ஹரிகி பௌடியின் இடதுபக்கம் போகும் பாதை இது. ஒரே கூட்டமான சாலை. வண்டியை எங்கியாவது பார்க் பண்ணிக்கறேன்னு முகேஷ் சொன்னதும் நாங்கள் இறங்கி மக்கள் வெள்ளத்தில் நீந்தி பாலம் கடந்து பாய்ந்துவரும் கங்கையின் நடுவில் கட்டி இருக்கும் மாள்வியா தீவு(!) பக்கம் இறங்கினோம். ( நம்ம பண்டிட் மதன்மோஹன் மாள்வியாதான். இவர் பாரத ரத்னா பட்டமும் கிடைச்சுருக்கு! ) இங்கேதான் பிர்லா க்ளாக் டவர் என்னும் மணிக்கூண்டு இருக்கு.
பாலத்தின் மேலே இருந்து பார்க்கும்போது.... கீழே அப்படி ஒரு கூட்டம்.
இவ்ளோ சனத்துக்கும் எப்படி ஒரே மாதிரியான கடவுள் நம்பிக்கை இருக்குன்னு நினைச்சுப் பார்த்தா.... ஆச்சரியம்தான். அதுலேயும் ஏழ்மை நிலையில் இருந்தும்கூட கங்காமாதாவை தேடி வரும் பல குடும்பங்களைப் பார்த்தால்..... அவுங்களுக்கு இருக்கும் பக்தி நமக்கில்லையேன்னு தோணும்... இன்னும் ஆன்மிகத்துலே போகும்தூரம் நிறைய இருக்குன்னு...
ஒருபாட்டியைப் பார்த்ததும்.... மனசுக்குள்ளே குற்ற உணர்வுதான்.... இப்படி இருந்தால் வெளியே கிளம்பி கோவில் குளமுன்னு தீர்த்த யாத்திரை போவேனா? ..... அந்த விநாடி பெருமாளையே பாட்டியாப் பார்த்தேன்....
ஹரி கி பௌடியில் கலகலன்னு கூட்டமான கூட்டம். நடுராத்ரி வந்தாலும் யாராவது கங்கையில் முங்கிக் குளிச்சுக்கிட்டுதான் இருப்பாங்க போல. இருபத்திநாலு மணி நேரமும் இப்படி.....
சின்னப்பையன், ஒரு நாலைஞ்சு வயசுள்ள கணேஷ், சங்கிலியைப் பிடிச்சுக்கிட்டே படிகளுக்குப் பக்கத்துலேயே நீச்சல் பழகறார்:-)
அப்பா ஒரு நாலு படிகளுக்கு மேலே உக்கார்ந்துருந்தார். பஸ் விபத்துலே கால் போயிருச்சாம். பார்க்கவே மனசுக்குக் கஷ்டமாப் போச்சு....
பாகீரதி ஸேது .... பாலத்துக்குக்கீழே பாய்ஞ்சு வர்றாள்!
இன்னொருக்காப் படிகள் ஏறி அந்தாண்டை ஹரிகி பௌடி கங்காமாதா கோவில் இருக்கும் பகுதிப் போனோம். இந்தப் பகுதியில் படிகளே இல்லை. அப்படியே மேடான நிலப்பகுதிதான். இங்கிருந்து நதியைக் கடக்கத்தான் பாலங்கள் போட்டுருக்காங்க. ஆர்த்தி நடக்குமிடத்துக்கும் கங்கைக்கும் அங்கிருந்தே இறங்கிப்போகும் அமைப்பு.
இந்த ஏரியாவில் காலணிக்கு அனுமதி இல்லை. ஏகப்பட்ட வாலன்டியர்கள் வந்து செருப்பு வைக்குமிடத்தைக் காமிக்கிறாங்க. நம்ம சனம்? அங்கே போய் வைக்குமோ? இங்கேயே காலில் இருப்பதைக் கழட்டிப்போட்டுட்டுப் போகுது.
கங்கா மாதா மந்திர். ஸ்ரீ கங்கா கோயில்னு தமிழில் எழுதி இருக்கு, பாருங்க!
நாங்க போய் நாலைஞ்சு சந்நிதிகளைக் கும்பிட்டுக்கிட்டு கடைகள் இருக்கும் எதிர்வாடைக்குப் போனோம். கங்கை கொண்டு போக ஏகப்பட்ட செம்புப் பாத்திரங்கள் விற்பனை. என்னமோ ஒன்னும் வாங்கிக்கத் தோணலை. இப்ப இங்கே வந்தாட்டு, தண்ணி வச்சுக் குடிக்க ஒரு செம்புப் பாத்திரமாவது வாங்கியாந்துருக்கலாமேன்னு.... ப்ச்... விடுங்க ...
நேபாளில் பாசிமணிப் பித்து பிடிச்சுருக்குன்னு சொல்லலை.... அதனால் நீலப் பாசிமணி மாலை ஒரேமாதிரி ரெண்டு (?) வாங்கிக்கிட்டு இங்கே அங்கேன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டே காலை நீட்டிப்போட்டு கார் பார்க் வந்துட்டோம். நல்ல உச்சி வெயில், பனிரெண்டுக்கு என்ன சுத்தல்?
இப்போ அடுத்த தேடல் அந்த ஐயப்பன் கோவில்:-) கார்பார்க்கில் ட்யூட்டியில் இருந்த காவலர்கள் எதோ ஒரு வழியை முகேஷுக்குச் சொன்னாங்க.
கிளம்பி வரும்போதுதான் ஹரிகிபௌடியாண்டே நிக்கும் பெரிய சிவன் சிலையைக் கிட்டப்போய் பார்க்கலையேன்னு ..... தனியார்கள் ஆஷ்ரம் வச்ச சிலையா இருக்கலாம். இப்போ தேட நேரமில்லைன்னு போனால்..... போற வழியிலேயே இருக்கும் ஒரு பார்க்குக்குள் இந்த சிலை வச்சுருக்காங்க.
விவேகானந்தா பார்க். உள்ளே ரெண்டு பேருக்கும்தான் சிலைகள். ஆனா சிவன் நூறு அடி உசரம்! அங்கே போகணுமுன்னா கொஞ்சம் சுத்திக்கிட்டுப் போகணும் என்றதால்.... போகப்போக வண்டியில் இருந்தே சில க்ளிக்ஸ் ஆச்சு.
வாங்க, நாம் போய் அந்த ஐயப்பனைத் தேடலாம்.......
PINகுறிப்பு. ஹரிகி பௌடி கங்கைக்கரைப் படங்களைச் சும்மா விட மனசில்லை. தனி ஆல்பத்துலே போட்டுருக்கேன்.சுட்டி இது. விருப்பம் இருப்பின் பார்க்கலாம். சுட்டி வேலை செய்யலைன்னா..... கீழே உள்ளதைக் காப்பி & பேஸ்ட் தான் செஞ்சுக்கணும்.
https://www.facebook.com/media/set/?set=a.10209533077826370.1073741888.1309695969&type=1&l=0b6221ddc5
தொடரும்...... :-)
