணி பத்மே ஹ்ஹூம்.....  ஓம் மணி பத்மே ஹூம்..........................
இடது பக்கம் போகும் படிகளில் ஏறிப்போறோம்,  மாடி வீடுக்குப் போறதுமாதிரி....  மேலே போனதும்..........  ஹா......
அதோ கோவில்!  மூணடுக்கு மாடம். உச்சியில் கலசம்!   வாசலுக்கு முன்னால் ஒரு திறந்த வெளி முற்றம். ரெண்டு பக்கமும் செவ்வகமா ரெண்டு  தண்ணீர் தொட்டிகள்.  தீர்த்தக்குளம்!! ஒன்னு பாவங்கள் களைய, இன்னொன்னு புண்ணியம் சேர்க்க! சரஸ்வதி குண்ட், லக்ஷ்மி குண்ட்  என்ற பெயரில் இருக்கு. இதுலே  எது புண்ணியம் சேர்க்க, எது பாவம் கரையன்னு தெரியலையே.... (நான் நினைக்கிறேன்....  பணத்தாலேதான் பாவம் அதிகமாகுது. பாதாளம் வரைக்கும் பாயுதே....   இப்பத்தானே நாட்டு நிலவரத்துலே பணத்தாலேயே கோட்டை கட்டி அதுக்குள்ளே நின்னு ஆட்டி வச்சவங்களைப் பத்தி ஊர் உலகமே பேசிக்கிட்டு இருக்கே !!!)
சுத்திவர மொட்டைமாடிபோல கம்பித்தடுப்பில் கைப்பிடிச்சுவர். ரெண்டுமூணு பேர்  ஈர  உடைகளைக் காயப்போட்டுக்கிட்டு இருக்காங்க.
கோவிலைச் சுத்தி  அரைவட்டமா ஒரு சிமெண்டுத்தரைப் பாதை. இடதுபக்கம்  கோமுகங்களில் நீர்த்தாரை! நூத்தியெட்டு  தாரைகள். நூத்தியெட்டு தீர்த்தங்கள்.  உண்மையில்  அதுக்கு மேலே   அருவியில் இருந்து  கீழே இறங்கிவரும்  கால்வாய்த் தண்ணீர்  ரெண்டு கிளையாப் பிரிஞ்சு எல்லா  கோமுகங்கள் வழியாகவும் தாரையா ஊத்துது. முக்திதாரா !



மானஸரோவரில் இருந்து  வரும் தண்ணீர்தான் இங்கே அருவியாகக் கீழே இறங்கி வருதாமே!  அதில்லை....  இது கண்டகி நதித் தண்ணீர்னு  ஒருபக்கம் சொல்லிக்கிட்டு இருக்காங்க.   திபெத் கிட்டே இருந்து இமயமலையில்  இருபதினாயிரத்துச் சொச்சம்  அடி உயரத்துலே இருந்து  இறங்குற தண்ணீர்  இந்த அருவியா வருதான்னு தெரியலையே.........
இந்தத் தீர்த்தங்களில் மக்கள் குளிக்க  வசதியான ஒரு ஏற்பாடு.  அங்கங்கே இடைவெளிவிட்டுக் கம்பித்தடுப்பு உண்டு.  உள்பக்கம்போய் அதைப் பிடிச்சுக்கிட்டே நடந்து போனால் போதும்.... 108 தீர்த்தமாடிய புண்ணியம் கிடைச்சுரும்! கீழே விழும் தண்ணீர் அங்கே தேங்காமல் வடிஞ்சு போயிருது.  இல்லேன்னா இடைவிடாது கொட்டும் தண்ணீர் அங்கே வெள்ளக்காடா ஆகி இருக்கும். அந்த நூற்றியெட்டில் ஒன்னுலே  உள்ளங்கை  ஏந்தி தீர்த்தம் பிடிச்சுத் தலையில் தெளிச்சுக்கிட்டு, அதுக்குண்டான பலனை நம்ம கணக்கில் சேர்த்துக்கிட்டேன். எல்லாம் போதும்!



பாதையின் வலதுபக்கம் திண்ணையாட்டம் கட்டைச்சுவர். சுவருக்கு அந்தாண்டை கீழ் மட்டத்தில் கோவிலின் பிரகாரம்.  எட்டி உள்ளே பார்த்தால் இங்கேயும் மணிகளே மணிகள்!   உள்பக்கத்தில்  சுவரையொட்டிச் சின்னதா இருக்கும்  அமைப்பில் வரிசையா பித்தளை  வட்ட  அகல்கள்  வச்சுருக்காங்க.  கோவிலை வலம் வந்தபின் கோவிலுக்குள் நுழையறோம்.

வெளி முற்றத்தில்  டொனேஷன் என்று  ஒருத்தர்  உக்கார்ந்துருந்தார்.  சாமி தரிசனம் முடிச்சுட்டு அவரைப்  பார்க்கலாமுன்னு .....

வாசல் முகப்பில் இந்த நாட்டு வழக்கப்படி உள்ளே இருக்கும் கடவுளின் ப்ரீவ்யூ.  சங்கு சக்கரம் மேற்கையிலும்,  வலது கீழ்க்கையில் கதையும்,  இடது கீழில் பெயர் தெரியாத எதோ ஒன்னையும் பிடிச்சுக்கிட்டு நிக்கறார் பெருமாள். அவருக்கு  வலதில் வீணை மாதிரி ஒன்றுடன் கைகளில் ஜெபமாலை, சுவடியோடு....   ஒருவேளை சரஸ்வதியோ!  இடப்பக்கம்...  மேலே ரெண்டு கைகளிலும் கலசமேந்தி ....  யாராக இருக்குமுன்னு தெரியலையே....  லக்ஷ்மியாக இருக்கலாமுன்னா.... காதாண்டை பாம்புகள் இருக்கே....    ரெண்டுபேரும் பத்மாஸனத்தில் இருக்காங்க.  ஒருவேளை புத்தராக இருக்குமோ?
புத்தமதத்துக்காரர்களுக்கு  இது Padmasambhava Chumig Gyatsa    என்னும் புத்தர் கோவில்.   நூத்துக்கணக்கான தீர்த்தம் உள்ள இடமுன்னு  சொல்றாங்க. ரொம்பச்சரி,  அதான் நூத்தியெட்டு இருக்கே!! Chumig Gyatsa means 'Hundred Waters' in Tibetan.


பெரிய கோவிலெல்லாம் இல்லை. ஜஸ்ட்  ஒரே ஒரு பிரகாரம். நடுவில்  ஒரு சந்நிதி. கேரள ஸ்டைலில் நாலு பாகமா இருக்கும் ரெட்டைக் கதவுகள். பித்தளைக் கவசத்துடன்.  சந்நிதியைச்சுத்தி திண்ணை அமைப்பு.  முன்பக்கம் கருவறை வாசலுக்கு ரெண்டு பக்கமும் மட்டும் கொஞ்சம் அகலமான திண்ணை. இடதுபக்கம் ஒரு உண்டியல். வலதுபக்கம் ஒரு  பெரிய மணைப்பலகையில்  பட்டர் ஒருத்தர் உக்கார்ந்துருந்தார்.  கோவிலில் மூணு பேர் ஏற்கெனவே தரிசனத்துக்கு வந்தவங்க, பட்டரிடமிருந்து என்னவோ வாங்கிக்கிட்டு இருந்தாங்க.

ரெண்டுபடி ஏறி சாமியை தரிசிக்கலாம்.    பித்தளைக் கதவின் கீழ்பாகம் மூடி இருக்க மேல்பாதி மட்டும் திறந்துருக்கு. உள்ப்பக்கமா  ஒரு சின்னப்பையர் எட்டுவயசு இருக்கலாம். (நேபாளிகளுக்கு வயசே தெரியறதில்லைப்பா!  ரொம்பக்குட்டிப் பையனோன்னு நினைச்சால்  பதினைஞ்சுன்னு சொல்வாங்க) பௌத்தமதத்துக்கார சின்னப்பட்டர். மழிச்ச தலையும்,  மஞ்சள் சட்டையும், மெரூன் வேஷ்டியுமா ரொம்பவே க்யூட் :-)

முந்தியெல்லாம் எல்லா வட இந்தியக் கோவில்கள் போலவே நாமே உள்ளே போய்  சாமியைத் தொட்டுக் கும்பிட்டுப் பூஜைகள் செஞ்சுக்கலாம் என்று இருந்துருக்கு.  பக்தர்கள் பெருமாள் முகத்தைத் தடவித்தடவி மூக்கை டேமேஜ் செஞ்சுட்டாங்கன்னு  இப்ப ஒரு பத்துப்பனிரெண்டு வருசமா  வெளியே நின்னுக்கிட்டே ( ரொம்ப தூரமில்லை....சாமிக்கும் நமக்கும் ஒரு ஆறடி இருந்தால் அதிகம்!) கும்பிடும் முறை வந்துருச்சு. அதிலும்  சிலருக்கு  குறைஞ்சபட்சம் கருவறை நிலைப்படிக்கு உள்ளே  நின்னு ஸேவிக்கும் பாக்யம் லபிச்சுருக்கு!  அந்த சமயத்தில் அங்கிருக்கும் பட்டருக்குத் தோணுச்சுன்னா அனுமதிப்பாராக இருக்கும்.


பெரிய  ஆட்களை விட சட்டத்தை மதிப்பது சின்னப்பசங்கதான் என்பது இன்னொருமுறை எனக்கு அங்கே நிரூபணம் ஆச்சு. குழந்தைகள் எதுக்கும் சமரசம் பண்ணிக்க மாட்டாங்க!   யாரையும் உள்ளே விடக்கூடாதுன்னு  சொல்லி வச்சால்...அவ்ளோதான். யாரும் உள்ளே போகமுடியாது!  சிம்பிள்:-)

உள்ளே வரலாமான்னு கேட்டுவச்சேன், குட்டிப்பட்டரிடம்:-) கூடாதுன்னு தலையாட்டல்.  சரி. ஒரு படம் க்ளிக்கலாமா? அதுக்கும்  ஊஹூம்னு இன்னொரு தலையாட்டல். கண்களில் சின்ன மிரட்சி இருந்ததோ.... வாய்ச்சொல்லே கிடையாது!  புள்ளெ பயந்துருக்குமோ?

கண்ணால் அவனை ஐ மீன் பெருமாளை நல்லாப் பார்த்தால் ஆச்சுன்னு  உத்து உத்துப் பார்த்து மனசுக்குள் உள்வாங்கிக்கறேன். வாய் மட்டும் கேசவா நாராயணான்னு முணுமுணுத்துக்கிட்டே இருக்கு. இடைக்கிடையே தெரிஞ்ச சில ஸ்லோகங்கள்.  இதுக்குள் ஏற்கெனவே அங்கே வந்துருந்த பக்தர்கள் மூவரில் ஒருவர் சின்னத்தட்டில் கற்பூரம் கொளுத்தி  ஆரத்தி காமிக்கிறார்.  என் பக்கத்தில் நின்றபடிதான். கை சுழற்றுன வேகத்தில்  அரைக்கதவில் தட்டி உள்ளே விழுந்துருச்சு தட்டு...... குட்டிப்பட்டர் தட்டை எடுத்து நீட்டினார்.

அவர் முழிச்சதைப் பார்த்து வெளியே உக்கார்ந்திருந்த பெரிய பட்டர் இன்னும் கொஞ்சம் கற்பூரத்தை அந்தத் தட்டில்வச்சு லைட்டரால் கொளுத்திக் கொடுத்தார். இந்த முறை நிதானமான ஆரத்தி. எதோ குறிப்பிட்ட  மந்திரம் போல  சொல்லிக்கிட்டே... சரியா மாமான்னு  இன்னொருவரைக் கேட்டார். அட! தமிழ்க்காரர்கள்தானா!   ஆஹா.....!!!

நாங்களும் சாமியைக் கும்பிட்டுக்கிட்டோம். இந்த மூவர் குழுவில் இருந்த பெண், வெளியே கீழே நின்னு  ஸ்லோகம் சொல்ல ஆரம்பிச்சாங்க. நமக்குத் தெரிஞ்சது என்பதால் நாங்களும் கூடவே சொன்னோம்.
கற்பூர ஆரத்தித் தட்டை எங்களுக்கும் காண்பிக்க,  தீச்சுவாலையில் உள்ளங்கைகளைக் காட்டிக் கண்ணில் ஒத்திண்டாச்சு. சின்ன பாக்கெட் கல்கண்டை சாமிக்குக் காமிச்சுட்டு அதைப் பிரிச்சு எங்களுக்கும் ப்ரஸாதம்  கொடுத்தாங்க.

நாந்தான் ஏற்கெனவே சொல்லி இருக்கேனே... பெரும்பாலும்  கோவிலுக்கு வெறுங்கையாத்தான் போவேன். பயணத்தில் தேங்காய் இத்யாதிகள்  வேணாமுன்னுதான்.  அவைகளைத் தின்னவும் முடியாமல், தூக்கிப்போடவும் முடியாமல்  காரில் வச்சு, பலநாள்  பயணம் முடியும்போது பூசணம் பிடிச்சுக் கிடக்கும். அதான் முக்கிய காரணம்.  இன்னொரு காரணம்..... சாமிக்கு என் மனசைப் பூரணமாக் கொடுக்கறேன். அதைவிட அவருக்கு வேறொன்னும் வேண்டாம், இல்லையோ?

நம்ம   உள்ளூர் கோவில்களிலேயே இப்படின்னா...  இந்த மாதிரிப் பயணத்துக்கு எதாவது கொண்டுவந்துருவேனாக்கும்? அவனுக்குத் தெரியாதா... நம்ம லட்சணம்! எதையும் எதிர்பார்க்கமாட்டாந்தானே:-)

சின்ன மேடையில் நடுவில் மூலவர் முக்திநாத். செப்புக்கவசம் போட்டுருக்காரோ? இல்லெ   செப்புச்சிலையேவா?    பாவம்.... அதுகூட பளபளன்னு இல்லாம  நிறம் மங்கிக்கிடக்கு. முகம்  வடக்கர்கள் முகம். காது வளர்த்துக்கிட்டு இருக்கார்! புத்தமதத்துக்காரர்களுக்கும் இந்தக்கோவிலும் மூர்த்தியும் பொது என்பதால் அவுங்க வேலையா இருக்கணும், இப்படிக் காதை வளர்த்து விட்டது! நாலு கைகள்.  மேல் வலக்கையில் சக்கரம், கீழ் வலக்கையில் சங்கு.  மேல் இடக்கையில் கதை, கீழ் இடக்கையில் தாமரை!  அமர்ந்த கோலம்தான்.
ஸ்ரீதேவி பூதேவின்னு  ரெண்டு தாயார்கள் இவருக்கு ரெண்டு பக்கங்களிலுமா... ஒருகையை உசத்தி நீட்டிக்கிட்டு நிக்கறாங்க. செப்புச்சிலைதான் போல.... பெருமாளுக்கு வலதுபக்கம் புத்தர் அமர்ந்த நிலையில்.  அவருக்கு முன்னால் சின்னதா ரெண்டு உருவங்கள். நரநாராயணர்கள்.  வலது முழங்காலண்டை  ரெண்டுமூணு சாளக்ராமங்கள். கொஞ்சம் பெருசுதான்!

பெருமாளின் இடது முழங்காலாண்டை  நம்ம ராமானுஜர், அடுத்தாப்லெ புள்ளையார். இப்பப் பெருமாளின்  பக்கம் பார்த்தால் இன்னொரு புத்தர் சிலை. தாய்லாந்து ஸ்டைலில் க்ரீடம் எல்லாம் வச்சுக்கிட்டு...  இவர் பத்மசம்பவராம்.  ஹா...   அந்த  Padmasambhava  இவர்தானா!!!    ஆனா....  என்ன சொல்லுங்க.....இவருக்கு முன்னால் நிக்கும்  பெரிய திருவடிதான்.........

 ஹைய்யோ!!  அழகுன்னா அழகு,  அப்படி ஒரு  அழகு!  வளைஞ்ச மூக்கு .... அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!

பெருமாள் தாயார்களைத் தவிர்த்து மத்தவங்க எல்லாம் பித்தளைச்  சிலை   தான்.    மஞ்சள் முகம்:-)  நார்த் இண்டியன் ஸ்டைலில் எல்லோருக்கும்  ஜிலுஜிலுன்னு  சிந்தெடிக் ஜரிகை வச்ச பாலியஸ்டர் பட்டு உடுப்பு!  நம்மூரிலும் இது  சாமிக்குன்னு விக்கறாங்க இல்லே? நம்ம ஊரில்   மேலாடை கலாச்சாரம் (!)அனுசரிச்சு பாவாடை, துப்பட்டா போல ஒரு செட் கிடைக்குதே!  சாமி மேடைக்கு பேக் ட்ராப்பா செப்புத்தகட்டில் வேலைப்பாடு செஞ்சுருக்கும் ஒரு ஸ்க்ரீன்.

சாமி அலங்காரத்திலும் நம்ம  சௌத்தை அடிச்சுக்க முடியாதுப்பா!!!


உண்மையைச் சொன்னால்..... சாமி முன்னால் நின்னு கும்பிடும்போது  மனசுக்குள் ஒரு பரவசம், எனக்கா எனக்கான்னு  எனக்கு வருமே...  அது இங்கே மிஸ்ஸிங். ஆசைப்பட்டு வந்தோம். நூத்தியெட்டு திவ்யதேசக் கோவிலில்  இதுவும் ஒன்னு. தரிசனம் ஆச்சுன்ற பாவம்தான் மனசில். தானா வராதது தடியால் அடிச்சா வருமா?


பிரகாரம் வலம் வரலாமுன்னு  ஒரு சுத்து போய் சந்நிதி முன் வாசலுக்கு வந்ததும்  பெரியபட்டர் நமக்கு குங்குமக் குழைசல் நெத்தியிலே வச்சு  ஆசி வழங்கும் பாவனையில்  கை உயர்த்திக் காமிச்சார். எதோ  புத்தகங்கள்,  ஸ்லோகப் புத்தகம்  சைஸில் எடுத்துக் காமிச்சு வேணுமான்னார்.  ஹிந்தி.  தட்டுத்தடுமாறி வாசிக்கணுமேன்னு  வேணாமுன்னு சொன்னேன்.

அவருக்குக் கொஞ்சம் தக்ஷிணை  கொடுத்துட்டு, பெருமாள் உண்டியலிலும் கொஞ்சம் 'ரூ' போட்டுட்டுக் கருவறையை ஒட்டி இருக்கும் திண்ணை அமைப்பில் உக்கார்ந்து கையோடு கொண்டுபோயிருக்கும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் (பெரிய எழுத்து) எடுத்து வாசிக்க ஆரம்பிச்சோம்.


நாலாவது பக்கம்  வரும்போதே...மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு, தொண்டை அடைச்சுக்கிட்டுக் கண்ணில் குபுக்னு கண்ணீர் வந்துருச்சு.  என்னமோ மனசுலே.... பெருமாளே... நல்லபடியா தரிசனம் கொடுத்தியேன்னு....

 வாய்விட்டு வாசிப்பதைக் கொஞ்சம்  நிறுத்திக்கிட்டு  மனசுக்குள் வாசிக்கிறேன். நம்மவர் அவர்பாட்டுக்கு தனக்குப் பக்கத்தில் என்ன நடக்குது, சத்தத்தைக் காணமேன்னு கூட உணராமல் அவர் பாட்டுக்குச் சத்தமா படிச்சுக்கிட்டே போறார்..... நான் என்னையே ஆசுவாசப்படுத்திக்கிட்டு இருக்கும்போது......

நமக்கு முன்வந்த மூவர் குழுவில் ( ரெண்டு ஆண்கள், ஒரு பெண்)மூத்தவர்  பிரகாரம் வலம் வர்றார். நம்மைத் தாண்டிப் போய் வலப்பக்கம் திரும்புனவர், அடுத்த நொடியில் ரிவர்ஸ் கியரில் என் முன் வந்து நின்னு , 'உங்களுக்கு ஸர்ப்ப தோஷம் இருக்கு'ன்னார். முன்னால்  யாரோ நிக்கறாங்க என்ற உணர்வில் தலை நிமிர்ந்த நம்மவர்  'யாருக்கு?'ன்னு கேட்டதும்  அவர் என்னைக் கை காமிச்சார். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.......

'நாங்க  ராகு கோவிலில்  அபிஷேகம் பூஜை பண்ணி இருக்கோமு'ன்னு கோபால் சொல்ல,  அதுக்கு அவர்  அதெல்லாம் சரிவராது. நீங்க  ஸர்ப்ப யாகம் பண்ணனும் என்றார். நம்மவர் பயந்து போயிட்டார் போல.... 'அதுக்கு என்ன செய்யணும், எந்தக் கோவிலில்னு' கேட்டுக்கிட்டு இருக்கார்.....

'நாகேஸ்வரத்துலேயே பண்ணிக்கலாம். இல்லேன்னா  நான் ஒரு இடம் சொல்றேன்னா'ரா........   'யாகம் பண்ணினால்... உங்க கண்ணுக்குக்கீழே இருக்கும் கருப்பு கூட போயிரும்னு'  கூடவே ஒரு அழகுக் குறிப்பும்! வெளியே பார்க்கலாம்,   விவரம் தாங்கன்னதும் அவர் வலத்தைத் தொடர்ந்தார்.

என்னம்மா இப்படிச் சொல்றார்ன்னதும், நம்ம 'படம் எடுக்கும்'சமாச்சாரம் எப்படி இவருக்குத் தெரிஞ்சது?    நான் 'படம் எடுக்கறதை'ப் பார்த்துக் கண்டுபிடிச்சுருப்பாரோன்னு  எனக்கு சம்ஸயம்னேன். அப்புறம் கொஞ்சம் முழிச்சுப் பார்த்துட்டு, சகஸ்ரநாமத்தைத் தொடர்ந்தோம். இவர் அப்பப்ப நிறுத்திட்டு,  'உன் கண்ணு பாம்பு மாதிரிதான் இருக்கு.  கோபமா இருக்கும்போது அசல் பாம்புதான்னார்.  மூச்சு விடும்போதுகூட  பாம்பாட்டம் சீறல்.....    நான்,  அது ஆஸ்த்மா மூச்சுன்னு சொல்லலை:-)

  பாவம்... கோபால். அவருக்கு பாம்புன்னா கொஞ்சம் அதிகமாவே  பயம்தான். இவரை அப்பப்ப பயமுறுத்த எனக்கும் ஒரு சான்ஸ் கிடைச்சுருக்கு பாருங்க:-)  கையால் 'படம் எடுத்து'க் காமிக்கலாம்.... ஆடு பாம்பே.... நெளிந்தாடு பாம்பே....   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........  :-)

இதுக்குள்ளே நம்மைக் காணோமேன்னு துர்கா தேடிக்கிட்டு வந்தார். கெமெராவைக் கொடுத்து அவரையும் 'படம் எடுக்க'வச்சேன்:-)
இன்னொருக்கா ப்ரகார  வலம். அப்போதான்  இடப்பக்க சுவரில் புள்ளையார் இருப்பதைக் கவனிச்சு கும்பிடு போட்டுட்டு ஒரு க்ளிக்.  இன்னொருபக்கம்  யாகசாலை இருக்கு. யாககுண்டத்துக்குப்பக்கம் இன்னும் சில சிலைகள். நம்ம ஆண்டாள், ராமானுஜர், மணவாள மாமுனிகளாம்! அட!   இங்கே வந்தா உக்கார்ந்துண்டு  இருக்காய்! தூமணி மாடம் மனசுக்குள் ஆச்சு.

நம்ம திருமங்கையும், பெரியாழ்வாரும் இந்த  முக்திநாத்  ஸ்ரீமூர்த்தியைப் மொத்தம் பனிரெண்டு பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்க. அதனால் நூத்தியெட்டு திவ்யதேசக் கோவில்களில் இதுவும் சேர்த்தி. திருமங்கைக்கு பத்துக்குக் குறைஞ்சு பாடத்தெரியாது என்பதை நினைச்சுப் பார்த்தேன். அப்படித்தான் இருக்கணும்:-)
இதுலே பாருங்க.... ஏகப்பட்ட வசதிகள் நிறைஞ்சுருக்கும் 'இந்தக் காலத்துலேயே'இங்கே வந்து போக இவ்ளோ கஷ்டப்பட வேண்டி இருக்கும்போது  அவர்கள் வாழ்ந்த காலத்து நிலமை எப்படி இருந்துருக்கும்?

முக்திநாத் மூர்த்தியை ஸேவிக்கணுமுன்னு புறப்பட்டு வந்த நம்ம திருமங்கை ஆழ்வார், சாளகிராம் என்ற ஊர்வரை போயிருக்கார்.  குதிரையில் போயிருக்கலாம்.... மன்னன் கலியனுக்குக் குதிரை சவாரி புதுசா என்ன?  அப்போதைய காலத்து ட்ராவல் ஏஜன்ட்  என்ன சொன்னாரோ?

கண்டகி நதியில் மட்டுமே  சாளகிராம் கற்கள்  கிடைக்குது.  தாமோதர் குண்ட் என்ற இடத்திலிருந்து  புறப்பட்டு வரும் இந்த நதி, ஒரு வகை அபூர்வ வகைக் கற்களான சாளகிராம்களை  உருட்டிக் கொண்டு வந்துக்கிட்டு இருக்கு. அதை முதல்முதலாக் கண்டெடுத்த பகுதிதான் சாளகிராம் என்ற பெயரில் இருக்கு.  இந்த கிராமம் வரை வந்தவர்,  இங்கிருந்தே மனக்கண்ணால்   முக்திநாத் பெருமாளை ஸேவித்து, அவர் இருக்கும் திசை நோக்கி , அவருடைய வழக்கம்போல் பத்துப் பாசுரங்கள் பாடி இருக்கார். அதுக்குப்பின் அவர் முக்திநாத் கோவில்வரை வர முடியாமல் ஊர் திரும்பினதாக  ஒரு இடத்தில் வாசித்திருக்கேன்.... ப்ச்..... பாவம்....

கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய்,
சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச்செறுக்களத்து,
மலைகொண்டலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கைவாளரக்கர் தலைவன்,
தலைபத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே.

காத்மாண்டுவில் இருந்து இந்த சாளக்ராம் சுமார் 274 கிமீ தொலைவில் இருக்கு. அங்கிருந்து முக்திநாத கோவில்   இன்னொரு 279  கிமீ (இப்போதைய சாலைக் கணக்குப்படி  மொத்தம் 553  கிமீ!)

இந்த சாளகிராம் கற்களைப்பற்றி இன்னும் கொஞ்சம் என் தியரியைச் சொல்லணும்.  அடுத்து வரும் பதிவுகளில் சொன்னால் ஆச்சு. என்னடா உளறிக்கொட்டறாளேன்னு யாரும் அடிக்க வராமல் இருக்கணும் பெருமாளே!...

தொடரும்......... :-)



ஜ்வாலாமுகி என்னும் அணையாத தீ! ( நேபாள் பயணப்பதிவு 14 )

$
0
0
   ஆனானப்பட்ட ஆழ்வாருக்கே  தரிசனம் கொடுக்காம விட்டுட்ட எம்பெருமாளை சந்நிதி முன்பக்கம் வந்து இன்னொருக்காப் பார்த்துக்கலாமுன்னா... சந்நிதியை இழுத்துப் பூட்டிட்டு எல்லோரும் எஸ்கேப்!  மேல்மாடத்தில்  பக்கும் பக்கும்னு  சொல்லிக்கிட்டே  சிகப்புக் கண்ணோடு வெள்ளைப்புறா!

கொஞ்சம் க்ளிக்கிட்டு,  டொனேஷன் கொடுத்துட்டு, முகப்புச்சிற்பம் விசாரிக்கலாமுன்னா யாரையுமே காணோம்!!!  கோவிலைச் சுத்தி நிறைய கட்டிடங்கள் இருக்கு. பட்டர்கள், பணியாட்கள் இருப்பாங்க போல ! சுத்துமுத்தும் கண்களை ஓட்டுனா...  சின்னப்பட்டர்  ஒரு கையால் சாவிக்கொத்தைச் சுழற்றிக்கிட்டே சின்னத்துள்ளல் நடையில்  ஒரு கட்டடத்துக்குள் நுழையறார்.  அது புத்தமடாலயமா இருக்கலாம்.   சின்னவரை சட்னு க்ளிக்கத் தோணலை பாருங்க :-(
இதுக்குள்ளே  நிறைய பக்தர்கள் வந்துருக்காங்க. கோமுகதாரையிலும், வெளியில் இருக்கும் குண்டங்களிலுமா  குளிச்சும், ஈர உடைகளைக் காய வைப்பதிலும் மும்முரமா இருக்காங்க மக்கள்ஸ். தரிசனம் முடிச்சுட்டு வர்றதுக்குள் காய்ஞ்சு போயிரும்!

மூவர் குழுவோடு கொஞ்சம் பேசினோம்.  சிங்காரச்   சென்னை மக்கள்ஸ்தான்.   பெரியவரிடம்  ஃபோன்நம்பர் வாங்கிக்கிட்டார் நம்மவர்:-) துர்கா இருக்க பயம் ஏன்? க்ளிக்ஸ் ஆச்சு.
அடுத்து இங்கே ஜ்வாலாமுகி கோவில் பார்க்கலாமுன்னு கிளம்பறோம்.  மூவர் குழுவுக்கு இது புதுத்தகவலாம். நாங்களும் வரலாமான்னாங்க.  தாராளமான்னு  நாங்கள்  அறுவரானோம்:-) கோவிலில் இருந்து படி இறங்கிக் கீழே வந்து கொஞ்ச தூரத்தில் கிளை பிரியும் பாதையில் கூட்டிப்போறார் துர்கா.




மலைக்குமேலே  மூணு சின்ன பகோடாக்கள், பாழடைஞ்ச நிலையில். இந்தப்பக்கம் கொஞ்சம் கீழே பார்த்தால் ஹெலிபேட்.  ஹெலிகாப்டர் பயணிகள் இங்கேதான் வந்திறங்குவாங்க.
நம்ம கீதா சொன்னது சரிதான்:-)  ஹெலிபேட் கொஞ்சம் பள்ளத்தில் இருக்கு. அங்கிருந்து மேட்டுக்கு ஏறிவர படிக்கட்டுகளும் இருக்கு.


ஒத்தையடிப்பாதையில் போய்க்கிட்டு இருக்கோம். முந்தி பார்த்த புத்தர் சிலைக்குப்  பக்கத்தில் வந்துருக்கோம். புத்தமடாலயம் இருக்காம். சிலை வேலை இன்னும் முடியலை....


வீடு போல இருக்கும் ஒரு வாசலுக்குள் போறோம். புத்தர் கோவில். சந்நிதிகள் இருக்கு. ஒரு சின்ன மாடம் போல இருக்குமிடத்தில் கம்பிவலை   போட்டு ஃபயர்ப்ளேஸ் போல ஒன்னு. அதுக்குள்ளே உத்துப் பார்க்கணும்.  கீழே கொஞ்ச தூரத்தில் நீலநிற ஜ்வாலை!  இதுதான் ஜ்வாலாமுகி! அணையாம எரிஞ்சுக்கிட்டே இருக்கு  பல காலங்களாக!  ப்ராச்சீன்! சக்திபீடமாம்!



இங்கேயும் வாசலில் ஸோலார்குக்கர் சமையல் நடக்குது.  புத்தமடாலயங்களில்  தால்பாத் தான் முக்கிய சமையலாமே!

இன்னொரு ஒத்தையடிப்பாதையில் வர்றோம். கலர்கலர்த்துணிகளை வரிசையாத் துணி காயப்போடுறதைப்போல் கட்டி விட்டுருக்காங்க. இதுலே  பிரார்த்தனைகள் அச்சிட்டு இருக்காங்க. இதை வாங்கிக் கோவில்களில் கட்டி விடுவதும்  ஒருவகையான வழிபாடுதானாம்!
புத்தமடாலயத்தை அடுத்து.  சுவர்களில் ப்ரேயர் வீல்ஸ்.  சுத்திக்கிட்டே நடந்து அது முடியும்போது,  முக்திநாத் கோவில் மெயின் கேட்டுக்கு உள்புறம்  வந்துருந்தோம். ஏகப்பட்ட சாமியார்கள்.


அதில் ஒருவர்,  'அங்கிருக்கும்  தபஸ்விகளுக்கு ஒருநாள் உணவு தரமுடியுமா'ன்னு கேட்டார். அதுக்கென்ன? தந்தாலாச்சு. எவ்ளோ ஆகுமுன்னு கேட்டுட்டு, அவுங்க சொன்ன தொகையைக் கொடுத்தார் நம்மவர்.

கேட்டைக் கடந்து வெளியில் வந்தாச்சு.  முக்திநாத் தரிசனம் கிடைச்ச திருப்தி எல்லா முகங்களிலும்.  இதுக்குள்ளே நாங்க மூவர் குழுவோடு நண்பர்களா ஆகி இருந்தோம். எல்லோருமா  கொஞ்சம் நிதானமாவே கீழே இறங்கி வர்றோம். இறக்கம் எனக்குப்  பிரச்சனை இல்லை. குழுவில் இருக்கும் ஜெயந்தி, எனக்குச் சரியான ஜோடி!   அவுங்களும் ஆஸ்த்துமா. அப்போ.... அவுங்களை மேலே கொண்டுவிட்ட பஸந்திதான்  திரும்பி வரும்போது பாதிவழியில்  என்னை மீட் பண்ணி இருக்காள் போல!  :-)

குழுவில் இருக்கும் பாலாஜி இவருடைய அண்ணன்.  பெரியவர் சங்கர், உறவுக்காரர்.  இவர் தேவி உபாசகர்.    தோரணவாயில் கடந்ததும்  வழியில் சாளக்ராம் வாங்கணுமுன்னு  அங்கங்கே நின்னோம்.  ஒரு 'கடை'யில் நான்  நமக்கு ஒன்னு வாங்கினேன். கொஞ்சம் பெருசு.  உடைச்சுப் பார்த்து தரம் பிரிச்சு  வகைப்படுத்தி வச்சுருக்காங்க. இது மஹாவிஷ்ணு! சக்கரம் இருக்கு உள்ளே. ஒரு ரப்பர் பேண்ட் போட்டு ரெண்டு பகுதியையும் சேர்த்து வச்சுருக்காங்க.
பெரியவர் சங்கரும் ஒரு கடையில்  சாளக்ராம் பார்த்துக்கிட்டு இருந்தார்.  நாம் வாங்குனதைப் பார்த்துட்டு இந்தக் கடைக்கு வந்தவர் நம்ம சாளக்ராமை கையில் வாங்கிப் பார்த்துக் கண்ணை மூடி நின்னவர்... அதுலே பாஸிடிவ் எனெர்ஜி இருக்குன்னு சொன்னார். யாருக்கு இதெல்லாம் தெரியும்?  சக்தி உபாசகர் சொல்றது சரியாகவே இருக்கட்டும். நம்பணும்னு தோணுச்சு. அதான் ஏற்கெனவே வாங்கிட்டோமே....:-)
பகல் சாப்பாட்டுக்கு என்ன செய்யலாமுன்னு மந்த்ராலோசனை நடந்தது. நல்ல இடம் ஒன்னு இருக்குன்னு சொன்னார் துர்கா. என்னைப் பொறுத்தவரை நல்ல இடம் என்றால் ரெஸ்ட் ரூம் நல்லா இருக்கணும்.  இங்கே நல்லா இருக்குமுன்னு  போனது  யூரேகா இன்.  நீட் அன்ட் டைடி.  மூவர் குழுவும் இப்போ நம்முடன்.
அவரவருக்குத் தேவையானதைச் சொல்லிட்டுக் காத்திருந்தோம். தக்காளி அடுக்களையாம்.  அச்சச்சோ.... தக்காளி வேணாமுன்னு சொன்னோம்!  இங்கே தக்காளின்னா  நம்ம தக்காளி இல்லையாக்கும்!  ஒருவித அசைவ சமையல் முறை!

Thak Khola valley இல் இருந்து வந்த மக்கள் தக்காளிகள். Thakali people. அன்னபூர்ணா மலைப் பள்ளத்தாக்கு மக்கள். அவுங்க சமையல் முறைதான் இது. நேபாளத்தின்  சமையல் வகைகளில் ஒன்னு! நிறைய இடங்களில் தக்காளி கிச்சன் என்ற போர்டு பார்த்துருந்தோம்.  அந்தத் தக்காளி இந்தத் தக்காளின்னு இப்போ புரிஞ்சது:-)

மற்ற அஞ்சு பேரும் சாப்பிட்டது  ஒருவகை வெஜிடேரியன்  தாலி மீல்ஸ்.  எனக்கு வழக்கம்போல்  காரமே இல்லாத சாப்பாடு :-) சமைச்சுக் கொடுக்க முக்கால்மணி நேரம் எடுத்துக்கிட்டாங்க. அதுவரை, தேவி உபாசகர்  நம்ம துர்காவுக்குக் கைரேகை பார்த்துக்கிட்டு இருந்தார்.
ஒன்னு கவனிச்சீங்களா?  எங்கேயாவது கூட்டத்தில்  இருக்கும்போது, கைரேகை பார்க்கத்தெரியுமுன்னு சொல்லிப் பாருங்கள்.  உங்களை நோக்கி    எத்தனை கைகள் நீளுமுன்னு   உங்களுக்கே தெரியாது :-)

நான் ஜன்னல் வழியா வேடிக்கை. ரொம்ப உயரத்தில் மலைமேல் இருந்த புத்தரை டைனிங் ஹாலுக்குக்  கொண்டுவந்தேன்:-)

நம்மவர், துளசிதளத்தின் கொ ப செ யாகச் செயல்பட்டுக்கொண்டு இருந்தார் :-)  சாம்பிள்  எடுத்துக் காமிச்சதும் ,  எல்லோரும்  நம்ம  உரலை எழுதி வச்சுக்கிட்டாங்க.  படிச்சதும் உலக்கையைத் தூக்கி வராமல் இருக்கணுமேடா   பெருமாளே  :-)

சாப்பாடு ஆனதும்  கீழே இறங்கிப்போய்  மற்ற வசதிகளைப் பார்த்தோம்.  இங்கே கூட தங்கி , நிதானமாப் பெருமாளை ஸேவிச்சுருக்கலாமோன்னு .....


பெரிய உள்முற்றத்தில் இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. மேலே  கண்ணாடிக்கூரை. அற்புதமா இருக்கு. இப்படி ஒன்னு நியூஸியில் போட்டால் அட்டகாசமா இருக்கும். ஆனால்...  ஆசைக்குத்தான் அளவேது....

அடுக்களைக்காரர் வெளியில் வந்தார்.  சமையல் நல்லா இருந்துச்சுன்னு பாராட்டி ஒரு சின்ன அன்பளிப்பு கொடுத்தோம். பெயர் என்னன்னு கேட்டதுக்கு, இன்னொரு இளைஞர் வந்து  இவர் பெயரைச் சொன்னார். கிஷன். அட! க்ருஷ்ணன் சமைச்ச சாப்பாடா!!!   ஆமா....  இவர் பெயரை அவர் ஏன் சொன்னாராம்?      கிஷனுக்குப் பேச்சு வராது..............  ப்ச்....  :-(
மணி இப்பவே ரெண்டரை. மதியம் மூணு மணிக்குள் திரும்பிப்போனால் நல்லதுன்னார் நம்ம துர்கா. பல நாட்களில்  மழை வந்துருமாம். ஜீப் போகும் பாதையில் சறுக்கலும் ஏற்படும் அபாயமும் உண்டுன்னதும் சட்னு கிளம்பிட்டோம்.

ஜீப் ஸ்டேண்ட் வரை இப்போ நடந்து போகணும். ஜெயந்தி என்னுடன் நல்லாவே பழக ஆரம்பிச்சவர்.... பேசிக்கிட்டு வரும்போதே  மனசுடைஞ்சு அழுதுட்டாங்க. என்ன மன அழுத்தமோ..... எல்லோருக்கும் மனசுக்குள் ஏதோதோ கஷ்டங்கள். நான் ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினதும் இன்னும் கூடுதல் நட்பானாங்க. உங்களைப் பார்த்ததும் சொல்லணுமுன்னு தோணுச்சுன்னு  சொன்னது  உண்மையிலேயே ரொம்பச்சரி. நமக்கும் சிலரைப் பார்த்தால்  மனசில் இருப்பதையெல்லாம் கொட்டத் தோணுது இல்லையோ....  ஊருக்குள் புதுப்பாதை வரப்போகும் நுழைவு வாசலுக்கு வந்துருந்தோம். இப்போ இன்னும் கொஞ்சம் கீழே இறங்கணும். ரொம்ப சரிவா இருக்கும் பகுதி. அதோ... தூரத்தில்  குதிரை ஸ்டேண்ட்  தெரியுது.

இனி எப்போ பார்க்கப்போறோமோன்னு.... க்ளிக்ஸ் ஆச்சு.  பகல் சாப்பாட்டுக்குக் காத்திருந்த நேரத்தில்  செல்ஃபோன் நம்பர்களை  கொடுத்து வாங்கி வச்சாச்சு.  சென்னைக்கு வந்தபின் கட்டாயம் சந்திக்கணுமுன்னு  பேச்சுறுதியும்:-)

கீழே  சறுக்காமல் இறங்கணுமேன்னு கவனமாக் காலெடுத்து வச்சு ஜீப் ஸ்டேண்ட் போனோம்.  ஜொம்ஸொம் போகணும் இல்லையா!

உங்க வண்டியில் வரலாமா? அதுக்குண்டான காசைத் தர்றோமுன்னு  சொன்னார் சங்கர்.  அப்படி இங்கே முடியாது. பர்மிட் கொடுக்கும்போது படிவத்தில் பெயர் இருக்கும் நபர்கள்  மட்டுமே ஒரு வண்டியில் இருக்கணும். எதுக்கும் கேட்டுப் பார்க்கிறேன்னு போன துர்கா, திரும்பி வந்து அனுமதி இல்லை. உங்க பெயரைச் சொல்லி புக் பண்ணிக்கணுமுன்னு அவுங்களுக்கு வழி காட்டினார்.

முந்தியே குறிப்பிட்டது போல எதாவது அசம்பாவிதம் ஆனா.... நம்மைக் கண்டுபிடிக்க இது மட்டும்தான் வழி! இவுங்க மேலே வரும்போது எப்படி வந்தாங்கன்னு நான் கேக்க மறந்துட்டேன்.

நமக்கும் வண்டி அலாட் ஆனதும் கிளம்பிட்டோம். அப்பதான்  நம்மவர் கேட்டார், 'அது என்ன அவுங்க என்னமோ அழுதுக்கிட்டு  கண்ணைத் தொடைச்சுக்கிட்டே உங்கிட்டே பேசுனாங்க. நீ கட்டிப்பிடிச்சு முதுகைத் தட்டி என்னவோ சொல்லிக்கிட்டு இருந்தே?'

"எதோ பொம்மநாட்டிகள் கஷ்டம்... அதைக் கேக்காதிங்கோ.  கோவிலுக்கு வந்துட்டுப் பொய் சொன்னால் பாவம் "

தொடரும்.................  :-)



மாதா சரஸ்வதி...... சாரதே..... ( நேபாள் பயணப்பதிவு 15 )

$
0
0
முக்திநாத்தில் இருந்து  அதே இடித்தல் குலுக்கலோடு  திரும்ப ஒரு மணி நேரப் பயணம்.  போனதை விட  வரும்போது கால் மணி  குறைவு.  ட்ரைவர் கொஞ்சம்  மெச்சூரிட்டியானவர். ப்ரேக்கில் வச்ச காலை  எடுக்கலைன்னு வையுங்கோ :-)


மலையாடுகள் கூட்டம் அங்கங்கே.... மேய்ச்சலில்.  அதே மொட்டை மலைகள்,  கண்டகி நதி,  சாலை அமைக்கும் வேலை, வேலையாட்கள், வழியில் ஒரு தொங்குபாலம், இன்னபிற காட்சிகளோடு   இந்த  20 கிமீ தூரத்தைக் கடந்து (Lubra) லுப்ரா கிராமத்துக்கு வந்து சேர்ந்தோம். இதுதான் நாம்  ஜொம்ஸம்  பாலம் கடந்து போய் ஜீப் எடுத்த இடம். இங்கிருந்து முக்திநாத் வரை  குட்டிக்குட்டியா கிராமங்கள் வழி நெடுக இருக்கு. சிலதில் நாலைஞ்சு வீடுகள் இருந்தாலே அதிகம். நாம் பகல் சாப்பாடு சாப்பிட்ட இடம் கூட புராங் கிராமம்தான்.  கொஞ்சம் பெரிய ஊர் :-)


கண்டகியும் நம்ம கூடவே வந்துக்கிட்டு இருந்தாள் :-)





போகும்போது கோட்டை விட்டது போல் இல்லாம.... நம்ம ஜீப் ட்ரைவரை க்ளிக்கினேன்:-)

அங்கிருந்து பொடி நடையில்   லுப்ரா கிராமம் கடந்து  அந்த ஹிஸ்ட்டாரிக்கல் மரப்பாலம் வந்து சேர்ந்தோம்.  இதைத் தாண்டினால் ஜொம்ஸொம். மோட்டர்பைக் ஒன்னு போகக் காத்திருந்து இன்னொருவர்   நடந்து போனார்.   அப்புறமா  நாங்களும்   கவனமா நடந்து போனோம்.



பாலம் கடந்ததும் 'ஹொட்டேலுக்குப்போக டாக்ஸி கூப்பிடவா'ன்னார் துர்கா. 'வேணாம். மெள்ள நடக்கலாமு'ன்னு சொல்லிட்டேன். நாலுமணி ஆகி இருக்கு. கண்டகியை ஒட்டியே போகும்  பாதையில் ஊருக்குள் வர்றோம்.
பள்ளிக்கூடம்  விட்டாச்சு.  பூப்போல பிஞ்சுகள் கூட்டமா ஆரவாரத்தோடு வெளியில் ஓடி வர்றாங்க. ஆரம்பப் பாடசாலை!  பசங்க எல்லா ஊர்லேயும் ஒன்னுதான் :-)


பாரம் சுமந்து மலையேறும் குதிரைகள் கோழிகளைச் சுமந்துக்கிட்டுப் போகுது.  மேலே போகப்போக ஒன்னுமே கிடைக்காது என்பதால் எல்லா சமாச்சாரங்களும் கடைசியா வாங்கிப்போவது ஜொம்ஸொம்மில் இருந்துதானாம். அதான்  மேலே எல்லாமே விலை கூடுதல்னு சொன்னார் துர்கா.
குழந்தைத்தொழிலாளர் தடை செய்யப்பட்டது. ரொம்ப நல்லது.

ஹொட்டேல் வரும் வழியில் இன்னொரு சின்ன பாலம், பார்க் கடந்தால் ஒரு கோவில் கண்ணில் பட்டது.  டக்னு ப்ரேக் போட்டது என் கால்கள் :-)   ஸ்ரீ சரஸ்வதி மந்திர்!  சராஸ்வதி மாதா கி ஜெய்!  உண்மைதான். கல்வியை வச்சுத்தான் இனி வாழ்க்கையில் முன்னேற முடியும்.  கலியுகம் பாருங்க!  போய்க் கும்பிட்டுக்கிட்டோம். ஹாஃப் டோர் மூடி இருக்கு!   பாக்கி ஹாஃப் டோரில் தரிசனம்:-)


சாலை(!)யில்  நாலடி வைக்கும்போதே கெமெரா பேட்டரி மண்டையைப் போட்டுருச்சு.  ரெண்டு  பேட்டரி பவரும் காலி.  கிட்டத்தட்ட ஆயிரம் படங்கள் எடுத்துத் தள்ளி இருந்தேனே!   ஏர்ப்போர்ட்வரை வந்துட்டு திரும்பி ஹொட்டேலுக்குப் போறோம்.

அறை தயாரா இருந்துச்சு.  முதலில் பேட்டரிகளையும்  செல்ஃபோன்களையும் சார்ஜரில் போட்டோம். வந்ததும்  வைஃபை பாஸ்வேர்ட் கேட்டு வாங்குனதும் முதல் வேலையா நம்ம பயணத்திட்டத்தில் கஷ்டமான பகுதியா இருந்த முக்திநாத் தரிசனத்தைப் பெருமாளின் க்ருபையால்  நல்லபடி முடிச்சுட்டோமுன்னு  அண்ணனுக்கும், நெருங்கிய தோழிகளுக்கும் சேதி அனுப்பினேன். கூடவே இன்னொரு கொசுறுத்தகவலும். நான் இப்ப யாருன்னு தெரியுமா? ........  ஜெனமேஜெயன் :-)

அறை ஜன்னலைத் திறந்து பார்த்தால்.....   விமானதளம்.  ஓடுபாதை:-)  நீல்கிரி அதோ!!!
கொஞ்சநேர ஓய்வு.  குளிச்சு ஃப்ரெஷாகலாமுன்னு  தோணுச்சு. அப்போதைய கண்டுபிடிப்பு உடலெல்லாம் விழுப்புண்கள் மாதிரி விழுத்தடயங்கள். வண்டி குலுக்கலில் சம்பாதிச்சது.  கருப்புக் கருப்பா ரத்தம் கட்டிக் கிடக்கு. எனக்கு சின்னதா அடிபட்டாவே ரத்தம் கட்டிரும். இவ்ளோ ஏன்  ரத்தப் பரிசோதனைக்கு  ரத்தம் எடுக்கப்போடும் ஊசி காயம் கூட நாலைஞ்சுநாள் அப்படியே கருப்பாக் கிடக்கும். ரத்த ஓட்டம் சரி இல்லெப்பா....  இந்த அழகில் இருக்கும் உடம்பு  ....  அந்த  ஜீப் குலுக்கலைத் தாங்கி இருக்குமோ!!!

குளிச்சு முடிச்சுட்டு வந்து தலை வாரிக்கிட்டு , சீப்பில் இருக்கும் அழுக்கைப்போட குப்பைத்தொட்டியைத் தேடறேன். அதுலே உக்கார்ந்துருக்கு கோபாலின் ஷூக்கள்!  என்ன ஆச்சு? இதோ இப்படின்னு எடுத்துக் காமிக்கிறார்!  அட ராமா.....
என்னோட ஷூ எப்படி இருக்கோன்னு பார்த்தால்   ஒன்னும் ஆகலை. பஸந்தி காப்பாத்திக் கொடுத்துருக்காள் :-)  புழுதி போக துடைச்சு வச்சேன்.  செருப்பு போதும்.

உடலெல்லாம் அசதி. சீக்கிரம் சாப்பிட்டுத் தூங்கணும். துர்காவும்  போய் குளிச்சுட்டு, அடுக்களைக்குப்போய் நமக்கான சாப்பாட்டைத் தயாரிக்கச் சொல்லியிருந்தார். 'காரமே இல்லாமல் சமைக்கச் சொல்லுங்க'ன்னு  கண்டிஷன் போட்டுருந்தேன்:-)

ஏழேகாலுக்குச் சாப்பிடப்போகலாமான்னு  கேக்க நம்ம அறைக்கு வந்தவர், குப்பைக்கூடையில் இருந்த கோபாலின் ஷூக்களை 'என்ன ஆச்சு'ன்னு  கேட்டுக்கிட்டே  எடுத்துப் பார்த்துட்டு 'இனி இது வேணாமா'ன்னார்.   வச்சு என்ன பண்ணறது? ஊஹூம். 'நான் எடுத்து யாருக்காவது  கொடுக்கவா? ரிப்பேர் பண்ணிப் போட்டுக்குவாங்க'ன்னார்.  'அப்படின்னா இதையும்  கொடுத்துருங்க'ன்னு என்னுடைய ஷூக்களையும் எடுத்துக் கொடுத்துட்டேன்.  முக்திநாத்துக்குன்னே   வாங்குனது. முக்திநாத்  போயும் வந்துருச்சு:-)  அது போதும். யாருக்காவது பயன் ஆனால் நல்லதுதானே?

டைனிங் ரூம் போனோம். ஃப்ரைடு ரைஸ், உருளைக்கிழங்கு  குழம்பு, சப்பாத்தின்னு நாங்க மூணுபேரும் சாப்பிட்டு முடிச்சோம். மறுநாள் திட்டம் பற்றிக் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். காலையில்  வெளியே போனவங்க எல்லாரும் திரும்பிட்டாங்க போல.  டைனிங் ஹாலின் அடுத்த பகுதியில் ஒரே கூச்சலும் கொண்டாட்டமுமா இருக்கேன்னு பார்த்தால்  இளைஞர்களின்  குழு. பார்ட்டி நடக்குது!  மலையேற வந்த குழுவாம்!


சரி.  இனிமே இங்கே உக்கார்ந்தால் தலைவலி நிச்சயம்.போய்த் தூங்கலாமுன்னு   துர்காவுக்குக் குட்நைட் சொல்லிட்டு நம்ம அறைக்குப் போறோம். இது இந்தக் கட்டடத்தின் ரெண்டாங்கட்டுப் பகுதி.  நம்ம அறை  ரெண்டு வராந்தா சந்திக்கும் மூலை அறை.  பக்கத்து அறை ஒன்னு  கதவுகள் திறந்து கிடக்க , உள்ளே உக்காந்து பேசிக்கிட்டு இருக்காங்க  நம்ம பாலாஜியும் சங்கரும்!  அட! ஜெயந்தி எங்கேன்னு கேட்டதுக்கு  எங்க அறைக்கு அந்தப் பக்கத்து அறைன்னு  கை காமிச்சாங்க. அதுக்குள்ளே ஜெயந்தியே அங்கே இருந்து  இங்கே வந்துட்டாங்க.

சாப்பாடு ஆச்சான்னு கேட்டதுக்கு, என்னமோ சூப் சாப்பிட்டதாக ரெண்டுபேர் சொல்ல, சங்கர் மட்டும் 'ராத்திரியில் சாப்பாடு  சாப்ட்றது இல்லை'ன்னார். வெறும் பழங்களாம்!  எனக்கு நம்ம ஜெமோ நினைவுக்கு வந்தார்.  அதே சமயம் காலையில் மவுண்டன் வ்யூவில் பார்ஸல் கொடுத்த ப்ரேக்ஃபாஸ்ட்டில் ஆப்பிள் இருந்தது  நினைவுக்கு வர, நம்மவர் போய் அதைப்  பையில் இருந்து கொண்டு வந்தார்.

ஏற்கெனவே வாங்கி வச்சுருக்கேன்னு சொல்லி ஒரு பொதியைக் காமிச்சார் சங்கர். அஞ்சு கிலோ ஆப்பிள் கீழே  சாலைக்கடையில் வாங்கினாராம். ரொம்ப மலிவுன்னார். மூணு பேருமே ஆளுக்கு அஞ்சு கிலோ வாங்கி எடுத்துக்கிட்டுப் போறாங்க இந்தியாவுக்கு!  நம்மவர்  என்னைப் பார்த்தார்.....  ஆப்பிள் என்றாலே காத தூரம் ஓடறேன் இப்பெல்லாம்.  பார்த்து, தின்னு சலிச்சுப்போச்சு இங்கே நியூஸியில்.

'நம்ம கிட்டே இருக்கும் நட்ஸ் கொஞ்சம் கொடுங்க'ன்னதும் அறைக்குப்போய் எடுத்துவந்து சங்கரிடம் கொடுத்துட்டு, இதையாவது சாப்பிடுங்க. வெறும் வயித்துலெ  படுக்க வேணாமுன்னார். நாம் அவுங்களைப் பற்றியும், அவுங்க நம்மைப்பற்றியும் விசாரிச்சுப்பேசித் தெரிஞ்சுக்கிட்டோம். துளசிதளத்துக்கு மூணு வாசகர்கள் கன்ஃபர்மாக் கிடைச்சாங்க,  நம்ம கொ ப செ  கோபாலால் :-)

நம்ம பயணத்திட்டத்தைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, நாம் போகப் போகும் ஒரு இடத்துலே நமக்கு உதவி செய்ய ஒருத்தர் இருக்காங்கன்னு அவுங்க ஃபோன்நம்பர்  கொடுத்தார் பாலாஜி  . நல்லதாப் போச்சு. தெரியாத ஊரில் தடுமாற வேணாம்.....

ஒருமணி  நேரம் பேசிக்கிட்டு இருந்துருக்கோம். மறுநாள் காலையில் அவுங்களும் பொகரா வர்றாங்க. ஆனா  ஊருக்குள்ளே வராம,  காத்மாண்டுக்குக் கனெக்டிங் ஃப்ளைட்லே போய், அன்றைக்கு  இரவே  தில்லி.  மறுநாள்  ரயிலில் சென்னையாம்.

காத்மாண்டுவில் நாம் என்னெல்லாம் பார்த்தோமுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, புதா நீலகண்ட் பார்க்கலையேன்னு வழி எல்லாம் கேட்டு வச்சுக்கிட்டாங்க.  இரவுதான் தில்லி ஃப்ளைட் என்பதால்  நடுவில்  அஞ்சாறு மணி நேரம் இருக்கே!  நம்ம செல்லில் இருந்த  ஜல சயன நாராயணன் படங்களைக் காமிச்சேன். அவ்ளோதான். கட்டாயம் போகத்தான் வேணுமுன்னு அடிச்சுச் சொல்றார் பாலாஜி.

துவாரகா போகணுமாம். வழி சொல்லுங்கன்னார்.... துளசிதளத்தின் லிங்குகளை  அனுப்பி விடறேன். பார்த்துக்குங்கன்னு சொல்லியாச் :-)

தொடரும்............ :-)





நினைச்சது ஒன்னு கிடைச்சது மூணு ( நேபாள் பயணப்பதிவு 16 )

$
0
0
நல்ல தூக்கம் தூங்கி மறுநாள் காலை  ரெடி ஆகிட்டோம்.  என்ன ஒன்னு கரண்டு இல்லை.  இருட்டிலேயே தட்டுத்தடுமாறி..... அப்புறம்   பவர் வந்துருச்சுன்னு மணிபார்த்தால் காலை அஞ்சு ! பைகளை பேக் பண்ணியாச்.  எக்ஸ்ட்ரா வெயிட்  நம்ம சாளக்ராம்தானோ? ஊஹூம்.... அதான்   ஷூக்கள்  போயிருச்சே!  அதெப்படி அது கால்லே போட்டுக்கிட்டு வந்ததில்லையோ?  நம்ம கனம் குறைஞ்சு போயிருக்கும் இப்போ! இங்கேதான்    ஏர்ப்போர்ட்டில்  மனுசர்களையும் எடை போடறாங்களே ! அதுவும்  ஊர் முழுக்கக் கேக்கும்படி சத்தம் போட்டு ** கிலோன்னு ....ஐயோ... :-)

  நமக்கு ஆறேமுக்கால் ஃப்ளைட்.  துர்கா வந்து என்ன ப்ரேக்ஃபாஸ்ட் சொல்லட்டுமுன்னு கேட்டார். மெனு பார்த்துட்டு ஒன்னும் சரிப் படலை. பேன் கேக்  சொல்லிருங்கன்னதும் நம்மவர் தனக்கும் அதேன்னார்:-)
அடை மாதிரி திக்கா ஒன்னு வந்தது, கொஞ்சம் தீசலோடு!  முடிஞ்சவரை தின்னாப்போதும். கூடவே  ஒரு காஃபி. நெஸ்காஃபிதான். துர்கா ப்ரெட் டோஸ்ட் & டீ.

நேரம் ஆயிருச்சுன்னு   பைகளை எடுத்துக்கிட்டு அறையை விட்டு வெளியே வந்தால்  சங்கர் & கோ ரெடியாகி அறைவாசலில்  இருந்தாங்க. அவுங்க  ஃப்ளைட்  எட்டு மணிக்காம். வேற ஏர்லைன்ஸ். பைபை சொல்லிட்டு  இருக்கும்போதே துர்கா வந்து 'ஃப்ளைட்  டிலே . கொஞ்ச நேரம் கழிச்சுப் போகலாமு'ன்னார்.
சரின்னு  நான் வைஃபை கிடைக்குதான்னு தேடிக்கிட்டு இருக்கும்போது நம்மவர்  சங்கர் & பாலாஜி  இருக்கும் அடுத்த அறைக்குப் போய் வந்தவர் கையில் ரெண்டு சாளக்ராம் இருக்கு.  இதை  சங்கர் நமக்குத் தரேன்னு சொல்றாருன்னார்.  அப்ப அவருக்கு? எட்டு வாங்கி இருக்காராம். அதுலே ரெண்டு வேணுமுன்னா தரேன்னு  காமிச்சாராம். அவருக்குன்னு வாங்குனது என்பதால் நல்லதாவே வாங்கி இருப்பார். அதுவும் முக்திநாத்தில் வாங்குனது என்பதால் ஒரிஜினலாக இருக்கும்தான். ஆனால் 'அதுக்குண்டான காசு வாங்கிக்கறதா இருந்தால் ஓக்கே'ன்னேன். திரும்பிப்போய்  நான் சொன்னதைச் சொல்லி  'விலைக்குத் தர்றதா இருந்தால் எடுத்துக்கறே'ன்னதும் விலையைச் சொன்னவர், எந்தக் காசா இருந்தாலும் சரின்னார்.  என்னிடம் இந்தியக் காசு  வச்சுருந்தேன். அதையே  கொடுத்தேன்.

இப்ப நம்மாண்டை மூணு சாளக்ராம் கற்கள்.  நினைச்சது ஒன்னு  கிடைச்சது மூணு :-)

சங்கரும் நம்ம அறைக்கு வந்து பேசிக்கிட்டு இருந்தார். அவருடைய மகளுக்குக் கல்யாணம் வச்சுருக்காராம். கட்டாயம் கல்யாணத்துக்கு வரணுமுன்னு கேட்டுக்கிட்டார். சென்னைக்குப் பக்கம்தான். ஆந்திரா பார்டருக்குப் பக்கம் புத்தூரில்.  நாங்க அதுவரை  சென்னையில் இருப்பமான்னு தெரியலை. இருந்தால் வர்றோமுன்னு சொன்னோம். எனக்கு இவரைப் பார்த்ததும் எங்க தாடி மாமா ஞாபகம் வந்துக்கிட்டே இருக்கு :-)

 உங்களுக்கு  என்  தாடிமாமாவைத் தெரியுமோ?தெரியலைன்னா.... இங்கே பாருங்க:-)



கோவில் ஒன்னு கட்டிக்கிட்டு இருக்காராம். தேவி உபாசகராச்சே!  நல்லதுன்னு சொன்னேன்.  பேச்சுக்கிடையில் அப்பப்ப ஜன்னல்வழியா ரன்வேயைப் பார்த்து க்ளிக்கிக்கிட்டு  இருந்தேன். ப்ளேன் வர்ற தடயம் கூட இல்லை.  அப்போ ஒரு ஆள் ரன்வேயில் ஓடிக்கிட்டு இருந்தார்.  வருது போல.....
அதே சமயம்  துர்கா வந்து நம்ம பைகளை எடுத்துக்கிட்டுக் கீழே போனார்.  ஜன்னலை மூடிட்டு நாங்களும் போனோம். நேத்து  பார்ட்டி நடந்த இடம் அந்தச்  சுவடே தெரியாமல்  சுத்தமா இருக்கு.  பார்ட்டிக்கான  சுவடு  வெளியில் சுவத்தோரம்!  ரீசைக்கிள் ஆகுமுன்னு நினைக்கிறேன். இங்கே கூடைகள் எல்லாம் கும்மாச்சி ஸ்டைல்தான்.

நேபாளில் குளிர் அதிகமா இருக்குமுன்னு  நானே என் கையால் ஒரு ஸ்கார்ஃப் பின்னிக்கிட்டுப் போயிருந்தேன். அங்கே போனா... குளிரைக் காணோம். அதுக்காகக் கஷ்டப்பட்டுப்  பின்னியதை விட முடியுதா?  குறைஞ்சபட்சம் ஒரு க்ளிக்?  :-)

ரெண்டே நிமிச நடையில் ஏர்ப்போர்ட்.  அங்கிருந்து இன்னும் ஃப்ளைட் வரலைன்னு வாட்ச்மேன்  சொன்னதும் 'அங்கே நின்னுக்கிட்டு என்ன செய்யறது....  திரும்ப அறைக்கே போகலாமுன்னு  துர்கா சொன்னதும்.... 'செக்கவுட் ஆனபின் எப்படித் திரும்பப் போறதுன்னேன்.

'அதெல்லாம் இங்கே பரவாயில்லை. ....   ப்ளேன் வந்ததும்  ஏர்ப்போர்ட்க்கு வந்தால் ஆச்சு'ன்னார். ஹொட்டேலுக்குத் திரும்பி மேலே அறைக்குப் போனோம். செக்கவுட் செய்யறோமுன்னு  கதவைச் சும்மா சாத்திட்டு வந்தது அப்படிக்கப்படியே இருக்கு.  ஜன்னல் கதவைத் திறந்து வச்சேன். ப்ளேன் லேண்ட் ஆச்சுன்னா தெரியுமே :-)

இதுக்குள்ளே ஜெயந்தி நம்ம அறைக்கு வந்தாங்க. அவுங்களோடும் பேச்சு.  அப்புறம் இங்கே இருக்கறதுக்குப் பதிலா ஏர்ப்போர்ட்டே போயிடலாமுன்னதும் திரும்பப் போனோம்.   நல்ல கூட்டம்.  உள்ளுர் சனமே அதிகமா இருக்காங்க.




அம்மா தூக்கி வச்சுருந்த குழந்தை அழகு!  பெயர் சொன்டில்.... செந்தில்னு நான் நினைச்சுக்கிட்டேன்:-)
கொஞ்ச நேரத்துலே ஸிம்ரிக் லேண்ட் ஆச்சு.  வேடிக்கை பார்க்கும்போதே டாராவும் வந்துருச்சு.

சங்கர் & கோ அதுலே போயிட்டாங்க. நம்ம ஸிம்ரிக்கிலே உள்ளூர் ஆளுங்களுக்கு முன்னுரிமையோ என்னவோ அதுவும் கிளம்பிப்போயிருச்சு. இப்ப வந்துரும் கொஞ்சம் வெயிட்ன்னு சொல்றாங்க.
நாங்க  அங்கே இங்கேன்னு பேசிக்கிட்டே சுத்திக்கிட்டு இருக்கோம், 'அப்பப்ப வந்துட்டானா  வந்துட்டானா'ன்னு எட்டிப் பார்த்துக்கிட்டே :-)  இன்னொரு இந்தியத் தம்பதிகள்  சிநேகமாச் சிரிச்சாங்க. போதாதா?  ராஜஸ்தான் மாநிலமக்கள். ஆனால் பொறந்து வளர்ந்ததெல்லாம்  சிவகாசி!  என்னைவிட  நல்லாவே தமிழ் பேசறாங்க. கயிலை யாத்திரை முடிச்சு  முக்திநாத் தரிசனத்துக்கு  வந்திருக்காங்க.  நேத்து தரிசனம் ஆச்சாம். இதோ..திரும்பிப்போறாங்க.
கயிலை யாத்திரை, கஷ்டமா? பரிக்ரமா பண்ண முடிஞ்சதான்னு விவரம் கேட்டுக் கிட்டேன்.  அவ்வளவாக்கஷ்டம் இல்லையாம். ஆனால்  60 வயசுக்கு மேலே இருந்தால் பரிக்கிரமா  அனுமதி இல்லை. கணவர் உடம்பு வேறு அன்ஃபிட்ன்னு சொன்னாங்க.  கயிலை தரிசனம் மட்டும்  செய்ய அனுமதிச்சாங்களாம். அவுங்க பெயர் மது. என் மகளோட பெயரும் இதுதான்னு சொன்னேன்:-)

துர்காவோடு கொஞ்சம் கதை.  அவருடைய  மலைப்பயணங்களைப் பத்திச் சொன்னார். ப்ளேன் வந்தது. பைலட் இறங்கி வந்து வெளியே பெஞ்சில் உக்கார்ந்து   ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடறார்.  மணி ஒன்பதாகிருச்சு. காத்து வந்துருமோன்னு  கலக்கம்....  நல்லவேளை  ஒன்பதே காலுக்கு, 'போய் கேறிக்கோ'ன்னு  உத்தரவாச்சு.
போன அதே மாதிரி திரும்பி வர்றோம். அதே ஸீட்டும்கூட:-)  முட்டாய் கூடவே காதுக்குப் பஞ்சும் வச்சுருக்காங்க,  நம்முன்னே நீட்டுன கூடையில்:-)
ஹைய்யோ....  இப்படி பஞ்சு கொடுக்கறது இன்னும் இருக்கா என்ன? இதை வச்சே சினிமாவில் எத்தனை ஜோக்ஸ் வந்டுருக்கு :-)  கோட்டைச் சுவர் போல அடர்த்தியா வெள்ளை மேகங்கள் வழியை மறைக்குது. அன்னபூரணா, தவளகிரி, மச்சிப்புச்சரே எல்லாம்  மேகத்துக்கிடையில்  லேசா காட்சி கொடுத்தாங்க.
பொகரா நெருங்கிருச்சு. ஃபேவா லேக்  இதோ பரந்து விரிஞ்சு போய்க்கிட்டு இருக்கு. கிளம்பிய இருபதாவது நிமிட் பொகரா வந்துட்டோம்.  இதே இடத்துக்கு  சாலை வழியாப் போனால் சுமார் பதினொரு மணி நேரமாகுமாம்! அம்மாடியோவ்....

ஒழுங்கான நேரத்துக்கு விமானம் அமைஞ்சுருந்தால் காலை ஏழு மணிக்கு  மவுண்டென் வ்யூ வந்துருக்க வேண்டிய நாம் இப்போ மூணுமணி  நேரம் கழிச்சு வந்துருக்கோம். 'அந்தவரைக்கும் நல்லபடியா வந்து சேர்ந்தமேன்னு சந்தோஷப்படு'ன்றார் நம்மவர்.

அதே அறை கொடுத்தாங்க.  ஒருமணி நேர ரெஸ்ட்.  ஏர்ப்போர்ட்டில் காத்துருந்தே களைச்சுப் போயிருந்தோம். இன்றைக்கு இங்கேதான் தங்கறோம். பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கு:-) மவுண்ட் வ்யூ ஹொட்டேல் கார் நமக்காகக் காத்திருந்துச்சு.

டிரைவர், வாயில் குட்கா போட்டுக் குதப்பிக்கிட்டு இருக்கார். பேச்சு கிடையாது.  எல்லாமே  கண்ஜாடை கை ஜாடைதான்:-) இந்த குட்காவைக்கூட இப்பதான் வாழ்க்கையில்   முதல்முறையாப் பார்க்கிறேன்.  இது கூட இந்திய இறக்குமதிதான்.
பதினொன்னேகாலுக்குக் கிளம்பியாச்சு ஊர்சுத்த  :-)


இஞ்சிப் பச்சடி... தொட்டு நக்கடி :-)

$
0
0
இப்படி ஒரு பழமொழியைக் கேட்டுருக்கீங்களா?

வருசத்துக்கான இஞ்சியை, குளிர்காலம் வருமுன் வாங்கி சேமிச்சு வச்சுக்கணும். முக்கியமா கடையில் ஸேல் (ஆஃபர்) வருதான்னு  கவனிச்சுக்கிட்டே இருக்கணும். குளிர்காலம் வந்துட்டால்..... கிலோ பதினைஞ்சு டாலர் வரை விலை ஏறிடும்.

கண்ணு நட்டுக்கிட்டே இருந்தவ, காய்கறிக்கடையில்  ஸேல் வந்துருக்குன்னு பார்த்துட்டுப் பாய்ஞ்சு போய் வாங்கி வந்தேன். எனக்கு முன்னால் நின்ற  சீனர், இஞ்சித் துண்டுகளைக் கவனிச்சு ஓரத்தில் வங்கரபங்கரன்னு நீட்டிக்கிட்டு இருந்ததையெல்லாம் ஒடைச்சுப் போட்டுட்டு நல்ல மழமழப்பான பாகங்களைமட்டும்  பையில் போட்டுக்கிட்டு இருந்தார்.  நம்மூர் கடைகளில் இப்படிச் செஞ்சா, கையை ஒடைச்சுருப்பாங்க......  இங்கே..........   அவரவரருக்கு அவர் மனம் சொன்னபடி.....

ரொம்ப நியாயவாதியான நான் வாங்கி வந்தது இப்படி :-)
கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது ( ஆங்.... கிடைச்சுட்டாலும்.............. நாமே கொஞ்சம் நேரத்தை இதுக்கு ஒதுக்கினால் தான் உண்டு...) கூலிங் க்ளாஸ் போட்டுக்கிட்டு, மேல் தோலை சுரண்டி, தேவையான இடத்தில் தோலைச்சீவின்னு  ஆச்சு.
'கொஞ்சங்கா... அல்லம் பச்சடி ச்சேஸி  சூஸ்த்தாமா?' தோணல்தான்.

நம்மவருக்கு  கேரள ஸ்டைல் புளி இஞ்சி பிடிக்கும்.  பேசாம கேரள அல்லம் பச்சடி துள்ஸி ஸ்டைலா செஞ்சால் என்ன ஆகப்போகுது?

தேவையான பொருட்கள்:

இஞ்சி  200  கிராம்   நம்மகிட்டே கிச்சன் ஸ்கேல் இருக்கு :-)

உப்பு   ஒன்னரை டீஸ்பூன்

மிளகாய்ப்பொடி   முக்கால் டீஸ்பூன். ( இது வெரிஹாட் ச்சில்லீ பவுடர்)

மஞ்சள் பொடி  அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்

கடுகு  முக்கால் டீஸ்பூன்

சாஃப்ட் ப்ரௌன் ஷுகர்  கால் கப்.  இது இல்லைன்னா வெல்லம் போட்டுக்கலாம்.

எண்ணெய்  கால் கப்.

அல்லம்பச்சடி செய்யணுமுன்னா நல்லெண்ணெய்
கேரளா புளி இஞ்சி செஞ்சுக்கலாமுன்னா வெளிச்செண்ணெய். (தேங்காய் எண்ணெய்தான்)

பச்சை மிளகாய்  ஒரு  அஞ்சு.

கறிவேப்பிலை   மூணு இணுக்கு.  கழுவிட்டு இலைகளை உருவி வச்சுக்கணும்.

புளிக் கரைச்சல்  ஒரு அஞ்சு  டேபிள் ஸ்பூன். கெட்டிக் கரைசலா இருக்கட்டும். நான் அஞ்சு புளி க்யூப் சேர்த்தேன்:-)

செய்முறை:

மிக்ஸியில் சட்னி ஜார் பொருத்திக்குங்க.

தோல்  சுரண்டிச் சீவிய இஞ்சியை துண்டுகளா நறுக்கிக்கணும். அப்பதான் சீக்கிரம் அரைபடும். இதை அரைக்கும்போதே... பச்சைமிளகாய் & கறிவேப்பிலையைச் சேர்த்து அரைச்சுக்கலாம். தண்ணி சேர்க்காம அரைச்சுருங்க. கொரகொரன்னு இருந்தால் போதும்.

அடுப்பைப் பத்த வச்சு  வாணலியை அதன் தலை மேல் வச்சுட்டுக் கொஞ்சம் சூடானதும்  தேங்காய் எண்ணெயை  அதில் ஊத்துங்க. நல்ல சூடு வந்ததும் கடுகை சேர்த்து, கடுகு படபடன்னு வெடிச்சதும், அரைச்சு வச்ச  இஞ்சி விழுது சேர்த்து கூடவே உப்பையும் போட்டு வதக்குங்க.

அடுப்பு மிதமா எரியட்டும்.  நல்லா வதங்கணும். அடிபிடிச்சுடாம அப்பப்பக் கிளறிக்கிட்டே இருக்கணும். நல்லா வதங்கி வாசம் வந்ததும், நடுவிலே கரண்டியால் சின்னக்குழி பறிச்சு (!) இன்னொரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு  அதுலே பெருங்காயத்தூள், மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி  சேர்த்து அதை மட்டும் ஒரு நிமிட் கிளறிக்கொடுத்துட்டு, கடாயிலிருக்கும்  மற்ற  எல்லா சமாச்சாரத்துடன் சேர்த்துக் கிளறலாம்.

அடுத்து  சேர்க்கறோம்....  புளிக்கரைசலை. தளதளன்னு கொதிச்சு கெட்டிப்பட்டதும் ப்ரவுண் சக்கரையை சேர்த்து நாலு கிளறு கிளறி இறக்கினால் ஆச்சு.
நல்லா ஆறவிட்டு ஒரு  ஜாடியிலோ பாத்திரத்திலோ எடுத்து வச்சுக்கலாம். சாப்பாட்டு சமயத்தில் ஊறுகாய்க்குப் பதிலா தொட்டுக்கலாம். அப்புறம் இருக்கவே இருக்கு இட்லி, தோசை வகைகள். எல்லாத்துக்கும் சரியாகும்.
சோதனை எலியிடம்  கொஞ்சூண்டு கொடுத்து தின்னு பார்க்கச் சொன்னேன்.

"அருமையா இருக்கு. இது என்ன?  "

"அட ராமா.... இஞ்சி வாசனை அறவே இல்லையா? "

"  இருக்கே!   ஆமாம், இது இஞ்சிச்   சட்னியா? "

 "ஙே........... "
PINகுறிப்பு : சமைக்கும்போது படம் எடுக்கலை.  அடிபிடிக்க விடாம கிளறிக்கிட்டு இருந்தேனோல்யோ? அதனால்  பாத்திரத்துலே எடுத்து வச்சபிறகு எடுத்த படங்கள் இவை.

 பார்க்க  கலர்ஃபுல்லா இல்லை என்பதால் ........   சொக்கட்டானை உருட்டி விட்டேன்:-)


பிந்த்யாபாஸினி( நேபாள் பயணப்பதிவு 17 )

$
0
0
முதலில் போனது பிந்த்யா/ பித்யா பாஸினி கோவிலுக்கு!  இவுங்களுக்குத்தான் வ வராதே ....  வித்யா பாஸினி....  வித்யா வாஸினி....  ஒரு வேளை சரஸ்வதியோ?  இல்லையாமே... துர்கா கோவில்னு  சொன்னார் துர்கா:-)  ஊருக்குள்ளே பிஸியான கடைவீதிப்பகுதியிலே சட்னு எழும்பி நிக்கும் ஒரு மேட்டில் கோவில்.  பூஜை சாமான்கள்,  நினைவுப்பொருட்கள், பாசிமணிகள்  விற்கும் கடையாண்டை இறங்கி  மாடிக்குப் போறது போல் படிகளில் ஏறிப்போனோம்.


கொடிமரம் போல் ஒரு மேடையில் பெரிய த்ரிசூலம், இடுப்பில்  உடுக்கை கட்டிக்கிட்டு நிக்க, பக்கத்தில் இன்னொரு மேடையில் நந்தி ஸார்.  அவருக்கு எதிரில் கோவில் (!) கட்டடம். கேரளா ஸ்டைலில் ஓடு போட்டு இருக்கு.






ஒரு பெரிய ஹால்.   நேரா நடுவில் நம் கண்ணுக்கு  எதிரில்   கம்பித் தடுப்புக்கு  அந்தாண்டை ஒரு  மேடை மேல் பெரிய பித்தளை கங்காளம். அதுலே சிவலிங்கம் சின்னதா!  நீச்சல் குளம்:-)  பக்கத்துலே  இன்னொரு சிவலிங்கம், நிறைய பூக்கள் அலங்காரத்தோடு!  அவருக்கு தாராபிஷேகம் நடத்திக்கத் தூக்கி மாட்டுன அபிஷேகநீர் பாத்திரம்!  பேக் ட்ராப்.... பெயிண்டிங்      நடராஜர்!  சமீபத்துலே கட்டுன கட்டடம்தான்.
வளாகத்தில் நிறைய மரங்கள். பெரிய மரங்களைச் சுத்தி  மேடை வேற!  அரசமரம் ஒன்னு.....  சரடு(கயிறு) கட்டிக்காம நிக்குது. நம்ம பக்கங்களில்  இருக்கும் ப்ரார்த்தனை நூல்கள் இங்கே இன்னும் பழக்கத்துக்கு வரலை போல! சொல்லி வாய் மூடலை.... 'இங்கே என்னைக் கொஞ்சம் பாரேன்'னு  இன்னொரு மரம் கூப்டது!

நந்தி ஸாரோடு செல்ஃபி எடுத்துக்கிட்டு இருந்தார் ஒரு இளைஞர் :-)

இந்த நேபாளில் மணிகளும் கொடிகளும் கோவிலுக்கு ரொம்பவே முக்கியம். ப்ரேயர் ஃப்ளாக்ஸ்  (Prayer Flags) கலர்கலரான துணிகளில்  பிரார்த்தனைகளை அச்சடிச்சு விக்கறாங்க. அதை வாங்கி ஒரு கயித்துலே தோரணமாக் கட்டிக் கோவில் கோபுரம், தாழ்வாரம் இப்படி எல்லா இடத்திலும் கட்டி விட்டுடறாங்க. காத்தடிக்கும் போது படபடன்னு பறக்கறது(ம்) ஒரு அழகுதான்! ஆளே இல்லாத மலைப்பகுதிகளில் இருக்கும் கோவில்களில் கூட இப்படிக் கொடிகட்டி விடறது ஒரு சம்ப்ரதாயம். காற்றே நம்ம பிரார்த்தனைகளைக் கொண்டுபோய் கடவுளின் காதில் போட்டுருதே!!!
ஒரு அறுகோணத்தூண்  வச்சு அதோட உச்சியில் ஒரு  அறுகோண அமைப்பு. அதுக்கு மேலே  'ஓம்'னு பித்தளையில் செஞ்சு, தாமரைப்பூவில்  வச்சுருக்காங்க.  கூடவே காத்தாடி அமைப்பு இருக்கு என்பதால் அது  தன் இஷ்டத்துக்குச் சுத்துது.   தூணின் ஆறுபக்கங்களிலும் ஹிந்தியில் என்னவோ எழுதி வச்சுருக்காங்க. தூரத்துலே இருந்து வாசிக்க முடியலை.    துர்கையையோ இல்லை சிவனையோ பாடிப்புகழும் ஸ்தோத்திரமாக இருக்கலாம்....  யார்கிட்டேயாவது  கேட்டுருக்கலாமோ..... விட்டுட்டேனே... :-(
சரி,  வாங்க கோவிலின் முக்கிய சாமியைப் பார்க்கலாம் இப்போ.
பிந்தியாபாஸினி சந்நிதிக்குப்போகும்போது வளாகத்தின் நடுவில் ஒரு தூணின் உச்சியில் மலர்ந்து நிற்கும் தாமரை. அதுலே நம்ம பதினொருதலையார் குடைபிடிக்க  பெருமாளும் தாயாரும்!  பெருமாளா இவர்னு உத்துப் பார்த்தால் கண்ணாடி போட்டுருக்கார்!  கோவிலைக் கட்டிய புண்ணியவான்!  சித்தி நாராயன் ஷா. கடைசியா கஸ்கி நிலப்பகுதியை ஆண்ட மன்னர்.  ( Last king of  Kaski state  )அப்புறம்  போர் வந்தது.  இந்த நிலப்பகுதி நேபாள மன்னர்களுக்குப்போயிருச்சு.  காலக்கட்டம்  1784.

பிந்தியாபாஸினி எட்டுகைகளோடு ஜேஜேன்னு இருக்காள்.  அஞ்சாறு படிகள் ஏறிப்போய்க் கும்பிடலாம்.  சிம்மவாஹினி! கருவறைக்கு  முன்னால்  வாஹனம், நாக்கை நீட்டி,  பற்களைக் காமிச்சுக்கிட்டு ,   வலது கையைத்  தூக்கி  வா வான்னு கூப்பிடுது!  அற்புதம்!  பித்தளைச் சிலைதான்!  சனம்  வாலில் ப்ரார்த்தனைக்கயிறு கட்டிவுட்டுருக்குபா.......

 ப்ரிவ்யூ காமிக்கும் முகப்பு அருமை!  எட்டுக்கைகளில் எட்டுவிதமான போர்க்கருவிகளை வச்சுக்கிட்டு பிந்தியாபாஸினி.  அவளுக்கு வலப்பக்கம் புள்ளையார். இடப்பக்கம்?  காலடியில் இருக்கும்  வாகனம் மயிலோன்னு ஒரு நிமிட் மயங்கினேன். தோகை போல வால் நீளம். அப்புறம் பார்த்தால் முருகன்னு நான் நினைச்ச உருவம் நாலு கைகளோடு, ஜெபமாலை, சின்ன கூஜாபோல ஒரு செம்பு, (கலசம்?)இன்னொரு கையில் எதோ பூ,  விசிறி போல மூணாய்ப் பிரியும் என்னமோ ஒன்னு....   மயில் இல்லைன்னா இது அன்னப்பறவையா இருக்கணும். அப்போ ப்ரம்மாவோ?   கையில் எதுக்கு கூஜா..........?
புள்ளையாருக்கு இந்த குழப்பம் எல்லாம் இல்லை. அவர்பாட்டுக்கு  ரெண்டு மூஞ்சூறுகள்  மேல் ஏறி நின்னு ஆட்டம்தான் :-)

வாசலில் ரெண்டு சிம்மங்கள் ! த்வார சிம்மம் :-)
பக்கத்துலேயே புள்ளையாருக்கும் ஒரு தனி சந்நிதி.  பாஸினியின் கருவறை ஸ்டைலில்!




வாசலில் த்வாரமூஞ்சூறுகள். கையில் மோதகம்!  எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.  சந்நிதி வாசல் மூடி இருந்துச்சு. ஆனால் முகப்பு ப்ரீவ்யூதான் இருக்கே! இவருக்கு ரெண்டு பக்கமும் சிறகு வச்சுருக்கும் பெண் தேவதைகள்!  வெயில் காரணம் முகப்பு நிழல்  விழுந்துருக்கு. படம் தெளிவா வரலை :-(
இன்னொரு மேடைப்பகுதியில்  துளசிமாடம் போல ஒன்னு. நாலுபக்கமும் குட்டியா மாடங்களில் சிலைகள். சூரியன் இருக்கான். சரஸ்வதி, மஹாவிஷ்ணு, சிவன் எல்லோரும் அவரவர் வாகனங்களோடுதான் இருக்காங்க.



இந்த ரெண்டு சந்நிதிகளும் பழைய காலத்து சமாச்சாரம்.   பகோடா ஸ்டைலில் சமீபத்துலே கட்டுன இன்னொரு கட்டிடத்தில் மூணு சந்நிதிகள்.   லக்ஷ்மிநாராயண்,  ராதாக்ருஷ்ணா, சீதா ராம்!  பளிங்குச்சிலைகள் .


வெளியில் ஒரு சின்ன மேடையில் குத்துவிளக்கு மாதிரி ஒன்னு.
 மாதிரிதான்.... விளக்குப்போடும் வசதி இல்லை. ஆனால்  என் கண்ணுக்குப்  பார்க்க  குத்துவிளக்கு போல. அதில் புள்ளையார் என்னமாத்தேன் ஆடறார்னு பாருங்க.....  நல்ல வேலைப்பாடு! பித்தளைதான்.

கோவிலில் எதோ விசேஷம் வருதாம். பந்தல்போட்டு அலங்கரிக்கும் வேலை நடந்துக்கிட்டு இருந்தது.
நல்லவேளை நாம்  இங்கே சனிக்கிழமை வரலை. வந்துருந்தால்..... கெடா வெட்டுதான்!  ஆடு, கோழி வாத்துன்னு ஒன்னும் விடறதில்லை!

 பாவம்....துர்கா... அவளை இப்படி ரத்தம் குடிக்க வச்சுட்டாங்களே....
மேலே இருந்து பார்க்கும்போது பொகரா நகரம் முழுக்க அட்டகாசமாத் தெரிஞ்சது!  இதைப் பார்க்கவே உள்ளூர் மக்கள் அதிகம் வர்றாங்களாம்! நம்ம துர்கா சொன்னார்:-)
படிகள் இறங்கிக் கீழே வரும்போது  எதிர்வீட்டு மாடியில் என்னமோ காயவைக்கிறாங்க. காக்கா குருவியை விரட்ட ஒரு ஆள் கையில் குச்சிகளோடு உக்கார்ந்துருக்கார்.   ஆனால்    ஆடாமல் அசையாமல் இருப்பாரே!  இவரைப் பார்த்துப் பறவைகள் பயப்படுமா என்ன? :-)


தொடரும்............  :-)


மடாலயத்தில் பிஞ்சுகள்......( நேபாள் பயணப்பதிவு 18 )

$
0
0
அடுத்த இருவது நிமிசப் பயணத்தில்  ஒரு புத்தமடம்.  அழகான தோட்டத்துக்குள்  சின்ன  குளத்துக்கு நடுவில் தாமரையில் நிற்கும் புத்தர்.  அவருக்குப் பின்னால் ஒரு மேடை அமைப்பில் அமர்ந்த நிலை புத்தர்.   அவருக்கு ரெண்டு பக்கமும்  இன்னும் இருவர்.  யாராக இருக்கும்?  மடத்தை ஸ்தாபிச்சவராக இருக்கலாம். இல்லைன்னா  புத்த குருக்களாக இருக்குமோ? இவர்களை வலம்  வரும்போதே கோடிகளைச் சேர்த்துக்கும் வகையில் ப்ரார்த்தனைச் சக்கரங்கள்!  ஓம் மணி பத்மே ஹூம்.......



புத்தர் கோவில்ன்னதும்.... முந்தியெல்லாம் 'புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி'ன்னு சொல்லும் மந்திரம்தான்  மனசிலும்  நாவிலும் வந்துக்கிட்டு இருந்தது எல்லாம் போய்  இப்பெல்லாம் 'ஓம் மணி பத்மே ஹூம்'வருதே!  இது பௌத்தர்களின் ஆறெழுத்து மந்திரம்!   நமக்கும் சொல்ல சுலபமாப் போச்சு, இல்லையோ!







ரொம்பவே அழகான, பசுமையான தோட்டம். இந்த மடத்துக்குப் பெயர் Matepani Gumba. திபேத்திய புத்தமதத்தினர்களுக்கானது. ஒரு சின்னக்குன்றின் மேல் கட்டி விட்டுருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா  சரிவுப்பாதையில் ஏறிப் போறோம்.  பாதியில் அங்கங்கே நாலைஞ்சு படிகள். அப்புறம் நடை , மறுபடியும் படிகள் இப்படியே போய் ஒரு பெரிய கட்டடத்துக்குள் வந்துருக்கோம்.
அட்டகாசமான வேலைப்பாட்டுடன் ரெண்டடுக்குகளா நிக்குது.  ஏகப்பட்ட புத்த பிக்ஷுக்கள் இங்கே இருக்காங்க. சுமார் தொன்னூறு பேராம்!  கட்டிடத்தைச் சுத்திக்கிட்டுப் பக்கவாட்டில் போனால்  குட்டி பிக்ஷுக்களுக்கு  ரீஸெஸ் டைம். வரிசையா உக்கார்ந்து  எவர்சில்வர்  மக்கில் ஸ்ட்ரா போட்டு என்னமோ குடிச்சுக்கிட்டு இருக்காங்க.  லெமன் ஜூஸா இருக்கலாம். நல்ல வெயில் பாருங்க....
கொஞ்சம்  பெரிய பிக்ஷுக்கள் (14, 15 வயசு இருக்கலாம்) களிமண்ணில் கலைப்பொருட்கள் செஞ்சு ஆசிரியர் பிக்ஷுகிட்டே காமிச்சுக்கிட்டு இருக்காங்க. ஆசிரியர் அதுலே சிலதிருத்தங்கள் செஞ்சுட்டுத் திருப்பிக் கொடுக்கறார்.

பள்ளிக்கூடக் கட்டிடங்கள் போலவே அந்தாண்டை இருக்கு. குன்றின் முகட்டில் இருந்து பார்க்கும்போது   பொகரா  நகரை முக்கால்வாசி பார்த்துடலாம்.  கீழே அதலபாதாளம். பாதுகாப்புக்குக் கம்பிவலைத் தடுப்பு போட்டு வச்சுருக்காங்க.  வண்ண வண்ணக்கொடிகள் இந்த இடத்துக்கு இன்னும் அழகு சேர்க்குது!

ரொம்பப்பழைய மடாலயம் எல்லாம் இல்லையாக்கும். 1960 ஆண்டு  Manang community கட்டி விட்டதுதான். இங்கே  பெரிய பிக்ஷுகளுக்கும் வகுப்பு  நடக்குது. திபேத்தியன், இங்லீஷ், நேபாளி,  என்ற மொழிகளையும், கூடவே  கணக்கும்  கத்துக்க  நேபாளின் பலபகுதிகளில் இருந்து  வர்றாங்களாம்.  பொதுவா புத்தமதம், அதன் தர்மம், அதுக்குண்டான  வழிபாட்டு முறைகள் இன்னபிற சமாச்சாரங்களையும் இங்கே தங்கி இருந்து படிச்சுட்டுப்போறாங்க. ட்ரெய்னிங்ப்பா!

வெள்ளைக்காரப் பயணிகள்  இங்கே வந்து தங்கி, பிக்ஷுக்களுக்கு இங்லிஷ் சொல்லிக் கொடுப்பதும் நடக்குது!  சுற்றுலாப்பயணிகள் வருகை எப்பவுமே இருக்காம். நாம் போன நாளில்  அப்படி யாரையும் பார்க்கலை!
கோவிலுக்குள்ளே போனோம்.  ஒரு புத்தபிக்ஷுதான் கூட்டிட்டுப்போய் காமிச்சார். நிறைய புத்தர் கோவில்களைச் சிலபல நாடுகளில் பார்த்த காரணத்தால் புதுமையா  ஒன்னும் புலப்படலை.  நேபாள் இந்து நாடுன்னு சொல்லிக்கிட்டாலும் இங்கே 81 சதமான மக்கள்தான் இந்துக்கள்.  மீதம்  உள்ளவர்களில் பெரும்பான்மை புத்த மதம் சார்ந்தவர்கள்.  திபெத்தை, சீனர்  தமதாக்கின பின்னே  இருபதாயிரம் திபேத்திய அகதிகளுக்கு இங்கே புகலிடம் கொடுத்துருக்காங்களாம்.

இந்துக்கோவில்களில் புத்தர் சிலைகளையும் வச்சு பூஜிக்கறாங்க. தசாவதாரத்துலே  ஐ மீன்....  மஹாவிஷ்ணுவின் தசாவதாரத்துலே புத்தரும் ஒரு அவதாரமுன்னு சொல்றவங்களும் இருக்காங்கதான்!  தசாவதாரம் பத்து   ன்னு கணக்கில் இல்லாம ஏகப்பட்ட அவதாரங்களை  எம்பெருமான் எடுத்துருக்கார் என்பதால் அதுலே புத்தர் அவதாரமும்  உண்டுன்னு  சிலர் சொல்றாங்க.   இதுவரை இருபத்தியொன்பது புத்தர்கள்   வந்தாச்       என்பதும் மனசுக்குள் வந்து போச்சு :-)

நம்மூர் வேதபாடசாலைகள் மாதிரிதான் இங்கேயும் பிஞ்சுகளை  மடத்துக்கு அனுப்பிடறாங்க பெற்றோர். குடும்பத்துலே இத்தனாவது பிள்ளை சாமிக்குன்னு எதேனும் கணக்கு இருக்குதோ?

ச்சும்மா சொல்லக்கூடாது....  ரொம்பவே கலர்ஃபுல்லா  இருக்கு இந்தக்  கட்டடம் என்பதை ஒத்துக்கணும்!  தோட்டம் பிரமாதம்!

இந்த மடத்துக்குப் பக்கத்துலேயே கொஞ்ச தூரத்தில் ஒரு பத்ரகாளி கோவில் இருக்குன்னதும் அங்கேயும் போயிட்டுப் போயிடலாமேன்னு சொன்னேன். ரெண்டே நிமிசம் சவாரி.  கோவிலின் முகப்பு வாசல்  பார்த்துட்டு  வண்டியில் இருந்து    கீழே இறங்கினால்.....   அலங்கார வாசலில் ஒரு பக்கம்  புள்ளையாரும், அடுத்தபக்கம் தேவியுமா  இருந்து அருள் பாலிக்கறாங்க!   இதுவே போதும்...  கோவிலுக்குப் போக வேணாமுன்னு சொன்னேன்..

ஏனாம்?  ஐயோ.... மேலேறிப்போகும் படிகளைப் பாருங்க..............   இத்தனை படிகளா?  ஊஹூம்.....   கொஞ்சம் படிகளுக்கந்தாண்டை இருக்கும் பைரவரிடம்,  சாமிக்கு சேதி அனுப்பி  வச்சேன். "தாயே.... மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லு..........  கால் முட்டி நிலை உனக்குத் தெரியாதா........."
பகல் ரெண்டரை ஆகுது. எங்கியாவது சாப்பிடப் போகலாமுன்னு நம்மவர் சொன்னார். நமக்குப் பசி இல்லைன்னாலும் துர்காவும் டிரைவரும் இருக்காங்களே...  அடுத்து நாம் போகும் இடத்துலேயே போய் சாப்பிடலாமுன்னு  கூட்டிப்போனார் துர்கா!

சின்ன ரெஸ்ட்டாரண்ட் தான்.  வாங்க சாப்பிட்டு முடிச்சுட்டு ஒரு  சுவாரசியமான இடத்துக்குப் போகலாம் !!!

தொடரும்........... :-)


ஐயோ.... சுற்றுலா வந்த இடத்துலே.... ப்ச்...( நேபாள் பயணப்பதிவு 19 )

$
0
0
 முதலில்  தாகத்துக்கு   லஸ்ஸி கிடைச்சது.  எனக்கு  அதன்  கூடவே வெறும் சோறு.  மத்தவங்க  கறி, குழம்பு, சப்பாத்தி, சுட்ட அப்பளம்  வகைகளோடு லஞ்ச் வாங்கிக்கிட்டாங்க. தயிர் வேணுமுன்னு சொன்னதும்  ரெண்டு ஐஸ்க்ரீம் கப்பில் தயிர் கொண்டு வந்து வச்சாங்க:-)  ட்ரைவர் மட்டும் எங்களோடு வந்து சாப்பிடாமல் வேற இடத்துலே சாப்பிடப்போயிட்டார்.



பித்தளைத் தட்டும் பித்தளைக்கிண்ணங்களுமா  தாலி மீல்ஸ்.  இன்னும் கொஞ்சம் பளபளன்னு  தேய்ச்சு மினுக்கி இருக்கக்கூடாது?  ப்ச்....

 சாப்பாட்டுக்கு  ஆர்டர் கொடுத்தபின் அது வர்றவரை  சாலையை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். ட்ராக்டர் எஞ்சின் மாதிரி ஒன்னு வச்சுக்கிட்டு, அதுலே ட்ரெய்லரைக் கட்டி வச்சு புதுமாதிரியான வண்டி. குஜராத்தில் பார்த்த சக்கடா நினைப்பு வந்தது உண்மை. மனுசன் தன் தேவைகளுக்கு ஏத்தாப்படி,  இருக்கும்  சாதனங்களை வச்சே  புதுசா ஒன்னு  கண்டுபிடிச்சுக்கறான், இல்லே!  வாழ்ந்தாகணுமே..... அதுக்கு வரும்படியும் வேணுமே.....
சாப்பாடானதும் சாலையைக் கடந்து  எதிர்ப்பக்கம் வந்தோம்.  இந்த சாலையே ரொம்ப பிஸியா இருக்கு.  ஏகப்பட்ட கடைகண்ணிகள் சாலை முழுசும்.  பித்தளைச்சிலைகள் ரொம்பவே அழகழகாய்!   கனம் கூடியவை.   அதிலும் ஒரு கருடர் இருந்தார் பாருங்க.....  ஹைய்யோ....


சாளக்ராமக் கற்கள் வேற  வெவ்வேற சைஸில் வச்சுருக்காங்க.  இப்பெல்லாம் கண்டகி நதியில் கற்கள் உருண்டு வர்றதெல்லாம் இல்லையாமே!  தாமோதர்குண்ட் என்ற இடத்தில்  நதியின் ஆரம்பத்துலேயே வலை கட்டி, அங்கேயே  சாளக்ராமக் கற்களை வடிகட்டி எடுத்துடறாங்களாம்.  நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வருமானம் இந்தக் கல்லும் கொண்டு வருது பாருங்க.
இந்த இடங்களுக்குச் சுற்றுலாப்பயணிகள்  ரொம்ப காலத்துக்கு முன்னே இருந்தே வந்துக்கிட்டு இருக்காங்க!  எல்லாம் அநேகமா வெள்ளைக்கார நாடுகளில் இருந்துதான்!  அப்படி  அவர்களைக் கவர்ந்து இழுக்கறது,  உலகத்துக்கே ஒன்னுன்னு இருக்கும் எவரஸ்ட் சிகரம் இல்லையோ!  எப்படியாவது அதில் ஏறிடணும் என்று ஆசைப்பட்டு வந்த பல்வேறு நாட்டு மக்களில், குட்டியூண்டு நாடான நியூஸியின் எட்மண்ட் ஹிலரிக்கு அதிர்ஷ்டம் இருந்தது, அங்கே எவரெஸ்ட்டில் முதல்முதல் கால் வைக்க!  இதுலே எங்களுக்கும் பெருமைதான்.  சம்பவம் நடந்த காலத்தில், இப்படி  அந்த ஊரில் குடியேறுவோமுன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை!
வர்றவங்க அப்படியே மற்ற இடங்களையும் பார்க்கறதும்,  மலையேறும் ஆசை இருக்கறவங்க இதுக்காகவே இங்கே வர்றதும் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு இப்பவும்.

டேவிஸ் என்ற பெயருடைய ஸ்விஸ் நாட்டுப் பயணி, தன் மனைவியுடன் சுற்றுலா வந்துருக்கார். 1961 ஆவது ஆண்டு. பல இடங்களைச் சுத்திப் பாத்துக்கிட்டே  இங்கே வந்துருக்காங்க.  அந்தாண்டை ஓடும் நதியில்  குளிக்க ஆசை வந்துருக்கு கொஞ்சம் கீழாண்டைப் பகுதிக்குத் தண்ணீர் சரேல்னு பாயும் சமாச்சாரம் அப்ப இவுங்களுக்குத் தெரியாது போல!    திடீர்னு தண்ணீர் வரத்து அதிகமாகி டேவிஸோட  மனைவியை அப்படியே இழுத்துக்கிட்டுப் போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்பட்டு தேடி, மனைவியின் சடலத்தை வெளியே எடுத்துருக்காங்க. அப்ப இருந்து இந்த இடத்துக்கு  டேவிஸ் ஃபால்ஸ் என்ற 'காரணப்பெயர்'அமைஞ்சு போயிருக்கு!

டேவிஸ் ஃபால்ஸ் போறோமுன்னு துர்கா சொன்னதும், தேவி'ஸ் ஃபால்ஸ்ன்னு நினைச்சுக்கிட்டேன்.   தேவிக்குக் கோவில் இருக்குமுன்னு நினைப்பு. அரைக்கிலோ மீட்டர் தூரத்துக்கு  தண்ணீர் அப்படியே பொங்கியடிச்சுக்கிட்டுப் பாயுது. ஆழம் அதிகம் இல்லை. நூறு அடிதானாம்!!!!  யம்மாடியோவ்..... கால்தடுமாறி விழுந்த அம்புட்டுதான். நேராக் கீழே கொண்டுபோய் செருகிடும்!
இப்ப நல்ல கம்பித்தடுப்புகள் போட்டு வச்சுருக்காங்க.  இந்த இடத்தின் நுழைவாயிலுக்கு முன் இருக்கும் சாலையின் எதிர்ப்பக்கம்தான் நாம் லஞ்ச் சாப்பிட்ட ரெஸ்ட்டாரண்டு இருக்கு.

டேவிஸ் ஃபால்ஸ்க்குள் போய்ப் பார்க்க ஆளுக்கு முப்பது ரூ டிக்கெட் கட்டணம் கொடுக்கணும். பரபரப்பான சாலையை அடுத்து உள்ளே இப்படி பார்க் செட்டிங்ஸ் இருக்குன்னு வெளியேஇருந்து பார்க்கும் யாருக்கும்  தெரியாது !
ஆதிசேஷன்  உருவில் கோழிக்கொண்டைப்பூ !!!

டேவிஸ் ஃபால்ஸ்க்குப் பழங்காலப்பெயர் ஒன்னும் இருக்கு. பாதாளே ச்சாங்கோ !

உள்ளே போகும் பாதையில் நாலைஞ்சு படிகள் இறக்கத்தில் ரொம்பவே பழையகாலச் சிலைகள் ரெண்டுமூணு!   புள்ளையார், சிவலிங்கம்,. நந்தி, நாகர்னு!!!   அங்கிருந்து  பார்க்கும்போதே  கீழே ஹோன்னு இரைச்சலுடன்  பொங்கி விழும் தண்ணீர்!  கொஞ்சம் கிட்டப்போய்ப் பார்க்கும் வகையில் ஒத்தையடிப்பாதை.  கரடுமுரடா இருக்கு, கவனமாக் கால் வச்சுப்போகணும்.  விழுந்துட்டா?   பரவாயில்லை:-)  கம்பித்தடுப்புகள் இருக்கே!  மிஸஸ் டேவீஸ்க்கு  ஏற்பட்ட கதிகேடு இனி  யாருக்கும் வரக்கூடாதுன்னு கவனமாத்தான்  போட்டுவச்சு  இருக்காங்க.
அருவின்னு பெருசா ஒன்னுமில்லை.  பாய்ஞ்சு வர்ற தண்ணி,   கற்பாறைகளுக்கிடையே அப்படியே ஒரு அரைக் கிலோமீட்டருக்கு அகலமா ஓடிட்டு,   சட்னு காணாமப்போயிருது!  இவ்ளோ தண்ணீர் என்னதான் ஆச்சு?  பாதாளத்துக்குள் போயிருதாமே!  பாதாளே சாங்கோ !



அவ்ளோதானா?  ஊஹூம்..... நாம  இதைவிட்டு வெளியே போய் சாலையின் இடது பக்கமாவே கொஞ்ச தூரம் நடந்து போனால்... குப்தேஸ்வரா குகைக்கான நுழைவு வாயில் வந்துருது.  வணிக வளாகம்போல் ஏகப்பட்டக் கடைகள். குகைக்குப் போகும் வழின்னு போட்டுவச்சுருக்கும் அம்பைத் தொடர்ந்து  போகணும்.  கீழ்தளத்துக்குப் போறதுமாதிரி    மாடிப்படிகள்.  அங்கே ஒரு   ரெண்டடுக்கு    கட்டடம்.  கோவிலுக்குள் போகவும்    ஒரு கட்டணம் உண்டு.  முப்பது ரூபாய் டிக்கெட்.

மேலேயே புள்ளையார் நிக்கறார். அவராண்டை சொல்லிட்டு குகைக்குப் போறோம்.

 இந்தப்பக்கம் ஒரு சுருள் மாடிப்படி. பக்கச் சுவர்களில் எல்லாம் விதவிதமான சிற்பங்கள். பார்க்க அழகாத்தான் இருக்குன்னாலும்......  பழங்கால வகை இல்லை. காங்க்ரீட்லே வார்த்து வச்சுருக்காங்க.  இடைக்கிடை மாடங்கள் வேற. அதுலே சாமி படங்கள்!



கீதோபதேசம்,   நிற்கும் காளைமுக  அரக்கன்(?) மயில்,  வெள்ளையானை மேல் இந்திரன்னு ஆரம்பிக்கும் சிற்பங்கள், மெள்ளமெள்ள ஸ்ருங்கார ரசத்துக்குப் போயிருது. இடையில்  குழந்தையைக் கையிலேந்தி பாலூட்டும் தாய் வேற!  விசுவாமித்திரர் மேனகையோ?
சிவன் காலடி பிடிச்சு,  வேண்டும் இன்னொரு உருவம்.....  யார் ,  கதை என்னன்னு தெரியலையேன்னு எனக்கு மகா கவலை!  இன்னும் புதுசா சிலைகளைச செஞ்சுக்கிட்டு இருக்காங்க போல.... அதுக்குண்டான இடம் தயாரா இருக்கே!

இந்தக் குகையை பதினாறாம் நூற்றாண்டில் யாரோ புல் பறிக்கப்போன இடத்தில் கண்டுபிடிச்சுருக்காங்க. உள்ளே சிவன், பார்வதி, இந்திரன், நாகர்னு கடவுளர்களின்  சிலைகள் இருந்துருக்கு.  அப்படியே கிடந்த இதை சமீபத்தில் 1991 இல்  படிக்கட்டுகள் அமைச்சு கீழே   இறங்கிப் போய்  குகைக்குள் பார்க்கன்னு  ஒரு அமைப்பைக் கட்டிவிட்டது உள்ளுர் நகராட்சி.   ஒரு கட்டணம்  வசூலிக்கிறது கூடப் பரவாயில்லைதான். குகையை பராமரிக்கவும், பக்கத்துலே இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு  செலவுக்குக் கொடுக்கவும்  ஆகுதே!
 சுழல் படிகளில் இறங்கி குகை வாசலுக்கு வந்துருந்தோம். இங்கிருந்து இன்னும் கீழே போகணும். இடதுபக்கம்  நிறைய கற்களை அடுக்கி  சின்னச்சின்ன லிங்கமா பண்ணி வச்சுருந்தாங்க.  படிகளில்  நம்ம கண்ணுக்கு எதிரா ஒரு கோசாலை.  அதுக்கு ஒரு விளக்கு போட்டு வச்சுருக்காங்க. உள்ளே மாடுகள் இருக்கான்னு தெரியலை. முக்கால் இருட்டாத்தான்  கிடக்கு. அங்கங்கே மெல்லிஸா வெளிச்சம் வருது.
கொஞ்ச நேரம் நின்னு இருட்டுக்குக்  கண்கள் பழகியபின் போறோம். படிகளில் கைப்பிடிச்சுக்கக் கம்பி இருக்கு என்பதால் பிரச்சனை  இல்லை. ஆனால்  ஒரே ஈரம். தலைக்கு மேலே இருக்கும் குகைக்கூரைகளில் இருந்து தண்ணீர் சொட்டிக்கிட்டே இருக்கு. நம்ம தலையில்  சொட்டுநீர்! எப்பவும் தண்ணீரும், இருட்டுமா இருக்கறதால்  கால் வழுக்குதுதான்.  குகை வாசலில் செருப்பைக் கழட்டி விட்டுட்டுத்தான்  போகணும்.   கோவிலுக்குள் போறோம் இல்லையா?

கொஞ்சதூரம்  ஒரு அம்பது , நூறு படிகள்  இறங்குனதும்  பெரிய சிவலிங்கம் ஒன்னு, பூக்கள் அலங்காரத்தோடு.  சரிக்கும் செதுக்கிய சிவலிங்கம் இல்லையாக்கும். ஸ்வயம்பு.  உளி படாதது.  நோ உளியின் ஓசை :-)
குகைக்கூரையில் இருந்து   கெட்டிப் பாகுமாதிரி இறங்கும்  stalagmite, stalactite வகைதான். சுத்திவர  கம்பிவலை  அடிச்சுத் தடுப்பு போட்டு வச்சுருக்காங்க.  படம் எடுக்கத் தடை உண்டு.  இதுக்குன்னே ஒரு  காவலாளி வேற.  சாமியைக் கும்பிட்டுக்கிட்டே கம்பிவலையை வெளிப்புறமா சுத்தி வரலாம். பரிக்ரமா! ஆனால்  சாமியைப் பார்த்துக்கிட்டே சுத்தமுடியாது.  நாம் கீழே  பள்ளத்தில் போவோம். சாமி மேலே இருந்து நம்மைப் பார்ப்பாரா இருக்கும்!

சிவன் சந்நிதியை விட்டு இன்னும் கொஞ்சம் கீழே இறங்குனா   இன்னொரு சுரங்கப்பாதை. கும்மிருட்டு. ஓரமா வச்சுருக்கும்  ஜன்னல் போன்ற ஓட்டைக்குள்ளே  கண் பார்வையை அனுப்புனால்.....  வெளிச்சம்  தெரிஞ்சது. கூடவே   தண்ணீர் பாயும் சத்தம்......   ஒரு நூத்தியம்பது மீட்டர்  இறக்கம் இருக்காம்.  இப்போ  தண்ணீர் வரத்து அதிகமா இருக்குன்னு அந்தப் பாதையை மூடி வச்சுருக்கறதா  காவலாளி சொன்னார். ஆனாலும் ஒரு பத்திருபது  படிகள் இறங்கிப்போய் வரலாம்தான். ஆனால் நம்மகிட்டே டார்ச்  இல்லையே..... வழக்கம் போல் பயணத்துக்குன்னு  கொண்டுபோகும்  டார்ச் லைட், இந்த முறை காத்மாண்டு லெமன்ட்ரீயில்  பெட்டிக்குள்ளே பத்திரமா இருக்கு:-)

இருட்டுக்குகையின் நீளம் சுமார் மூணு கிமி இருக்குமாம்.  சுரங்கத் தொழிலாளிகள் மாதிரி தலயில் விளக்கு வச்சுக்கிட்டுப்போய் குகை முடிஞ்சதும் வெளியே போய்   தண்ணீர்  பாயும் இடத்தில் இருந்து கரையோரமாகவே நடந்து போகும் டூரிஸ்ட்டுகளும் உண்டாம்!  சரின்னு கேட்டுக்கிட்டேன்:-)   அவுங்க அட்வெஞ்சர் மக்கள். நாமோ....  ஆன்மிக மக்கள் இல்லையோ !

குகையில் இருந்து வெளிவந்து சுருள்படிகளேறி மேலே வந்து நர்த்தன விநாயகருக்குக் கும்பிடு போட்டுட்டு அஞ்சு நிமிட் ரெஸ்ட். அப்போ அங்கே இருந்த ஒரு ஹாலில்  பெரிய கூட்டமா மக்கள்ஸ் உக்கார்ந்துருந்தாங்க. எதோ சாமியாரின் குழு உள்ளே பிரசங்கம் செஞ்சு எதோ பூஜைக்குத் தயார் படுத்திக்கிட்டு இருந்தாங்க.  லோகல்ஸ்தான்.  முக்கால்வாசிப் பெண்கள்  நேபாளிகள் போட்டுக்கும் பாசிமணி மாலையில் இருந்தாங்க.
வெளியே வந்து  ஒரு கடையில் ரெண்டு பாசிமணி மாலை வாங்கினேன். மனிஷா அண்ட் சாரு(மதி) என்ற  சின்னப்பொண்ணுங்க நடத்தும் கடை.   அப்படியே  முதலில்  அழகு கருடன் பார்த்த கடையில்    சின்னதா மூணு சாளக்ராமம், ஒரு பத்து பித்தளை விக்கிரஹங்களும்!  ஹைய்யோ.... பத்தா?  எப்படிக் கொண்டுபோகப் போறோம்?

 அஞ்சேல்........  எல்லாம் ஒன்னரை செமீ உயரம்தான் :-) மொத்தம் ஒரு  200 கிராம் வரும்!

தொடரும்............. :-)



Viewing all 1446 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>