Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1438

நானொன்று நினைக்க......... சிவரொன்று நினைத்தார்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 63)

$
0
0
வழக்கம்போல்  காலை எட்டரைக்கு  கிளம்பினோம். இன்னும் ஒரு கோவில்தான், 108 வகையில் திருச்சியில் பாக்கி. திருவானைக்காவல்  மாம்பழச்சாலை கடந்து போறோம். தாத்தாச்சாரியார் கார்டன் என்ற பெயரோடு ஒரு நர்ஸரி.  செடிகள் பார்க்கவே கண்ணை இழுக்குது.  அடடா..... வீட்டுத் தோட்டத்துக்கு  வச்சு ஜமாய்க்கலாமே!



டோல்கேட் பாலம் கடந்து இடதுபக்கம் போறோம். நேத்து இந்த வழியாத்தானே வந்தோம் திருவெள்ளறை போக!  யோசிக்கும்போதே  மண்ணச்சநல்லூர் போகும் சாலை வலதுபக்கம் பிரியுது. அதுலே திரும்பாமல் கொள்ளிடத்தை ஒட்டியே நேராப்போறோம்.  கோபால்தான்  செல்லில் கூகுள் மேப் பார்த்து வழி சொல்லிக்கிட்டு இருந்தார்.   இன்னும் கொஞ்சதூரம் போய் ரைட் எடுங்கன்னார்.


இன்னும் கொஞ்சதூரப் பயணத்தில்  ஒரு பெருமாள் கோவில் கண்ணில் பட்டது. ஸ்ரீ பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில். பழங்காலக்கோவில் போலத் தெரியலை.  ஆனாலும்  போய் ஒரு கும்பிடு போட்டுக்கலாமுன்னு  தோணுச்சு. அதேபோல் ஆச்சு. கோவிலைத்தொட்டடுத்து  கோவில் தீர்த்தக்குளம். பாபவினாஸ தீர்த்தம். கம்பி கேட் எல்லாம்போட்டுப் பாதுகாப்பாக வச்சுருந்தும்..............  ப்ச் :-(  தீர்த்தம் பண்ண பாவம் அதிகமோ என்னவோ?  நீராழி மண்டபத்தின் மேல் காளிங்க நர்த்தனம்!   அப்புறம்தான் தெரிஞ்சது இது குணசீலம் கோவில்!  குணசீலம் என்றதுமே கொஞ்சம் மனசு கலங்குச்சு. சுத்தும் முத்தும்  பார்த்தேன்.  எவ்ளோ கதைகள் கேட்டுருக்கேன்!

மெள்ள விசாரிச்சப்ப, மனநிலை சரி இல்லாதவர்கள்  அதிகாலையிலும் மாலை நேரங்களில் மட்டுமே வர்றாங்களாம்.  மண்டபத்தில் கொண்டு வந்து கட்டிப்போட்டு வைப்பதெல்லாம் இப்போ தடை செஞ்சுருக்காங்கன்னு சொன்னாங்க.
பெருமாளை தரிசிக்கக்  குறைஞ்சபட்சம் 50 பைஸாவாவது  கொடுக்கணுமாம்.  சாமி ஃப்ரீ  இல்லை!  ஏற்கெனவே மனநிலை சரியில்லாதவர்கள் படும் கஷ்டம் போததுன்னு  இது வேறயா?

இதென்ன அநியாயமுன்னு  விசாரிச்சால்.....  வாசலில் இருந்து கூடப் பார்க்கும் வகையில் சாமி நேராத் தெரிகிறார். பத்தெட்டு பின்னால் நின்னு தரிசனம் செய்யலாமேன்னு சொல்றாங்க.



அங்கிருந்து  கிளம்பி போன வழியே  வந்தோம்.  அப்ப இன்னொரு பாதையைக் காட்டி அங்கே போகச்சொன்னார் கோபால். போய்ச் சேர்ந்த இடத்தில் கோவில்  கோபுரத் திருப்பணி நடந்துக்கிட்டு இருக்கு. முந்தின  இரவு மழையால்  தரை எல்லாம் சொதச் சொத.....  அஞ்சடுக்குக் கோபுரத்தில் பெருமாள் இருக்கார்.   உள்ளே போய்ப் பார்த்தால் இது பெருமாள் கோவில் இல்லைபோல  இருக்கேன்னு மனசில் பட்டது! ரொம்பச் சரி.
இது சிவன் கோவில்தான்.   சிவ சிவ  சின்னமும்,கொடி மரமும்,  அதுக்கப்பால்  மேடையில் இருக்கும் நந்தியுமா மாற்றுரை வரதீஸ்வரர்   கோவில் கொண்டிருக்கார்.







குருக்கள் ஒருவர்  எனக்காகவே காத்திருந்த மாதிரி  'வாங்க'என்றார்.  அவரைப்பற்றி விசாரிக்கும்போதே இன்னும் சில  பக்தர்கள்  வந்து சேர்ந்துக்கிட்டாங்க.  முதலில் அம்மனை தரிசிக்கலாம் என்றதும் அவரைத் தொடர்ந்து  எல்லோரும் போனோம்.  மண்டபத்தின் இடது பக்கம்  வாசலில் துவாரபாலிகைகள்  நம்மை உள்ளே  போங்கன்னு சொல்லும் பார்வையுடன் ! சந்நிதிக்குள் நுழைஞ்சால் பாலாம்பிகை , தாமரைப்பூவில் நின்ற கோலம்.  பாலசுந்தரின்னும் இன்னொரு பெயர் இருக்கு.  சுந்தரியாகத்தான் இருக்கிறாள் அழகுடன்!

தீபாராதனை காமிச்சுப் பால் செம்பு கொண்டுவந்து  நம் உள்ளங்கைகளில் கொஞ்சம் பால் பிரஸாதம். ரொம்பசக்தி உள்ள அம்மன், எல்லோரும் பாலை வாங்கிக்குங்கன்னார்  செல்லப்பா குருக்கள்.   தீபாராதனை காமிச்ச குருக்கள் வேற ஒருவர்.

திரும்ப மண்டபத்துக்கு  வந்து   குருக்கள்  முன்பாக நின்னோம். இந்த மண்டபத்துக்கு ஆவுடையாப்பிள்ளை மண்டபம் என்று பெயர்.  அங்கே  கட்ட கோபுர வாசல் என்று  இன்னொரு வாசலும் அதன் முகப்பில்   மூன்று  பகுதியாப் பிரிச்சு,  ஒன்னில் பெருமாளும், அடுத்து  தகப்பன்சாமியும், இன்னொன்றில் பாம்பின்மேல் நின்றாடும்  நடராஜரும்   பார்த்து  அது  ஏன் இப்படின்னு  கேட்டதும்,  காத்திருந்த  கைடு போல் கோவிலைப் பற்றிய கதைகளைச் சொல்ல ஆரம்பிச்சார்.  இனி கேட்ட கதைகள் என் நடையில்.


 தேவாரப் பாடல் பெற்ற 247 சிவன் கோவில்களில் இது ஒன்னு.  சமயக்குரவர் நால்வரில்  திருஞான சம்பந்தர் , சுந்தரமூர்த்தி நாயனார்  வந்து  பாடிய தலம்.

திருப்பாச்சிலாச்ரமம்  அப்போ மழவநாட்டின் ஒரு பகுதி.  கொல்லி மழவனென்னும் மன்னர் அரசராக  இருந்த நாட்கள்.  அரசருடைய மகளுக்கு  முயலகம் என்ற ஒரு வியாதி வந்து  பல வைத்தியங்கள் பார்த்தும்  குணமாகலை.  இது வயிறு சம்பந்தமான ஒரு நோய். கூடவே வலிப்பும் இருந்துருக்கு. பாவம்:(

மகளுடைய கஷ்டத்தைப் பார்த்து மனம் நொந்த அரசர், மகளைக்கூட்டி வந்து  சாமி சந்நிதியில்  கிடத்திட்டு,  இனி நீரே கதி ன்னு  விட்டுட்டுப் போறார்.  அப்பதான் சுந்தரர் அங்கே வந்து சேர்ந்து, பெருமானை தரிசிக்கச் ச்ந்நிதிப் பக்கம் போனால்  அங்கே வலியினால் துடிச்சுக்கிட்டு இருக்கும் பெண். ஐயோன்னு  மனமிளகி ,  சிவனிடம், இந்தப்பெண் தன் வேதனை,வலிகளில் இருந்து குணமாகணும் என்றுவேண்டி, பதினொரு  பாடல்கள் பாடுகிறார்.
"துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்  சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
பணிவிளர் கொங்கையர் பாரிடம்சூழ வாரிடமும் பலி தேர்வர்
அணிவளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து இறைகின்ற
மணிவளர்  கண்டரோ மங்கையை வாட மயல்செய்வதோ இவர் மாண்பே"
இப்படி ஆரம்பிச்சு இன்னும் பத்துப் பாடல்கள் தமிழ்மாலை என்ற தொகுப்பில்  இருக்கு.   மக்கள் நோய்தீர  இந்தப் பாடல்களைப்  பாடி  மனமுருக வேண்டினால் நோய் தீரும் என்ற  நம்பிக்கையும் உண்டு.  (நம்புனால்தான் சாமி. அதை முதலில்  நம்பணும்!)


பாடல்களின் இசையிலும் பொருளிலும் மயங்கிய ஈசன்,   ஆட ஆரம்பிச்சுருக்கார். அப்படியே அரசகுமாரியின் நோயை ஒரு பாம்பு உருவமாக்கி அதன் தலையில் நின்னு  ஆடினாராம். அதனால்தான் முயலகன் மீது ஆடும் நடராசர், இங்கே  பாம்பு மேல்  ஆடறார்.

இங்கே இருக்கும் சிவபெருமானுக்கு  மாற்றுரைவரதீஸ்வரர், சமீவனேஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர்கள் இருக்கு. மாற்றுரைக்கும் சம்பவம்தான்  கட்டக்கோபுரவாசல் முகப்பில் முதல்பகுதியில் இருக்கு!
சுந்தரமூர்த்தி நாயனாருடைய பாட்டுதான்  தேவாரத்தில் ரொம்பவே புகழ்பெற்ற  இந்தப் பதிகம்.அநேகமா எல்லாருக்கும் இந்த முதல் வரி தெரிஞ்சுருக்கும்தான்!

பித்தா பிறை சூடி  பெருமானே அருளாளா  
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
 வைத்தாய்பெண் ணைத்தென்பால் வெண்ணைய்நல்லூர் அருள்துறையுள் 
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே!

இவரும்  சிவனும் ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ். தனக்கு வேண்டியதையெல்லாம்  நண்பனிடம்கேட்டு வாங்கிக்கும் பழக்கம்  சுந்தரருக்கு இருந்துச்சு.  இல்லாமலா  பரவை நாச்சியார் என்ற  பெண்ணை அடைய சிவனிடம் தூது போகச் சொல்லிக்கேட்டு,  அதுவும் நடந்ததே

  சுந்தரர் ஒரு சமயம் திருவானைக்காவல்  கோவிலுக்குப்போய் தரிசனம் செஞ்சுட்டுஅப்படியே திருப்பாச்சிலாச்ரமம் என்ற ஊருக்கு வர்றார்.  இவர்கூடவே எப்போதும் சிவனடியார்கள் கூட்டமாக வருவாங்களாம். அப்படி வரும் கூட்டத்துக்கு  உணவு படைக்க ஆகும் செலவுக்கு சிவனிடமே பொன்  வாங்கிக்குவாராம்.

இங்கே வந்ததும், வழக்கம்போல் பொன் கேட்டுருக்கார். இந்த முறை பொன் கொடுக்காமல் கப்சுன்னு இருந்துருக்கார் சிவன். இவருக்குக் கோபம் வந்துருச்சு. சிவனை இகழ்ந்து  ஒரு பதிகம் பாடினார். (ஆன்னஊன்னா பாடிருவாங்களே!  பழைய காலத்து சினிமாக்களில் 60,  70 பாடல்கள் இருந்துச்சுன்னா...  காரணம் இவர்கள்தான் போல!)

வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்த பாம்பார்த்தோர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவரலாது இல்லையோ பிரானார்.

சரி. இப்படியெல்லாம்  திட்டு வாங்க வேண்டி இருக்கேன்னு  சிவனும் ஒரு  பொற்கிழியைக் கொடுத்துட்டார்.  திறந்து  பார்த்தால்....  அசல் பொன் மாதிரி தெரியலை. தங்கமுலாம் பூசிக்கொடுத்துட்டாரோன்னு  சுந்தரருக்கு சம்ஸயம்.

நம்ம ஊரிலும்  பாருங்க...  நகைக்கடைகளில் 22  காரட்ன்னு சொல்லி நம்ம தலையில் கட்டிடறாங்க.  அப்புறம் எப்பவாவது அந்த நகையை மாத்திட்டுப் புது டிஸைன் வாங்கிக்கலாமுன்னு அதே கடைக்குப்போனால்....  இப்பெல்லாம் கம்ப்யூட்டர்  மாத்து பாக்குதுன்னு சொல்லி அதுக்குள்ளே வச்சால் அது  19, 20ன்னு பல்லைக் காட்டுது. அதுக்குதான் இப்ப ஹால்மார்க் ஸ்டாம்ப் போட்ட நகை வேணுமுன்னு கேட்டு வாங்கிக்கணும், நாம்.


தங்கக்காசை வச்சுக்கிட்டு  தங்கமா இல்லையான்னு  தலையைச் சொறிஞ்சுக்கிட்ட நின்னப்போ.... ரெண்டு  வணிகர்கள்  கோவிலுக்குள் வர்றாங்க. அதுலே ஒருத்தர்  பொன் வியாபாரம் போல!  என்ன பிரச்சனைன்னு கேட்டுட்டு, இப்படிக் கொடுங்க நான் பரிசோதிக்கறேன்னு அவர் வச்சுருந்த ஒரு கல்லில் உரசிப் பார்த்து  மாற்று சரியா இருக்கு. இது 24 காரட்தான்னு  சொல்றார்.  கூட வந்தவரும்  ஆமாமாம்.  இது அசல் தங்கம் னு  அடிச்சுச்சொல்றார்.  சுந்தரருக்கு மகிழ்ச்சி. பையை இடுப்பில் செருகிக்கிட்டே நன்றி சொல்லலாமுன்னு  தலையை நிமிர்த்திப் பார்த்தால்.... வந்த ரெண்டு பேரும்  மாயமா மறைஞ்சுட்டாங்க.

திகைச்சுப்போய் நின்ன சுந்தரருக்குக் காட்சி கொடுத்த சிவன், தன்னுடன் வந்த இன்னொரு வணிகர்,  தங்கமகள்  மகாலக்ஷ்மியின்  கணவரான மகாவிஷ்ணுதான் என்று தெளிவுபடுத்தினார். தங்கத்தை உரைத்துப்பார்த்து மாற்று சரின்னு சொன்னதால்  மாற்றுரைவரதீஸ்வரர் என்ற பெயரையும் அடைஞ்சார்.

இந்த மாத்துன்னதும் இன்னொரு சமாச்சாரம் எனக்கு நினைவுக்கு வருது.  நியூஸி வந்த புதுசுலே,  வீட்டுக்கும், வீட்டுப் பொருட்களுக்கும் காப்பீடு எடுக்கணுமுன்னு  இருந்ததால்   அதைப்பற்றிக் கொஞ்சம் விவரம் கேட்டுவர இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குப் போனோம். மற்ற பொருட்கள்  விவரங்களுக்கெல்லாம்  அததுக்குண்டான விலையை  உத்தேசமாப் போட்டாங்க. வீட்டுக்கு  வாங்கின பத்திரத்தில் விலை இருந்துச்சு. நகைகளுக்கு மட்டும்  நகை மதிப்பீட்டாளர் ஒருத்தர் பார்த்து அதுக்குண்டான மதிப்பைக்குறிச்சுக் கொடுக்கணுமுன்னு சொன்னாங்க. ஙேன்னு முழிச்ச நம்மிடம்,   மதிப்பீடு செய்பவர்களின்  பெயர்களில் ரெண்டு மூணு கொடுத்து விலாசமும்சொன்னாங்க. 

நம்ம பேட்டையில் இருக்கும் மதிப்பீட்டாளர் ஒருவரைத் தேடிப்போனேன். அங்கெ போனால்... ஒவ்வொரு நகைக்கும்  25 டாலர்  நாம் கொடுக்கணுமாம்.  மதிப்பீட்டாளர்   அது தங்கமா, இல்லையா, எவ்ளோ மதிப்பு பெறும் என்றெல்லாம்  பரிசோதனை செஞ்சு  திருப்பித்தர  ஒரு வாரம்  ஆகுமாம்.
இப்ப திகைச்சு நின்னது நாந்தான். ஒன்னாவது  நம்மகிட்டே பெரிய நகைகளா ஒன்னும்   இல்லை. எல்லாமே ரெண்டு பவுன், மூணு பவுன்தான். இதைத் தவிரச் சின்னச் சின்னதா  மகளுக்கும் எனக்குமான காதணிகள் கொஞ்சம். ஒரு அஞ்சாறு மோதிரங்கள். ஒவ்வொன்னும் 25 டாலருன்னா எவ்ளோன்னு  கொடுக்கறது?  அதையெல்லாம்  சேர்த்தாவே நல்லதா  ஒரு பெரிய நகை சிங்கையில் வாங்கிக்கலாம். அப்போ தங்கம் இவ்ளோ விலை இல்லையே. கிராம் 16 டாலர்ன்னு நினைவு.

ரெண்டாவது, அவ்வளவா   ஏட்டுக் கல்வி அறியாத  தங்கநகை செய்யும் நம்மூர்  ஆசாரி,  உரைகல்லில் உரசிப்பாத்து  அந்த  நொடியே அது தங்கமா இல்லையான்னு சொல்லிருவார். இங்கே இத்தனை  நவீன கருவிகளை வச்சுக்கிட்டு  மாத்துப் பார்த்து மதிப்பிட ஒரு வாரம் ஆகுமாமா?  நல்லா இருக்கேன்னு  திரும்பி வந்துட்டேன்.

கதை கேட்டு முடிக்கும் சமயம் அங்கே வந்த இன்னொரு கோவில் பணியாளர், நம்ம செல்லப்பா குருக்களைப் பார்த்துட்டு, 'இன்னைக்கும் வந்துட்டீரா? மழையா இருக்கே..வரமாட்டீர்னு  பார்த்தேன்'னு சொல்லி தலையை ஒரு மாதிரி நொடிச்சுக்கிட்டார்.   'முடியுதா? வயிறு இருக்கே'ன்னு  நம்ம செல்லப்பா குருக்கள்  பதில் சொன்னதும்தான்  இவர் செல்ஃப் அப்பாய்ண்ட்டட் கைடுன்னு புரிஞ்சது.  கோவில் ஜீவனோபாயத்துக்கு  வழி  வகுக்குதே!
 இருக்கட்டுமுன்னு  நினைச்சு ஒரு தொகையை அவர் கையில் திணிச்சார் நம்ம கோபால்.  நம்ம செல்லப்பா குருக்கள்  மனசு நிறைஞ்சதுன்னு முகம் சொல்லுச்சு.

நாங்கள் கோவிலைச் சுத்திப் பார்க்க பிரகாரத்துக்குள் நுழைஞ்சோம்.   பாலாம்பிகை சந்நிதிக்கு எதிராக  ரொம்ப தூரத்தில் புள்ளையார் இருக்கார்.  இவர் செல்வ விநாயகர்.  இருவருக்கும் இடையில் ஒரு தீர்த்தம். பெயர் அன்னமாம் பொய்கை. பார்க்க ஒரு பெரிய தொட்டி போல் இருக்கு. அழுக்கு விழாமல்  மூடி வச்சுருக்காங்க.  தீர்த்தத்துக்கு  இறங்கும் வழியில் சின்ன தடுப்புச்சுவரில் நந்திகள்  ரெண்டு பக்கமும்.



புள்ளையாரை தரிசிக்கப்போகும் வழியில் இன்னொரு சின்ன கல்மண்டபத்தில்  இன்னொரு நந்தி.பக்கத்தில்ரெண்டு நாகர்கள்.
செல்வவிநாயகர்  மின்னும் அழகான தொங்கு விளக்கில் ஜம்முன்னு இருக்கார்.   வலம்  வந்து கும்ப்ட்டுட்டு வலம் தொடர்கிறோம். தெங்கும், பூச்செடிகளுமா நிறைய மரங்களுடன் தோட்டம் நல்லாவே இருக்கு. எருக்குழி மாதிரி வெட்டிவச்ச இடத்தில்  ப்ளாஸ்டிக் பைகளால் நிறைச்சுருக்கும் குப்பை.  நல்லவேளை காத்துலே அங்குமிங்கும் பறக்காம  ஒரு இடத்தில் கிடக்கு.  சரியான முறையில் இந்தக் கழிவுகளை அகற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு.




பெரிய இடமாத்தான் இருக்கு. வெளிப்ரகாரம் முடிச்சு திரும்பவும்  முன்மண்டபத்துக்குள் நுழைஞ்சு  கட்டகோபுர வாசலுக்குள் நுழைஞ்சு உள்ப்ரகாரம் போறோம்.

சுத்திவர   திண்ணை போல  இருக்கும் வெராந்தா கல்மண்டபத்தில் ஒரு பக்கம் வாகனங்களும்,ஒரு பக்கம் கடவுளர்களும்  இருக்க  அங்கங்கே  சந்நிதிகள் சின்னச்சின்ன விமானங்களுடன்.



ரொம்பவே பழைய கோவில்தான்.  விமானங்கள் எல்லாம் பழுதடைஞ்சுருக்கு. உள்ளே இருக்கும்  இன்னொரு மூணு நிலை கோபுரத்துக்கும் பழுதுபார்க்கும் வேலை நடக்குது.  பக்கத்திற்கொன்றாக  பெரிய சிறிய திருவடிகள் நிற்க  பெருமாள்  அமர்ந்த கோலம் காட்டறார்.  முருகன் சந்நிதி விமானத்தில் இருக்கும் ஆறுமுகனின் இடப்பக்கம் காணோம்.  வெறும் அஞ்சே கைகளுடன் இருக்கார்:(








ப்ரம்மனுக்கும் தனிச் சந்நிதி.

 மாற்றுரை வரதர்  சந்நிதி வாசல் இது.  உள்ளே போய் பெருமானை தரிசித்தோம்.  ருத்ராக்ஷப் பந்தலின் கீழ் இருக்கார்!

இச்சா  க்ரியா, ஞான சக்திகள்  வெளிப்புற கோஷ்டத்தில் இருக்க  விஷ்ணுதுர்கைக்கு தனியா ஒரு சந்நிதி இருக்கு.

சந்நிதிகள் ஒவ்வொன்னுக்கும்  விமானங்கள்  ரொம்பவே அழகா அமைச்சுருக்காங்க.  குட்டிக்குட்டிக் கோவில்கள் போல் தனித்தனியா!  எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

சுற்று முடிச்சு மீண்டும்  ஆவுடையாபிள்ளை மண்டபம் வந்தப்ப, நம்ம செல்லையா குருக்கள்  அங்கே தான் இருந்தார்.  தரிசனம் ஆச்சான்னு விசாரிச்சவர், இங்கேவந்து பாரும்மான்னு கூட்டிப்போய் மண்டபத்தில் இருந்த கல் தூணுக்குள் உருளும் உருண்டைக் கல்லைக் காமிச்சார்.  அடடா.... என்ன மாதிரி கட்டிடக்கலை நம்மதுன்னு பெருமை வந்தது நிஜம்.

பக்கத்திலே  நவக்ரஹ சந்நிதிகள் மேடையில்.  பொதுவா ஆளுக்கொரு திசை பார்க்கும் இவுங்க, இங்கே வேறவிதமா இருக்காங்க.  நடுவிலே இருக்கும் சூரியன், தன் மனைவி ப்ரத்யுக்‌ஷா (உஷா), சாயா தேவி இருவருடன் நிற்க,மற்ற எண்மரும் அவரைப் பார்த்தபடி!

செல்லப்பா குருக்களுக்கு நன்றி சொல்லிட்டுக் கிளம்பினோம்.

தினமும் காலை   ஏழு முதல்  பனிரெண்டு, மாலை  நாலரை முதல் ஏழரை வரை  கோவிலைத்திறந்து வைக்கிறாங்க.

சொல்ல மறந்துட்டேனே......   இந்த  ஊருக்குத்  திருப்பாச்சிலாச்ரமம்   என்பது புராணப்பெயர். இப்பத்துப்  பெயர் திருவாசி!

இங்கே வரணுமுன்னு  எந்த ஒருவிதமான முன்கூட்டிய திட்டமும் இல்லாமல்  இருந்த  என்னை, இப்படி வரவழைச்சு தரிசனம் கொடுத்த சிவனின் கருணையையும் அன்பையும் நினைச்சு எனக்குக் கண்ணீர் வந்தது  உண்மை.  அன்பே சிவம் என்பது இதுதானோ!!!

தொடரும்........:-)




Viewing all articles
Browse latest Browse all 1438

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>