Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1475

எழுத்தாளரும் பதிவர்களுமா இன்றைய சந்திப்புகள்!!!! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 62)

$
0
0
நல்லாத்தான் பழக்கப்படுத்தி வச்சுருக்கோம், இந்த வயித்தையும் மனசையும்.  வயிறு கேக்குதோ இல்லையோ....  மனசு மட்டும் டான் டான்ன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும்:(  ஒன்னுமில்லை ஒரு வாய் காப்பித் தண்ணிக்குத்தான்!  கல்லணையிலிருந்து கிளம்பி  ஸ்ரீரங்கம் வந்து சேரவே  நாப்பது நிமிட் ஆகிப்போச்சு.  போக்குவரத்து கொஞ்சம் கூடுதலா இருக்கு.

ராஜ கோபுரம் கண்ணில் பட்டதும்,  முரளி காஃபி கடைக்குப்போயிட்டு, எஞ்சினுக்கு எண்ணெய் ஊத்திக்கலாமே தோணுச்சு. கோபாலிடம் சொன்னதும், நானும் அதேதான் நினைச்சேன்னார். நம்ம சீனிவாசனுக்கு ஒரு காது எப்பவும் நம்ம பக்கமென்பதால் டக்ன்னு  முரளிகடை வாசலில்  கொண்டு போய் நிறுத்தினார்.

இதுக்குள்ளே நம்ம ரோஷ்ணியம்மாவுடன்  தகவல் பரிமாற்றம் நடத்திக்கிட்டே இருந்தோம்.  எல்லாம் டெக்ஸ்ட் மெஸேஜ்தான்:-) விலாசம் அனுப்பி வச்சாங்க.  பதிவர் சந்திப்புக்குப் போறோம்.


காஃபி விலை ஏறிப்போச்சுன்னு அறிவிப்பு பார்த்தேன்.  அப்படியும் இங்கே மலிவுன்னுதான் தோணுது.  கடையில் கூட்டத்துக்குக் குறைவில்லை. ரொம்ப பிஸியான நேரம்!

காஃபி வரக் காத்திருந்த ஒரு நிமிசத்தில்  கைவண்டி ஒன்னு  என்னாண்டை வருது.  பஜ்ஜி வாசனையோ மூக்கைத் துளைக்குது. சடார்னு திரும்பிப் பார்த்தால்  மூணு ட்ரேக்களில்  பஜ்ஜி, போண்டா, அப்புறம் மிளகாய் பஜ்ஜின்னு நினைக்கிறேன். கூடவே பக்கெட்டுகளில் சட்னி வகைகள்.  ப்ச்...  வடை இல்லை பாருங்க:(

வாங்கலாமான்னு ஆசை இருந்தாலும் பயந்துக்கிட்டு வேணாமுன்னு சொல்லுமுன் கோபால் வாங்கிட்டார்.  சூடாத்தான் இருக்குன்னதும் தொட்டுப் பார்த்தேன். கை பொள்ளும் சூடு!  அப்ப ப்ரச்சனை இல்லை. எனக்கு ஒரு வாழைக்காய் பஜ்ஜி போதும். நோ சட்னி.  அவுங்க ரெண்டு பேரும்  வகைக்கு ஒன்னுன்னு  வாங்கிக்கிட்டாங்க. சுடச்சுட பஜ்ஜி தின்னுட்டு, சூடா ஒரு காஃபி குடிச்சதும்  நாக்கு ஆஹா சொன்னது.  வெறும் காஃபி மட்டும் குடிக்கும்போது வராத ஒரு திருப்தி,  டிஃபன் கூடச் சேர்த்து காஃபி குடிக்கும்போது வந்துருது இல்லே!

சொன்னால் சொன்ன நேரத்துக்கு வீட்டு வாசலுக்குப்போய் இறங்கியாச்சு. ரோஷ்ணிக்குட்டி கீழே இறங்கிவந்து நமக்கு வழி காட்டுனது  இனிமை.  பார்த்து ரெண்டு வருசம் ஆச்சு. இன்னும் உசரமா வளர்ந்துருக்காள்.

இந்த வீட்டில் மூணு பதிவர்!  பதிவர் குடும்பமப்பா!  வீட்டுக்கதவருகே ரோஷ்ணியம்மா நின்னு  'வாங்க டீச்சர்'னு வாய்நிறையக் கூப்பிட்டாங்க. வீட்டுக்குள்ளே இன்னொரு எழுத்தாளர்/ பதிவர்  குடும்பத்துடன்  நம்மை சந்திக்க வந்துருந்தார்.  ஸ்ரீரங்கம் ரிஷபன் ஸார். அவர் என்னவோ என்னைவிட வயதில் ரொம்பவே குறைந்தவரென்றாலும்,  எனக்கு இந்த ஸார் மட்டும் எப்படியோ அவர் பேரோடு ஒட்டிக்கிச்சு:-)

நமக்கு  டீ போட எழுந்த ரோஷ்ணியம்மாவை அப்படியே உக்காரவச்சு, முரளிகடையில் காஃபி விலை ஏறிப்போச்சுன்ற சேதியைச் சொன்னேன்:-)

ரோஷ்ணியம்மான்னா தெரியாதவங்களுக்கு....  கோவை2தில்லி வலைப்பதிவின் உரிமையாளர்  ஆதி வெங்கட். நம்ம  வெங்கட் நாகராஜ் (தலைநகர் பிரபலம்) அவர்களின்  தங்க்ஸ்.  வெங்கட் எனக்கு அஞ்சு வயசு சின்னவர்!   அதிர்ச்சியா இருக்கா?  நான் சொல்ற வயசு பதிவுலகத்துக்கு  வந்த  காலக்கணக்கில்:-) தில்லியில் வேலை, திருவரங்கத்தில் வீடு,  இடைப்பட்ட நாட்களில்  பயணங்கள் இப்படி அடிச்சு ஆடிக்கிட்டு இருக்கார்.  என்னால்  நேரில் போக முடியாமப்போன  பல வட இந்தியப் பயணங்களுக்கு  இவர்தான் கூட்டிப்போறார் தன் பதிவுகள் மூலம்!


ரோஷ்ணி இப்போ படங்கள் வரைவதில் ரொம்ப முன்னேறி இருப்பது, அவுங்க அம்மாவும் அப்பாவும் தங்கள் பதிவுகளில் போட்டு வைக்கும் படங்களே சாட்சி.  பள்ளிக்கூடத்தில்  ஆர்ட் க்ளாஸில் ,அதுக்கான விசேஷப்பரிசு கிடைச்சுக்கிட்டு இருக்கு!


இதைத் தவிர  க்வில்லிங் என்ற புதிய கைவேலை இப்ப பரபரப்பா ஓடிக்கிட்டு  இருக்கு பாருங்க அதுலேயும் கில்லாடி.   இதுக்குன்னே  ஏகப்பட்ட சமாச்சாரங்கள்  வாங்கிக்கணும்.  எல்லாத்தையும் கொண்டு வந்து எப்படிச் செய்யணுமுன்னு ரோஷ்ணி விளக்கினாலும்....  என் மரமண்டைக்கு......  யூ கெனாட் டீச்  நியூ ட்ரிக்ஸ் டு அன் ஓல்ட்  டாக் அண்ட்  ஆல்ஸோ த  டாக் இஸ் டூ ஒல்ட் டு லேர்ன்  தீஸ் நியூ திங்ஸ்:-)))))))))


காதணிகள் சூப்பர் அழகா இருக்குல்லே!

எனக்கு விவரம் தெரிஞ்சு  பெண்கள் ஹாபியா இருந்தது, க்ரோஷா பின்னுவதும்  துணிகளில் பூத்தையல் போடுவதும்.  தலையணை உறை,  கர்ட்டன் போல வாசலுக்கு பின்னித்தொங்க விடுவது,   ப்ளெய்ன்  பெட் ஷீட்டில் பூத்தையல் (தலையணை உறைக்கு மேட்ச்சா!) இப்படி இருந்துச்சு.  எங்க சின்னக்கா இந்த வேலைகளில் கில்லாடி!  உள்ளுடைகளிலும்  ஓரத்துலே க்ரோஷா ஊசி வச்சு  சின்னதும் பெருசுமா லேஸ்  பின்னிருவாங்க.  அப்பெல்லாம்  நாயுடுஹால்  சமாச்சாரம்  நாட்டுக்குள்ளே வரலை.  உள்பாடீஸ்  டெய்லரிடம் தைச்சு வாங்கிக்கணும்.  அதுலேதான்  கழுத்து, தோள்பட்டை ஓரங்களில்   அழகான வண்ண  நூல்களால்  டிஸைன்ஸ். எக்ஸ்க்ளூஸிவ்:-)))


அப்புறம் ஒயர் கூடை பின்னும் சீஸன்....   பசங்களுக்கு எப்படி கில்லி,  கோலி, பம்பரம், பட்டம் இப்படி சீஸன்கள் இருக்கோ அதே போலதான் இதுவும்:-)
என் காலத்துலே  நான் இப்படி ஒன்னும் செய்யலை. சரியான சோம்பேறி!

கிட்டத்தட்ட ஒன்னேகால் மணி நேரம்  பேசி இருக்கோம்!  நம்ம ரிஷபன் ஸாரை முதல்முறை பார்க்கிறோம் என்ற  ஒரு உணர்வுகூட இல்லாமல்  அப்படி கதை பேசி இருக்கோமுன்னா பாருங்களேன்.... பதிவர் குடும்ப உறவுகள் எப்படி ஸ்ட்ராங்கா இருக்குன்னு:-)

கொஞ்சம் படங்கள் க்ளிக் செஞ்சுக்கிட்டேன் என்றாலும், நம்ம ரிஷபன் ஸாருக்கு அவருடைய படங்கள் வெளிவருவது   விருப்பமில்லை என்றபடியால்  எல்லாம்  சொந்தக் கலெக்‌ஷனுக்குப் போயிருச்சு.

கிளம்பி வெளிவரும் சமயம்தான் வெங்கட்டின் அம்மா வந்தாங்க. நலம் விசாரிப்புடன்  முடிச்சுக்கிட்டேன்.


அடுத்த  அஞ்சாவது நிமிட் ரங்கா கோபுர வாசலில்  இறங்கிக்கிட்டோம்.  சீனிவாசன்  பார்க்கிங்  போட்டுட்டு வருவார்.  கேமெரா சீட்டு  வாங்கிக்கணுமான்னு   யோசிச்சுக்கிட்டே   ரெங்கவிலாச மண்டபத்தில்  சீட்டுக்காரர் இருக்கும் இடத்தைப் பார்த்தால்  யாருமே இல்லை.  மணி வேற  எட்டு பத்து.  இருட்டிக்கிடக்கு, இதுலே  ஃபோட்டோ வேறயா?


உள்ளே போய் கருடாழ்வாரை  ஸேவிச்சுக்கிட்டுச் சும்மா  ரெங்கன் கருவறை  இருக்கும் ப்ரகாரம் வரை போய்  வெளியே இருந்தே  திசை பார்த்து ஒரு  கும்பிடு. அப்புறம் வெளியே ப்ரகாரங்களில்  சும்மா  காலாற ஒரு நடை. தாயாருக்கும், சுதர்ஸனருக்கும், கோதண்ட ராமருக்கும்,  நரசிம்மருக்கும் நம்ம ராமானுஜருக்கும்  போற போக்கில்  வணக்கங்கள்தான். நந்தவனத்தின் வழியா ஒரு நடை. பூத்துக்கிடக்கும் பூக்களில் இருந்து   வரும் மெல்லிய  மணம்....  மனசுக்கு நிறைவைத் தந்துச்சு.


ஆண்டாளைக் காணோம். தூங்கப்போயிட்டாள் போல! அவள் நிற்கும் இடம் வெறிச்:(

கோவிலில் பராமரிப்பு வேலைகள் நடப்பதால்   அரை இருட்டில்  கவனமாகத்தான் போகணும். எங்கே பார்த்தாலும்  கல்லும் மண்ணும் கட்டைகளும்...... கும்பாபிஷேகம் எப்போ வச்சுருக்காங்கன்னு  தெரியலை!

சும்மாச் சுத்திச் சுத்தி வந்துக்கிட்டே  நேத்து இரவில் பிரஸாதம் வாங்கின அறைக்கு வந்தால்  கதவே பூட்டி இருந்துச்சு.  எல்லாம்  காலி!  ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருக்கும் ப்ரஸாத ஸ்டாலில்   வகைவகையா வச்சுருக்காங்க.  பாவம் பெருமாள்.  இதெல்லாம் இருப்பது தெரியாது போல!  வெறும் தச்சு மம்முவையே அனுதினமும் சாப்பிடறார்! தொட்டுக்கக்கூட ஒன்னும் கிடையாது போல! பாவம்:(


ஸ்டாலைத்தவிர  இந்தப்பக்கம் பெரிய  பாத்திரங்களைக்  கண்ணாடிப்பெட்டிக்குள் வச்சு அதுலே  புளியோதரை, தயிர்சாதம், சக்கரைப்பொங்கல்  வச்சுருந்தாங்க. அங்கேயே சாப்பிடுவோருக்கு வாழை இலையிலும்,  டேக் அவே என்றால்  அலுமினியம் ஃபாயில் உள்ள  கன்டெய்னரிலும் வச்சுக் கொடுக்கறாங்க.

பேசாம  டின்னருக்கு இங்கிருந்து வாங்கிப்போயிடலாமுன்னு   அந்த   புளியோதரை, தயிர்சாதம், சக்கரைப்பொங்கல் வகையில் ஒவ்வொன்னும்,  திருப்பதியாரை நினைச்சு ரெண்டு லட்டு, ரெண்டு  வடையும் பார்ஸல் வாங்கியாச்சு. ஸ்டாலில் காசு அடைச்சப்ப  அவர்  ஒரு ரூபாயை எனக்குக் கூடுதலா தந்துட்டார். சில்லரை இல்லையாம்.  அடப்பெருமாளே!  என்னை இப்படிக் கடன்காரி ஆக்கிப்பிட்டாயே:(   பரவாயில்லைம்மா  ஒரு ரூபா தானேன்றார்  ஸ்டால்காரர்.  எனக்கு ரொம்பவே பேஜாராப்போச்சு!

 சீனிவாசன் ஆளைக் காணோம்.  அவரிடம் ஒரு ரூ இருக்கான்னு  கேட்கலாம். வரட்டும்னு  கொஞ்சநேரம் அக்கம்பக்கம் வேடிக்கை.  ஆளைக் காணோமேன்னு செல்லில் கூப்பிட்டால் ' வெளியே இருக்கேன்.  பார்க்கிங் சரியாக் கிடைக்கலை. பக்கத்துத்தெருவில் நிப்பாட்டி இருக்கேன். நீங்க வாசலுக்கு வந்துருங்க. அதுக்குள்ளே வண்டியை அங்கே கொணாந்துருவேன் 'என்றார்.

அதன்படியே வெளியே  வந்ததுக்கும் வண்டி வரவும் சரியா இருந்தது. ஒன்பது நாற்பதுக்குத் திருச்சி    சங்கம் வந்து சேர்ந்தோம். சீனிவாசனை சாப்பிட்டு வந்து நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு  அறைக்குப் போனோம்.
சாமியைவிட மனுசனுக்கு நாக்கு நீளம்! அதான்  தச்சு மம்முவுக்குக் கொஞ்சம் ஊறுகாயும் வச்சுத்தந்துருக்காங்க!!!!


ரெண்டாவது நாளா இப்படி  சாமி ப்ரஸாத டின்னர் எடுத்துக்கறேன். என்னதான் காண்ட்ராக்ட் முறையில்  வெளியில்  செய்து கொண்டுவந்து பிரஸாதம் விற்றாலும் கூட....    ரொம்ப ஆராயக்கூடாது.  நம்பணும்.   ஒன்னும் ஆகாது. ஆகக்கூடாது ..... க்ருஷ்ணார்ப்பணம்!

தொடரும்.........:-)


PINகுறிப்பு:  ஆமாம்... எனக்கு ரொம்பநாளா ஒரு சந்தேகம்.  இப்பப் பாருங்க....மூலவரை தரிசனம் செஞ்சுக்காமலேயே   கோவிலுக்குள் புகுந்து   எல்லா சந்நிதிகளையும்  பார்த்து வணங்கிட்டு வர்றோம்தானே? இதே போல எல்லாக் கோவில்களிலும்  உள்ளே போய் சுத்தமுடியுதே.... இப்படி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்குள் போய் சுத்தமுடியுமா? பெருமாள் தரிசனம் வேணாம்.   அவ்ளோ நேரம் வரிசையில் நின்னு  ஸேவிப்பது கஷ்டம்.

 துணிஞ்சு  வரிசையில் போனாலும் ஒரு விநாடி கூடப் பார்க்க முடியாமல் வல்லரக்கிகள்  கைபிடித்து இழுத்து வெளியே  கடாசிப்பிடறாங்களே:(  அப்புறம் அழுதழுது  தலைவலிதான் மிச்சம். இனிமேல் வர்றதில்லைடான்னு சொல்லிட்டு வந்துருக்கேன்.  அதுக்காக.......

 சும்மா ப்ரகாரம் சுத்த வாய்ப்புண்டா? தெரிஞ்சவங்க கட்டாயம் சொல்லுங்க.
கொஞ்சம் வாக்கு மீற ஆசை:-)




Viewing all articles
Browse latest Browse all 1475

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>