Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1439

ரெங்கடு..... போய் வஸ்த்தானுரா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 65)

$
0
0
சரியா 3.40க்கு  அந்த ஸ்ரீ ரங்கா  கோபுரத்தாண்டை போய் இறங்கினோம்.  போன பயணத்தில் இருட்டும் நேரத்தில் கோவிலுக்குப்போனதால்,  இந்தக் கோபுரத்தைப் பார்க்கலையேன்னு  கவலைப்பட்டேன். இப்பவும் அதே கவலையைத் தொடரவேண்டியதாப் போச்சு:(  கோவிலைப் பழுதுபார்க்கும் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்குன்னு சொன்னேன் பாருங்க...  அது கோபுரங்களுக்கும் சேர்த்துத்தான்.  எல்லோரும் முக்காட்டுக்குள் முகம் மறைத்து  நிக்கறாங்க.


முதல்வேலை முதலில் என்று விடுவிடுன்னு  ரெங்கவிலாஸ் மண்டபத்து இடது புறம் கேமெரா சீட்டு விற்கும் இடத்துக்குப்போனால்  விற்பனையாளருடன் பேசிக்கிட்டு இருந்தார்  நம்ம காளிமுத்து.  அவருக்கு நம்மைப் பார்த்ததும் வியப்பு.  எப்ப வந்தீங்க? ன்னு ஆவலா விசாரிச்சார். இவர்தான் போனமுறை (2012) வந்தப்ப நமக்கு கைடு.  தினமும் எத்தனையோ ஆயிரம்பேரைப் பார்க்கிறவர், நம்மை நினைவு வச்சுருக்காருன்னா    அதுவும் ரெண்டு வருசத்துக்குப் பிறகும்.... எவ்ளோ படுத்தி இருப்பேன் நான்!  நலம் விசாரிப்புக்குப்பின் கேமெரா சீட்டை வாங்கிக்கிட்டு நடையைக் கட்டுனோம்.


முதலில் கருடமண்டபத்துக்குப்போய்  பெரியதிருவடிக்கு  கும்பிடு போட்டதும் விடுவிடுன்னு (வழக்கம்போல்) முன்னால் போன கோபாலைப் பின் தொடர்ந்து ஓடினேன். அவர் நேராப் போய் சிறப்பு தரிசனம்  சீட்டு  வரிசைக்குள் போறார். எதுக்கு,  வேணாமுன்னு சொல்லச் சொல்ல,   கம்பித்தடுப்புகளுக்குள் முன்னேறிக்கிட்டே  இருக்கார். நமக்கு முன்னால் ஒரு நாலைஞ்சு பேர்தான்!   அவுங்களும் தடுப்புக் கதவு திறந்ததும்  ரெண்டு படி இறங்கிப் போறாங்க. சீட்டு ஒன்னும் வாங்குனமாதிரி தெரியலை.  கவுண்ட்டர்கிட்டே போனதும்  ரெண்டு அம்பது ரூபாய்ன்னு சொல்லிச் சீட்டு வாங்கிக்கிட்டோம். நமக்குப்பின்னால் வளர்ந்துக்கிட்டு இருந்த வரிசையிலும் யாரும் சீட்டு வாங்குன மாதிரி தெரியலை.


நமக்கெதுக்கு நாட்டாமைன்னு   முன்னால் போனவர்களைப் பின்பற்றி தரிசனத்துக்குப் போறோம். எதுக்கு இப்போ  இன்னொருக்கான்னு இவரைக் கேட்டால்....  நீதான் பாத தரிசனம் பார்க்கலைன்னு அன்னிக்குப் புலம்பிக்கிட்டே இருந்தேல்லியா? அதான்   உனக்கு மனக்குறை வேணாமேன்னு  பதில் சொல்றார். என் பட்டு, என் செல்லம்னு மனசுக்குள் கொஞ்சிக்கிட்டேன்:-) ரெங்கன் முன்னால் நிற்கும்போது , பின்னாலிருந்து  குரல்  வருது, "காலைப் பார்,  காலைப்பார்!"

கூட்டம் குறைவுன்னாலும்   மக்களை விரட்டிப் பழகிப்போன  கோவில் பணியாளரின் வாய்,  'சீக்கிரம், சீக்கிரம்  இந்தப் பக்கம் வாங்க 'கத்திக்கிட்டே இருக்கு.  பாதமும், முகமும் மாறிமாறிப் பார்த்துட்டு  மனம் நிறைஞ்சு போச்சுன்னு   சந்நிதியை விட்டு வெளியே  வந்ததும்தான், இன்னும் நல்லாப் பார்க்கலையோன்னு சம்ஸயம் வந்துச்சு.  நிறைஞ்ச மனம் போச்சு. குறைஞ்ச மனம் வந்துருச்சு. என்ன இப்படிப்  பாடாய் படுத்தறானேன்னு கொஞ்சம் கோபமும்.   சரியாப் பார்க்கலைன்றது  உண்மைதான்னு நம்ம கீதாவின் பதிவில் யாகபேரர்னு வாசிச்சதும்  புலனாச்சு.  அடுத்தமுறை யாகபேரர் & பாத தரிசனம் நினைவில் வச்சுக்கணும்.


(அப்புறம் விசாரிச்சப்ப  மாலை 4 மணி முதல் 5 வரை  சீனியர் சிட்டிஸன்களுக்கான  இலவச சேவையாம்.  60+ )


இந்த சமயங்களில்தான் நம்ம அடையாறு  அநந்தபதுமனை  பாராட்டத் தோணுது. நின்னு நிதானமா  பெருமாளை  இஞ்சு  இஞ்சா  பார்த்து  ரசித்து வணங்கலாம்.  முகத்தையும், விட்டேத்தியா மேலே பார்க்கும் கண்களையும் பார்த்துக்கிட்டே அவனோடு பேசலாம். எவ்வளவு நேரம் ஆனாலுமே பட்டர்கள் யாரும்   வாயையே திறக்க மாட்டாங்க.  கண்ணாரக் காணுதல் நமக்கு அங்கேதான் லபிக்குது!



போகட்டும். இன்றைக்கு இப்படின்னு மனசை (ஓரளவு) சமாதானப்படுத்திக் கிட்டே   அன்னமூர்த்தியைப் போய் கும்பிட்டுக்கிட்டேன்.  ஏற்கெனவே பருப்பு & ரசஞ்சாதத்துக்கு  கேரண்டீ கொடுத்துட்டார் போனமுறையே என்றாலும்....   அந்த வாரண்டியையும்  அப்பப்பப் புதுப்பிச்சுக்கிட்டால் நல்லதுதானே!  இவரோட மகிமை இன்னும் பரவலை போல!  எப்பவும்  ஏகாந்த தரிசனம்தான்!  இந்த சந்நிதி பற்றிச் சொன்னவர் நம்ம வெங்கட் நாகராஜ் அவர்களின் அப்பா.

(மேலே படம் போனமுறை  எடுத்தது)

தங்கவிமானம் , மேலே போய் பார்க்கமுடியுமான்னு   கருடாழ்வார் சந்நிதிப் பக்கம் இருக்கும் நேயடுவை நோக்கிப் போனால்....  கம்பிக்கதவு மூடி இருக்கு.  அந்தப்பக்கம்  இருட்டில் இருக்கும் மண்டபத்துக்குள் போனால்   தூண்களில் அழகான  செதுக்குச் சிற்பங்கள்.  நாலு க்ளிக் க்ளிக்கும்போதே  அங்கே வந்த பணியாளர் , இங்கே படம் எடுக்கக்கூடாதுன்னார். கேமெரா சீட்டு இருக்குன்னேன்.  அப்பவும் இந்த ஏரியாவில்  அது செல்லாதுன்னுட்டுப் போனார்.



மூலவர் தரிசனம் முடிச்சு  வெளியே வந்து  ஒரு திண்ணையில் ஏறி  தங்கவிமானம் பார்க்கும் இடத்தில் நின்னுருந்த கூட்டத்தில் போய் கலந்தோம்.    அரைவாசி தெரிஞ்சது.  போதும் போ!


ரெங்கவிலாஸ மண்டபத்தூண்களில் இருக்கும் சிற்பங்களைப் படமெடுத்துக்கிட்டே நடந்து,  பூட்டுகளாகத் தொங்கும் கொடிமரத்தாண்டை போனேன்.  ஒருமுறை எல்லாப் பூட்டுகளையும் அப்புறப்படுத்திட்டாங்கன்னு ரோஷ்ணியம்மா சொல்லக் கேள்வி. இப்ப மறுபடி பூட்டுகள் காய்க்கத் தொடங்கி இருக்கு.


கோவிலுக்குள்  ஒரு ம்யூஸியம் இருக்கு தெரியுமோ?
நுழைவுக்கட்டணம்கூட  ரெண்டு ரூபாதான்னு நினைவு. இதுவரை உள்ளே போகலையேன்னு  நுழைஞ்சோம்.  ரொம்ப விசேஷமுன்னு சொல்ல முடியாது.  ஆனால் உள்ளே இருக்கும் கலைப்பொருட்களை இன்னும் கொஞ்சம் நல்லா  டிஸ்ப்ளே செஞ்சுருக்கலாம்.  (இங்கே க்ளிக்க அனுமதி இல்லை)  தந்தத்தினால் ஆன  சின்ன சிலைகள் அழகோ அழகு.  ஆனால்  எல்லாம் தூசி படிஞ்சுக்கிடக்கு. சுத்தப்படுத்த ஆட்கள் வேணுமுன்னு சொன்னால்  பக்தர்கள் ஓரிரு மணிகள்  சிரமதானம் செய்ய முன்வரமாட்டோமா?   நான்கூட எல்லாத்தையும் கவனமா எடுத்துத் துடைச்சு வைக்கமாட்டேனா என்ன?  இல்லை ஆகாதுன்னால்  ம்யூஸியத்துக்கான நுழைவுக் கட்டணத்தை அஞ்சு ரூபா ஆக்கினாலும் போதுமே.  ஆள் வச்சுச் சுத்தம் செய்யலாமே!  பொருட்கள் பளிச்னுன்னு  இருந்தால்  பார்வையாளர்கள்  10 ரூ  என்றாலும் பொருட்படுத்த மாட்டாங்கதானே? இந்த அழகில் கோவிலுக்குள்ளே  பராமரிப்பு வேலைகள் நடப்பதால் தூசிக்கும் தும்புக்கும் கொண்டாட்டம்தான்:(  எல்லா பிரகாரங்களிலும்  பக்தர்களைக் கவனமாகப் போகச் சொல்லி   தகவல் வச்சுருந்தாங்க.






ஸ்ரீ ராமானுஜர் சந்நிதிக்குப்போய் ஒரு கும்பிடு.  அப்படியே  நம்ம பார்த்தஸாரதிக்கும் ஒரு கும்பிடு. இப்படியே அன்னதானக் கூடத்துக்கு  வந்திருந்தோம். ஒவ்வொரு அரைமணிக்கும் ஒரு பந்தின்னு சொன்ன மேலாளர்,  அடுத்த பந்தி இப்ப அஞ்சு நிமிசத்தில் ஆரம்பிக்கும்.  சாப்பிடறீங்களான்னார்.  இல்லை.  உள்ளே படமெடுத்துக்கலாமான்னு  கேட்டேன்.  உள்ளே நோவாம்.  வெளியே அன்னதான திட்டம்பற்றி வச்சுருந்த போர்டை க்ளிக்கினேன்.  அதன் பக்கம் தெரிஞ்ச டைனிங் ஹால் நீட்டாத்தான்  தெரிஞ்சது.
 ஆமாம்....  தரிசனம் செஞ்சுட்டு  வர்றாங்கன்னு எப்படித் தெரியும்?  கையிலே மை வைப்பாங்களோ? அது என்ன டோக்கன்? எங்கே  கொடுக்கறாங்க?  ஙே....



சேஷராயர் மண்டபத்துக்குப் போனோம்.  அங்கேயும் திருப்பணிகள்.  வெள்ளைக்கோபுரத்திலும் வேலை நடக்குது.  இதுவரை ஆண்டாளைப் பார்க்கலையேன்னு  வெள்ளைக் கோபுரத்தைக் கடந்து  வெளியே போய் யானைக் கொட்டடி எங்கேன்னு  கேட்டால், இடதுபக்கம் போங்கன்னார்.  ஓய்வெடுக்குமிடம். உபத்திரவம் பண்ணாதேன்னு  கதவில் போர்டு.  பாவம் குழந்தை, தூங்கட்டுமுன்னு  திரும்பினோம்.  ஆனால் உள்பக்கம் ஏதோ (கொண்டாட்டமா) பாட்டு கேட்டது.  தாலாட்டோ?







திரும்பக் கோவிலுக்குள் வந்து ஆயிரங்கால் மண்டபம் தாண்டி புஷ்கரணிப் பக்கம் போனோம். கோதண்டராமர் சந்நிதி திறந்துருக்கு.  கொஞ்சம் பெண்கள் கூட்டம்.  போய்  ஸேவித்தோம். வைகுண்டவாசல் , கம்பர் மண்டபம்  கடந்து உக்கிர நரஸிம்மர்  சந்நிதிக்கு  வந்திருந்தோம். இங்கேயும் கதவு மூடல்தான். 'கவலைப்படாதே நான் உக்கிரமா இருக்கேன்'னார் நம்மவர்:-)  நல்ல சிரிச்ச முகம்.



ஸ்ரீ கிருஷ்ணர், ராதா, ருக்மணி சந்நிதி!   பாமா எங்கே?  ஏன் ராதா?


தாயார் சந்நிதிக்குப்போய்ப் பார்த்தால் உள்ளே பூஜை  நடப்பதால் தரிசனம் இல்லை. இன்னும் ஒரு  35 மினிட் காத்திருக்க வேணும்.  மண்டபத்தில் பூ விற்பனை.  மனோரஞ்சிதம், செண்பகம் எல்லாம் ஒரு பப்பத்து கோர்த்து  சின்ன வட்டமா  செஞ்சு விக்கறாங்க. எவ்ளோ நாளாச்சு இந்த மனோரஞ்சிதம் எல்லாம் பார்த்தே!   உடனே மனோ & செண்பகா ரெண்டையும் வாங்கினேன்.  கம்பி வழியா தாயார் சந்நிதியில் வைக்கப்போறேன்னு  இவர் நினைச்சார்.  ஊஹூம்....    தாயாருக்குத் தான் தினம்தினம் கிடைக்குதே. அதனால் இது  துளசிக்கு!  அஹம் ப்ரம்மாஸ்மி.(வசதியாப் போச்சு)

இருட்டிப்போச்சே. நாளைக்குச் சூடலாமுன்னு  பையில் வச்சேன். நந்தவனத்தின் வழியா நடை. பன்னீர்ப்பூக்கள் தரையெல்லாம்!  சக்கரத்தாழ்வாருக்கு  ஒரு கும்பிடு ஆச்சு.  எல்லோரிடமும் போயிட்டு வரேன்னு  சொல்லிக்கிட்டேன்னு  உங்களுக்குத்  தனியாச் சொல்லணுமா?
ரெங்கவிலாஸ் மண்டபத்துக் கடைகளில் ஒரு பார்வை.  ஆண்டாளைப் பார்க்கவே இல்லையேன்னு  ஒரு ஆண்டாள் படத்தை வாங்கினேன்.


 அப்படியே நடந்து திருவந்திக்காப்பு மண்டபத்துக்குப் பக்கத்தில் இருக்கும் கடைவரிசைகளில் ஒரு பார்வை.  கடைசியா இருந்த ஒரு கடை வாவான்னு கூப்பிட்டது. சட்னு உள்ளேபோனேன்.  திகிலோடு கோபால் பின் தொடர்ந்தார்!


நல்ல அழகான விக்கிரகங்கள்.    ஒரு க்ருஷ்ணன்  எனக்குப்பிடிச்சுப்போச்சு.  ஆனால் விலை அதிகமோன்னு .....  அதுக்குள்ளே  கடை முதலாளியோடு சின்னப்பேச்சு.  பெரிய ஆட்கள் எல்லோரும்  அவர் கடைக்கு விஜயம் செஞ்சுருப்பதைச் சொல்லிக்கிட்டேவந்தவர், நம்மைப் பற்றி விசாரிச்சார்.  இவுங்க எழுத்தாளர்னு சொல்லி என் தலையில் ஒரு க்ரீடம் வச்சார் நம்மவர்!
தமிழக அரசு அங்கீகாரம் செஞ்ச பள்ளிகொண்டவன் விக்கிரகத்தை எனக்குக் காமிச்சு  'இதை பாலகுமாரன்  ஸார்  வந்து விசாரிச்சுக் கையில் எடுத்துப் பார்த்தார் மேடம் 'னு சொல்லி அவர் செல்லில் எடுத்த வீடியோவைக் காமிச்சார்.  அட!  ஆமாம்..... அப்படியே இன்னும் சில பிரபலங்கள் வீடியோக்களெல்லாம்  காமிச்சார்.

கடைக்காரர் பெயர் ஸ்ரீதர்.  'உங்களுக்கு என்ன உதவி வேணுமுன்னாலும் என்னிடம் கேளுங்க'என்றவர்   'பெருமாள் தரிசனம் ஆச்சா 'என்றார். ஆச்சுன்னேன். 'இன்னொருமுறை தரிசனம் செய்யப் போலாமா'ன்னார்.  வேணாம். ஆச்சுன்னேன்.

வேறென்ன விக்கிரகம் பார்க்கறீங்கன்னதும்,   வேறொன்னுமில்லை.  அந்த க்ருஷ்ணந்தான் வாங்கலாமான்னு  தோணுச்சு. விலை அதிகம். என்னைக் கேட்டால்.....  ன்னேன்.  'எவ்ளோன்னு  சொல்லுங்க நீங்க நினைப்பதை'ன்னார்.  தயக்கதோடு சொன்னதும், சட்னு எடுத்து என் கையில் கொடுத்துட்டார்.  அழகுதான்.  பொதுவாக் குழல் ஊதும்   கிருஷ்ணனைப் பசு மாட்டோடு பார்த்திருப்போம்தானே!  இங்கே மயிலோடு இருக்கான்!  'முகம் அவ்வளவா'ன்னு.... லேசா இவர்  ஆரம்பிச்சார். இத்துனூண்டுலே இப்படித்தான் இருக்குமுன்னு....  மேலே  பேசவிடலை..


ரொம்பப் பணிவோடு பேசி எனக்கொரு பிள்ளை ஆகிட்டார் ஸ்ரீதர்.  ரெங்கன் கொடுத்த பிள்ளை!

அடுத்த விஸிட் நேரா ப்ரஸாத ஸ்டால்தான்.  முதல்லே அந்த கடன் பாக்கியைத் திருப்பிக் கொடுக்கணும்.  நல்லவேளையா நேற்றையமனிதரே  பில்கவுண்ட்டரில்  இருந்தார். அவருக்கும்  என்னை அடையாளம் தெரிஞ்சது!!  ஒரு ரூபாயை எடுத்து நீட்டுனதும், இருக்கட்டும்மா. பரவாயில்லைன்னார்.   அதுக்காக, நமக்கு நிம்மதி  போனால் பரவாயில்லையாமா?  வற்புறுத்தி வாங்கிக்கச் சொன்னேன்.



இன்றைக்கும்  ராச்சாப்பாடு இங்கிருந்துதான். மூணுபேருக்கும் அவரவர் இஷ்டம்போல் ஆச்சு.

 அது என்னவோ ஒவ்வொருமுறை கோவிலில் இருந்து கடைசியாக் கிளம்பும்போது பிரிவுத்துயர்  வந்துருது.  அடுத்தவருசம் வரும்போது(!)   கோவில் திருப்பணிகள் முடிஞ்சு பளிச்சுன்னு  இருக்கும் என்ற மனஆறுதலும் கூடவே....   "போய் வஸ்த்தானுரா  நா ரெங்கடு! "

சங்கம் வந்து சேர்ந்தோம்.  நாளைக்குக் காலையில்  திருச்சியை விட்டுக் கிளம்பணும். இன்னும் ஒரே ஒருகோவில்தான் 108 வரிசையில் இங்கே பாக்கி.  அங்கே நாளை காலை போறோம்.

எல்லாரும் நல்லா ரெஸ்ட் எடுத்து ஃப்ரெஷா வாங்க!

தொடரும்.........:-)


Viewing all articles
Browse latest Browse all 1439

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>