வணக்கம். எல்லோரும் நல்லா இருக்கீங்களா? ஒரு ரெண்டு வருசம் சோம்பலோடு போச்சு. இனியும் இப்படி இருந்தால் நல்லதில்லைன்னு தோணுச்சு. அதான் திரும்ப வந்துட்டேன்.
புதுவருசம் பொறந்தாச்சு. சின்னப்புள்ளைக் காலங்களில் எல்லாம் புது வருசத்துக்கான தினசரி காலண்டர் வீட்டுக்கு வந்தவுடன் சட்னு திருப்பிப் பின்பக்க அட்டையைப் பார்க்கறதே வழக்கம். எப்பப்ப லீவு ? பண்டிகைநாள் சனி ஞாயிறு இல்லாம வரணும். அப்பத்தானே இன்னொரு நாள் பள்ளிக்கூடம் லீவு, இல்லே ? :-)
இப்படி இருக்கும்போது, பண்டிகை சனி ஞாயிறில் வந்துட்டா..... ஆ..... வடை போச்சேன்னு.... ஆகிரும்.
இங்கே நியூஸியில் வடை எப்பவும் போறதே இல்லை. ஒன்னுக்கு ரெண்டாக் கிடைச்சுருது.
கிறிஸ்மஸ் லீவுன்னா டிசம்பர் 25 மட்டுமில்லாம மறுநாளும் லீவுதான். அதுக்குப்பெயர் பாக்ஸிங் டே. அந்தக் காலத்தில் பிரபுக்கள் வீட்டில் பண்டிகை முடிஞ்சவுடன், மீதம் இருக்கும் வகைவகையான கேக், பிஸ்கெட், மற்ற தீனிகள் எல்லாத்தையும் பெரிய பெரிய அட்டைப்பொட்டிகளில் போட்டு, அநாதை இல்லங்களுக்கும், வசதிகள் இல்லாத எளியவர்களுக்கும் விநியோகம் செய்வாங்களாம். அன்றைக்கு முழுசும் பாக்ஸ்லில் போட்டு அனுப்பறதாலே அதுக்கு பாக்ஸிங் டேன்னு பெயராம். ஆமாம்..... ஒரு நாளையே ஒதுக்கணுமுன்னா.... எவ்வளோ சமைச்சுருப்பாங்கன்னு பாருங்க!
இந்த ரெண்டுநாளும் சனி ஞாயிறா அமைஞ்சு போச்சுன்னா அதைத்தொடர்ந்து வரும் வேலைநாட்களுக்கு கூடுதல் விடுமுறை. இதே மாதிரியே புதுவருஷம் பொறக்கற நாளும் அதுக்கடுத்தநாளும் அரசு விடுமுறை.
ஃபிப்ரவரி மாசம் 6 ஆம் தேதி வைட்டாங்கி டே, அரசு விடுமுறைநாள். ப்ரிட்டிஷ் அரசுக்கும் நியூஸியின் பூமிபுத்திரர்கள் (!!!!) மவொரிகளுக்கும் உடன்பாடு கையெழுத்தான நாள். இது என்னிக்கு வருதோ அன்னைக்கு லீவு. சனி ஞாயிறில் வந்துட்டா கூடுதல் விடுமுறை திங்களன்று.
ஈஸ்டர் பண்டிகை எப்பவும் ஞாயிறு என்பதால் ஈஸ்டர் மண்டேன்னு அதுக்கடுத்த நாளும் விடுமுறையே. குட் ஃப்ரைடே ... வெள்ளி. அன்னிக்கு லீவுநாள்தான். இதெல்லாம் மதம் சம்பந்தப்பட்டவை.
இதுதவிர.... ANZAC DAYன்னு April 25 ஆம் தேதி இங்கத்து போர்வீரர்கள் நாள். களத்தில்பட்ட வீரர்களுக்கான நினைவுநாள். நேஷனல் ஹாலிடே என்றாலும் மதியம் ஒரு மணிக்கு மேல் கடைகண்ணிகள் திறக்கலாம். காலை நேரம் முழுசும், சின்ன ஊர் உட்பட நாடு முழுசும் இருக்கும் படைவீரர் நினைவுச்சின்னங்களுக்குப்போய் மரியாதை செலுத்தலாம். ஒரு சின்ன ஊரில் இருந்து ஒரே ஒருத்தர் படைவீரராகப்போயிருந்தாலும் அந்த ஊரில் ஒரு நினைவுச்சின்னம் வச்சுருப்பாங்க அந்த ஊர் மக்கள்.
அப்புறம் மாட்சிமை தாங்கிய எங்கள் மஹாராணியின் பிறந்தநாள்னு ஒருநாள் லீவு உண்டு. சனி ஞாயிறோடு சேர்த்துத் திங்கட்கிழமையுமா லாங் வீக் எண்டுன்னு விடுமுறை. உண்மையில் மஹாராணியம்மா பொறந்தது ஏப்ரல் மாதம்தான் என்றாலும் நாங்க இங்கே ஜூன் மாசம்தான் கொண்டாடுவோம்.
உழைப்பாளர் தினம் (லேபர் டே )என்று அக்டோபர் மாசம் நாலாம் திங்கட்கிழமை அரசு விடுமுறை நாள். ஒருநாளுக்கு எட்டுமணி நேரம்தான் வேலை என்ற சட்டம் கொண்டுவந்த நாள்.
அப்புறம் இங்குள்ள மாநிலங்களுக்குன்னு ஒருநாள் விடுமுறை உண்டு. அதை மாநிலங்கள் முடிவு செஞ்சுரும். எங்க மாநிலத்துக்கு நவம்பர் ரெண்டாம் வெள்ளி.
இந்த வருஷம் புதுசா இன்னொரு விடுமுறைநாள் கிடைக்கப்போகுது. மாட்டாரிகி என்ற மவொரி புது வருஷநாள். ஜூன் 24ன்னு முடிவு செஞ்சுருக்காங்க. இது 15 நாள் கொண்டாட்டம். Tirama Mai (Lights bring Life )என்ற பெயரில் நகரம் முழுசும் முக்கிய இடங்களை விளக்கொளியால் அலங்கரித்தல் போன வருஷம்தான் தொடங்கியிருக்கு. இதன் கடைசிநாள் புது வருஷம் ! எங்களுக்கு அப்பக் குளிர்காலம் என்றாலும், அலங்காரம் பார்க்கன்னேக் கிளம்பிப்போனோம். பதினைஞ்சுநாள் விழா என்பதால் தினம் ஒரு பேட்டைன்னு நிதானமாப் பார்க்கலாம். ச்சும்மாச் சொல்லக்கூடாது..... அட்டகாசம் !
ஆகமொத்தம் வருஷத்துக்குப் பதினொருநாட்கள் அரசு விடுமுறை. சிலது வீகெண்ட்லே வந்துருச்சுன்னு பர்த்தி வேற கிடைக்குது. ஆனாலும் இப்பப் புதுசா ஒன்னு கிளப்பிவிட்டுருக்காங்க. எந்தெந்த சமயம் அரசு விடுமுறைகளுக்கிடையில் சொந்த லீவைச் சேர்த்து எப்படி இந்தப் பதினொன்னை முப்பத்தியெட்டாக்கலாமுன்னு ........
(இதுக்கெல்லாம்தான் மூளை நல்லாவே வேலை செய்யும் ! )
இதைப்பற்றிய விவரம் எல்லாம் இல்லாமலேயே... நம்ம வேலைக்காலம் எல்லாம் முடிஞ்சே போச்சு. ரிட்டயர் லைஃப்லே என்னன்னு லீவு எடுக்கறது ?
சரி. கிடைச்ச சான்ஸை வீணாக்காம, நம்ம ஊர்ப் பண்டிகைகளையும் சேர்த்துக்கிட்டோமுன்னா தினம் தினம் தீபாவளிதான் போங்க :-)அவதி அவதின்னு இல்லாம நிதானமா எல்லாத்தையும் கொண்டாடினால் ஆச்சு இல்லையோ !
அப்பெல்லாம் பெரியபண்டிகைன்னா முக்கியமா தீபாவளி பொங்கல்தான் . புள்ளையார் சதுர்த்தியும் கிருஷ்ணஜயந்தியும் முக்கியமுன்னு சொன்னாலும் புது உடை எல்லாம் கிடைக்காது. தீனிகள்தான் அதிகம் செய்வாங்க.
காலம் போகப்போக அதுவும், நாட்டைவிட்டு வெளியே போனவுடந்தான் சின்னச்சின்ன பண்டிகைகளுக்கும் முக்கியத்துவம் கூடிப்போச்சு. எதையும் விட்டுடாமச் செஞ்சுறனுமுன்னு ஒரு தோணல். கூடியவரை ஒன்னையும் விடறதில்லை இப்பெல்லாம்.
பொங்கல் பண்டிகை வரப்போகுது. எப்படிக் கொண்டாடலாமுன்னு திட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன்.
அனைவருக்கும் 2022 இனிய புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன்.
வழக்கம்போல் துளசிதளத்துக்கு உங்கள் ஆதரவு வேண்டும் !
